Friday, March 29, 2019

திருக்குடந்தை ஆராவமுதன்.... (பயணத்தொடர், பகுதி 85 )

ரெண்டே நிமிஷத்தில் போய்ச்சேரவேண்டிய இடத்துக்கு, போக்குவரத்து நெரிசலால்  அஞ்சு நிமிஷம் ஆச்சு!   கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து வெறும் முக்கால் கிமீதான்.  பெருமாளுக்கான திருமாமணி மண்டபம் இப்போ டூவீலர் பார்க்கிங் :-(
அழகான, கம்பீரமான பதினொருநிலை ராஜகோபுரம் கடந்து உள்முற்றத்தில் காலடி வைக்கும்போது கண் முன் 'சார்ங்கா சார்ங்கா சார்ங்கா'ன்னு ....   கொடிமரம் ஸேவிச்சுட்டு உள்ளே போறோம்.




இன்று முதல் அஞ்சு நாளைக்குப் பவித்ரோத்ஸவம் ! அப்புறமும் மூணுநாட்கள் விழா!  ஹைய்யோ.... எட்டுநாட்களுக்குத் தொடர்ந்து ஸேவிக்கும் புண்ணியவான்களுக்கு என் பணிவன்பான  வணக்கம்!
நேற்று இங்கேயும் உத்தராயண வாசல் மூடி, தக்ஷிணாயணவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்துருக்கு!
ஆழ்வார்கள் பாடி மங்களா சாஸனம் செஞ்ச நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில்  இதுவும் ஒன்னு!
ஆராவமுதன் கிடப்பில்!  உத்தான சயனம்! நிம்மதியான தரிசனம்!
(பேசாம கும்மோணத்துக்கு வந்துடலாமான்னு கூட ஒரு விநாடி தோணுச்சு! )
கும்மோணம் கோமளாவைக் கல்யாணம் பண்ணிக்கத் தேரில் ஏறிவந்தவன், இங்கே தேரோடு அதுலேயே தங்கிட்டான்!
தீபாவளியன்னைக்கு மட்டும் காலையில்  சாமி தரிசனத்துக்கு வந்துறாதீங்க..... கோவில் மூடித்தான்  இருக்கும்! அடடா.... நல்லநாளுமா அதுவுமா  இப்படி ஏன்?

விஸ்தரிச்சு எழுதுன கோவில்கதைகள், புராணங்கள்  இந்தச் சுட்டியில். ஒரு எட்டுப்போய் பார்த்தீங்கன்னா.... எனக்குத் தொணத்தொணன்னு எழுதும் வேலை மிச்சம் :-)
கோவிலுக்கு நெல்லளந்துட்டுப்போயிருக்கார் குத்தகைக்காரர். நல்லா இருக்கட்டும்!  தரம் சரியா இருக்கான்னு ஒருத்தர் செக் பண்ணிக்கிட்டு இருந்தார் :-)
பெரிய மரம் ஒன்னு வந்திறங்கி இருக்கு. என்ன செய்யப்போறாங்க? தேரோ?
இந்தக் கோவிலில் சொர்கவாசல் இல்லை, தெரியுமோ?
தக்ஷிணாயணம், உத்தராயணம் வாசல்கள்  கடந்து எம் பெருமாளைத் தரிசனம் செய்யும் அனைவருக்குமே நேரா ஸ்ரீ வைகுண்டம்தான் !

உள்ப்ரகாரம் சுற்றி வந்தோமுன்னா அந்த பாதாள சீனிவாசரை சந்திக்கலாம். சரியான பயந்தாங்கொள்ளி.  அதுவும் யாரைப்பார்த்து?  தங்க்ஸைப் பார்த்துதான்.  தப்பு செஞ்சால்  வேற யாருகிட்டே இருந்து தப்பறோமோ.... தங்க்ஸ் கிட்டே இருந்துமட்டும் தப்பவே முடியாது.... கேட்டோ!
இதுக்கான புராணக்கதை (!) யை முந்தி எழுதி இருந்தேன் . அது என்னன்னா.....   மும்மூர்த்திகளில் பொறுமைசாலி யாருன்னு  தேடிக்கண்டுபிடிக்கும் அஸைன்மென்ட் நம்ம பிருகு மகரிஷிக்குக் கொடுத்துடறாங்க. 

அவர் தேடிப்போய்ப் பார்த்து  பிரம்மா சிவன் ரெண்டு பேரையும் டிஸ்க்வாலிஃபை பண்ணிட்டார்.  கதை தெரியலைன்னு அப்போ குறிப்பிட்ட போது, நம்ம துளசிதளத்தின் நெடுநாள் வாசக நண்பரான விஸ்வநாத்,  கதையைத் தனிமடலில் அனுப்பி வச்சுருந்தார்.  எல்லாம் ஒரு மூணு வருஷத்துக்கு முன்னேதான்.  நேத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சப்போ.....  நண்பர் பதிவர் விஸ்வநாத் அனுப்பிய கதையைத் தேடினால்  கண்ணுக்கு ஆப்டலை.  இதுக்குத்தான் ஒழுங்கான தலைப்புலே சேமிக்கணுங்கறது.... திரும்ப அவருக்கே  மெயில் அனுப்பிக் கேட்டதும் உடனே அனுப்பி  வச்சார். அந்த நல்ல மனசுக்கு என் நன்றி!  ஒருக்கா திருப்பதியில் வாங்குன புத்தகத்துலே  இதுக்கான கதை ஒன்னு வாசிச்சாராம்.

புராணக் கதைன்னு சொல்றேனே தவிர,  உண்மையான புராணங்களில் இதெல்லாம் இருக்காது.  அவரவர் தன் கற்பனைக் குதிரையை மேய அனுப்பி அது கொண்டுவரும் கதைகள்தான்!  புனைவுன்னு சொல்றாங்களே   அது :-)
அதுவும் கொஞ்சம் சுவாரஸியம்தானே!  போகட்டும். வாங்க . நண்பர் அனுப்பிய கதையின் சுருக் இது.

பயங்கர தவ வலிமையால் பிருகு முனிவருக்கு உள்ளங்காலில்  மூணாவது கண் வந்துருக்காமே.....  (அடப்பாவமே....   அப்ப அந்தக் கண்ணைத் திறக்கவே முடியாது போல...  ப்ச்....)

சத்யலோகம் போறார்.  அங்கே ப்ரம்மன் இவரை சட்டையே பண்ணாமல் சரஸ்வதியாண்டை பேசிக்கிட்டு இருக்கான். இவரை வான்னு கூடச் சொல்லலை..... 'திசைக்கொன்னாப் பார்க்க  நாலு மூஞ்சு, அதுலே எட்டு கண்ணு  இருந்து என்ன பலன்?  நான் வந்த வேலைக்கு நீ லாயக்கே இல்லை. உனக்கு பூலோகத்துலே கோவிலே இல்லாமல் போகட்டுமு'ன்னு  சபிச்சுட்டு நேராப் போனது கைலாசத்துக்கு!

அங்கே போனா... சிவனும் பார்வதியுமா ஆடிக்கிட்டு இருக்காங்க.... ஆனந்த நடனம்!  நந்தி முதற்கொண்டு பரிவாரங்கள் அனைத்தும்  நடனத்தைப் பார்த்து ரசிச்சு அதுலேயே மூழ்கிப்போய் இருக்காங்க.  ஆட்டஜோரில்  சிவனும் சட்டை பண்ணலை. அவ்ளோதான்....  கோச்சுக்க இது போதாதா?

'இனி உனக்கு  உன் சொந்த உருவத்துலே சிலையா  உன்னைக் கோவிலில் வச்சுக் கும்பிடமாட்டாங்க'ன்னுட்டார். திகைச்சுப்போன சிவன், 'அப்போ அதுக்கு பர்த்தி என்னா'ன்னு கேட்டதும், லிங்கம்னு சொல்லிட்டுக் கிளம்பி வைகுண்டம் போனார்னு கதை போகுது....

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்விருந்து வானத்தவர்க்கு... 

  தாடி ஞாபகம் வருதே.... அந்த வானத்தவர்களுக்கு  தங்கள் வீட்டுக்கு வர்ற விருந்தைக் கவனிக்கத்தெரியலை பாருங்க....

அப்புறம்? வைகுண்டத்துலே என்ன ஆச்சு?

அப்போ திருப்பாற்கடலில் ஹாயாப் படுத்துக்கிட்டு இருக்கும்  மஹாவிஷ்ணுவும்,  கணவன் காலை அமுக்கி விட்டுக்கிட்டு இருக்கும்  மஹாலக்ஷ்மியும்  தனிமையில் சுவாரசியமா பேசிக்கிட்டு இருக்காங்க. முனிவர் வந்து நின்னார். அவரைக் கவனிக்காமல் இங்கே பேச்சு தொடர்ந்துக்கிட்டு இருக்கு.
முனிவருக்குக் கோபம் வந்துருச்சு!  'எம்மாநேரமா இங்கே நிக்கிறேன்.  வந்தவனைக் கவனிக்காமல் அப்படி என்ன பேச்சு'ன்னு  மஹாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைச்சார்.  சட்னு அவர் பாதத்தைப் பிடிச்ச பெருமாள், 'ஐயோ....  உங்க பாதம் நோகுமே....'ன்னு விசாரிச்சதும் கோபம் பொசுக்னு போயிருச்சு.
பொறுமைத்திலகம் இருப்பது அங்கேதான்னு புரிஞ்சு போச்சு.

அதுசரி.  இதுக்கும்  பாதாளத்துலே போய் ஒளிஞ்சுக்கறதுக்கும் என்ன தொடர்பு?

  முனிவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டா மஹாலக்ஷ்மி.

வந்தவ சும்மா  இருக்கமுடியாம கொல்லாபுரத்துக்குத்  தவம் செய்யப்போயிட்டான்னு  'நம்ம அமைதிச்சாரல்' வந்து  சொல்லிட்டுப் போனாங்க!!!

அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட.

மனைவி பிரிஞ்சு போனதும்  துக்கப்படாம, தங்கமணி ஊருக்குப்போயிட்டா......ன்னு ஆடிக்கிட்டுப்போய்  சீனிவாசனா உருவெடுத்துக் குபேரன் கிட்டே  அளவில்லாமக் கடன் வாங்கி பத்மாவதியைக் கல்யாணம் பண்ண சேதி கேட்டு,  மகாலக்ஷ்மி கிளம்பிவர... பயந்துபோய் ஒளிஞ்சுக்கிட்டது  இங்கெதான்.

கதைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை................   கொஞ்சம் உக்கார்ந்து யோசிச்சா நாமும் இட்டுக்கட்டலாம்.... ஆனால் பொருத்தமா அங்கங்கே கொண்டுபோய் கோர்த்துவுட்டுரணும் :-)

கும்பகோணம் வரும்போதெல்லாம் தவறாமல் வரும் கோவில் இது . சட்னு போய் தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கிளம்பணும்தான் வந்தோம்.   கிளம்பியாச்சு!
இதோ அடுத்தாப்லே இன்னொரு ஃபேவரிட் கோவில்....

தொடரும்.....:-)

13 comments:

said...

தமிழகத்தில் பெரிய தேர்கள் உள்ள கோயில்களில் ஒன்று. நாட்டிய கரண சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது. "இக்கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம்" என்று முதன்முதலாக வருகின்றது என்று கல்வெட்டறிஞர் என்.சேதுராமன் கூறியுள்ளார். (குடந்தை என்.சேதுராமன், திருக்குடமூக்கில் மகாமகம், மகாமகம் 1992 சிறப்பு மலர்) இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நான் பிறந்த ஊரின் மற்றொரு கோயிலைக் கண்டமைக்கு மகிழ்ச்சி.

said...

அருமை நன்றி.

We'e visited Kolhapur couple of times.

said...

திருக்குடந்தை ஆராவமுதன்...அழகை கண்டேன் ...அருமை மா

said...

இப்போதான் கவனித்தேன்... நீங்க ஜூலை 2018ல் போயிருக்கீங்க. நான் சென்றபோது உளுத்த மரத்தைப் பார்த்தேன். (இது த்வஜஸ்தம்பத்திற்கானது). அப்போ புது மரத்தை த்வஜஸ்தம்பத்தில் வச்சுட்டு பழைய உளுத்த மரத்தை உள்பிரகாரத்தில் வச்சிருக்காங்க போலிருக்கு.(உள் பிரகாரமா அல்லது அதற்கு அடுத்த வெளிப்ரகாரமான்னு ஞாபகம் இல்லை).

படம்லாம் எடுத்திருக்கீங்களே.... நான் எல்லாக் கோவிலையும் நடந்தே தரிசனம் பண்ணிவிட்டேன்.

said...

தகவல்கள் சிறப்பு.

படங்கள் வழமை போல நன்றாக இருக்கிறது!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கோவில் தேரை இதுவரை கவனிக்கலையேன்னு இருக்கு இப்போ!

பிறந்த ஊர் என்பதே தனி மகிழ்ச்சிதான் இல்லையோ!!!

said...

வாங்க விஸ்வநாத்,


கதை அனுப்பியதுக்கு இன்னொருமுறை என் நன்றியை இங்கே சொல்லிக்கறேன்.

இன்னும் கோலாப்பூர் போகலை..... அவள் எப்போ கூப்பிடுவாளோ?

said...

வாங்க அனுராதா பிரேம்..

அழகான கோவில் !!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆஹா.... கொடிமரமா? சட்னு எனக்குத் தோணலை பாருங்க....


வெளியேதான் மண்டப ஓரத்தில் வச்சுருந்தாங்க !

நடந்து போறது எனக்குச் சரிப்படாது..... லோகல் ட்ராஃபிக் அலர்ஜி. எந்த நேரம் எந்தப் பக்கத்தில் வந்து இடிப்பானோன்னு.....

நடைமேடைன்னு இருப்பதும் இல்லை..... அப்படியே இருந்தாலும் அதையும் ஆக்ரமிச்சுக் கடைகள் இருப்பதைக் கடக்கவும் முடிவதில்லை....

வெளியூரில் நடைன்னா எனக்கு சிங்கப்பூர்தான். நிம்மதியா கோவில்களுக்கு நடந்தே போவேன்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி !

said...

ஆறு வருடங்களாக உங்கள் பதிவுகளை பிடித்துப் போய் படித்து வருகிறேன். எனது முதல் comment. நான் கும்மோணத்துக் காரன். உங்கள் புண்ணியத்தில் இந்தியாவின் அத்தனை கோயில்களையும் உங்கள் காமெரா கண்களால் கண்டு ரசித்து வருகிறேன். இந்தப் பதிவில் நீங்கள் கண்டு மகிழ்ந்த ஆராவமுதன் பெருமாள் அல்ல. ஆராவமுத ஆழ்வான்!. தன பெருமாள் பட்டத்தை திருமழிசைக்குக் கொடுத்து திருமழிசைப் பிரானாக ஆக்கிவிட்டு தான் ஆழ்வான் பட்டத்தைக் கொண்டு கோவில் புரிகிறான். திருமழிசைப் பிரான் தனது கடைசிக் காலத்தில் இன்னமும் உயிரோடு இருக்கிறார்
சமாதிக் கோவிலாக. சாரங்கபாணி கோவிலிலிருந்து 500 மீட்டர் தொலைவில். அவசியம் பார்க்க வேண்டிய சிறிய கோவில்.

said...

ஆறு வருடங்களாக உங்கள் பதிவுகளை பிடித்துப் போய் படித்து வருகிறேன். எனது முதல் comment. நான் கும்மோணத்துக் காரன். உங்கள் புண்ணியத்தில் இந்தியாவின் அத்தனை கோயில்களையும் உங்கள் காமெரா கண்களால் கண்டு ரசித்து வருகிறேன். இந்தப் பதிவில் நீங்கள் கண்டு மகிழ்ந்த ஆராவமுதன் பெருமாள் அல்ல. ஆராவமுத ஆழ்வான்!. தன பெருமாள் பட்டத்தை திருமழிசைக்குக் கொடுத்து திருமழிசைப் பிரானாக ஆக்கிவிட்டு தான் ஆழ்வான் பட்டத்தைக் கொண்டு கோவில் புரிகிறான். திருமழிசைப் பிரான் தனது கடைசிக் காலத்தில் இன்னமும் உயிரோடு இருக்கிறார்
சமாதிக் கோவிலாக. சாரங்கபாணி கோவிலிலிருந்து 500 மீட்டர் தொலைவில். அவசியம் பார்க்க வேண்டிய சிறிய கோவில்.

said...

வாங்க குமரன்,

முதல் வருகை/ பின்னூட்டத்துக்கு நன்றி!

இன்னும் திருமழிசைப் பிரானின் திருவரசு தரிசனம் கிடைக்கலை. அடுத்த பயணத்தில் அமையுமான்னு பார்க்கணும். எல்லாம் 'அவன்' அருள் இல்லையோ!