அதிகாலை 4.35 மணி என்பதால் மக்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்துருப்பாங்க. தெருக்களில் கார்களின் நடமாட்டம் இல்லாததால் பாதிப்பு ஒன்னுமில்லை(யாம்) விடாமல் 40 விநாடிகளுக்கு பூமி ஆடி இருக்கு. என்ன ஆச்சோன்னு வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்த ஒருவர் மேலே அவர் வீட்டு புகைபோக்கி இடிஞ்சு விழுந்து கையில் அடி. இதே போல் இன்னொரு நபருக்கு எங்கிருந்தோ பாய்ஞ்சு வந்து விழுந்த கண்ணாடிச் சில்லால் காயம். ஒரு நபர் மாரடைப்புலே இறந்தார். எமனும் எர்த்க்வேக்கும் ஒரே நேரத்துலே கிளம்பி வந்துருந்தாங்க.
நிறைய இடங்களில் கம்பங்களும் லைன்களும் பழுதாகிப்போனதால் மின்சாரம் இல்லாமல் போச்சு. நல்லவேளை இந்தமட்டோடு போச்சேன்னு எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி. ஆனாலும் அவசரநிலை அறிவிச்சது அரசு. ராணுவம் உதவிக்கு வந்து தேவையானவைகளைச் செஞ்சது.
அப்பப்ப லேசா ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதும் போறதுமா இருந்த நிலையில் மக்கள் ஏறத்தாழ இதை மறந்தே போயிட்டாங்க.
அஞ்சரை மாசம் கடந்துபோனதும் ஒரு செவ்வாய்க் கிழமை பகல் 12.51. கிறைஸ்ட்சர்ச் ஹரே க்ருஷ்ணா கோவிலில் பகல் நேர பூஜை பாதி வழியில். ஊதுபத்தி, தீபம், மலர், கைகுட்டை, விசிறின்னு ஒவ்வொன்னா சேவை காண்பிச்சு ஆரத்தி எடுக்கும் சமயம். இடது கையால் வெங்கலமணியை ஆட்டிக்கிட்டே வலது கையின் மயிலிறகு விசிறியால் சைதன்ய மஹாப்பிரபு, நித்யானந்த மஹாப்பிரபு தெய்வச்சிலைகளுக்கு விசிறிக்கிட்டு இருக்கார் பண்டிட் சிவானந்த தாஸர். லேசா ரெண்டு சிலைகளும் முன்னும்பின்னுமா ஆடுது. என்னவோ ஏதோன்னு கையில் இருந்த மணியையும் விசிறியையும் விசிறிப்போட்டுட்டுச் சிலைகளின் இடுப்புகளை ரெண்டு கைகளாலும் அணைச்சுப் பிடிக்கிறார். அடுத்த நொடி மூணுபேருமா பளிங்குத்தரையில் விழுந்து கிடக்கறாங்க.
தலையைத் திருப்பமுடியாமல் அப்படி ஒரு வலி. சிரமப்பட்டு கண்ணை ஓட்டுனா கடவுளர்களின் உடைந்த பாதங்களும் கைகளும் கண்ணுலே தென்படுது. இந்தப்பக்கம் பார்த்தால் தலையும் உடலுமா...... அட ராமான்னு எழுந்திருக்க முயலும்போது தலைக்கு மேலே விர்ன்னு பறந்து போய் விழுது மூலவர் நிற்கும் ஸ்வாமி மண்டபம். தடதடன்னு சாமியாட்டம்!


( இது ,சம்பவம் பற்றி அவர் எழுதி வச்சுருந்த பதிவில் இருந்து )
தோழியின் பாட்டனாருடைய இறுதிச்சடங்குக்குப் போயிட்டு மகள் நகருக்குத் திரும்பி வந்துக்கிட்டு இருக்காள். சீராக ஓடிக்கிட்டு இருந்த வண்டி ஒரு குலுக்கலோடு நின்னு மறுபடி கிளம்பி இருக்கு. எஞ்சின்லே கோளாறா இருக்கலாம். செக் பண்ணனும் நல்லவேளையா அந்த கிராமத்துச் சாலையில் வேற வண்டிகள் ஒன்னுமே வரலை.
சிங்கப்பூர் பார்க் ராயல் ஹொட்டேலில் நாம் தங்கி இருந்த அறைக்கு எழுத்தாளர் தோழி ஜெயந்தி சங்கர் என்னைச் சந்திக்க வந்துருக்காங்க. இன்னிக்கு லேடீஸ் டே அவுட் எங்களுக்கு. கோபால் அவருடைய ஆஃபீஸ் வேலை விஷயமா நியூஸியில் இருந்து சிங்கை வழியாப் பயணம் செய்யும் மேலதிகாரியை சந்திக்கக் கிளம்பிக்கிட்டு இருக்கார். முதல்நாள் விமானத்தில் கிளம்பி வந்தவர். இங்கே சில வேலைகளை முடிச்சுட்டு தாய்லாந்து போறார். அவருக்கு அடுத்த விமானம் பிடிக்க நாலைஞ்சு மணி நேரம் இருக்கு. இடைப்பட்ட நேரத்தில் ஒரு முக்கிய மீட்டிங்.
தற்செயலா டிவியை ஆன் செஞ்ச கோபால்...... 'ஐயோ கிறைஸ்ட்சர்ச்சில் எர்த் க்வேக்'ன்றார். கட்டிடங்கள் இடிஞ்சு கிடக்கும் படங்களைக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. என்னவோ ஏதோன்னு பதறி அடிச்சுக்கிட்டு மகளை அலைபேசியில் கூப்பிட்டால் தொடர்பு கிடைக்கலை. தரை வழியில் கூப்பிட்டாலும் தொடர்பு இல்லை. மற்ற நண்பர்கள் யாருக்காவது தொலைபேசி விவரம் கேட்கலாமுன்னா....மனக்கலவரத்தில் யாருடைய தொலைபேசி எண்களுமே நினைவில் இல்லை. சுத்தம்:(
நகரின் முக்கிய தேவாலயம் இடிஞ்சு விழுந்துருக்கு.


நிலநடுக்கம் வந்து நின்ன சில விநாடிகளில் இடிஞ்சு விழுந்த கட்டிடங்களின் சிமெண்டும் காங்க்ரீட்டும் புகையாக் கிளம்புது.
ஜெயந்தி சங்கர் ஆறுதல்களாச் சொல்லி என்னைத் தேற்றிக்கிட்டே இருந்தாங்க.. கொஞ்சம் மனபாரத்தை குறைக்க வெளியே போகலாமுன்னு நானும் ஜெயந்தியுமா கிளம்பி கிருஷ்ணன் கோவிலுக்குப் போனோம்.
மீட்டிங் முடிஞ்சு திரும்பிவந்த கோபால், அவருடைய மேலதிகாரி பயணத்தைத் தொடராமல் திரும்பி நியூஸி போறாருன்னு விவரம் சொன்னார். அவரையும் இந்த நிலநடுக்க சேதி நடுங்க வச்சுருக்கு. சம்பவம் நடந்தப்ப அவரும் பறந்துக்கிட்டு இருந்தாரே. அவருடைய மனைவியுடன் பேசினாராம். எல்லாம் கதிகலங்கி இருக்காங்க. ரெண்டுச் சின்னக்குழந்தைகள் வேற அவருக்கு. ஏராளமான ஆஃப்டர்ஷாக்ஸ் வர்றதாயும் மக்கள் ஊரைவிட்டுக் கிளம்பிப் போய்க்கிட்டு இருக்காங்கன்னும் சேதி. அவருடைய மனைவியும் காரில் குழந்தைகளை அள்ளிப்போட்டுக்கிட்டு தாய்வீடு இருக்கும் வெலிங்டன் நகருக்குக் கிளம்பிட்டாங்களாம். விமான நிலையம் பூராவும் பயங்கரக் கூட்டம் எப்படியாவது ஊரைவிட்டு எங்கியாவது போக பயணச்சீட்டுக்கு சனம் அல்லாடுதாம்.
இதையெல்லாம் கேட்டதும் மகளுக்கு மீண்டும் தொலைபேசி கிளம்பி சிங்கைக்கு வந்துரு. இந்தியாவில் கொஞ்ச நாள் இருந்துட்டு அப்புறம் பார்க்கலாமுன்னா......... வர்ற ஆபத்து எங்கிருந்தாலும்தான் வரும். அதுக்காக ஊரைவிட்டுப்போறதான்னு கேக்கறாள். உண்மைதானே?
என்ன ஒரு தெளிவு பாருங்க இளைய தலைமுறைக்கு! வீட்டுக்கு எதாவது ஆகி இருக்கான்னா...... அப்படி ஒன்னும் தெரியலை. இன்னும் வெளியே போய் வீட்டைச் சுத்திப் பார்க்கலைன்னு பதில் வருது. சாலைகள் எல்லாம் உடைஞ்சும் கிழிஞ்சும் கிடக்காம்.






தொடரும்.........................:(