Monday, November 30, 2020

உச்சியிலே கிடக்குறாரு , அந்த ராசாமகன் ....... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 18 )

ஹேஸ்டிங்ஸ் போகும் சாலை அருமை. போற வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை   அங்கங்கே  சாலைக்கு ரெண்டு பக்கங்களையும் ஒட்டியே  பைன் மரக்காடுகள், அதுக்கந்தாண்டைக் கொஞ்சம்  உயரமாப்போகும்  குன்று வரிசைகள்.  வளைஞ்சு போகும் ஆறு.....




டவுன் சென்டருக்குப் போய்  வண்டியைப் பார்க் செஞ்சுட்டுச் சுத்திக்கிட்டு இருந்தோம்.  அவ்வளவாக் கூட்டமில்லை.  லஞ்சு டைம் என்பதால்  அக்கம்பக்கத்துலே வேலை செய்யும்  மக்கள்தான்  அங்கங்கே உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நமக்கும்  எதாவது வாங்கிக்கணுமேன்னு பார்த்தால் 'பாலிவுட் ஸ்டார்' கண்ணில் பட்டது.  இருக்கட்டும். வேறெதாவது பார்க்கலாம்.....  நியூஸி மக்களுக்கு இப்பெல்லாம் ரொம்பவே பரிச்சயமான பெயர் இந்த பாலிவுட் :-)





இன்னொரு இடத்தில் பார்க்க ஸப்வே போல ஒன்னு. அங்கே எனக்குக் கூமரா ஃப்ரைடு கிடைச்சது. நம்மவர் ஒரு ஸான்ட்விச் வாங்கிண்டார்.  சிடி சென்ட்டரை விட்டால்  வேறொன்னும் இருக்கறாப்ல தெரியலை. இன்ஃபர்மேஷனில்  விசாரிச்சால்.... சனம் மலைப்பாதையில்  சைக்கிள் ஓட்டறதுக்குன்னே வருதாம். Walking Trails, Biking Trails.... 




Te Mata Peak என்ற பெயரில் ஒரு குன்று !   அங்கே போய் எங்கெங்கே எல்லாம் நடக்கலாமுன்னு  படம் எல்லாம் கொடுத்தாங்க.  விளக்கம் சொல்றப்பக் கொஞ்சம் தலையைத் தூக்கி என்னைப் பார்த்திருந்தால்....    முசப்பிடிக்கும் நாயா இதுன்னு  என் மூஞ்சைப்பார்த்தால் தெரிஞ்சுருக்கும்..... :-)
சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே அவுங்க சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டு,  இங்கே முக்கியமா இருக்கும் சமாச்சாரத்துக்கான இலவசக் கையேடுகளையும் வாங்கிக்கிட்டோம்.  Food and ' DRINK '    பழவகைகள்  ஏராளமாக விளைவிக்கும் பழத்தோட்டங்களுக்குப் பெயர் போனது இந்த ஊரின் சுத்துவட்டாரப்பகுதி.   ரெட் ஒயின் தயாரிப்பு விசேஷம் !  
கடைகளை நோட்டம் விட்டப்ப, ஒரு துணிக்கடையில் க்ளோஸ்டௌன் ஸேல். என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்தால்....அதிசயமா என்னோட சைஸுக்கே உடுப்புகள் இருக்கு.  80 % கழிவு !  விடமுடியுமா? ரெண்டு ஜாக்கெட்டும், ரெண்டு டாப்புமா ஆச்சு !  ஒரு கடையில் ரெண்டு கிளிகள்! 
Te Mata  Hill நோக்கிப் போறோம். ஒரு பதினொன்னரை கிமீ. இருவது மினிட் ஆச்சு.  நுழைவுப்பகுதியில் போர்ட் வச்சுருக்காங்க. திருடர்கள் ஜாக்கிரதை. அட ராமா......  


 இங்கத்துப் பழங்குடிகளான மவொரி மக்கள் வச்ச பெயர்   Sleeping Giant .  
  ஆதிகாலத்துலே   இங்கே இருக்கும் பழக்குடி மக்கள், வெவ்வேற குழுக்களா அங்கங்கே கிராமத்தை அமைச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்தறாங்க.  இந்தக் குழுக்களுக்குள்ளே எப்பப் பார்த்தாலும் சண்டை வந்துரும்.  இந்தப் பகுதியிலும்  ரெண்டு வெவ்வேற குழுக்கள்  இருந்துருக்காங்க.  நடுவில் குன்று இருந்தாலும் அதுலே ஏறி வந்து சண்டை போடறதுதான். சண்டை போட்டே சலிப்பு வந்துருது ஒரு குழுவினருக்கு.  ஆனால் அந்தாண்டை போனால் இன்னும் கொஞ்சம்  தேவைப்பட்ட சமாச்சாரங்கள், முக்கியமா சாப்பாட்டுச் சமாச்சாரங்கள்  கிடைக்கும் . ஒவ்வொரு முறையும் அந்தாண்டை போகக் குன்றில் ஏறினால் போதும்.....   சண்டை ஆரம்பிச்சுரும்.  குன்றுமேல் ஏறாமல் அந்தாண்டை எப்படிப் போக? அதுக்கு  என்ன செய்யலாமுன்னு குழுத்தலைவரிடம் பேசிக்கிட்டு இருக்கும் சமயம், தலைவரின் மகள் ஒரு ஐடியாக் கொடுக்கறாங்க. பொதுவா இப்படியான  ஆலோசனைகளில்  பெண்கள் கொடுக்கும் ஐடியாதான் சிறந்ததுன்னு மக்கள் நம்பிக்கை.

'எதிரிக்குழுத் தலைவனை, மயக்கிக் காதலில் விழச்செஞ்சுட்டால்.....  ' 
  
ஆஹா.....   யாரை அனுப்புவது ?    தலைவரின் மகளே சம்மதிக்கிறாள்.  ஐடியா சொன்னால் ஆச்சா ?  நடிப்புதானே ?  போகட்டும்.

எதிரிக்குழு தலைவன் நல்ல ஆக்ருதி உள்ளவன்.  இவளும் பேரழகி! திட்டத்தின்படி ஆச்சு. இவளுடைய நடிப்பு,  கடைசியில் உண்மைக் காதலாகிருச்சு....  (ஹா.... எத்தனை சினிமாவில் பார்த்துருக்கோம் ! ஹிஹி )

கொஞ்சநாள் போனதும்,  குன்றுகளுக்கிடையே ஒரு பாதை இருந்தால் நமக்கு வரப்போக நல்லா இருக்கும்  என்றவள்,  கடப்பாரை, மண்வெட்டி கொடுத்துருக்கக்கூடாதோ ?  வெறும் வாயால் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... காதலியின் ஆசையை நிறைவேத்தக் குன்றையே ஒரு கடி கடிச்சுட்டான்.....  வழி ஏற்பட்டது.....   ஆனால் கவ்வி எடுத்த  மண் போய் தொண்டையில் மாட்டிக்கிட்டு, மூச்சுத்திணறி மண்டையைப் போட்டுட்டான்..... அப்படியே குன்றின் மேல் விழுந்தவன் இன்றைக்கும் அங்கேயே கிடக்கான்!

ஒவ்வொரு மவொரிக்குழுவும்  இந்தக் குன்றுக்கான  கதையை ஒவ்வொரு விதமாச் சொல்லிக்கிட்டு இருக்கு !  இவரும் தூங்கிக்கிட்டே எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்கார். (செத்தவங்களுக்கு  மரியாதை கொடுக்கணும் ! ) 
நாமும் கொஞ்சம் மேலே போகும் பாதையில் போய், பார்க்கிங்லே  வண்டியை நிறுத்தினோம். முடிஞ்சவரை ஏறிப் பார்க்கணும். 
ஒரு இடத்தில்  நம்ம க்ராண்ட் கேன்யன் பயணத்தில்  (ப்ரைஸ் கேன்யனில் ) பார்த்தாப்லெ.....   ஒரு காட்சி. அளவில் ரொம்பச் சின்னது. பாறை அமைப்பு அப்படி இருக்குன்னு எனக்கொரு தோணல்.
கொஞ்சம் உயரமான இடங்களில் போய்ப் பார்த்தால் சுத்திவர  ஹோன்னு பரந்து கிடக்கும்  பூமியைப் பார்க்கலாம்.  உள்ளூர்  மக்கள் ஜோடி ஒன்னு,  அத்வானக் காட்டில்  சேர் கொண்டுவந்து போட்டு, அழகை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. இல்லே பயணிகளா இருக்குமோ ? என்னதான்  பார்க்கறாங்கன்னு நாமும் வண்டியை நிறுத்திட்டுக் கொஞ்சதூரம் ஏறிப்பார்த்தோம். பார்த்தால்............ கீழே ரொம்ப தூரத்தில் கொஞ்சம் வீடுகள் !  ஒரு ஆறும்  கூட  !    இந்த ஒரு குன்றோடு முடியும் சமாச்சாரமில்லை.... இது. இந்தாண்டை அடுக்கடுக்கா  அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு! 




பூமி சரிஞ்சப்பக் கடலுக்குள் இருந்த நிலம் மேலே  வந்து இப்படி ஆகிப்போச்சுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. கடலுக்கடியில் இருக்கும்  கிளிஞ்சல்கள் சமாச்சாரங்கள் எல்லாம்  அங்கங்கே கல்லாகிக்கிடக்காமே !  சம்பவம் நடந்து சில மில்லியன் வருஷங்கள் ஆகி இருக்கலாமாம்.  நம்ம ஹிமாச்சல் கூட இப்படித்தானே !  இந்தப்பகுதியை பாதுகாத்துப் பராமரிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்திட்டாங்க.  விவரம் அடங்கிய மாடர்ன் கல்வெட்டும் புதைச்சு வச்சுருக்காங்க. பயணிகள் வந்து போக ஆரம்பிச்சதும், மேலே ஏறி வர கேட் எல்லாம் போட்டு வச்சாச்.  பாதுகாப்புக் கருதி, ராத்ரியில் மூடி வச்சுருவாங்க.

சுத்துமுத்துமாப் பார்த்து ரசிச்சும் க்ளிக்கியும் ஆச்சு.  மணி மூணாகப்போகுதுன்னு  கிளம்பி நேப்பியர் க்வாலிட்டி இன்  வந்து சேர்ந்துட்டோம். 
நல்ல வெயில் இருக்கேன்னு, 'நம்மவர்' நீச்சல் குளத்துக்குக் கிளம்பினார். இவர் எல்லாப்பயணங்களிலும் துணிமணிகள் எடுத்து வைக்கும்போது  முதலில் ஸ்விம் ஷார்ட்ஸ் எடுத்து வச்சுக்குவார்.  ஆனால் பயன்படுத்த நேரமே கிடைக்கறதில்லையாம். என்னோடு பயணம் செஞ்சால் ஊர் சுத்தவே சரியா இருக்குன்னா....  ஆஃபீஸ் வேலையாப் போகும்போது  இன்னும் சுத்தம்.... மீட்டிங், ஃபேக்டரி விஸிட்னு போயிருதாம்.  ஸிட்டியில் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து  ஒரு மணி, ஒன்னரை மணி தூர ட்ரைவிங் லேதான் ஃபேக்டரிகளைக் கட்டி வச்சுருக்காங்க. 

ரொம்ப நாளா நீந்தாம, இருந்ததால்,  தோள்வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.  சாயங்காலம்  ஸ்நாக்ஸ், டீ ன்னு முடிச்சுட்டு  கடலைப்பார்த்துக்கிட்டுக் கொஞ்ச நேரம் பால்கனியில் உக்கார்ந்துருந்தோம்.

ராச்சாப்பாட்டுக்கு எதாவது வாங்கி வரலாமுன்னு கிளம்பி, பார்க்கிங் ஏரியாவில்  காராண்டை போறோம். எப்படித்தான் வந்துச்சோன்னு தெரியாமல் படபடன்னு ஒரு மழை. சட்னு வண்டிக்குள் போய் உக்கார்ந்துட்டோம்.  விடாமல் ஒரு மழை அடியடின்னு அடிக்குது. காமணி நேரம் அடிச்சு ஓய்ஞ்சது.  சின்னத் தூறல்தான். போயிட்டு வந்துடலாமுன்னு வண்டியை ரிவர்ஸ் எடுத்தால்....   டக்னு ஒரு சத்தம். எங்கெபோய் இடிச்சோமுன்னு பார்த்தால் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த ஒரு பெரிய  வண்டியில் புல்பாரில்.....  அந்த  வண்டிக்கு ஒன்னும் இல்லை. நம்ம வண்டியில் லேசா பெயின்ட் போயிருக்கு :-( 

அட ராமான்னு புலம்பிக்கிட்டே  கடைக்குப் போயிட்டு வந்தோம். 

இவருக்குத்தான் மனசாகலை. யூ ட்யூபில், டூத்பேஸ்ட் வச்சு ஸ்க்ராட்ச் மார்க்ஸ் அழிக்கலாம் என்பதை நம்பி அந்த வைத்தியம் செஞ்சுபார்த்தார் :-)  

ஊஹூம்.......  

தொடரும்......... :-)



Friday, November 27, 2020

பொகையிலைப் புராணம்........ (ரோட்டோருஆ பயணம் . பகுதி 17 )

நம்ம பக்கம் ரெட்டை நகர்னு சொன்னதும் ஹைதராபாத், செகந்திராபாத் நினைவுக்கு வர்றதைப்போல்.... நியூஸியில்  இந்த நேப்பியரும்,  ஒரு பதினெட்டு கிமீ தூரத்தில் இருக்கும் ஹேஸ்டிங்ஸ் என்ற ஊரும்  ட்வின் ஸிட்டின்னு பெயர்  வாங்கியிருக்கு.  உண்மையில்  நேப்பியர் சின்ன ஊர்தான், ஹேஸ்டிங்க்ஸ் கொஞ்சம்  பெரிய ஊர்.  அக்கம்பக்கத்துப் பேட்டைகளையும் சேர்த்துக்கிட்டு  முப்பத்தியேழு மடங்கு பெருசே தவிர,  சனத்தொகை கணக்கைப் பார்த்தால்... ஒரு இருபதாயிரம் தான் அதிகம்! 
இங்கே வந்தால் அங்கேயும்  போய்ப்பார்க்கணும் என்ற நியதிப்படி இதோன்னு கிளம்பிப் போறோம்.  மிஞ்சிப்போனால் இருவது நிமிட் போதுமே ! நேத்துப்பார்த்த  ஹார்பர் வழியில்தான் போறோம். ஏகப்பட்ட  ட்ரக்குகள், மரத்தடிகளோடு வரிசைகட்டி நின்னுக்கிட்டு இருக்கு.  ஒரு அழகான கட்டடம் கண்ணில்பட்டது. நேஷனல் டுபேக்கோ கம்பெனி லிமிட்டட்.  பாரம்பரியக் கட்டடங்களின் அமைப்பில் சேர்க்கப்பட்டுருக்கு.  அதனால் வெளிப்புறம்  வேறெதாவது மாற்றம் செய்யறோமுன்னு கை வைக்கப்டாது..கேட்டோ !
இந்தக் கட்டடமும், அந்த பெரிய நிலநடுக்கத்துக்குக்கப்புறம்  கட்டியதுதான் . அதுக்கு முன்னேயே 1922 லே இந்த ஊருக்கு வந்து பொகையிலை யாவாரம் ஆரம்பிச்சுருக்கார் Gerhard Husheer . ஜெர்மனி நாட்டுக்காரர். அப்பெல்லாம் புகையிலையின் ஆபத்தைப்பற்றி யாரும் ஆராயலை......  இந்த பீடி, சிகெரெட்டு வலிக்கும் (மலையாளச் சொல் ) வழக்கமெல்லாம் பெரிய ஆம்பளைத்தனமா இருந்துக்கு ஒரு காலத்துலே.... இதுலே ஸ்டைல்வேற  காமிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க.
புகையிலையை, மனுஷன் பயன்படுத்த ஆரம்பிச்சு எட்டாயிரம் வருசங்களாச்சுன்னு சொல்றாங்க. புகையிலையை வாயில் போட்டு அதக்கி வச்சுக்கறது,  பொடி தயாரிச்சு மூக்குக்குள்ளே  உறிஞ்சு அனுப்பறதுன்னுதான்  இருந்துருக்கு.    எங்க அம்மாத்தாத்தா அந்தக் காலத்துலே மூக்குப்பொடி நிறுவனம் ஆரம்பிச்சு, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி பண்ணியிருக்கார். சென்னையில் மூணு ரீடெய்ல் ஷாப்ஸ் வேற !   அவர் காலத்துக்குப்பின் பிள்ளைகள் பொறுப்பேத்துக்கிட்டு, ஆடம்பர வாழ்வில் எல்லாத்தையும் முழுங்கிட்டாங்க.  அம்மம்மா.... எப்பவாவது சொல்லும் கதைகளில் சிலசமயம் இப்படியான உண்மைகள் வந்துவிழும் ! 
புகையிலையைப் பைப்புக்குள் அடைச்சு அதன் தலையில் தீ வைக்கும் பழக்கம் கனவான்களுக்கே உரித்தானது.  நம்ம 'அய்யா' ஒருவரும் இப்படி இருந்தார். இப்ப விட்டுட்டேன்னு அவரே சொல்லியும் இருக்கார் !  உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சவர்தான். 


முழு இலையைப் பதமாக் காயவச்சு அதை இறுக்கமாச் சுருட்டி, அதன் தலையில் தீயை வச்சு 'குடிப்பது' உண்டு. சுருட்டுவதால் அதுக்கு சுருட்டுன்னே பெயர் !  நம்மூர் சுருட்டுக்கு இங்கிலாந்தில் ஒரு ப்ரேமி இருந்துருக்கார் !  திண்டுக்கல்லில் விளைஞ்ச புகையிலையை, திருச்சினாப்பள்ளியில்  ( உறையூர்தானே ? ) சுருட்டிப் பொட்டியில் அடுக்கி, இங்கிலாந்துக்கு அனுப்புவாங்களாம்.

இவுங்களுக்கெல்லாம் முன்னோடியா, பதினாறாம் நூற்றாண்டில் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர்தான்  புகையிலையைச் சுருட்டி, குடிச்சுப் பார்த்தவராம்! Jean Nicot என்ற பெயருடையவர். அதனால்தான் புகையிலையில் இருக்கும் ஊக்குவிக்கும் சமாச்சாரத்துக்கு  நிக்கோடின் என்ற பெயர் வந்துருக்குன்னு.... ஆராய்ச்சி போகுது..... 

சின்னபசங்க, வெடிக்காத ஓலைவெடியைப் பிரிச்சு, அந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு ஒரு காகிதத்தில் வச்சு, அதுக்குத் தீவச்சுப் பார்த்திருப்போம்தானே.... (அதை நாம்கூடத்தான் செஞ்சுருந்தோம், இல்லே ? ) அதே போல....    'குடிச்சு முடிச்சு'க் கீழே போட்ட கட்டக்கடைசி துண்டுகளைச் சேர்த்து ஒரு மாலுமி, காகிதத்தில் வச்சுச் சுருட்டி, சிகெரெட் என்ற சமாச்சாரத்தைத்   தொடங்கி வச்சுருக்கார். 


உறிஞ்சுன புகையை, வாய் வழியா விடாம, மூக்கு வழியா விடறது, கண் வழியா விடறதுன்னு மேஜிக் எல்லாம்  காமிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க...... அந்தக் காலத்துலே !  எங்க அப்பாவும் ஒரு மெஜிஷியன் என்று சொல்லிக்கொண்டு........ ஹாஹா....  அப்போ நாங்க சின்னப்புள்ளீங்க இல்லே !

இப்படியாகப் புகையிலை பயன்பாடு உலகமெல்லாம் பரவிப்போயிருந்த சமயம், நியூஸிக்கும் வந்துருச்சு.  நேப்பியரில் ஆரம்பிச்ச யாவாரத்தில்  வருஷத்துக்கு முப்பத்தியஞ்சாயிரம்  பவுண்டு லாபம் பார்த்துருக்காங்க. 1922 லே தங்கம் என்ன விலைன்னு பார்க்கணும்....   கூகுளாரைக் கேட்டால்.  ஒரு அவுன்ஸ் தங்கம்,   $20.67 ன்னு சொல்றார்.  சாதாரண அவுன்ஸா இல்லை ட்ராய் அவுன்ஸான்னு தெரியலை.... கூகுளாண்டவரை சரணடைஞ்சால்  ட்ராய் அவுன்ஸ், 1527 லேயே  தங்கம் வெள்ளி அளக்க  ஆரம்பிச்சுருச்சாம்.  அப்ப  31. 1 கிராம் !   ஹைய்யோ !

எல்லாம் நல்லாப்போய்க்கிட்டு இருக்கும்போதுதான் அந்த சரித்திரத்தில் இடம் புடிச்ச நிலநடுக்கம் 1931 ஃபிப்ரவரி மூணாம் தேதி வந்து ஊரையே  அழிச்சுருச்சு. 7.8  அளவுலே   ஒரு நூறு மில்லியன் டன் வெடிமருந்தைக் கொளுத்திவிட்டாப்லெ.... இருந்துச்சாம்.  256 பேர் மரணம், 400 பேருக்கு பலத்த அடி, காயம்..... 

நிலநடுக்கமுன்னாலே எனக்கு மனம் நடுங்கிருது.  எங்க ஊரில்  இப்போ சமீபத்துலே  (2011  ஃபிப்ரவரி 22 ) 6.2 அளவு நிலநடுக்கம்.  ஊருலே பாதி அழிஞ்சே போயிருச்சு. 185 பேர் மரணம், ஒரு ரெண்டாயிரம்பேருக்கு அடி, அதுலே  164 பேர் சீரியஸ்.....  இதைப்பற்றி நம்ம துளசிதளத்துலேயே விலாவரியா அழுது புலம்பியாச்சு.  நேரம் இருந்தால் இங்கே எட்டிப்பாருங்க......    ஆறு பதிவுகள்தான்......... சுட்டியிலிருந்து நூல்பிடிச்சுப் போகலாம்......ஆச்சு... இன்னும் மூணுமாசம் போனா பத்து வருஷம். இன்னும் நகரத்தை முழுமையாக் கட்டி முடிக்கலை........ப்ச்....


இந்தக் கணக்கில் பார்த்தால் நேப்பியர் எவ்வளவோ மேல்.....  நிலநடுக்கம் ஆன மூணாம் வருஷமே  நகரத்தைக் கட்டியெழுப்பிட்டாங்க.  டெக்னாலஜி அறிவு அதிகமா ஆகஆக  ஒவ்வொன்னா ஆலோசிச்சு, ஆராய்ஞ்சுன்னு எல்லாத்துக்கும் ரொம்ப நாட்கள் எடுத்துக்கறாங்க , இல்லே ?  

நேப்பியரில் 1931 இல்  சம்பவம் நடந்த பிறகு , 1933 லேயே புகையிலைக் கம்பெனி, அவுங்க கட்டடத்தைத் திரும்பக் கட்டியெழுப்பிட்டாங்க. அதான் ஏகப்பட்ட லாபம் சம்பாரிச்சுருந்தாங்களே.....   பணப்பிரச்சனையே இல்லை பாருங்க.....

திரும்பக் கட்டுனப்பச் சீக்கிரமாக் கட்டுனதோட இல்லாமல் கலையழகு மிக்க ஆர்ட் டெகோ கட்டடமாகவும் கட்டிட்டாங்க. நேப்பியரே  'ஆர்ட் டெகோ ஸிடி' என்ற பெயர் வாங்குனதுக்கு இவுங்கதான் காரணம் !   
ரோத்தமன் கட்டடம்னு இருந்த பழைய பெயர் போய், 'நேஷனல் டுபேக்கோ கம்பெனி லிமிட்டட்' னு பெயர் மாற்றமும் அப்போதான் ஆச்சு.  நியூஸியில் பாரம்பரியக் கட்டடங்களைப்  பாதுகாக்கும்  அமைப்பு ஒன்னு ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற பெயரில் இயங்குது.  அவுங்களை மீறி, இந்த வகையில் இருக்கும் எந்தக் கட்டடங்களில் கை வைக்க முடியாது கேட்டோ.....

Pic Below from Google . Thanks
வாரநாட்களில் பொதுமக்கள் உள்ளே போய்ப் பார்க்க அனுமதிக்கறாங்க. நாம் போகலை. இப்போ  பக்கத்தூருக்குப் போய்க்கிட்டு இருக்கோமில்லெ?  
எதையாவது வழியிலே பார்த்துட்டாக் கொஞ்சம் (! ) அதைப்பத்திச் சொல்லலாமேன்னு ஆரம்பிச்சு..... அனுமார் வால் ஆகிப்போச்சு..... சரி வாங்க ஹேஸ்டிங்ஸ் போகலாம்....

தொடரும்  ............ :-)



Wednesday, November 25, 2020

தங்கமகளின் விவகாரம்..... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 16 )

அக்வேரியத்திலிருந்து  வெளியே வந்ததும், கார்பார்க் போறவழியில் தலையைத் திருப்பினால்  கொஞ்ச தூரத்துலே ஒரு உயரமான தூணில்  சிலை ஒன்னு.  அது என்னன்னு பார்த்துட்டுப் போகலாமுன்னு போனால்... நல்ல அழகான  நீரூற்றுக்கு நடுவில் இருந்து கிளம்பும் தூணில் ஒரு பெண் ! 'பெருமாளே, என்னைப்பாரு'ன்னு சொல்றாப்லே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்திப்பிடிச்சுருக்காள்.  இவளுக்கு ஒரு அஃபிஸியல் பெயரும், ஒரு செல்லப்பெயரும் இருக்கு ! 
ஸ்பிரிட் ஆஃப்  த நேப்பியர் என்ற பெயரில் Frank Szirmay of Hungary  வடித்த வெண்கலச் சிலை. 1931 நிலநடுக்கத்தில் ஊரே அழிஞ்சுபோச்சுல்லே....  அதுக்கப்புறம்  மனம் தளராமல்  எப்படி  ஊரைத் திரும்பக்கட்டி எழுப்பிட்டாங்கன்றதைப் பாராட்டும் முகமா இந்தச்சிலையை அமைச்சுருக்கார் சிற்பி.  லோக்கல் ஆஸ்பத்ரி சூப்பரின்டென்டண்ட், தாமஸ் கில்ராய், 1971 லே  இந்தச் சிலையை  ஊருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துருக்கார். இதுக்கு ஊர்மக்களும்  நன்கொடை  கொடுத்துருக்காங்க.  இந்த செயற்கை நீரூற்றுக்கும் கில்ராய் ஃபௌன்டெய்ன் என்று பெயரும் வச்சுட்டாங்க. (இது பொதுவாக் கிடைச்ச தகவல்.)
உண்மையில் நடந்தது என்னன்னா.... டாக்டர் தாமஸ் கில்ராய், தன்னுடைய உயிலில் ஒரு தொகையை நகரத்துக்கு அன்பளிப்பாக எழுதிவச்சுட்டுச் சாமிக்கிட்டே போயிடறார்.  நகரசபை, அந்தக் காசுலே என்ன செய்யலாமுன்னு  உக்கார்ந்து யோசிச்சது. ஒரு சிலை செஞ்சு  வச்சு நகரத்தை  அழகுபடுத்தலாமுன்னு ஐடியா! காசு பத்தாது என்பதால் Lew Harris என்பவர் ஒரு தொகையும், நகரசபை ஒரு நல்ல தொகையுமாச் சேர்த்துச் சிற்பியிடம் கொடுத்து,  அவரும் சிலையை வார்த்துட்டார்.

ஊர்சனம், முதலில் சிலைவிவரம் கேட்டுக் கொஞ்சம் முணுமுணுத்துருக்கு.  சிலைக்கு உடுப்பு இல்லையாம்..... இதுலே  கொஞ்சம்  பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு வழியா  சிலையை நிறுவிட்டாங்க.  நகரசபையே இடமும் கொடுத்துருச்சு.  ஒரு ரெண்டரைவருஷம் போல் ஆனதும், கடற்கரை உப்புக்காத்து காரணம், சிலையின் மெருகு போகத்தொடங்கியதும்,  அப்ப இருந்த நகரசபை முக்கியஸ்தர்கள், பேசாம பெயிண்ட் அடிச்சு வுட்டுறலாமுன்னு (திரும்ப உக்காந்து யோசிச்சு ? ) சொல்லி, 'எடு அந்தத் தங்கநிறப் பெயின்டை'ன்னு தங்கச்சிலையா மாத்திட்டாங்க. சிற்பிக்கு இது உடன்பாடில்லை. பெயின்ட் கூடாது.  வெங்கலச்சிலையா  இருந்தாத்தான்  அழகுன்றார். 

சிலையை வித்தபின்  செஞ்சவருக்கு என்ன உரிமை ?  தங்கச்சிலையா மாறிடுச்சு. சனமும் ஸ்பிரிட்டை மறந்துட்டு, கோல்டன் கேர்ள் சிலைன்னு செல்லப்பெயர் வச்சு அதுவே நிலைச்சும் போச்சு.


இப்படியே கதை முடிஞ்சு போச்சுன்னா என்ன விவகாரம் இருக்கு ?  எல்லாம் சுபம் இல்லையோ ? 

கொஞ்சம் தூண்டித்துருவிப் பார்த்தால்  கதை முடியலையே..... ...

சிலையை இங்கே தூண்மேலே வச்சுப்பிடிப்பிச்சு ப்ரதிஷ்டை பண்ணப்ப,  சிற்பி சொல்லிட்டார், 'ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபிக்ஸ் பண்ணிட்டேன். சிலை நகரவே நகராது' !

கொஞ்ச காலத்துக்குப்பிறகுதான்  உப்புக்காத்து அரிக்குதுன்னு   lacquer பூசியிருக்காங்க.  

அதுக்குப்பின் இங்கே நடந்த   Hawke's Bay Art Gallery and Museum கலைசம்பந்தமான விழாவுக்கு   இங்கிலாந்துலே இருந்து  (சொல்ல விட்டுட்டேன்லெ... இந்த ஊர் நேப்பியர் கலைகளை வளர்க்கும் நகரமுன்னு பெயர் பெற்றது கேட்டோ !  Napier, the Art Deco city ! ) கிப்பர்ட் என்றவர் வந்துருக்கார். இந்தப் பெண்  சிலையை வார்த்த ஃபவுண்டரியின் தலைவர் இவர்தான். ஊருக்கே பெருமையா உசரத்துலே நிக்கும் சிலையைப் பார்த்தவர், அந்த  சிலையை வார்த்து இணைச்ச இடங்களில் கொஞ்சம் சரியில்லை. வெல்டிங் செஞ்சால் நல்லதுன்னு  ரகசியமா ஒரு சேதியை  நகரசபை  டௌன்க்ளார்க்கிடம் சொல்லி இருக்கார். இத்தோடு, நீங்க சிலையில் ஒரு பெயின்டும் அடிக்காம விட்டுருக்கணும்.  இயற்கையாக் காலநிலையால் வரும் மாற்றங்களைப் பொருட்படுத்தக்கூடாது....... ன்னும் சொல்லி இருக்கார். 


ரகசியம்னு சொல்லிட்டால் போதாதா...... உடனே... ரகசியமா இதைப்பற்றி ஆராய ஆரம்பிச்சாங்க :-) பைனாகுலரை எடுத்துக்கிட்டுப்போய் பார்த்திருக்காங்க.  வெல்டிங் நல்லாத்தான் இருக்கு. அங்கே அடிச்சுருந்த பெயின்ட்தான்  சரியா ஒட்டாம பிச்சுக்கிட்டு வருதுன்னுட்டாங்க. சிலை செஞ்ச சிற்பியாண்டைபோய்ச் சொன்னாங்க, 'சிலையில் வெல்டிங் பிச்சுக்கிச்சாமே' ன்னு....   பாவம் சிற்பி. இது ஏதுடா வம்பாப்போச்சு....   திரும்ப இந்தச் சிலையை இங்கிலாந்துக்கு அனுப்பி ரிப்பேர் செய்யும் செலவு  ரொம்ப அதிகமாவும் இருக்கே.....    ஏற்கெனவே அடிச்சு வச்ச லேக்கரை எடுக்கலாமுன்னு ஆரம்பிச்சால்  அந்த தின்னர், வெங்கலத்தைப் பாழ் பண்ணிருமேன்னு ஒரு புதுக்கவலை. 

அப்பதான் நகரசபைக்கு ஒரு  ஐடியா வந்துருக்கு ! தங்கமடிச்சுட்டாங்க !  தங்கத்துலே குறை தெரியாதுன்னு  நினைச்சுருப்பாங்க போல!   ஒரிஜினல் தங்கமே நாளாக ஆக ஒரு மாதிரி ஆகிருது. இதுலே தங்கப் பெயின்ட்  ...  கேக்கணுமா ? அப்பப்ப  மேல் பூச்சுன்னு ஆகிப்போயிருக்கு. 
மேலே சொன்ன 'ரகசியம்'  உள்ளூர் செய்தித்தாளான டெய்லி டெலெக்ராஃப் நிருபரின் காதுலே விழுந்தவுடன், மீடியா செய்யும் வேலையைச் செஞ்சுட்டார். டாம் டாம்..... நாடு முழுக்க நியூஸ் போயிருச்சு. என்ன ஒன்னு.... அப்பெல்லாம்  இன்ட்டர்நெட், கம்ப்யூட்டர்னு ஒன்னும்  பரவலா இல்லையே..... செய்தித்தாள் மட்டும்தானே ?
இதுக்கிடையில் சிலையைச் சுத்தி நீரூற்று, தோட்டம்னு அலங்கார வேலைகளும் நடந்து முடிஞ்சுருச்சு.  ஒரு சமயம் (2009லே )சிலையைக் கொஞ்சம் கிட்டக்கப்போய் பார்த்தப்ப, வெங்கலம் பலபகுதிகளில் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்துருக்கு. இனி இது வேலைக்காகாது.  வேறெதாவது வழியுண்டான்னு பார்க்கணுமுன்னு தேடுனாங்க. ஒரிஜினல் சிற்பி, 1985லேயே  சாமிக்கிட்டே போயிட்டார். 
புதுசா ஒரு சிலையை இங்கே நியூஸியிலேயே  வார்த்துக்கலாம். அதுக்கு சிலிகான் ப்ரொன்ஸ் பயன் படுத்தலாமுன்னு  திட்டம்.  இந்த வகை உலோகம்,  உப்புக்காத்துலே இருந்தாலும்  சட்னு  பாழாகாதாம்.  பழைய சிலையைத் தூணிலிருந்து  எடுக்கணுமே... கிட்டத்தட்ட சிலையை ஸ்தாபிச்சு முப்பத்தியெட்டு  வருசமாகப்போகுது.   நல்ல ஸ்ட்ராங்காதான் வச்சுருந்துருக்கார் சிற்பி.  ஏழு மணி நேரம் ஆச்சாம். 
புதுச்சிலையை 2011 வருஷம் அதே தூணில் வச்சுட்டாங்க. ரொம்பக்குழப்பமில்லாமல்  வேலை நடந்து முடிஞ்சுருச்சாம்.  இதைத்தான் நாம் இப்போ பார்க்கிறோம். 
தங்கப்பொண்ணுக்குப் பின்னால் என்னெல்லாம் நடந்துருக்கு பாருங்க. தங்கமகள் சரித்திரம் படைச்சுட்டாள் !  சமகால சரித்திரம் நமக்கு !  அசலும் நகலுமா ஆகிப்போச்சு !
போகட்டும்.....  எப்படியோ நகரத்தின் ஸ்பிரிட் குறையாம இருந்தால் சரி !  இல்லையோ ? 

PIN குறிப்பு: படம் 3 & 5 கூகுளாண்டவர் அருளிச்செய்தார். நம் நன்றிகள் !

தொடரும்.......... :-)  


Monday, November 23, 2020

கடலுக்கடியில்.......(ரோட்டோருஆ பயணம் . பகுதி 15 )

கிழக்கே பார்த்த பால்கனி என்பதால் சூர்யோதயம் பார்க்க முடிஞ்சது.  நல்ல மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சுட்டுக் கிளம்பி இருக்கான் சூரியன் !  மணி ஆறுதான்.  டேலைட் ஸேவிங்க்ஸ் இருப்பதால் ஏழுன்னு காமிக்குது கடிகாரம்! கன்யாகுமரியில் கோட்டை விட்டது, இங்கே நோகாமல்  கிடைச்சது. 

கடமைகளை முடிச்சுட்டுக் கிளம்பினோம். நம்ம ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் ஒரு 1.1 கிமீ தூரத்தில் இருக்கு நேஷனல் அக்வேரியம் ஆஃப் நியூஸிலேண்ட்.  ப்ரமாண்டமான கட்டிடம். 


எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கறாப்ல, இதுக்கும் ஒன்னு இருக்கு! 1954 ஆம் வருஷம், இங்கே இருக்கும் ஒரு செருப்புக்கடையில்  கண்ணாடித்தொட்டியில் தங்கமீன் வளர்த்துக்கிட்டு இருக்கார் Les Mills.  தொட்டி கொஞ்சம் பெருசுதான்.  இவருடைய மகன், வேறொரு ஊரான வெலிங்டனில் இருந்து கொஞ்சம்   tropical fishகளை வாங்கியாந்து தொட்டியில் போட்டுருக்கார். எல்லோரும் ஒத்துமையா சந்தோஷமா இங்கேயும் அங்கேயுமா நீந்திக்கிட்டு இருக்காங்க.  

இதைப்பார்க்கவே கடைக்கு சனம் வந்து போய்க்கிட்டு இருக்கு!  விஷயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்த உள்ளூர் க்ளப் ஒன்னு,  500 பவுண்ட் காசைக் கொடுத்து, (1967 ஜூலை வரை  இங்கத்துக் காசு பவுண்டு, ஷில்லிங், பென்ஸுதான் கேட்டோ ! )  பொதுமக்களுக்காக இங்கத்து  வார் மெமோரியல் கட்டடத்து பேஸ்மென்ட்டில் ஒரு அக்வேரியம் ஆரம்பிச்சுக் கொடுக்கச் சொல்லி, வேலை முடிஞ்சு   1957 டிசம்பர் மாசம் திறந்துட்டாங்க. 

இதுக்கப்புறம் ஒரு 19 வருஷம் கழிச்சு1976 இல், இப்போ நாம் பார்க்கும் பெரிய கட்டடமா வளர்ந்து போச்சு !!!!   வருஷத்துக்குப் பார்வையாளர் கணக்கு 230,082 ன்னு  புள்ளிவிவரம் சொல்லுது.  கதை இப்படியிருக்க,  சூப்பர் ஐடியா ஒன்னு வந்து,  2012 இல்  1.8 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொள்ளும் கண்ணாடித்தொட்டி கட்டிவிட்டாங்க. கடலையொட்டியே இருப்பதால் தண்ணீர் பிரச்சனை இல்லை! 

(முப்பத்தியெட்டு வருஷங்களுக்கு முன்னால் ஹாங்காங் ஓஷன் பார்க்கில் ஒரு அஞ்சுமாடி உசரத்துக் கண்ணாடித்தொட்டியில் மீன்கள் இருப்பதைப் பார்த்து அதிசயிச்சு நின்னுருக்கேன்!  கொசுவத்திதான் கேட்டோ ! )
085511     085648 பெரிய கல்வெளியில் கம்பீரமா நிக்குது அக்வேரியம். வெளிப்புறச் சுவரில் ஓவியங்கள் அருமை....  வெரி கலர்ஃபுல்  ம்யூரல்ஸ் !!  
 இங்கே பீச்சில் மணலையே காணோம்.... சின்னக்கல் பீச்சுதான். ஆனால் எனக்கு மணல்தான் பிடிக்கும். அதுவும் நல்ல சுத்தமான மணல் வேணும். இதுக்கு அஸ்ட்ராலியாவின் கோல்ட்கோஸ்ட் , Broad Beachதான் என் பெஸ்ட் சாய்ஸ் ! சனியன் கொரோனா, நம்ம நாட்டைவிட்டு எங்கேயும் போய்வர முடியாமல் வச்சு செஞ்சுக்கிட்டு இருக்கு.... ப்ச்......

அக்வேரியத்துக்குள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. நமக்கு சீனியர் சிட்டிஸன் ரேட்.  இங்கே நாம் சீனியர் சிட்டிஸன் 'ஆனதும்'  அரசு ஒரு 'கோல்ட் கார்டு' அனுப்பி வைக்கும். கட்டணம் இருக்கும் இடங்களிலும்,  சிலபல கடைகளில்  டிஸ்கவுன்ட்டுக்கும் அதைக் காமிச்சால் போதும்.

மில்லியன் காலத்துக்கு முற்பட்ட சுறா, வாயைத்திறந்து வரவேற்றது :-)

பொழுது போக்கன்னு ச்சும்மாப் பார்க்கும்  கலர்கலரா இருக்கும் மீன்வகைகள் இங்கே இல்லை.  கடல்வாழ், நதிவாழ் உயிரினங்கள் வாழ்க்கைமுறைகளைப் பார்த்துத் தெரிஞ்சுக்கும் வகையில்  கற்றல் சம்பந்தமான அம்சங்கள்தான்  அதிகம். வருஷத்துக்கு ஒரு முறை கடல் வாரம்னு ஒன்னு கொண்டாடுறாங்க. இந்தக் கடல்வாரம் நாடு முழுக்கக் கொண்டாடறாங்க.  நம்மூரிலும் உண்டு. ஆனால் இதுவரை எட்டிக்கூடப் பார்க்கலை....  ஒரு முறை போகணுமுன்னு நினைச்சாலும்  வாய்க்கலை. ஆனால் பாருங்க....  இப்ப நாம் வந்துருக்கோம் இந்த வாரத்தில் !  
 நம்ம ஊரில்  ட்ராப்பிக்கல் மீன்கள் , அழகு மீன்கள் விற்கும் கடைகள் இருக்கே தவிர, அக்வேரியம்னு  ஒன்னும் கிடையாது......  கடற்கரை, கரையோரப்பகுதிகள் சுத்தம் செய்யறதுன்னு ஆரம்பிச்சு, தினம் ஒரு ஆக்டிவ்விட்டின்னு எல்லா வயதினரும் கலந்துக்கும் வகையில் செய்யறாங்க. எல்லா வயதினருமுன்னால்......  0 முதல்..... 100+ வரை !  வருஷாவருஷம் எதாவது தீம் வேற !  இந்த வருஷம் (நாம் போனது 2018 !)" Healthy Seas, Healthy People  "  அக்வேரியம்  பார்க்கப் பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கு இலவச அனுமதி!  
 நியூஸியின்  கான்ஸர்வேஷன் டிபார்ட்மென்ட், நாட்டின் இயற்கை அழகைப் பாதுகாப்பதில்  ரொம்ப கவனமாச் செயல்படுது என்பது எங்களுக்கெல்லாம் பெருமை! 
பிரான்ஹா மீன்களை முதல்முதலா இங்கேதான் பார்த்தோம்.  மாமிசம் தின்னும் மீன்கள் !   கத்திபோல கூரான பற்களாம்.  மனுசனோ, மற்ற உயிரினமோ கிடைச்சால், கை கால் விரல்களை அப்படியே  சீப்புலே இருக்கும் வாழைப்பழத்தை எடுக்கறாப்போல  வெட்டித் தின்னுருமாம்.  ஆனா சைஸ் என்னவோ சின்னதாத்தான்  இருக்கு!    இன்னும் கொஞ்சம் பெருசா, அமேஸான் நதியில் ஏராளமா இருக்காமே ! 

நெல்சன் என்ற ஊருக்கு ஒருமுறை போனப்ப, ஈல் மீன்கள் இருக்கும் ஒரு இடத்துக்குப் போயிருந்தோம். அதுகளும் மாமிசம் தின்னும் வகைதானாம்.  கொத்துக்கறியைச் சின்ன தட்டில் வச்சு விக்கறாங்க.  நாம் அதை வாங்கி, ஒரு குச்சியில் குத்தி நீட்டுனா, அதுகள் பாதி உடம்புவரை குளக்கரையில் போட்டுருக்கும் கல்லில் ஏறிவந்து வாயைத் திறந்து வாங்கிக்குதுங்க. கவனமாக் கொடுக்கணும். கையை வாயாண்டை கொண்டு போயிடாதீங்கன்னு எச்சரிக்கறாங்க. நாமும்  வாங்கிக்கொடுத்தோம். நல்ல நீளக்குச்சிதான். மகள் அப்போ சின்னவள்.    ஒரு கையால் ஊட்டும்போதே.... இன்னொரு கையால் அதன் தலையைத் தடவிப் பார்த்தாள். எனக்கு பயத்தில் உயிரே போயிருச்சு.... 
 
The Living Fossil  டுஆடாரா.....   


இதைப்போலவே   Snake-eating Twin-hinged Tortoise
ஆமைகளைப் பார்த்தோம். அபூர்வமாம்.


சாதாரண ஆமைகளும் இருக்கு.     தண்ணீருக்கடியில் நீந்தும் அழகைக் கண்ணாடிவழியாப் பார்த்து ரசிக்கலாம்.  
இதுக்குள்ளே பெங்குவின் ஃபீடிங் டைம்  வந்துருச்சுன்னு அங்கே போனோம்.  எல்லாம் சின்ன சைஸ். நாம் ஓமருவில் பார்த்தோமே அதே அளவு. ஒரு நார்மல் கோழி தான். 



சாப்பாடு கொண்டுவரும் நபரை ரொம்பநல்லாத் தெரிஞ்சு வச்சுருக்குதுகள்.  அதைப்போலவே  சாப்பாடு விளம்பும் நபர்களும் இதுகளை நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்காங்க. இப்படிப் பறவைகள், விலங்குகள், மனிதர்கள்  எல்லாம் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் பழகுவது சுலபமில்லை. பலமாதங்கள் பொறுமையாப் பயிற்சி எடுத்துக்கணும்.  முக்கியமா நம்மை அதுகள் விரும்பி, பயமில்லாமல் பழகணுமுன்னா.... நம்ம மேல் ஒரு நம்பிக்கை வரும்படி நாம் நடந்துக்கணும். இதைத்தான்  You should  earn their trust னு சொல்றது.  







சாப்பாடு கொடுக்கும் நபர், கையில் ஒரு பக்கெட்டைப் பிடிச்சுக்கிட்டு உள்ளே வந்தார். 
அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தவங்க , எதோ குரல் கொடுத்தாங்களோ என்னவோ.... பரபரன்னு சின்னக்கூட்டம் கூடிருச்சு..... 'கஞ்சி வரதப்பா'  

https://www.facebook.com/1309695969/videos/10219214956867295/

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgopal.tulsi%2Fvideos%2F10219214956867295%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

இங்கிருக்கும் பசங்க எல்லோரும் எதோ ஒருவிதத்தில் மனிதர்களாலோ, மற்ற மிருகங்களாலோ பாதிக்கப்பட்டப் பாவங்கள். கண் போயிருச்சு, தலையில் அடி, ஒரு இறக்கை (!) உடைஞ்சு போயிருச்சு, அநாதையாக் கிடந்ததுன்னு  பல சோகக்கதைகள். இவுங்களுடைய பெயர்கள், மத்த விவரங்கள் எல்லாம் படத்தோடுப் போட்டு வச்சுருக்காங்க.  இந்தப்பகுதி ஊழியர்களுக்கும் விவரங்கள் எல்லாம் அத்துப்படி.  
பசங்க எல்லோரும் பரபரன்னு வந்து கொடுத்த மீனை முழுங்கிட்டுக் கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னுக்கிட்டு இருந்தாங்க. சின்ன வயிறுதானே.... ஒரு ரெண்டு மீன்கள் போதுமுன்னுதான் இருக்கு போல....   எல்லாம் ஒரு இருபது நிமிட்தான்.  அந்த நபர் மட்டும் கொஞ்சநேரம் உக்கார்ந்துருந்தார்.  இன்னொன்னு வேணுமுன்னு யாராவது வருவாங்களோன்னு  பார்த்துக்கிட்டு இருந்தார். ..... சிலர் வீட்டுக்குள்ளேயும், சிலர் தண்ணீருக்குள்ளேயும், சிலர் கரையிலுமா அவரவர் வேலையைப் பார்க்கப்போனதும், நாங்களும் நம்ம வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு  அங்கிருந்து கிளம்பி வேறொரு பகுதிக்கு வந்தோம். 
Ocean Tunnel னு ஒரு அம்பது மீட்டர் நீளத்துக்கு  சுரங்கப்பாதை. நாம் ஒன்னும் செய்ய வேணாம். ட்ராவலேட்டரில் போய் நின்னால் போதும்.  நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னால் நடுவில் நடந்தும் போகலாம். தலைக்கு மேலே கடல்!  ஏற்கெனவே சிலநாடுகளில் பார்த்திருப்பதால் அவ்வளவு  வியப்பா இல்லைதான்.

பெரிய சுறாக்களும்,  குட்டிகளும், கடற்பாறைகளுக்கிடையில்  வசிக்கும் (!) மீன்வகைகளும்,  ஸ்டிங்ரே என்னும் நீளவால் மீன்களும்...  வாலின் நீளம்பார்த்ததும்  ஸ்டீவ் இர்வின் நினைவு வந்தது. ப்ச்..... பாவம்.... இந்த வகை மீன் வால் நெஞ்சுக்குள்ளே போய் இதயத்தைத் துளைச்சுருச்சு. அவ்வளவு கூர்மையான வால்.  வால் முனையில் நிறைய முட்கள் போல எலும்புகள் இருக்குமாம்.  உள்ளே போயிட்டால், வெளியே வாலை எடுப்பது கஷ்டமாம். 102

அடுத்தாப்லெ இருக்கும் பெரியஹாலில்  அந்த ப்ரமாண்டமான கண்ணாடித்தொட்டியின் ஒரு பகுதி, சினிமாஸ்கோப் திரை மாதிரி இருக்கு.  தியேட்டர் ஃபீலிங் வருதே !  இங்கேயும் ஃபீடிங் டைம்தான்.  டைவர் உள்ளே இறங்கி  'சோறு' போடறார். குட்டிப்பசங்களுக்கு ஜாலி :-)

மீன்கள் தூங்குமான்னா.... தூங்கும். அப்பப்பத் தரையில் படுத்துக்கிட்டு(!) அசையாம இருக்குதுகள்.
அடுத்த பகுதி கிவிப் பறவைகளுக்கானது..... அப்புறம் டைனோஸார்கள்.....    பூமிப்பந்தின் நடுவில் எப்படி இருக்கும் என்ற விளக்கம் ,  பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கான  லேப் இப்படி ரெண்டு மணி நேரம் விடாமல் சுத்தியிருக்கோம்.  ... போதும் கிளம்பலாம்...... ஓக்கே ?

தொடரும்......:-)