Wednesday, January 30, 2019

பெருமாளே கதின்னு போனாலும் கூட.....(பயணத்தொடர், பகுதி 61 )

ஸ்ரீரங்கத்தில் பெருமாளே  முக்கியமுன்னு போனாலும் கூட....  அடிஷனல் ஆக்டிவிட்டீஸ்ன்னும், ஆடட் அட்ராக்‌ஷன் என்ற வகையிலும்  சில இடங்களுக்குப்போயே ஆகணும் என்றது என் கணக்கில் எழுதப்படாத  விதி.
காலையில் எழுந்ததும் கோவிலுக்குப் போகலாமான்னு தோணுச்சு.  அதே சமயம் நேத்து நடந்த விஸ்வரூப சேவையும்  மனசுக்குள்ளே ஓடுச்சு. அந்த இனிய நினைவைக் கலைக்க வேணாமுன்னு நிதானமாகக் குளிச்சு ரெடி ஆனேன்.

நம்மவர் சொல்றார்  'உறையூர் போயிட்டு வரலாமா?'

இதென்ன கேள்வி?  'கமலவல்லி'யைப் பார்க்கக் கசக்குமா? அதுவும் மாப்பிள்ளை வேற அங்கே இருக்கார்!
கீழே பாலாஜி பவனில் எனக்கான ரெண்டு இட்லியும் வடையும் முடிச்சு, இன்னுமொரு காஃபியை உள்ளே தள்ளினதும் கிளம்பியாச்சு. ( இங்கே காலை ஆறு மணிக்குக் காஃபி வேணுமுன்னு சொல்லி வச்சால் போதும். யாராவது கொண்டுவந்து கொடுத்துருவாங்க)
ஒன்பதுக்குக் கிளம்பிப்போறோம். பயங்கர ட்ராஃபிக்.  அரைமணி நேரமாச்சு  கோவில் வாசலுக்குப்போக.  ராஜகோபுரம் பச்சை முக்காட்டுக்குள்! பராமரிப்பும், பழுதுபார்க்கும் வேலையும் நடக்குது!
சாலையில் பார்த்த ஜனநெருக்கடிக்கு எதிர்ப்பதமா கோவிலில் கூட்டமே இல்லை.  ஒரு நாலைஞ்சு பேர் இருக்கலாம். நாங்களே மூணுபேராச்சே :-)

முதலில்  ஓடிப்போய்  மூலவரைத் தரிசனம் செஞ்சுக்கும் என் பழக்கத்துக்குத் தோதான கோவில் இது :-) அழகிய மணவாளர், மணக்கோலத்தில் பவ்யமா நிக்க, அம்மா  ஜம்முன்னு  உக்கார்ந்துருக்காள்!

எல்லாம் அம்மாவின் சொத்து என்பதால்  பெருமாளே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார் இங்கே! 
உற்சவமூர்த்தியாக்கூட அவர் இங்கே இல்லை. தாயார் மட்டுமே!  அப்பப்போ.....   அங்கிருந்து ஓடிவந்துட்டுப் போறதுதான் வழக்கம்.
பாவம்.... அவன்.... எதுக்குன்னு ஆடுவான்? எதுக்குன்னு ஓடுவான்?

ஏற்கெனவே  இந்த சமாச்சாரங்களைப் பத்தி எழுதுன ரெண்டு பதிவுகளின் சுட்டி தரேன்.  அப்போ படிக்கலைன்னா.... இப்போ ஒரு எட்டுப்போய் படிச்சுருங்க.

  மொத்த சொத்தும்


அம்மா சொன்னதே சட்டம்


நேத்துப்போய் தரிசனம் செஞ்சோமே.....   பாதி உடல் பங்கீடுன்னு....  அந்தக் கதையெல்லாம் இங்கே முடியாது.  அது வேற பருப்பு, இது வேற பருப்பு. இங்கே வேகாத  பருப்பு :-)
பாதியா இருக்கச் சம்மதிச்சு, அங்கே போய் மொத்து வாங்கும்போது அடி தனக்கும் படாமலா இருக்கும்?
ஸ்ரீரங்கத்து சேர்த்தி சேவைக்கு முதல்நாள் இங்கே  கமலவல்லித் தாயாருடன் சேர்த்தி சேவை நடக்கும்.  மறுநாள் அங்கே போய்  வாங்கிக்கட்டிப்பார் நம்பெருமாள்  :-)

பாவம் தாயார் ரெங்கநாயகி. இத்தனை வருஷங்களில் இதெல்லாம் பழகிப்போயிருக்கும். கடவுளுக்குப் பொறுமை அதிகம்தான். இதுவே மனுஷனா இருந்தால்.... என்ன நடந்துருக்கும்?  'நோ சமாதானம் அட் ஆல்' இல்லையோ!  (அ.வ்யாதிகளைப் பற்றிச் சொல்லலை.....  அதுகள் மனுஷ லிஸ்ட்டில் வராது, கேட்டோ!)

நிம்மதியான தரிசனம் அமைஞ்சது. இங்கே அநேகமா எப்பவும் இப்படித்தான். ஆற அமரப் பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கலாம்.  அதுவும் கிடந்த வாக்கில்  இருநூத்தைம்பது வாங்கிக்கிட்டு நிமிஷ நேரம் காட்சி கொடுக்கும் ரகமில்லை.   கல்யாணப்பொண்ணு முன்னால் கைகட்டி நிக்கும் பவ்யம்:-)
கமலவல்லியும் லேசுப்பட்டவளா என்ன?  அங்கே ரங்கத்தில் பெருமாளுக்குச் செய்யும் அத்தனை கொண்டாட்டமும், திருமஞ்சனமும் இங்கே இவளுக்கே!  பெருமாள் கோவில்களில் தாயார் சந்நிதின்னு ஒன்னு தனியா இருக்குமே அதுகூட இங்கில்லை. 'எல்லாம் நானே என்னும்போது நான் ஏன் போய் தனியா இருக்கணும்? '
உம் வீட்டுலே வந்து தனியா ஒரு அறையில் விக்விக்குன்னு  உக்கார்ந்திருக்கணும்.  படிதாண்டாப்பத்தினின்னு பெயர் வச்சுக் கொண்டாடுவீங்க..... ஆனா எங்கேயும் போகாம ஒரே இடத்தில் உக்கார்ந்துருக்கும் கஷ்டம் எனக்குத்தானே தெரியும்? அதெல்லாம் என்னால் ஆகாது. நான் என் வீட்டுலே என் இஷ்டம் போல் சுதந்திரமா இருப்பேன்.  என்னைப் பார்க்கணுமுன்னா நீரே  இங்கே வரணும்! போட்டா பாருங்க ஒரு போடு! 
பிரகாரத்தை வலம்  வந்து ஒவ்வொரு இடமாக அனுபவிச்சு வரும்போது  திருவாய்மொழி மண்டபத்துக்கு இந்தாண்டை  வஸந்தமண்டப வாசல் திறந்துருந்தது.  பெரிய கோவில்களில் பொதுவா எல்லா சந்நிதிகளும், வாசல்களும் எப்பவும் திறந்து வச்சுருக்க மாட்டாங்க. பட்டர்கள் பற்றாக்குறையாக இருக்கலாம். அதனாலே நாம் போற நேரங்களில் எதாவது  திறந்துருந்தா.... அடிச்சது ப்ரைஸ்னு எட்டிப் பார்த்துக்கணும் என்றது என் வழி :-)

 வஸந்த மண்டபத்துள்ளே போனால், தேங்காய் பத்தைகளை சின்னத்துண்டுகளா நறுக்கிக்கிட்டு இருந்தார் ஒருவர். கொஞ்சம் கறிகாய்கள் அந்தாண்டை. சமையல் நடக்குது. என்னவாம்? பெருமாள் தளிகைக்கு ஆக்கறாப்போல இல்லையே.... மடப்பள்ளியா இது?

ஊஹூம்....   கோவில்களில் இப்பெல்லாம் அன்னதானம் நடக்குது பாருங்க.....  அதுக்கான சமையல் ஏற்பாடு. இதுவும் ஒருவகையில் 'அம்மா'வின் திட்டங்களில் ஒன்னுதான். வேலை சரியா நடக்குதான்னு  கவனமாப் பார்த்துக்கிட்டு இருந்தார் மேலாளர்! தினம் நூறு பேருக்குச் சமையல் செய்யறதாச் சொன்ன நினைவு.
வலத்தில்  அடுத்துக் கண்டது பரமபத வாசல்..... 
தனிச்சிறப்புள்ள வாசல் இது.  பொதுவாப் பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசிக்குத் திறப்பதுபோல் இங்கே இல்லை.  மார்கழிக்குப் பதிலா மாசி !  சொர்கவாசல் திறந்ததும் ஜம்ன்னு அதன் வழியா வர்றது யார் தெரியுமோ?  கமலவல்லியேதான்!  ஆஹா.....  பெண்ணுரிமைன்னு இப்பெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கோமே....  அதுக்கெல்லாம் முன்னோடி இவள் இல்லையோ!!!
புஷ்கரணிதான் முன்னைக்கிப்போ மோசமா இருந்தது. காவிரி ஓடும் ஊரிலும் தண்ணிக் கஷ்டமுன்னா பாருங்க..... 
வலம் முடிச்சுக் கொஞ்சம் விஸ்ராந்தியாக் கோவில் மண்டபத்துலே உக்கார்ந்தோம்.  கண் எதிரில் இருக்கும் ஆஞ்சி சந்நிதிக்கு அப்பப்பத் திடுக்னு ஒரு பக்தர் வந்து கும்பிட்டுட்டு அப்படியே வெளியே போயிடறார்.  கோவில் முன்பக்கத்துலே  இவர் இருக்கறது வசதியாத்தான் போயிருக்கு!




இந்த உறையூர், நம்ம திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்பதால் அவருக்கும் கோவிலில் தனியா ஒரு சந்நிதி உண்டு.

திவ்யதேசக்கோவில்கள் நூத்தியெட்டின் பட்டியலில் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ரெண்டாவது இடத்தில் இருக்கு!  அப்ப முதல் இடம்?  நம்ம ரங்கநாதன் 'கிடக்கும்' ஸ்ரீரங்கம் என்ற பூலோக வைகுண்டம்தான்! அதானே திரும்பத்திரும்ப  நம்மை வரவச்சுடறான்!

மணி பத்தேகால் ஆகுது. சரி வாங்க, இன்னொருக்கா அழகியமணவாளனையும், கமலவல்லி நாச்சியாரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டுக் கிளம்பலாம். எத்தனை முறை வேணுமுன்னாலும் கிராக்கி பண்ணிக்காமல் தரிசனம் தரும் திவ்யத் தம்பதிகள்!  காட்சிக்கு எளியவர்கள்! காசு கொடுக்க வேணாம்.

சொல்ல மறந்துட்டேனே.....  இங்கே  குங்குமத்தோடு   சந்தனமும் ப்ரஸாதமாக் கிடைக்கும். கல்யாண வீட்டில் சந்தனம்  கொடுப்பதுதானே முறை !

அடுத்துப் போவதும் இன்னொரு கோவிலுக்கே!

தொடரும்........ :-)


Monday, January 28, 2019

எல்லாத்துக்கும் வேளை வரணுமுன்னு இருக்குல்லே? (பயணத்தொடர், பகுதி 60 )

திருச்சி வரும்போதெல்லாம் பலமுறை கேட்ட பெயர், போக நினைச்சதும் உண்டு. ஆனால் எதுக்கும் நேரங்காலம்  வரணுமுல்லெ?  சரவணபவனில் சாப்பாடானதும் கிளம்பி ஸ்ரீரங்கத்துக்கு வந்துக்கிட்டு இருக்கோம்.  நூறு கிலோ மீட்டர் பயணம் இதுவரை ரெண்டுமணி நேரம் எடுத்துருக்கு.
இன்னும் ஒரு பதினெட்டு கிமீ பாக்கி என்ற நிலையில்  கூகுள் வழியைப் பார்த்துக்கிட்டே வந்த 'நம்மவர்' முக்கொம்பு அணை இங்கெதான் இருக்கு. பார்த்துட்டுப் போகலாமான்னார்.
அணையில் தண்ணீர் இருக்குன்னாலும் மதகுகள் அடைச்சுருப்பதால் இந்தாண்டை எல்லாம்  காஞ்சுகிடக்கும் மண்தான்.
உள்ளே போக எதோ கட்டணம் வாங்குனாங்க. சுற்றுலாத்தளமாம். சிறுவர் பூங்காவாம்.  இறங்கி நடந்தப்ப, ஒரு ராமர் கோவில் கண்ணில் பட்டது.
நாங்க போனப்ப ஒரு சில குடும்பங்களைத்தவிர கூட்டம் ஏதும் இல்லை.  பெரியவங்கதான்  சிறுவர் விளையாட்டுக்கானவைகளில் விளையாடிக்கிட்டு இருந்தாங்க.  சிலரைத் தவிர  எல்லோரும் பெண்கள் என்பதால் படம் ஒன்னும் எடுக்கலை.

யானைகள் இருந்தாலும்  எனக்கு அவ்வளவா ஸ்வாரஸ்யப்படலை.
இன்னும் கொஞ்சம் நல்லாப் பராமரிக்கலாம்....

திருச்சிக்கு ரொம்பப் பக்கத்துலே இருக்கு என்பதால்  விடுமுறை நாட்களில் பிள்ளைகளைக்கூட்டி வந்து 'தண்ணீரை'க் காமிக்கலாம் !
நம்ம  கல்லணையைப் பார்த்துட்டு, வாயைப் பிளந்த வெள்ளைக்காரன் காலத்துலே கட்டுன அணை.  நாப்பத்தியஞ்சு மதகுகள் வைக்கத்  திட்டம் போட்டு இதைக் கட்டிமுடிக்க முப்பத்தியாறு வருஷம் ஆனதாம். ஏறக்கொறைய, கல்லணையின் அதே டெக்னிக்தான். ஸ்ரீரங்கம் போற காவிரி முதல்லே இங்கே வர்றதால் இதை மேலணைன்னும்  சொல்றாங்க.
மதகுகளுக்கு மேலே  போக்குவரத்துக்கான சாலையும் போட்டுருக்காங்க.  இதுவும் அகலமாத்தான் இருக்கு.  இருபதடி ரோடு.
அதுலேயே  அந்தாண்டை  போயிடலாமுன்னு போனோம். முத்தரசநல்லூர் அந்தப்பக்கம்தான்னு அப்புறம் தெரிஞ்சது. அடுத்த பத்து நிமிட்டில்  அரசியல்வ்யாதிகளின் கூத்து.
ஸ்ரீரங்கம் நோக்கிப்போகும்போது பாலத்தில் நம்மாள் ! நல்ல சகுனம்.. :-)
அடுத்த அரைமணியில் ஹயக்ரீவா போயாச்.  அங்கிருக்கும் பணியாளர் ஒருவரிடம்,  கீழே பாலாஜி பவனில் இருந்து காஃபி கொண்டுவரச் சொன்னால்....  அன்றைக்கு விடுமுறைன்னுட்டார்.  அடடா.....  ன்னும்போது 'முரளியில் இருந்து வாங்கிவரவா'ன்னு அவர் கேட்டது, காதில் தேனாகப் பாய்ந்தது:-)

அதுக்குள்ளே நம்மவர்  முரளிகடை வாசலில் சாயங்காலம் மட்டுமே கிடைக்கும்  'மற்ற சமாச்சாரங்களை' நினைவில் வச்சு ரெவ்வெண்டு வாங்கிவரச் சொன்னார்.

வயித்துக்குள் போச்சோ இல்லையோ..... உடலுக்குத் தெம்பு வந்தாச்சு.  இன்றைக்கு ஒரு பதிவர் சந்திப்பையும் நடத்திடலாமான்னார்.  ஆஹா.... கேட்பானேன்?

வரவா என்று கேட்டுட்டுப் போய்ச் சேர்ந்தோம். நமக்கு இன்னுமொரு குடும்பமும் இங்கிருக்குன்னு சொன்னா நம்புவீங்கதானே?

ஒரு மணிநேரம் போனதே தெரியலை.  நலம். நலமான்னு பேச்சும் ஓடுச்சு! டின்னர் டைம் வேற!  சாப்பிடுங்கன்னு வற்புறுத்தினாலும்.... திடுக்னு போய் நின்னு தொல்லைப்படுத்தறோமோன்னு நினைச்சது நிஜம்.
அப்பதான்  ஸ்ரீரங்கத்துச் சாப்பாட்டுக்கடைகள் பற்றிய பேச்சில் ஸ்ரீ ரங்காஸ் பவனில் பரவாயில்லாம நல்லா இருக்குன்னாங்க நம்ம கீதா!
அதையும்தான் என்னன்னு பார்த்துடலாமே!  நம்ம ஹயக்ரீவா இருக்கும் அதே அம்மாமண்டபம் ரோடு. ஜஸ்ட் அஞ்சு கட்டடம் தள்ளி!   நாங்கள் இறங்கிக்கிட்டோம்.
ஹயக்ரீவாவில் வண்டியை விட்டுட்டுத் திரும்பி வந்து   சேர்ந்துக்கிட்டார் ரமேஷ்.

இடம் பரவாயில்லை. சுத்தமாத்தான் இருக்கு!  வாசலில் இவுங்களோட ஸ்வீட் கடை வேற !
'பார்சலுக்கு வரும்போது பையைக் கொண்டு வா' !  சூப்பர்!
லெமன் சேவையும் நெய்ரோஸ்டுமா  டின்னர் முடிஞ்சது.

ரமேஷ் அவருக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டார்.
போய்க் கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டுப் படுக்கையில் விழணும்.

மேய்ச்சல் முடிஞ்சு பார்த்தால் வெள்ளரிப்பழம் சிரிக்குது!  டிஸ்ஸர்ட் :-)

ஆச்சு இன்றைய காந்தாயம்.

தொடரும்............ :-)

PINகுறிப்பு:  இந்த முக்கொம்பு அணையிலே ஒரு ஒன்பது மதகுகள் இடிஞ்சு விழுந்துட்டதாக செய்தி பார்த்ததும்  மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.  நல்லவேளையாத் திரும்பக் கட்டிட்டாங்க போல !