Monday, January 21, 2019

வெட்டவெளி ஆஞ்சி (பயணத்தொடர், பகுதி 57 )

சுமார் ஒன்னே முக்கால் மணி நேரப்பயணம் இப்போ!  ஸ்ரீரங்கத்தில் இருந்து  கொள்ளிடம் பாலம் கடந்து .... முசிறி , தொட்டியம் வழியாக நாமக்கல் !
முசிறி தாண்டுனதும்  கொஞ்ச நேரத்துலே ஒரு மலைக்கோவில் கண்ணுலே பட்டது.... என்ன கோவிலுன்னு தெரியலையே....
நேராப்போய் நின்னது நம்ம ஆஞ்சியின் கோவிலுக்கு முன்னால்!  அழகான பெரிய  முன்மண்டபம், அதுக்கு அந்தாண்டை வெட்டவெளியில் கூப்பிய கைகளும், ஜெபமாலையுமா   நம்ம ஆஞ்சி! பதினெட்டடி  உசரம்! கீழே பீடம் ஒரு நாலடி !   சிங்கிள் வடைமாலையோடு காட்சி கொடுக்கறார்!
இவரை ஏற்கெனவே படத்திலும் செய்திகளிலும் பலமுறை பார்த்துருக்கேன்.....  கண்ணை விட்டுட்டு மத்ததெல்லாம் மறைக்கிறமாதிரி வடைமாலைகளைச் சரஞ்சரமாய் மாட்டி விட்டுருப்பாங்க. ஒரு லக்ஷத்து எட்டாயிரம் வடைகளாம்!  பாவம் ஆஞ்சி... எவ்ளோ கனக்கும், இல்லே?
மேலே படம் நண்பர் அனுப்பியது.....
மண்டபம் முழுசும் பக்தர்களை வரிசைப்படுத்தறோமுன்னு  கட்டங்கட்டமாத் தடுப்புகளைப் போட்டு வச்சுருக்காங்க...... ப்ச்....
தினமும் இங்கே ஆஞ்சிக்குத் திருமஞ்சனம் உண்டு.  காலையில் நடை திறக்கும்போது அவருக்குப் பூஜை செய்து ஒரு வடைமாலை சார்த்திடறாங்க. அப்புறம் சுமார் பத்தரை மணிக்கப்புறம், நாதஸ்வர இசை முழங்க....  விஸ்தாரமா ஒரு குளியல். முதலில்  உடம்பு முழுக்க நல்லெண்ணெய் தடவிட்டு,  சீயக்காய் தேய்ச்சுக் குளிச்சதும், பால், தயிர், பஞ்சாமிர்தம், கஸ்தூரி மஞ்சள்,  சந்தனம் எல்லாம் ஒவ்வொன்னா.... அபிஷேகம் ஆறது.  கடைசியில் ஸ்வர்ண புஷ்பங்கள் நூத்தியெட்டை அவர்மீது வர்ஷிச்சதும், அலங்காரம்  செய்யறாங்க. இதெல்லாம் முடியும்போது உச்சிகால பூஜைக்கான நேரம் வந்துருது.










கம்பித்தடுக்குள் உக்கார்ந்து முழு அபிஷேகமும் பார்க்க தடை ஒன்னும் இல்லை.  இவரைப் படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் கூட அனுமதிக்கறாங்க. நமக்குத்தான்  சுமார் ஒன்னரை மணி நேரம் அங்கே  இருந்து பார்க்க முடியலை. வழக்கம்போல் காலில்  சுடுகஞ்சி.....
வெட்டவெளியில் நிக்கறதுக்குக் காரணமா ரெண்டு கதை வேற இருக்கு!  நாமக்கல் மலைக்குகைக்குள்   இருக்கும் நரசிம்மர்  விமானம் இல்லாமல் இருக்கார் என்பதால், தனக்கும் வேணாமுன்னு ஆஞ்சி சொல்லிட்டாராம்.
ரெண்டாவது கதை.....  ஆஞ்சி வளர்ந்துண்டே போறாராம்...... (எப்படி? புள்ளையார் பால் குடிச்ச மாதிரியா?  ) அதனால்  வளர்ற பிள்ளைக்குத் தலையில் கூரை வச்சால் இடிச்சுக்குமேன்னு....   ஹாஹா....

கதை பண்ண நம்ம சனத்துக்குத் தெரியாதா என்ன? நம்ம நங்கைநல்லூர் முப்பத்திரெண்டு அடி ஆஞ்சிக்கும் , திண்டிவனம் வழியா பாண்டிச்சேரி போகும்போது வரும் பஞ்சவடி முப்பத்தியாறு அடி  ஆஞ்சிக்கும் தலைக்குக் கூரை இருக்கே!  இப்போ புதுசா  கும்மோணம் ஆலங்குடி குருபகவான் கோவிலாண்டை இன்னொரு முப்பத்திரெண்டு அடி ஆஞ்சி கோவில் கட்டிக்கிட்டு இருக்காங்க!

பொதுவா வடநாட்டில்தான் இப்படி ரொம்பப்பெருசா சிலை வைக்கிறதெல்லாம் வழக்கம். இப்ப இது நம்ம தெற்குக்கும் பரவி இருக்கு! இப்ப இருக்கும் நிலமையில் கொஞ்சம் இந்துமதத்தைப் பற்றிய விழிப்புணர்வு வர இதுவும் வேண்டித்தான் இருக்கு, இல்லையோ!  ஷிம்லாவில்  ஒரு நூத்தியெட்டு அடி ஆஞ்சியைப் பார்த்துருக்கோம், நினைவிருக்கோ?

என்ன ஒன்னு நம்ம பக்கங்களில் ஆஞ்சி கருங்கல் சிலையா இருக்கார் ! அதுவும் ஒரே கல்லில் என்பது சிறப்பு!


கோவில் மண்டபச்சுவர்களில் ஆஞ்சி சம்பந்தப்பட்ட காட்சிகள், அசோக வன சீதைக்குக் கணையாழி கொடுத்தல், ராம ராவண யுத்தத்தின்போது, ராமலக்ஷ்மணர்களைத் தோளில் தூக்கி வருதல் இப்படி.....

ஆயிரம், ரெண்டாயிரம்  வருஷமுன்னு சொல்றாங்க.....  கோவிலும் சரி, ஆஞ்சி சிலையும் சரி.... ஆயிரம் வருஷப் பழசு மாதிரி தெரியலை..... ஒருவேளை......  நரசிம்ஹர் கோவிலின் ஒரு பகுதியாகத்தான் இந்தக் கோவிலும் இருப்பதால்  அப்படிச் சொல்றாங்களோ என்னவோ....

ஆஞ்சி இங்கே எப்படி வந்தார்ன்றதுக்கும்.....  ஒரு புராணக் கதை.... இருக்கே!

மஹாலக்ஷ்மித் தாயார் ஒருமுறை இந்தப் பகுதியில் தவம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  கணவர்,   நரசிம்மாவதாரத்தில் இருந்த கோலத்தைப் பார்க்கணுமாம்....  (அடராமா....  கொஞ்சம்கூட பயமே இல்லை பாருங்க..... )

அந்தக் காலக்கட்டத்தில்தான்  ராமராவண யுத்தம் நடந்துக்கிட்டு இருக்கு.  ராம சைன்யங்கள், போரில் அடிபட்டுக்கிடக்கும்போது, உடனுக்குடன் குணமாகறதுக்கு சஞ்சீவி மூலிகைகள் வேண்டி இருக்கு. ஆஞ்சிபோய் மலையைப் பேர்த்து எடுத்துக்கிட்டு வர்றார். யுத்தம் முடிஞ்சாட்டுத் திருப்பிக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வச்சுட்டுவர உத்தரவாறது.  ரொம்ப நல்ல சமாச்சாரம். எதையும் எடுத்த இடத்தில் திருப்பி வச்சால் பின்னால் தேவைப்படும்போது  கிடந்து அல்லாடவேணாம்.

வச்சுட்டுத் திரும்பும்போது  கண்டகி நதிவழியா வர்றார். அங்கேதானே சாளக்ராமம் கிடைக்குது.  அங்கிருந்து ஒரு சாளக்ராமத்தை எடுத்துக்கிட்டுப் பறந்து வர்றார்.  இப்ப நாம்  நாமக்கல்னு சொல்லும் இடத்தாண்டை வர்றபோது, சூர்யோதய  நேரம்.  விடிகாலை.  குளிச்சு அன்னாட ஜெபதபங்களை முடிச்சுக்கணும்.  கையில் இருக்கும்  சாளக்ராமத்தை எங்கேயாவது பத்திரமா வைக்க இடம் தேடறார். தவம் செய்யும் மஹாலக்ஷ்மி கண்ணில் பட்டாங்க.  அவுங்க பக்கத்துலே வச்சுட்டுக் கடமைகளை முடிச்சுட்டு வந்து கையில் எடுத்தால்..... எடுக்க வரலை.  (அட ராமா.....)

அப்போதான் அசரீரி ஒன்னு கேக்குது....  'அங்கே  ராமராவண யுத்தம் முடிஞ்சு போச்சு. சீதாபிராட்டியை மீட்டாச்சு. இன்னும் நீ இங்கே என்ன பண்ணிண்டு இருக்காய்?  சீக்கிரம் போய் ராமனுக்கு உதவி செஞ்சுட்டு, அப்புறமா வா' .....

சீதையை மீட்டு, அயோத்யா போய் பட்டாபிஷேகம் எல்லாம் ஆனதும், எல்லோருக்கும்  ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்கறார் ராமர்.  அதுலே விபீஷணனுக்குக் கிடைச்சதுதான் குலதனமான ரங்க விமானம் தெரியுமோ? ஆஞ்சிக்கு முத்துமாலைகள் கிடைச்சதாம். கடிச்சுப் பார்த்துட்டு, ராமனை அதில் காணோமுன்னு சொன்னதாக ஒரு கிளைக்கதையும் இருக்கு :-)

ராமனின் ஆட்சி நல்லபடியா நடக்கும்போதுதான், ஆஞ்சிக்கு  மஹாலக்ஷ்மிக்குப் பக்கம் வச்சுட்டு வந்த சாளகிராம் நினைவுக்கு வர்றது.  உடனே வந்து பார்க்கிறார்....  அது  இவர் வச்சுட்டுப்போன சைஸில் இல்லாமல்.... கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து ஒரு பெரிய மலையா மாறிப்போயிருக்கு!  சாளக்ராம மலை! பக்கத்தில்  தவத்தில் ஆழ்ந்து  இருக்கும் மஹாலக்ஷ்மித் தாயார்!

திகைச்சு நிக்கும்போது, அந்த மலையில் நரசிம்மவதாரக் கோலம்  காமிக்கிறார் எம்பெருமாள் !  கைகூப்பி வணங்கிய ஆஞ்சி அப்படியே நின்னுட்டதாகக் கதை!

படத்தைக் க்ளிக்கினால் வீடியோ வருது. ஆட்டோ ப்ளே எங்கே?  ஙே....

திருமஞ்சனம் ஆரம்பிச்சதும் வீடியோ எடுக்க ஆரம்பிச்சேன். 'நம்மவர்' உடனே ஒன்னரை மணி நேரம்  ஆகுமுன்னு மிரட்டியதால்,  ஒன்னரை நிமிட்டோடு நிறுத்திட்டேன். குடவரைக்கோவில் போயிட்டு வந்துடலாம் என்றதால் வெளியே வந்தால், நமக்கிடப்பக்கம் புள்ளையார் சந்நிதி!
தும்பிக்கைக்கு மட்டும் சந்தனக்காப்பு! சிக்கனம்?
அவரைக் கும்பிட்டு,  சாலைக்கு எதிர்ப்பக்கம் போறோம்.  கூப்பிடு தூரத்தில்  .... நரசிம்ஹர்....
இடையில் இருக்கும் வழி பூராவும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகள், பூமாலைகள், வெத்தலை மாலைகள், துளசி மாலைகள்ன்னு....

அங்கேயும் நடுவழியில் ஒரு ஆஞ்சி கோவில் ! உண்மையில் ரெண்டு !  ஒன்னு ரொம்பச் சின்னது என்பதால் சந்நிதிக் கணக்கில் வச்சுக்கலாம் :-)





ஆஞ்சிக்கு வெற்றிலை மாலைகள் போடும் வழக்கத்துக்கும்  கதை இருக்குன்னதும், 'நம்மவர்' சொல்லு, சொல்லுன்னார்.

வாங்க, த்ரேதா யுகத்துக்குப் போகலாம்.  சுந்தரகாண்ட ஸீன்.  அசோகவனத்துக்குள் சீதை, சிம்சுபா மரத்தடியில் உக்கார்ந்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்காள். சீதையைத் தேடிவந்த ஆஞ்சி,  இவளைப் பார்த்துருச்சு. ஆனாலும்  இவள் சீதையா இல்லையான்னு....  ஒரு சின்ன சம்ஸயம்.  கடலைக் கடந்து வந்த பெரிய ரூபத்துலே இருந்து, ஒரு குட்டிக்குரங்கா மாறி  இலங்கை நகருக்குள் நுழைஞ்சு இதுவரை வந்தாச்சு. மரத்துமேலே ஒரு தாழ்வான கிளையில் உக்கார்ந்து  ராம நாமத்தைச் சொல்ல ஆரம்பிச்சது. அப்படியே அதுவரை நடந்த  ராம சரிதமும்.

இது ராவணனின் மாயாஜாலத்தில் ஒன்னோன்னு  முதலில் திகைச்ச சீதை, அப்புறம்  இல்லைன்னு தெரிஞ்சுக்கிறாள். ரொம்ப விநயமா, மரத்தில் இருந்து குதிச்சக் குட்டி ஆஞ்சி, இடுப்பில் இருக்கும் முடிப்பில் இருந்த ராமனின் மோதிரத்தை எடுத்துக் காண்பிச்சதும், ராமதூதனைப் பார்த்த மகிழ்ச்சியில் திக்குமுக்காடியவள், பக்கத்துலே இருந்த வெற்றிலைக் கொடியைக் கிள்ளி எடுத்து, ஆஞ்சிக்கு மாலையாப் போட்டு ஆசி வழங்கறாள்.

அதான் வெற்றிலை மாலைக்கான கதை.

அப்ப வடை மாலை?

ஹாஹா..... எனக்கு வடை பிடிக்குமுன்னு அப்பவே  ஆஞ்சிக்குத் தெரிஞ்சு போச்சு. அதான் வடையாப் போட்டுக்கிட்டா, நான் ஒவ்வொன்னா எடுத்துத் தின்ன சௌகரியமா இருக்கும்னு.....   :-)

"அதுக்கும் ஒரு கதை வச்சுருப்பியே... சொல்லேன்...."

எனக்குமே ஏன்னு தெரியலை. அப்புறம்  வலைவீசிக் கண்டுபிடிச்சேன்.

அது என்னன்னா.... நம்ம ஆஞ்சி குழந்தையா இருக்கும்போது, சூரியனைப் பார்த்து ஆரஞ்சுப்பழமுன்னு நினைச்சு, அதைப் பறிக்க ஆகாயத்துலே பாய்ஞ்சு போய்க்கிட்டு இருக்கார்!
அப்போதான் ராஹு கிரகத்துக்கும் சூரியனை பீடிக்கும் நேரம் வந்துருக்கு.  அவரும் ஒரு பக்கம் வேகமாப் போய்க்கிட்டு இருக்கார். வாயு புத்திரனின் வேகத்துக்கு ராஹுவால் ஈடுகொடுக்க முடியலை.  சின்னக்குழந்தையின் வேகம் பார்த்து ரசிச்சதோடு,  குழந்தைக்கு ஆசி வழங்குறார்.  குழந்தையைப் பார்த்தால் அதுக்கு எதாவது தின்னக்கொடுப்போமே அதைப்போல 'எனக்கிஷ்டமான  கருப்பு உளுந்தை உனக்கு யார் கொடுக்கறாங்களோ அவுங்களை நான் பீடிக்க மாட்டேன்'னார்.

உளுந்தை  வேகவச்சே தின்ன முடியுமோ?   வடையாச் சுட்டால் தேவலைன்னு சனம் நினைக்குது.  ஏற்கெனவே ஆஞ்சி பக்தர்களை சனி உபத்திரவம்  செய்யமாட்டேன்னு வாக்கு கொடுத்துருக்கே!  சனிக்குப் பிடிச்சது எள் !

'எள்ளுன்னா எண்ணெய்' னு சனம் என்ன செஞ்சுருச்சுன்னா.....  உளுந்தை அரைச்சு எள்ளெண்ணெயில் சுட்டு வடை செஞ்சது!  டூ இன் ஒன்!

அப்புறம் மீந்து போன வடையை எடுத்து வச்சா ஊசிப்போகாதோ....?     ஐடியாக் கிடைச்சுருச்சு. மிளகு வடைன்னு மொறுமொறுக்கச் செஞ்சால்   நாலு நாளைக்கு வச்சுத் திங்கலாம்....

சனத்துக்கு  இதெல்லாம் யோசிக்கவா தெரியாது?

PINகுறிப்பு :  ஆஞ்சியைப் பத்தின்னதும் பதிவும் ஆஞ்சி வால் போல நீண்டு போயிருச்சு :-)

சரி வாங்க.....    நரசிம்ஹர் கோவிலுக்குள்ளே போகலாம்....

தொடரும்......... :-)


5 comments:

said...

நாங்கள் இந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம்.

த்வஜஸ்தம்பத்தோடுகூடிய சிறிய ஆஞ்சநேயர் (வழிப்பாதையில், மேலே நீங்க படம் எடுத்துப் போட்டிருக்கீங்க) வெகுகாலமாக இருந்தவர் என்றும் இந்த ஆஞ்சநேயர் பிறகு வந்தவர் என்றும் சொன்னார்கள்.

கடைசில வடையாவது கிடைத்ததா?

said...

ஆஞ்சி தரிசனம் மிக அருமை ..நாங்க அந்த பக்கம் போகும் போது எல்லாம் அவர் தரிசனம் உண்டு..


வடை கதை வெகு சுவாரஸ்யம் மா...

said...

அருமை நன்றி.

said...

நாமக்கல் சென்ற இடம் என்றாலும் இந்த கோவில்கள் சென்றது இல்லை.

படங்கள், தகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

said...

உயரமான அனுமார் கோயில் பட்டியல்ல ஒரு கோயிலை விட்டுட்டீங்க டீச்சர். திருவள்ளூர்ல விசுவரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்னு ஒன்னு திருவள்ளூர்ல இருக்கு. ஒருமுறை திருத்தணி போயிட்டு வர்ரப்போ கூட வந்த நண்பர்கள் கூட்டீட்டுப் போனாங்க. உங்களுக்கு கண்டிபாகப் பிடிக்கும்.

அனுமாருக்கு வடை பிடிக்கும்னு பரப்பி விட்டது கண்டிப்பா தென்னாட்டாளாத்தான் இருக்கும். வடக்க ஏது வட? போண்டாவை வடைன்னு சொல்ற ஊராச்சே அது. அனுமார் வடநாட்டுக்காரர்ங்குறதால அவருக்கும் வடையைப் பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. யாரோ மிளகுவடை விரும்பிதான் மொதமொதல்ல அனுமார் பேர் சொல்லி வடைகளை அமுக்கியிருக்கனும். அது அப்படியே பின்னாளில் வழக்கமாயிருக்கும்.