Friday, January 25, 2019

நீ பாதி.... நான் பாதி கண்ணே.... (பயணத்தொடர், பகுதி 59 )

நாமக்கல்லில் இருந்து இப்போ  திருச்செங்கோடு போறோம்.   கிளம்புன பத்து நிமிட்டில்,  'ஹொட்டேல் கோஸ்டல் ரெஸிடென்ஸி' கண்ணில் பட்டது.  அங்கே  ரெஸ்ட் ரூம் வசதி  நல்லாவே இருக்கு!

போறவழியில் வெள்ளரிப்பழமும், வெள்ளரிக்காயுமா கொஞ்சம்  கிடைச்சது!  தாகத்துக்கு இருக்கட்டும்.

ஒரு முக்கால் மணிநேரப்பயணம்தான். சரியா ஒரு மணி ஆகும்போது  திருச்செங்கோடு மலைப்பாதையின் ஆரம்பத்தில் இருக்கோம்.  ஒரு கட்டணம் வசூலிக்கிறாங்க.  முப்பதோ என்னவோ?  கோவில்  சாயங்காலம் ஆறு மணிவரை திறந்துதான்  இருக்கும்ன்னு சொன்னது மனசுக்குச் சமாதானமா இருந்தது.


மலைப்பாதையின்  கைப்பிடிச்சுவரில் எல்லாம் நம்மாட்கள் !

மலைக்கு ஏறிவர படிகள் உள்ள வழியும் இருக்குதான். ஆயிரத்து இருநூற்று ஆறு  படிகளாம்!  சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் நிறைஞ்சது இந்தப் படிகள் வழின்னாலும்....  என்னை மாதிரி யானை  ஏறிவரக் கஷ்டம் இல்லையோ.....   நோகாம நோம்பு கும்பிடணுமே  எனக்கு.............
ஆறே நிமிட்டில் கார்பார்க்கில்  வண்டியை விட்டிறங்கி கோவிலுக்குள் படி இறங்கிப் போறோம். இது தெற்கு கோபுர வாசல்னு நினைக்கிறேன். இல்லை... மேற்கு வாசலோ ? திசை தெரியாமப்போச்சே....   நேராக் கண்ணெதிரே ராஜகோபுரமும் மூலவர் கருவறை விமானமும் !!  மேலே நின்னு பார்க்கும்போது கோவில் பெருசாத்தான் தெரிஞ்சது.
கார்பார்க் இருக்குமிடம் கொஞ்சம் உயரத்தில் இருப்பதால்  நாம் கோவிலுக்குப் போக ஒரு பத்திருவது படிகள் இறங்கிப்போகணும்.  படிகள் இறங்கிச் சரிவான பாதையில் போறோம். இடதுபக்கம்  கொஞ்சம் அறைகள்.....  யாகசாலை போல....      வெராந்தா முழுசும் கோவிலுக்கடையாளமான  கல் தூண்கள்! 

பிள்ளையார் முதலில் தரிசனம் கொடுத்தார்.  அவரை வணங்கிட்டு  இன்னும் கொஞ்சம் கீழிறங்கினால்.....  தூண்கள் ஒவ்வொன்னும் நம்ம ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தை நினைக்க வைக்கும் அமைப்பில் ஒரு மண்டபம் .

கொடிமரமும் நந்தியுமா இருக்கு.  அங்கங்கே சின்னச் சின்னக் குடும்பங்களா   நாலைஞ்சு ஆட்கள்.   இருக்கட்டும், வந்து பார்க்கலாம், முதலில் மூலவரை தரிசனம் செஞ்சுக்கணுமுன்னு  பொதுவழி தரிசன வரிசையில் போறோம்.  கம்பித்தடுப்பு வரிசையில்  கூட்டமே  இல்லை. போயிட்டு வா, நான் இங்கெதான் இருப்பேன்னார் ஆஞ்சி:-)



பரபரன்னு உள்ளே போயிட்டோம்.  பெரிய ஹால் போல இருக்கும் இடத்தில் நடுவில்  கருவறையில்  அர்தநாரீஸ்வரர்!     ஒரே சிலையில் பாதி சிவனும்,  மீதி  பார்வதியுமா ஒன்னா நிக்கறாங்க! நல்ல ஆறடி உயரம்!  வலப்பகுதிக்கு வேஷ்டியும் அங்கவஸ்திரமும், இடப் பகுதிக்கு சேலையும் கட்டி விட்டுருக்காங்க. எனக்கு, சிவன் கோவில்களில் சிவலிங்க ரூபத்தில் சிவனை தரிசிப்பதைவிட, இப்படி மனித ரூபத்தில் பார்க்க ரொம்பப் பிடிக்கும்!
மேலே படம்: கூகுளாண்டவர் அருளியது.  பீடமே இல்லாத  மூலவர். ஸ்வயம்புவான திருவுருவத்துக்கு வெண்பாஷாண மூலிகைக் கலவைப் பூச்சு.

கர்நாடகாக் கோவில்களில் சிவலிங்கத்துக்கு முகம் அதுவும் மீசையோடுள்ள முகக்கவசம் போட்டு வச்சுருப்பாங்க பாருங்க, அப்படிப் பார்க்க ரொம்பவே பிடிச்சுப்போனது! நம்ம பக்கக் கோவில்களில் பொதுவாக் கவசம் எல்லாம் போடறதில்லைன்னு நினைக்கறேன்.

குருக்கள், கற்பூர ஆரத்தி காமிச்சுக்  கொஞ்சம் பூ, குங்குமம், விபூதி பிரசாதங்களும் கொடுத்துட்டு,  தீர்த்தம் வேற கொடுத்தார். அட..... பெருமாள் கோவிலாட்டமுன்னு  நினைச்சுக்கிட்டேன். அப்பதான் சொன்னார், மூலவர் காலாண்டை ஒரு  ஊற்றுலே இருந்து  இந்த தேவதீர்த்தம் வருதுன்னு!

ஹாலில்  ஒரு பத்திருவது இளைஞர்கள் , உட்புறச் சுவர்களைத் துடைச்சுச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இறைத்தொண்டு ! நல்லா இருக்கட்டும்!
நாங்க சந்நிதியைவிட்டு வெளியே வந்தவுடன், கதவைப் பூட்டுன குருக்களிடம் 'மாலை ஆறுவரை கோவில் திறந்துருக்குமுன்னு  சொன்னாங்களே'ன்னேன்.  'ஆமாம்மா. இப்ப யாரும் பக்தர்கள் வந்தாங்கன்னா, நான் அந்தாண்டை வெளிப்பக்கம் தான் இருப்பேன். தரிசனத்துக்குத் திறந்து விடுவேன்'னவர், கூடுதலா இன்னொரு காரணமும் சொன்னார்.

காலேஜுப்பசங்களைக் கோவிலைச் சுத்தம் செய்யன்னு அப்பப்பக் கூட்டி வர்றாங்க.  அவுங்க பாட்டுக்கு சாமியை படம் எடுக்கறதும், சாமிகூட நின்னு செல்ஃபி எடுக்கறதுமா  இருக்காங்க. அதான்.....  இப்படி   அவுங்க வர்ற நாளில் சந்நிதியை மூடி வைக்கிறோம்.

நியாயம்தான்..... விளையாட்டுப்பிள்ளைகள்..... யாரும் அங்கே இல்லைன்னா கையில் இருக்கும் செல்ஃபோன் படம் எடு  எடுன்னு உசுப்பாதா?

இந்தக் கோவிலைப் பொதுவா காலை ஆறு முதல் மாலை ஆறுவரை திறந்துதான் வைக்கிறாங்க.
திரும்பி  வெளி மண்டபத்துக்கு வந்தோம்.  ஆமை மண்டபம்,  ஆமை முதுகில் இருக்கு! நந்தி மண்டபத்தில்  இருப்பவரை,  மாடு பாப்பா ஒன்னு வந்து நின்னு கும்பிட்டுப்போச்சு.

இன்னொரு பக்கம் இன்னொரு மாடு பாப்பா,  மண்டபத்தில் அங்கங்கே இருக்கும் சந்நிதிகளை, ஒவ்வொன்னாப்போய் நின்னு பார்த்துட்டுப் போகுது!


நல்லீஸ்வரர், காசி விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், சங்கமேஸ்வரர், நடராஜர், பைரவர், நாகேஸ்வர் இப்படித் தனித்தனி சந்நிதிகள் !
இந்தக் கோவிலிலும்  சந்நிதிகளின் வரைபடம் ஒன்னு போட்டு வச்சுருக்காங்க. பெரிய கோவில்களில் இப்படி வச்சால் ரொம்ப நல்லது !




மண்டபத்தூண்களில் ரொம்பவே அழகழகான சிற்பங்கள்!  பொதுவா நான் கெமெராவில் ஃப்ளாஷ் போடறதில்லை என்பதால் பல படங்கள் கொஞ்சம் இருட்டுதான்.... ( பி ஸி ஸ்ரீராம் வகை?)






செங்கோட்டு வேலவர்னு முருகன் சந்நிதி !  அழகான மயிலுடன்!



 இலுப்பை மரம்தான் தல விருட்சம் !
இந்தக் கோவிலுக்கும் ரெண்டு கதைகள் இருக்கு.  கதைன்னதும் சொல்லாமல் போனால், 'நம்மவருக்கு'ப் பிடிக்காது. அவரைப்போலக் கதை தெரியாத மக்களுக்குச் சொல்லிட்டுப்போறதுதான் முறைன்னுவார்.

முதலில் இந்த  திருச்செங்கோடு என்ற  செந்நிறமலை இங்கே எப்படி வந்துச்சுன்னு சொல்றேன்.

ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தம்மில் யார் பலம் வாய்ந்தவர்னு சந்தேகம் வந்துருச்சு. (என்னைக் கேட்டால் வாயு'ன்னுதான் சொல்வேன்.  புயல் காற்றால் பட்ட அனுபவங்கள் அப்படியானவை! )

ஒண்டிக்கொண்டி வான்னு ரெண்டு பேரும் தயாரானாங்க. போட்டி எப்படி நடத்தலாமுன்னு யோசிச்சப்ப, அங்கிருந்த மஹாமேரு மலையை, ஆதிசேஷன் கட்டிப்பிடிச்சுக்கணும்.  வாயு தன் பலத்தைக் காமிச்சு கட்டிப்பிடிச்ச கைகளை (!) விலக்கிக் காமிக்கணும் என்று முடிவாச்சு.

ஆதிசேஷன்....  ஆயிரம்தலையுடைய அபூர்வப் பாம்பா மாறி மேருமலையைக்  கெட்டியாக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு, 'ஓக்கே இப்ப நான் ரெடி'ன்னார்.

சின்னதாத் தென்றல் போல வீச ஆரம்பிச்ச  வாயு, கொஞ்சம் கொஞ்சமாத் தன் பலத்தைப் பெருக்கிக்கிட்டு  கோடிப்புயல்கள் (!) ஒன்னு சேர்ந்த வேகத்தில் மலையையே  ஆட்டுது.  எங்கே மலை பறந்துருமோன்ற நிலையில்  ஆதிசேஷன் இன்னும் பலமாக மலையை இறுக்கிப் பிடிக்கறார்.  கைகளின் அழுத்தத்துலே  ரத்தமாக் கொட்டுது. ஒருவேளை   அந்த ஆயிரம் தலைகளால்  கட்டிப்பிடிச்சாரோ?  மலையின் சிகரங்களில்  பலதும் காற்று வேகத்தால் தூக்கி வீசப்படுது. அப்படி ஒரு சிகரம் வந்து விழுந்த இடம்தான் இந்த திருச்செங்கோடு மலை!  கல் சிகப்பா இருக்கே.....  இருக்காதா பின்னே.... அத்தனையும் ஆதிசேஷனின் ரத்தம்ப்பா.......  கொட்டி இருக்கு பாவம்....  பெயரிலேயே   செங்கோடுன்னு இருப்பதைப் பார்த்தீங்களா?  அவ்வளவும் சேஷனின் ரத்தம்  வடிஞ்ச சிகப்பு!
இது உண்மைன்னு சொல்றாப்லெ  இங்கே ஆதிசேஷன் சந்நிதி ஒன்னும் இருக்கு!  சர்ப்பதோஷம் இருக்கறவங்களுக்கு, இங்கே கையிலே கயிறு கட்டி விடறாங்க. எனக்கு அப்படி ஒரு தோஷம் இருக்கு, தெரியுமோ?  (முக்திநாத் கோவிலில் உக்கார்ந்துருப்ப,  தேவி உபாசகர் ஒருவர் 'கண்டுபிடிச்சுச்'சொன்னார் !) நம்மவர் உடனே என்னை முன்னால் தள்ளிவிட்டு, இவுங்களுக்குத் தோஷம் இருக்குன்னார்.  பத்து ரூ ஒரு கயிற்றரவம் :-)  கூடவே   எங்க நெற்றியில் பச்சைக்குங்குமம்!
ஆதிசேஷனைப் படம் எடுத்துக்கலாமான்னு  பண்டிட்டைக் கேட்டேன்.  எடுத்துக்குங்கோ.... பார்த்துட்டு  அதை  டிலீட் பண்ணிடுங்கோன்னார்! ஙே.....    அதுக்கு இப்ப நேரில் பார்க்கிறதே போதாதோ?  வீட்டுலே வச்சுக்கிட்டால்.... நல்லதில்லையாம்.  ஓ...... (நியூஸியில் பாம்புகளே  இல்லை என்பதால் சேஷனே முதல் பாம்பாக இருக்கட்டும் ! )


நம்மவர் சொல்றார், 'உனக்கு சர்ப்ப தோஷம் இருக்குன்றது உண்மைதான். உனக்கு வச்சுவிட்ட குங்குமம் பாம்பு போல இருக்கு'ன்னு :-)
படுக்கை இருக்குமிடத்தில் பெருமாள் இருக்கவேண்டாமோ? ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாளும் தனிச்சந்நிதியில் இருக்கார்!  ஆதிகேசவன் என்ற பெயரில்!

அப்புறம் இன்னொரு சேஷ சமாச்சாரமும் இருக்கு!  இந்தக் கோவிலுக்கு மேலே வர்றதுக்குப்  படிகளோடு ஒரு வழி இருக்குன்னேன் பாருங்க.....  அங்கே அறுபதடி நீள ஆதிசேஷன் படிகளாண்டை படுத்துருக்காராம். இந்த இடம் சத்தியத்துக்குட்பட்டதுன்னு ஒரு நம்பிக்கை.  எதாவது  வம்பு, வாய்க்காத் தகராறு இருந்தால்  இங்கே சத்தியம் பண்ணித் தீர்த்துக்கலாமாம்.  பொய் சத்தியத்தை சேஷன் பார்த்து ஆவன செய்வார் !
 மேலே படம், வலைவீசிப் பிடிச்சேன்.  படத்தின் உரிமையாளருக்கு நன்றி! 

இன்னொரு கதை.... நம்ம அர்தநாரீஸ்வரருடையது....

ப்ருங்கி என்ற பெயரில் ஒரு முனிவர் இருந்துருக்கார்.  தீவிர சிவ பக்தர்!  சிவனை மட்டுமே கும்பிடுவாராம்.  சிவன் தனியா இருக்கும் சமயம் சுத்தி வந்து வழிபடுவார்.  சிவனும் சக்தியுமா  சேர்ந்து பக்கத்துப்பக்கம்  உக்கார்ந்துருந்தால், தன்னை ஒரு வண்டு ரூபத்தில் மாத்திக்கிட்டு, சிவனின் தலையை மட்டும் சுத்தி வருவாராம்!  (என்ன அழிசாட்டியம் பாருங்க....)

தன்னை ரொம்பவே இன்ஸல்ட் செய்யறார் இந்த முனிவர்னு  உமையவளுக்கு எரிச்சல்.   'இப்படி உங்க பக்தர் எப்பவும்  அவமானப்படுத்தறார், நீங்க இதைக் கண்டுக்காம இருக்கீங்க. இனி மேலும் பொறுக்க முடியாது.  நான்  இங்கிருந்து போயிடப்போறேன்.  நீரே பக்தரைக் கட்டிக்கிட்டு அழும்' என்றதும் சிவனுக்கு பகீர்ன்னு ஆச்சு!  சக்தி இல்லையேல் சிவன்/ ஜீவன் இல்லைன்னு தெரியாதா என்ன?

"செல்லம். எதுக்குக் கோவிச்சுக்கறே.... அவருக்கு அவ்ளோதான் புத்தின்னு விடேன்"
"நல்லா இருக்கு.....  உங்க சமாதானம்....   இதோ நான் கிளம்பியாச்"

சிவனுக்கு  ஐடியா தோணுச்சு.  இங்கே பக்கத்துலே வா. நாம் ரெண்டுபேரும்  'நீ பாதி, நான் பாதி  கண்ணே'ன்னு  மாறிடலாம்.  'அப்ப என்ன செய்வாரு? அப்ப என்ன செய்வாரு'ன்னுன்னு  மனைவிக்கு இடங்கொடுத்துட்டார்.   ஐ மீன்  வலப்பக்கம் சிவனும் இடப்பக்கம் சக்தியுமா  ஒரே உடலாகி நின்னுட்டாங்க.  அர்த நாரியானது இப்படித்தான்!

மறுநாள் சிவனை வணங்க  வந்த ப்ருங்கி முனிவருக்கு அதிர்ச்சி!  திகைச்சு நின்னவராண்டை  சிவன் சொல்றார், 'நான் வேறு சக்தி வேறுன்னு நினையாதேயும். இருவரும் ஒருவரே !'

(ரெண்டுபேரையும் சேர்த்துக் கும்பிட்டாக் கும்பிடு, இல்லாட்டி வந்த வழியைப் பார்த்துக்கிட்டுப் போ)

ப்ருங்கி முனிவரும், இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதுடன்,  'தேவரீர்,  என்னைப்போல பல ஜென்மங்கள் இருக்குமே....  அவர்களுக்கும் உண்மை தெரிய வேணும் இல்லையா? நீங்கள் இருவரும் இதே கோலத்தில்  பூலோகத்தில் எழுந்தருளி  அம்மக்களைக் காக்க வேணும்' என்று விநயமாய் வேண்ட,   'ஓக்கே'ன்னு சொன்னவர், எங்கே போய் இறங்கலாமுன்னு தேடுனா..... மஹாமேருவின்  சிகரம் ஒன்னு பூமியில் விழுந்துருக்குன்றது கண்ணில் பட,  நேரா சிவனும் சக்தியுமா அதே பப்பாதி  அர்தநாரி  (பாதிப்பெண்) உருவில் இங்கே வந்து  நின்னுட்டாங்க !

(கொஞ்சம்தான் மசாலா சேர்த்தேன். இப்ப கதை சரியாப் பொருந்தி வருதோ? ) 

எல்லா சந்நிதியும் திறந்துருக்கலைதான்.  கம்பிக் கதவின் வழியா தரிசனங்கள் லபிச்சது.


திருச்செங்கோடுன்னதும் நம்ம பெருமாள் முருகன் அவர்களின் 'மாதொருபாகன்' நினைவில் வந்து போனது உண்மை.  இந்தக் கோவிலில் இருந்து இன்னும் மேலே மலையில் ஏறினால் உச்சிப்பிள்ளையார் கோவில் ஒன்னு இருக்காம்.  அங்கே  ஒரு குறிப்பிட்ட கல்லைச் சுத்திவந்தால்  குழந்தையின்மை குறை தீரும் என்பது ஐதீகம். சுத்தி வரும் ஒத்தையடிப்பாதை ஆபத்தானதுன்னு கேள்வி!
சரி,  கிளம்பலாமுன்னார் 'நம்மவர்'.  மணி ரெண்டாகுது. நமக்கு இல்லைன்னாலும் ரமேஷுக்கு சாப்பிட ஏற்பாடு செய்யணும்தானே!
கார்பார்க் வந்து வண்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்பும்போது....  நம்மாட்கள் சிலர்.....  என்ன கொடுக்கலாமுன்னு தெரியலை.  பேக்பேக்கில் இருக்கும் முறுக்கில் அவுங்க பெயர் எழுதி இருந்தது :-)

கீழே இறங்கி ஊருக்குள் போனால் கண்ணில் பட்டது ஹோட்டல் சரவணபவன் (!!!!)

PINகுறிப்பு:  ஸ்ரீரங்கத்தில் இருந்து ஒரு நாள் பயணமாக வந்துட்டுப்போகக்கூடிய கோவில் என்பதால் இன்னொருக்கா வரணும். சிற்பங்களைச் சரியாப் பார்க்கலைன்றது ஒரு காரணம் என்றாலும்....  அந்த அறுபதடி ஸ்பெஷலைக் கண்ணாலே பார்க்கலையேன்ற குறை வேற இருக்கே!   ம்ம்ம்ம்ம்.....  கோவில் முகப்பு வாசலையும் கோட்டை விட்டுட்டுப் பின்பக்க வழியிலே போய் வந்தது.... நல்லாவா இருக்கு? 

தொடரும்............ :-)


15 comments:

said...

அழகிய இடம். அழகிய, சுவாரஸ்யமான படங்கள்.

said...

ரொம்ப சிறப்பான இடமா இருக்கு ..


படங்களும், தகவல்களும் வழமை போல் அருமை ...

said...

அருமை நன்றி

said...

கோவில்களை மறுபடியும்பார்க்க இதுஒரு எக்ஸ்க்யூஸ்

said...

இன்னைக்கு அர்த்தநாரீசுவரர்னு சொல்லப்படுற கோயில் சங்ககாலத்துல.. சிலப்பதிகாரக் காலம் வரைக்குமே முருகன் கோயில் மட்டுந்தான். இளங்கோவடிகள் பாட்டாவே பாடியிருக்காரு. பின்னாளில்தான் அர்த்தநாரீசுவரர் உள்ளயே வர்ராரு. அவருக்கேத்த கதைகளும்.

நீங்க போட்ட படங்கள்ள... குரங்கர் கொட்டாவி விடுற படம் அட்டகாசம்.

சிலைகள்ள... கொண்டை வெச்ச ஒருத்தர் மூனு மனைவியோட இருக்காரே. அவர் யாரு? பக்கக் கொண்டை போட்ட ஒருத்தர் மனைவியோட இருக்காரே. அவர் யாரு?

குரங்குகளுக்கு நீங்க பாசத்தோட முறுக்கு கொடுக்குறீங்க. அன்போடு செய்யும் செயல்தான். ஆனா அப்படிச் செய்யக் கூடாதுன்னு சொல்றாங்க. வனவிலங்குகளின் இயல்பான உணவு இதல்ல. இந்தத் தின்பண்டங்களோட சுவைல மயங்கி யாராவது கொடுப்பாங்கன்னு தானே உணவு தேடாம உக்காந்திருக்குதுகளாம். பெரிய குரங்குகளைப் பாத்து சின்னக்குரங்குகளும் யாராச்சும் எதாச்சும் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்குதாம். நாம அன்போடு செய்ற செயல் அந்த விலங்குகளுக்கு தீமையைக் கொடுக்குதுன்னு சொல்றாங்க. இனிமே எதுவும் கொடுக்கக்கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிட்டேன்.

மாதொருபாகன்... மறக்க முடியுமா? பெருமாள் முருகன் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா!!!

said...

ஸ்வாரஸ்யம்.... நீண்ட பகிர்வு.... படங்கள் அனைத்தும் அழகு.

said...

துளஸிக்கா படங்கள் எல்லாம் அழகு அந்த நம்மவர்ங்க ரொம்ப கியூட் .இனிமே போகும்போது எப்பவும் வாழைப்பழங்களை கையில் பையில் வச்சிக்கோங்க :) ஆஞ்சிஸ்க்கு கொடுக்க வசதியா இருக்கும் .
அந்த மாடு பாப்பா chooo ஸ்வீட் ..அதுக்கும் எதோ வேண்டுதல் போலெ அதான் ஒவ்வொரு சந்நிதியா பார்த்து வேண்டிக்கிட்டு வந்திருக்கு.. அந்த குங்குமம் எப்படி சரியா அந்த ஷேப்புக்கு வந்தது :)

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மை. இன்னும் கொஞ்சம் அதிக நேரம் இருந்து ரசித்து இருக்கலாம்....

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

இடமும் அழகே !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆதிசேஷனைப் பார்க்க ஆசைப்படக்கூடாதா? :-)

said...

வாங்க ஜிரா.

செங்கோட்டுக்குமரன் !

சிலையைப் பத்தி யாரையும் விசாரிக்க முடியலை. இதுக்குத்தான் கோவில்களில் ஒரு கைடு வேணும். இல்லைன்னா... கோவில் விவரங்கள் உள்ள புத்தகம் விற்கணும். கோவிலுக்கும் வருமானம் இல்லையோ!

குரங்கு.... ப்ச்... கொடுக்கக்கூடாதுதான். இங்கேயும் காட்டுவழியில் பறவைகளுக்குக்கூடக் கொடுக்கக்கூடாதுன்றதே நியதி. முந்தி ஹேக்ளி பார்க் வாத்துகளுக்கு ப்ரெட் போடுவோம் பாருங்க. அதையும் நிறுத்தச் சொல்லிட்டாங்க. அமைச்ச சாதம் மட்டும் போடலாமுன்னு சொல்லி இருக்காங்க. இனி பார்க் போகும்ப் போது சோறு கொண்டு போகணும்.

ஆனால்.... குரங்குகளைப் பார்த்தால் மனம் இளகிருது.... இனி கட்டுப்படுத்திக்கத்தான் வேணும்.... பாவம்...

நம்ம இமா சொல்றதைப்போல் வாழைப்பழம் கொண்டு போகலாமுன்னா.... பையில் அது நசுங்கிப்போய் .... இன்னொரு பிரச்சனை ஆகிருது. இனி சும்மா இருப்பதே சுகம்...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சில பதிவுகள் இப்படித்தான் நீண்டே போயிருது.....

ரசிப்புக்கு நன்றி ! ஐ மீன் படங்களின் ... :-)

said...

வாங்க ஏஞ்சலீன்,

வாழைப்பழம் நசுங்கிருதேப்பா..... அதான் பிரச்சனை....


குங்குமம்..... சர்ப்பதோஷம் இருக்குன்னு காமிக்குதோ!!!!

said...

oops.... Imma ன்னு சொல்லிட்டேன்... வாழைப்பழம் ஐடியா கொடுத்தது நம்ம ஏஞ்சலீன் !