Monday, March 27, 2023

குருவே நமஹ........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 30

தாயை நோக்கி ஓடும் கன்று போல்  மனசு நேரா அங்கே தாவிருச்சு.  மூணுமணிக்கு அறையில் இருந்து கிளம்பின நாம்  நேத்து ஏர்ப்போர்டில் இருந்து 'பார்க் 'வந்தமே அதே ரோடில் தான் போறோம். அந்த ஏரியாவுக்குப் பெயர் ஷம்ஷாபாத். ஏர்ப்போர்ட்க்குள் திரும்பும் ரோடில் போகாமல் நேராகவே இன்னும் ஒரு பதினாறு கிமீ தூரம் தொடர்ந்து  பயணிச்சால் வரும்  கிராமம் (!) முச்சிந்தல் .(Muchintal  ) சாலையின் இடதுபக்கம்  வரவேற்பு தோரணவாயில் இருக்கு. உள்ளே போறோம்.  அடுத்த  அஞ்சாவது நிமிட்டில் அதோ.........  கண்ணுக்குத் தெரிகிறார் ஸ்ரீ ராமானுஜர். ப்ரமிப்பில் கண்கள் அகலமா விரிஞ்சு அப்படியே நின்னு போச்சு !!!


அத்வானக்காட்டில் ஒரு அற்புதம் ! நாம் எங்கிருந்து பார்த்தாலும்  அவர் நம்மையே பார்க்கிறார்னு தோணுச்சு!  ஸ்ரீராம்நகர்னு பெயர்.  
நம்ம ஸ்ரீராமானுஜரின் ஆயிரம் ஆண்டுவிழா 2017 ஆம் வருஷம் வருதுன்னு  சில வருஷங்களுக்கு முன்னேயே எல்லா வைணவ ஷேத்ரங்கள், மடங்களில் எல்லாம் எப்படியெப்படிக் கொண்டாடலாமுன்னு  திட்டங்கள்  போட்டுக்கிட்டு இருந்த சமயம், இங்கத்து சின்ன ஜீயர் ஸ்வாமிகளின்  மனசில் உதித்த எண்ணத்தின்  முன்னால்,  நாம் நிக்கறோம்.
2014 ஆம்  வருஷம்,  சின்ன ஜீயர்  ஸ்வாமிகள் சட்னு மனசில் தோணுது.....  அதைப்பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி, ஆலோசனைகள் எல்லாம் ஆனதும்.... ஸ்தபதி  DNV Prasad அவர்கள் , தலைமைப் பொறுப்பு ஏத்துக்கிட்டார். டிஸைன்கள், அமைப்புக்கான வரைபடங்கள் எல்லாம் தயாராகுது. 
நாப்பதியஞ்சு ஏக்கர் நிலம். 
அதே வருஷம்  மே மாசம் ரெண்டாம் தேதி  நம்ம  சின்ன ஜீயர் திருக்கரங்களால்   ஸ்ரீராமானுஜரின் உருவச்சிலை அமரப்போகும் கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டாங்க. 

Pic. Sthapathy DNV Prasad 

 உருவச்சிலை உருவாக்க, சீனக் கம்பெனியுடன்  ஒப்பந்தம் ஆச்சு  எப்படியும்  மூணு வருஷத்தில் வேலை முடியும் என்ற எதிர்பார்ப்பு! சின்ன சமாச்சாரமா இது.  சிலையின் மாடல் செஞ்சு அதை அப்ரூவ் பண்ண வேணாமா ?  பதிநாலு  மாடல் சிலைகள்  செஞ்சாங்க. எல்லாம் நவீன யுக விஞ்ஞானக்கருவிகளின்  துணையோடு !  அவைகளில் இருந்து மூணு சிலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கடைசியில் மூன்றிலிருந்து ஒன்று முடிவாச்சு. 

சிலையின் உயரம் 108 அடி. தாமரை பீடம் 27 அடி.  இவற்றைத் தாங்கும் மேடை 54 அடி, கீழே கட்டடம் இப்படி எல்லாமும் சேர்த்து 216 அடி ! ஆஹா... அதுதான்  பறக்கும்போது தெரிஞ்சுருக்கு ! 
https://statueofequality.org/key-elements-of-statue-of-equality/

இவரைச் சுற்றி வளாகத்தில் 108 திவ்யதேசக் கோவில்களின் சந்நிதிகள்.  மூலக்கோவில்களின்    கருவறையில் மூலவர் என்ன ரூபத்தில் ஸேவை சாதிக்கிறாரோ...  அதே போல  இங்கேயும் !  கருவறை விமானங்களும்கூட  அதே ஸ்டைலில்.  என்ன ஒன்னு அளவில் சிறியது! 
உள்ளே போய்ப் பார்க்க விரும்பினால் இதோ இந்தச் சுட்டியின் வழியே போகலாம் !

https://statueofequality.org/project-walk-through/

சமதா மூர்த்தி ஸ்பூர்தி கேந்திரம் !!!     இது தனியார் கோவில்தான்.  அரசுக்குச் சொந்தமானது இல்லை.  தினமும் தரிசன நேரம் பகல் 11 முதல் மாலை 8 வரை. புதன் கிழமைகளில் வாரவிடுமுறை.  நுழைவுக்கட்டணமா பெரியவர்களுக்கு 150 ரூ & 5 -12 வயசுப் புள்ளைகளுக்கு  75 ரூ. 

கேட்டுக்குள் நுழையுமுன்னேயே வெளியே  ரெண்டு பக்கங்களிலும் பெரிய சிறிய திருவடிகளுக்கான 45 அடி உயர மண்டபங்களில் 18 அடி உயரமுள்ள  சிலைகள். நாம் உள்ளே நுழைஞ்ச இடத்தில் பெரியவர் இருக்கார்.  அடுத்த பக்கம் கொஞ்சதூரத்தில் சிறியவர்.  ஆனால் நான்  க்ளிக்கிய படத்தில் சிறியவர் மண்டபம் ஃப்ரேமில் இல்லை..:-(

நாம் உள்ளே நுழைஞ்சு டிக்கெட் வாங்கினதும் பெண்கள் ஆண்களுக்கான தனித்தனி செக்யூரிட்டி செக் அப். செல்ஃபோன், கேமெராக்களுக்கெல்லாம் அனுமதி இல்லை.  போச்சுரா....ன்னு மனம் வெதும்பியது உண்மை. ஆனால் முதலிலேயே இந்தத் தகவலை வலை மூலம் தெரிஞ்சுக்கிட்டதால்  இவைகளை வண்டியிலேயே நம்ம நரேஷிடம் ஒப்படைச்சுட்டுப் போயிட்டோம். அதுக்கு முன்னால் வெளியில் இருந்தே சில க்ளிக்ஸ் ஆச்சு.

உடைக்கட்டுப்பாடு இருக்கு.  பாரம்பரிய உடைகளுக்கு அனுமதி. ஃபுல் பேண்ட்ஸ் இப்போ பாரம்பரிய உடைகளில் சேர்த்தி என்பதால்  பிரச்சனை இல்லை.
எதெதுக்கு அனுமதி இல்லை என்ற முழு விவரமும் அவுங்க வலைத்தளத்தில் விஸ்தாரமாப் போட்டுருக்காங்க.  இங்கே பார்க்கலாம். கவனிக்காமலோ, விதண்டாவாதமாகவோ அங்கே போய் குய்யோ முறையோன்னு கதறவேணாம். 

https://statueofequality.org/plan-your-visit/

செக்யூரிட்டி செக்கப் முடிஞ்சதும்  அடுத்த வாசல் வழியா உள்ளே தோட்டத்துக்குள் போயிருவோம்.  நீள நடைபாதை முடிஞ்சதும் இடதுபக்கம் வழி திவ்யதேச யாத்திரை தொடங்கிருது. அதுக்கு முன்னாலேயே  நிர்வாகத்தின் அனுமதி பெற்ற  ஃபொட்டாக்ராஃபர்  கெமாரவும் கையுமாக அங்கே நிக்கறார்.  விரும்பினால் நம்மைப் படம் எடுக்கிறார்கள்.  அதை ஏன் விடுவானேன்னு  நாங்களும்.....    கட்டடத்தைவிட்டு வெளியே வருமுன் படம் நமக்குக் கிடைச்சுருது.  கட்டணம் கொஞ்சம்தான்.  படத்தின் அளவுக்கேற்பக்  காசு. 
முதல் கோவில் நம்ம ரெங்கனோடது.....  கடைசி  ரெண்டும் திருப்பாற்கடல், பரமபதம் ! விண்ணுலக சமாச்சாரத்தை மண்ணுலகில் தரிசிக்கிறோம் !  ஒவ்வொரு சந்நிதியிலும்  அர்ச்சாவதாரமாய் ஜொலிக்கிறான் நம்ம பெரும் ஆள் !  நமக்கு ரெண்டாம் முறையாக 108 வாய்ச்சது!   ப்ரமாண்டமான சதுரமேடையில்  பனிரெண்டு கோணங்களாஒரு வரிசையில் நாலு, மூணு, இல்லை அஞ்சு என்ற வகையில்  அமைச்சுருக்காங்க.  ஒவ்வொரு வரிசைக்கும்   சில பட்டர் ஸ்வாமிகள்.  அங்கங்கே துளசிதீர்த்தம், சடாரி, புஷ்பம், துளசின்னு ப்ரஸாதங்கள் கிடைக்குது.
ஒரு இடத்தில்  மேஜையில் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்துட்டு விசாரிச்சதில்  108 திவ்யதேசங்களின் சுருக்கமான அறிமுகம் என்ற புத்தகங்கள் அவை! செப்டம்பர் 2022தான் வெளியிட்டு இருக்காங்க. நாம் அக்டோபர் 2022 அங்கே போயிருக்கோம்.  கையில் வாங்கிப் பார்த்ததில் பரம திருப்தி.  அங்கே இருக்கும் எல்லா சந்நிதிகளிலும் உள்ள மூலவர்   படங்களுடன்  பார்த்ததும் உடனே வாங்கினோம்.  நல்ல தெளிவான விளக்கங்கள்.  முக்கியமாக ஒரு தட்டச்சுப்பிழை கூட இல்லாமல் கவனமாகப் பார்த்துத் 'தமிழ், தெலுகு, ஹிந்தி 'ன்னு மும்மொழிகளில் அழகாகச் செஞ்சுருக்காங்க.  

108 தரிசனங்களில் ஒவ்வொரு  கால்வாசிப் பகுதி முடிஞ்சதும் இடைவெளியில்   உள்நோக்கிப் போகும் பாதையில்  போனால் ஓய்வறை.  நடக்க முடியாதவர்களுக்கான வீல்சேர் வசதிகளும் செஞ்சுருக்காங்க.
108 தரிசனங்கள்  முடிஞ்சதும்  பூங்கா நடுவில் இருக்கும் கட்டடத்துக்குப் போகிறோம். தரைதளம் தவிர்த்து முதல் மாடி ஹாலுக்குள்  நுழைஞ்சாச்சு. பத்ரவேதி என்ற பெயருள்ள இந்தக் கட்டடப்பகுதி மட்டும் 54 அடி உயரம்.  த்யானம் செய்யும் விசாலமான ஹாலில்  ஸ்ரீ ராமானுஜர் சொக்கத்தங்கத்தில்  ஜ்வலிக்கிறார்.
 120 கிலோ தங்கமாம். நம்ம ஸ்ரீ ராமானுஜர், பூவுலகில் 120 ஆண்டுகள் ஜீவித்து இருந்ததால்  நூற்றியிருபது கிலோ என்ற கணக்கில் !   பொதுவா இந்த  நினைவுச்சின்னம்  அமைக்க 1000 கோடி ரூபாய்கள்  ஆகி இருக்கு.  இது முழுக்க முழுக்க உலகெங்கும் உள்ள  பக்தகோடிகள்  அளித்த நன்கொடையே ! (பாருங்க.... இப்போ ஸ்ரீராமானுஜர் 1000 கொண்டாடும் சமயம் செலவும் அதே ஆயிரம் கோடிகள் ! ) தங்க தரிசனம் முடிச்சு வெளியில் வந்தோம்.  

வாசலில் 42 அடி உயரமுள்ள ஒரு பெரிய செயற்கை நீரூற்று.  லீலா ஜல நீராஞ்சனம் ! குறிப்பிட்ட நேரங்களில் இது ம்யூஸிக் ஃபௌண்டெய்ன் !  அதான் கெமெராவுக்கு அனுமதி இல்லையேன்னு சோர்ந்து போயிறக்கூடாது. உயரம் அதிகம் என்பதால் கேட்டுக்கு வெளியே நாம் இருந்தாலும் தெரியும்தான்.  யாரோ ஒரு புண்ணியவான் யூ ட்யூபில் போட்டு வச்சுருக்கார். சுட்டி இதோ ! அன்னாருக்கு எம் நன்றி !

https://youtu.be/nLuh_LBPqYs

மேலே ஏறும் படிக்கட்டுகளில் உக்கார்ந்து பார்த்து ரசித்தோம்.  இனி மேலேறிப்போய் ஸ்ரீ ராமானுஜரை கிட்டப்போய் தரிசிக்கணும். 108 படிகள். லிஃப்ட் இருக்கு. ஆனாலும் குருவுக்காக முட்டிவலியைப் பொருட்படுத்தலை.

36 யானைகள் இருக்கும் கஜபீடத்தின் மேல் 54 இதழ்களால் ஆன தாமரையில் 108 அடி ஸ்ரீ ராமானுஜர், 135 அடி த்ரிதண்டம் ஏந்தி  உக்கார்ந்துருக்கார் !  தகதகன்னு ஜ்வலிப்பு!  தங்கமயம் ! இருபது  வருஷ  வாரண்டி இருக்கு, இந்தத் தங்க ஜ்வலிப்புக்கு !

இவரை உருவாக்கினவங்களும் சீனர்களே !   700 டன் பஞ்சலோகம் பயன்படுத்தியிருக்காங்க.  சிலை தயாரிப்பில்  1600 பகுதிகளாகப் பிரிச்சுச் செஞ்சு , தனித்தனியாப்பொதிஞ்சு 54 கண்டெய்னர்களில்  சென்னைத் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து , தரை வழியாக ஹைதராபாத்  பயணிச்சு,  ஸ்ரீராம்நகரில்  நிர்மாணம் செஞ்சுருக்காங்க. இந்த  வேலைக்காக 60 சீனர்கள் (எஞ்சிநீயர், வெல்டிங் செய்பவர்ன்னு பலரும் ) வந்து இங்கே தங்கி, எல்லாப் பகுதிகளையும் சரிவரப்பொருத்தி முழுச்சிலையாக நிர்மாணிக்கவே  15 மாசங்கள்  ஆகி இருக்கு !  

விவரங்களை  வலையில் வாசிக்கும்போதே ஏற்பட்ட ப்ரமிப்பு இன்னும் அடங்கலை ! (ச்சும்மாச் சொல்லக்கூடாதுப்பா இந்த சீனர்களை ! என்ன கடின உழைப்பு பாருங்க. அதுதான் உலகம் முழுசும் இவுங்க பண்ண அட்டகாசத்துக்குக்கூட வாயைத்திறக்காமல் பம்மியிருக்கு ! )

மனசில்லா மனசோடுதான் அங்கிருந்து நகரவேண்டியதாப்போச்சு.  இப்பவே மணி ஏழாகப்போகுது.  எட்டுமணிக்கு மூடிருவாங்க. நமக்கும் ஒரு மணிநேரப்பயணம் இருக்கே அறைக்குப் போக !  கீழே வரும்போது, முட்டி 'என்னைப்பார்'னு எச்சரிக்கை விட்டதால் லிஃப்ட் தான்.

கடைசியாக  வெளியேறும்  பகுதிக்கு வந்தப்ப..... தனிக் கட்டடத்தில்  கேண்டீன் போல இருக்கைகள் எல்லாம் போட்டு, ப்ரஸாத ஸ்டால் !  நாலைஞ்சு ஐட்டங்கள் நேரம் அனுசரிச்சு வச்சுருக்காங்க. ஒரு ஐட்டம் முப்பது ரூ. லட்டு, மைசூர்பாக் (நம்ம பழைய ஸ்டைலில் க்ரஞ்சியா இருக்குமே அது ! என்னோட ஃபேவரிட் !!!! ) அதிரசம், மிளகுவடை, புளியோதரை. அப்பதான்  மிளகாய் பஜ்ஜி சுடச்சுட எடுத்துக்கிட்டு வந்தாங்க.  மூணு முப்பது.  எனக்குத்தான் காரம் ஆகாதேன்னு  ஒன்னு போதுமுன்னு சொன்னதுக்கு முதலில் முடியாதுன்னு தலையாட்டிய ஸ்டால் நபர், என்னதோணுச்சோ,   சட்னு ஒன்னு எடுத்துக்கொடுத்தார். பத்தே ரூ !

ஃபோட்டோக் கடையில் நம்ம படம் ரெடி. நூறு ரூ தான்.  அதையும் வாங்கிக்கிட்டு, வெளியே கார்பார்க் வந்ததும் முதல்வேலையாக , நம்ம  கெமராவை வெளியில்  எடுத்தேன்னு தனியாச் சொல்ல வேணாம்தானே ? 
அதுக்குள்  நம்ம ஸ்ரீராமானுஜரை வண்ண வண்ண விளக்குகளால் அபிஷேகம் செய்யத் தொடங்கிட்டாங்க. ஃபோட்டொ ஸ்பாட்  வேற  இருக்கு ! சிலபல க்ளிக்குகள் ஆனதும்  கிளம்பினோம். 



பரம திருப்தியான தரிசனம் !  இதில் கூடுதலா இன்னொரு சந்தோஷம் எனக்கு !  சமதா மூர்த்தி  ஸ்பூர்தி கேந்த்ரம் திறந்து வச்சது 2022  ஃபிப்ரவரி 5 ஆம் தேதி !!!!  (அவதார நாள் ! அல்ப சந்தோஷியானேன்! )





ஒரு மணி நேரமாச்சு அறைக்கு வந்து சேர !  இன்றைக்கு டின்னர் புளியோதரைதான் !    டிஸ்ஸர்ட்.... மைசூர்பாக் :-)

தொடரும்......... :-)


PINகுறிப்பு:  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால், இந்தப் பதிவில் இருக்கும் உள்ளமைப்புப் படங்கள் எல்லாம் ஸ்ரீ ராமானுஜரின் வலைப்பக்கத்தில் இருந்து எடுத்திருக்கிறேன்.  நிர்வாகிகளுக்கு நன்றி !

தஞ்சைக் கோவில் எப்படிக் கட்டினாங்கன்னு இப்பக்கூட  ஆராய்ச்சி நடப்பது போல் இல்லாமல் எல்லா விவரங்களையும் தொகுத்து ரொம்பவே விஸ்தாரமாக அவர்களின் பக்கத்தில்  சேர்த்திருக்காங்க. மாடர்ன் டெக்னாலஜி இம்ப்ரூவ்டு ஸோ மச் !    



Friday, March 24, 2023

சட்னியில் சாம்பாரும் இருக்கு :-) கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 29

காலையில் கொஞ்சம் நிதானமாக எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வெராந்தாவுக்குப் போனோம்.  இது இங்கத்து ரெஸ்ட்டாரண்டுலே ஒன்னு. ராத்ரி சாப்பாடுதான் சரியில்லையே....  இப்பக் கொஞ்சம் நல்லா சாப்புட்டுக்கலாம்னு நினைப்பு.
பஃபேதான். வடைக்கு பதிலா குட்டிக்குட்டியா  போண்டா  வச்சுருக்காங்க. அதே உளுந்த மாவுதானே ?  மூணு எடுத்துக்கிட்டேன். கூடவே ரெண்டு இட்லியும்.


யம்மாடி..... இது என்ன ரப்பரில் செஞ்ச போண்டாவோ ?  வாயிலே வச்சால்  இழுக்குது... இதி ஏமிட்டிரா கொடவன்னுட்டு.... இட்லி மட்டும் ஆச்சு. கொஞ்சம் பழங்கள் & தயிர்.  காஃபி கூட ரொம்பவே சுமார்.... நம்மவர் தோசைக்குச் சொன்னார்.... அரை தோசை வந்தது.

 வந்த நோக்கம் நிறைவேறும் இடத்துக்கு  இன்று  மூணுமணிக்குத்தான் போறோம். அதுவரை ரெண்டாவது நோக்கத்தை முடிச்சுக்கலாம்!   ஊர் சுத்த ட்ராவல் கார் ஒன்னு புக் பண்ணி இருந்தார்  நம்மவர். 

நரேஷ் (ஓனர் ட்ரைவர் ) வந்தார். அதுக்குளே வலையில் ஏற்கெனவெ பார்த்து வச்ச  விவரங்களை புக் மார்க் பண்ணியாச்.  நியூஸியில் இருக்கும் ஹைதராபாத் தோழி, இன்னொரு இடமும் சொல்லி இருந்தாங்க. ஒரு புடவைக்கடைக்குப்போக இத்தனை முஸ்தீபா ? 

கத்வால் புடவையின் ரசிகை ஆகி இருந்தேன், போன முறை ஹைதை ( இந்தச் சொல் நம்ம பதிவர் புதுகைத் தென்றல் வச்ச பெயர் ) வந்ததில்  இருந்து. அது ஆச்சு 13 வருஷம். சென்னையிலும் தேடித்தேடி ஓய்ஞ்சுபோனதுதான் மிச்சம். சென்னை சில்க்ஸில் கிடைக்கும் என்று வலை சொன்னாலும்.....  அங்கே போனால்  வேறேதோ புடவைகளை எடுத்துப்போட்டு இதுதான் கத்வால் னு வேட்டியைப்போட்டுத் தாண்டறார் விற்பனையாளர். அதனால் ஒரிஜினல் புடவையைத் தேடிக்கிட்டு இருந்தேன். 

கலாஞ்சலி நோக்கிப் போறவழியில் பெருமாள் கண்முன்னே  வந்தார்.  எப்படி இந்தக் கோவிலை மறந்தேன் ? போனமுறை பிர்லா மந்திர் தரிசனம்  ஆச்சு.  இந்தக் கோவில் அப்போ வரலை போல....  ஸ்டாப் ஸ்டாப்னு நரேஷை வண்டியை நிறுத்தச் சொல்லிக் கோவிலுக்குள் போனால்.... ஏகாந்த தரிசனம் !!!!!   பட்டர் கூட இல்லை. அப்புறமா பட்டர் வந்து தீபாராதனை காமிச்சார் ! 


 
நல்ல பிஸியான ஊருக்குள்தான் கட்டியிருக்காங்க. திருப்பதி தேவஸ்தானக் கோவில்தான். தரிசனம் முடிஞ்சதும், கலாஞ்சலிக்குப் போனோம். 
கடைக்குள் நுழைஞ்சதுமே   கண்ணில்பட்டார் அட்டகாசமான பெருமாள்  ! 
கிடந்த நிலை !  மஹாலக்ஷ்மி புடவை செலக்ட் செய்யும்வரை தூங்கலாமுன்னு படுக்கை போட்டுட்டார் போல ! சுவர் முழுசும் ரவிவர்மா !






இங்கே புடவைகள் மட்டுமில்லாமல் கைவினைப்பொருட்கள் விற்பனையும் இருக்கு !  நமக்குக் கண்ணில் பார்த்தால் போதும். வாங்கணுமுன்னு............  கனவிலும் நினைக்கப்டாது ! 

கத்வால்...கத்வால்......   கடைசியில் கத்வால் பார்த்ததும்  கத்தாமல் இருந்தது  அதிசயம்!  எல்லாமே அம்பதாயிரத்துக்கு மேலே.....  நியூஸிக்கு இது ஆகுமோ ? ஊஹூம்.... காஞ்சிக் காட்டன் போல...கத்வால் காட்டன் இருக்குதான். ஆனால் இங்கே இந்தக் கடையில் இல்லை.
மாடிக்குப்போய் கை'வினை' பொருட்களைப் 'பார்த்துட்டு', அங்கே இருந்த ஒரு பகுதியில்  சாதாரணக் காட்டன்  புடவைகள்  ரெண்டு வாங்கினேன். ஏன் ரெண்டு ?  அதொன்னுமில்லை    பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஸேல் !
(அதுலே ஒன்னு இது. நேத்து  ஸ்ரீராம்நவமி உத்ஸவத்துக்குப் போனேன் )
விட்டேனா பார்னு கத்வால்  வீவர் சொஸைட்டி நடத்தும் கடைக்குப்போய்ச் சேர்ந்தோம்.  இங்கே  ஹைதையில் கவனிச்சது  மெட்ரோ மேம்பாலத் தூணுக்கடியில் பயணம் செய்யும்போது,  கடந்துபோகும்  தூணில்  பக்கத்துள்ள கடைகளின்  டோர் நம்பர்கள் எழுதியிருக்காங்க.  நாம் விலாசம் தேடிப்போகும் போது  அந்த எண்களைப்பார்த்து  ஏகதேசம் நாம் போக வேண்டிய இடத்துக்கு வந்துட்டோமான்னு தெரிஞ்சுருது ! 
(6-3-803/1/13 1st floor sss chamber ameerpet metro pillar no C-1449, Hyderabad, India, Telangana)



ஒருவழியாக் கடைக்குள் போய்  நம்மவருக்கு ஹார்ட் அட்டாக் வரவழைக்காம  ஒரு காட்டன் புடவை வாங்கினேன்.   இத்தனை நேரம் சுத்துனதுக்குப் பசி வந்துருக்கணுமே !


 


  எனக்கு நீர்தோசையும், நம்மவருக்கும் நரேஷுக்கும்  ரவா தோசையும் ஆளுக்கொரு அட்டகாசமான ஃபில்டர் காஃபியுமா லஞ்சு. போன முறை நம்ம புதுகைத்தென்றல் குடும்பத்துடன் சட்னிக்குப்போனது நினைவுக்கு வந்தது !   


இனி நேரா 'த பார்க்'தான். ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின் நாம் இங்கே வந்த வேலையைப் பார்க்கலாம். ரெடியா இருங்க :-)    

தொடரும்............ :-)