Wednesday, February 27, 2019

சட்னு ஒரு முடிவு !!!!! (பயணத்தொடர், பகுதி 72 )

பழக்கத்துக்கு எப்படி அடிமை ஆகிட்டோமுன்னு நினைச்சாக் கொஞ்சம் அவமானமாத்தான் இருக்குன்னாலும்.....  விடமுடியுதா?  இதெல்லாம் இல்லாத நாட்களில் எப்படி இருந்தோம்?வாழ்க்கை அப்பவும் நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது! இப்போ ருசிகண்ட பூனை போல ......
ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தப்ப சரியா மணி பனிரெண்டு.  ரிஸப்ஷன் வழியாத்தானே உள்ளே போவோம்.....   தலையைத் திருப்பிப் பார்த்தவுடன்,  'இன்னும்  ரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்காங்க மேடம்'  னு  சொன்னதைக் கேட்டதும்தான் கோபம் பொங்கிவர ஆரம்பிச்சது....  ஒன்னும் சொல்லாம அறைக்குப் போனதும்.....  'ஏம்மா....  இன்னைக்கே கிளம்பிறலாமா?' ன்னார் 'நம்மவர்'.

டிஜிட்டல் பேனர், போஸ்டர் ஒட்டுவதில் மருதைக்காரர்களை மிஞ்ச முடியாது!

'நமக்கு நாளைக்குத்தானே அங்கே புக்கிங் இருக்கு'ன்னதும், 'கேட்டுப் பார்க்கிறேன். இன்னைக்குக் கிடைச்சால் போயிடலாமா?'

ஒரு விநாடி தயக்கத்துக்குப்பின் 'போயிடலாம்'னு சொன்னேன்.   மதுரை வந்துட்டு மீனாக்ஷியைப் பார்க்காமல் போறோமேன்ற  குற்ற உணர்வு தான்....  நேத்து சாயங்காலம் ரெண்டு கோவில்கள் போய் வந்தபின்  மீனாக்ஷியைப் பார்க்க  நேரமில்லை.   அதுதவிர.... ஒவ்வொருமுறை இங்கே வர்றப்பவும் கோவில் சட்டதிட்டங்கள் மாறிடுது.  கேமெரா டிக்கெட் வாங்கிக்கலாம். கேமெரா கூடாது. செல்ஃபோன்  கொண்டு போகலாம் /  போகக்கூடாது. டிக்கெட்  வாங்கினால்  ரெண்டுக்கும் அனுமதி உண்டு.   டிக்கெட்டே இல்லை. நோ கேமெரா, நோ செல்ஃபோன்.....  வலையிலும் சரியா விவரம் போடறதில்லை....

இன்னிக்கு நல்லா விசாரிச்சுட்டு, நாலுமணிக்கு போகலாமுன்னு நினைச்சுருந்தேன். பகல் வெளிச்சம் இருந்தால் வெளியில்  கொஞ்சம் படங்கள் எடுத்துக்கலாமே....
 நம்ம மதுரைத் தம்பிகளின் நினைவு வந்தது உண்மை ! 
அதுக்குள்ளே ஃபோன் பேசி முடிச்சவர், ரூம் இருக்காம். இன்றையில் இருந்தே எடுத்துக்கறோமுன்னு சொல்லிட்டேன்னார்.  கீழே  ரிஸப்ஷனுக்குப் போன் செஞ்சு ஒருமணிக்கு செக்கவுட் செய்யறோமுன்னு  சொல்லியாச்.
நம்ம ரமேஷுக்கும், இப்படி ஒரு மணிக்குக் கிளம்பறோம்.  சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ரெடி ஆகிருங்கன்னு  சொன்னோம்.

பொதுவா எனக்கு எந்த ஊருக்குப் போய்த் தங்கினாலும் குறைஞ்சபட்சம் ரெண்டுநாள் தங்கணும் என்று கணக்கு. நம்மவர்தான் ஒருநாள் ஒரு ஊர்னு திட்டம் போட்டுருவார்.  அதுக்கே 'தனிச் சண்டை' போடுவேன்.  சாயங்காலம் அந்த ஊர் போய்ச் சேர்ந்து மறுநாள்  பகல் கிளம்பணுமுன்னா.... ஊர் விசேஷத்தை என்னன்னு பார்க்கறது?

இப்படித்தான் நாம் போன யூரோப் ட்ரிப்பில் நாளுக்கு ஒரு ஊர்னு போட்டுவச்சுருந்தாங்க. ஆனால் அதுலே காலை எட்டு முதல் மாலை அஞ்சுவரை பஸ்ஸுலேயே அந்த ஊரைச் சுத்திட்டு சாயங்காலம் ஹொட்டேலுக்குக் கொண்டு போயிருவாங்க.  அதிலிருந்து மறுநாள் காலை வரை நம் சொந்த ஏற்பாட்டில் அங்கே இங்கேன்னு ஊருக்குள் போய்வரலாம்.  அதுவும்கூட  டின்னர் அவுங்களே ஏற்பாடு செஞ்சு கொடுக்காத நாட்களில் மட்டும்.  ஒரு சில பெரிய ஊர்களில் மட்டுமே தொடர்ந்து ரெண்டுநாள் தங்கல். என்ன ஒன்னுன்னா அங்கெல்லாம்  நம்ம கோவில்கள் இல்லை பாருங்க.... அதனால் ஊர் சுத்திப் பார்க்கறது மட்டுமே! 

 நம்ம ஊரில் பயணம் செய்யும்போது  எனக்குக் கோவில்கள் விஸிட்தான் ரொம்ப முக்கியம். அதிலும் குறிப்பிட்ட நேரங்களில் திறந்து வைப்பதால் அதுக்குள்ளே போயாக வேண்டிய நிர்பந்தம் வேற.  பகலில் கோவிலை மூடி வச்சுருப்பதால்  அந்த நேரங்களைத்தான்  ஊர் சுத்திப் பார்க்க ஒதுக்கணும். மேலும் நம்ம பக்கங்களில்  எல்லா ஊரிலுமா பார்க்கன்னு  இடங்கள் இருக்கு?  அந்தந்த ஊரில் அந்த ஊர்க் கோவில்களே முக்கியம் இல்லையோ!

அதானே காஞ்சிபுரமா என்ன? கோவில் மூடி இருக்கும் நேரம் புடவைக்கடைக்குள் நுழைய?  

இங்கே மதுரையில் சுத்திப் பார்க்க நிறைய இடங்கள் இருக்குன்னாலும் அநேகமா எல்லாம்  ஏற்கெனவே பார்த்த இடங்கள்தான்.  மாமியார் வீடு 'போடி' என்பதால்  மதுரை வழியாத்தானே போக்குவரவு.

இப்பெல்லாம் வெயில் ரொம்பக் கடுமையா இருக்கு.  வாகன நெரிசல்களால் எரிச்சலும்  கூட....  அதனால் மேலே மொட்டை மாடியில் இருந்தாவது மதுரையை க்ளிக்கலாமுன்னு போனோம்.  மாடியில் ஒரு  ரூஃப்டாப் ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. மாலையில் மட்டும்தான் . அதானே... மொட்டை வெயிலில் எங்கே உக்கார்ந்து சாப்பிட முடியும்?






மாடிக்குப் போனோம். சின்ன இடம்தான்.   சுப்ரீம் போல பெருசா  இல்லை.   ஆனால்  சின்னச் சின்ன  வளைவில்  நாலைஞ்சு  அமைப்பு.  ரொமான்டிக் டின்னர் :-)  சுத்திவர நாலைஞ்சு க்ளிக்ஸ் ஆச்சு.  அப்புறம்  அறைக்கு வந்து  நம்ம பொருட்களை  எடுத்துக்கிட்டுச் செக் அவுட் செஞ்சோம்.


ஊரை விட்டு விலகுமுன் இப்போதைக்குக் கடைசியா  ரெண்டு சமாச்சாரம்  பாக்கி.....   அதுவும் பெருமாளின் அருளால் அல்மோஸ்ட் ஒரே இடத்தில் கிடைச்சது.  முதலாவது  ஜிகர்தண்டா. அது   ஊர் முழுக்க மத்த இடங்களில் கிடைச்சாலும் அந்த 'ஃபேமஸ் ' போல் வராது.  நாம் தங்கி இருந்த மதுரை ரெஸிடன்ஸி மேல மாரட்  தெரு. இந்த ஃபேமஸ் ஜிகர்தண்டா கீழ மாரட் தெரு.  அங்கே போய்ச் சேரவே  காமணி ஆச்சு. போக்குவரத்து நெரிசல் போதாதுன்னு வழியில் நம்ம  பெருந்தலைவர் காமராஜ் ஐயாவின்  பிறந்தநாளை முன்னிட்டு, அவர் சிலைக்கு  மாலை மரியாதை செஞ்சுக்கிட்டு இருக்காங்க .
ஃபேமஸ் ஜிகர்தண்டா கடையில் வழக்கம்போல் கூட்டம் நெரியுது.  'நம்மவர்' போய்  மூணு  ஸ்பெஷல் வாங்கினார். நம்ம ரமேஷுக்குத்தான்   பார்க்கிங்  கிடைக்காம கொஞ்சம் அல்லாட வேண்டி இருந்துருக்கு. அவரும் வந்து சேர்ந்துக்கிட்டார்.  மனமும் வயிறும் குளிர  ஜிகர்தண்டாவைக் குடிச்சேன்.  வயிறு திம்னு ஆச்சு. நம்ம லஞ்ச் முடிஞ்சது :-)


சாலையைக் கடந்து வண்டி நிறுத்துன இடத்துக்கு போனால்  பூக்காரம்மா  இருக்காங்க.  ஆஹா.... நம்ம ரெண்டாவது ஆசையும் நிறைவேறிடுச்சு!
இனி நேரா ஊரை விட்டுக் கிளம்பிப் போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.  பைபாஸ் ரோடுகள் வந்துட்டதால்  வழியில் வரும்  ஊருக்குள் போகாமலேயே இப்பெல்லாம்  பயணிக்க முடியுது. புதுக்கோட்டை வழியாத்தான் போறோம். நாம் போக வேண்டியது   இருநூத்தி இருபது கிமீ தூரம்.  நாலு நாலரை மணி நேரம் ஆகுமுன்னு  கூகுளார் சொல்றார்.
தேசிய நெடுஞ்சாலையில்  பறக்குது வண்டி.  சுமார் மூணு மணிநேரப் பயண தூரத்தில்  அடையார் ஆனந்தபவன் கண்ணில் பட்டது.  சின்ன ப்ரேக் எடுத்துக்கணும்.   ரெஸ்ட் ரூம் வசதிகள்  பரவாயில்லை.  ஜூனியர் குப்பண்ணா, அடையார் ஆனந்தபவன் எல்லாம் ஒரே கட்டடத்தில் அடுத்தடுத்து இருக்கு.  இப்படி நெடுஞ்சாலைகளில்  அங்கங்கே  கழிவறை வசதிகளோடு  நல்ல   ரெஸ்ட்டாரண்டுகள் இன்னும் கூடுதலா நாட்டுக்குத் தேவை.

இப்போதைக்கு நமக்கு மூணு காஃபி மட்டும்!  அடுத்த ஒரு மணி நேரத்தில்  கும்மோணம் ராயாஸ் க்ராண்ட் போய்ச் சேர்ந்தோம்.  செக்கின் செஞ்சு வைஃபை கனெக்‌ஷன்  கிடைச்சதும் (இப்படி ஸ்மார்ட் ஃபோனுக்கு அடிமையாகிக்கிடக்கோமேன்னு ஒரு பக்கம் அவமானமா இருந்தாலும்) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
ராயாஸில் அறைகள் பெருசாவும்  சுத்தமாவும் இருக்கு என்பதால்  எப்பவும் இங்கேதான் தங்கறோம்.  பாத்ரூமில் ஃபேன் இருக்கு என்பது விசேஷம்!

(நம்ம சண்டிகர் வீட்டிலும் எல்லாக் குளியலறைகளிலும்  ஃபேன் இருக்கும். போதாக்குறைக்கு  அங்கே பால்கனிகளில் கூட ஃபேன். அப்போ  ஊர் எவ்ளோ சூடா இருக்கும்னு பார்த்துக்குங்க!)

வாசலில் இருக்கும் Rice & Spice Restaurant இல் இருந்து  பஜ்ஜி, காஃபி வரவழைச்சுத்  தின்னதும் தெம்பு வந்துருச்சு.

இனி........

தொடரும்.....:-)


Monday, February 25, 2019

ஸ்நேஹம் உள்ள சிம்ஹம் !!!!!(பயணத்தொடர், பகுதி 71 )

ஜன்னலுக்கு  பர்ப்பிள்/நீலம் கலந்த ஃபில்ம் ஒட்டி இருக்காங்க. அதன் வழியாப் பார்த்தால் நீலப்படமாத் தெரியுது மதுரை!
குளிச்சுத் தயாராகி அதே 'மண்டபத்துக்கு'  காலை உணவுக்குப் போனோம்.   இடியப்பம், தேங்காய்ப்பால், சக்கரைப்பொங்கல், மத்தபடி வழக்கமான இட்லி வடை உப்புமான்னு இருந்தது.  குடிக்க ஜூஸ் மட்டுமில்லாமல் ரோஸ் மில்க் வேற ! 
ஒன்பதரைக்குச் சுத்தக் கிளம்பினோம்.  இப்பப் போற இடமும் இதுவரை பார்க்காததே...... நம்ம 'விஷ் லிஸ்ட் ' ஆஞ்சி வால் நீளம் இல்லையோ!

சுமார் பனிரெண்டு கிமீ தூரம். யானை மலை அடிவாரம்! மேலூர் மெயின் ரோடுலே போறோம். மதுரை ஹைகோர்ட் பார்த்ததும் நம்ம பிரபு ராஜதுரை நினைவு வந்தது உண்மை. இன்றைக்கு வலைஉலகில் உங்களை இவ்ளோ   இம்சைப் படுத்திக்கிட்டு இருக்க இவர்தான் முதல் காரணம். முறுக்கைத் தேடிப்போன நான் எழுத்தில் விழுந்தவள் நான் :-)  அந்த முறுக்கை எனக்கு அனுப்பியவர் இவரே!!
கொஞ்சதூரத்தில் மலை கண்ணுக்குப் பட்டது. ஆனைமலைன்னு சொன்னாலும், சட்னு பார்க்க முதலைத் தலை போல்தான் எனக்குத் தெரியுது :-)
இந்த ஊருக்கு நரசிங்கம் னு தான் பெயரே!  அதுவும் யா. நரசிங்கம்!  அது என்ன யா?  ஆனை, யானைன்னு இருக்கேனே....   அந்த  யானையோ?  முக்கால்மணி நேரமாச்சு இங்கே வந்து சேர.  காலையிலேயே சாலை முழுக்க  பயங்கரப் போக்குவரத்து.


ஊருக்குள் நுழையும்போதே அரசியல் கட்சிக்கூட்டம் ஒன்னு.  இன்றைக்கு ஜூலை 15 ஆச்சே.  நம்ம பெருந்தலைவர் காமராஜ் ஐயாவின் பிறந்தநாளைக் கொண்டாடறாங்களாம்!  அதிலும் இந்தக் கட்சி, ஐயாவைச் சொந்தம் கொண்டாடுது !  மற்ற கட்சிகளும்  விட்டுருமா?  அவர் போலவே ஆட்சியை நடத்துவாங்களாமே....   ஜெயிச்சு வந்துட்டால்....   நெசமாவா?  அ. வியாதிகள்  சொல்வதெல்லாம்  ஆத்தோடு போயிடாதோ..... 
அருள்மிகு  யோகநரசிம்ஹர் ஆலயம்.   சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம்.   வெளியே  அழகான மண்டபம். அதைச் சுத்திப் பரந்த இடம். கோவில் மதில்சுவரையொட்டி ரொம்பவே அழகான ஒரு தாமரைக்குளம்! கோவில் புஷ்கரணி !  வாவ்......   இவ்ளோ தாமரைப் பூக்களும்  பூத்து நிற்கும்போது  எவ்ளோ அழகா இருக்கும், இல்லே!!!
நம்ம கஜேந்த்ரமோக்ஷம் திருவிழா இங்கே நடக்குமாம்! அப்ப முதலைத் தலைன்னு நினைச்சது.... ஹைய்யோ.... என்ன பொருத்தம் பாருங்க....
சொல்ல மறந்துட்டேனே.... திருவந்திக்காப்பு மண்டபத்தாண்டை ஒரு  வண்டி நிக்குது.  அது யார் படம்?  எம் ஜி ஆர்?


ராஜகோபுரவாசல் வழியா கோவிலுக்குள் போறோம்.  முன்வாசலில் நம்மை வரவேற்கும் ஜயவிஜயர்களுடன்  சின்ன மண்டபம். நமக்கு இடப்பக்கத்தூணில் அழகான  லக்ஷ்மிநரசிம்ஹர். பலிபீடம். அதுக்குப் பக்கத்தில் குத்துவிளக்கு!   பக்தர்கள் கோவிலுக்குக் கொண்டுவரும் எண்ணெய், நெய்களை  இதுலே சேர்த்துடலாமாம்! கொஞ்சம் பெரிய கிண்ணமா வைக்கப்டாதோ?

பிரகாரம் நல்லாவே பெருசா இருக்கு!   ஆமாம்.... பலிபீடத்துக்கு முன்னால் கொடிமரத்தைக் காணோமே.....  இந்தக் கோவிலில் கொடிமரம் இல்லைன்றது கூட ஒரு விசேஷம்தான், போங்க.

பொதுவா  கருவறை விமானத்தின் நீள, அகல, உயரத்தைக் கணக்கில் வச்சுத்தான் கொடிமரம் அமைப்பாங்களாம். இங்கே  கருவறையே  மலையைக் குடைஞ்சு அதுக்குள்ளேதான் இருப்பதால் விமானம் கிடையாது.  அதனால் கொடிமரமும் கிடையாது!  தானிக்கி தீனி சரிப் போயிந்தி!

பல்லவர்கள் காலத்துலே கட்டப்பட்டக் குடவரைக் கோவில் இது.  பல்லவர்களுக்கு, ஒரு மலை அதுவும் இதைப்போல இருக்கும் கல்மலை கண்ணில் பட்டால் போதும். அதைக் குடைஞ்சு அங்கே பெருமாளைச் செதுக்கினால்தான் மனசு நிம்மதி ஆகும். அதுவும்  நரசிம்ஹராகவேதான் பெரும்பாலும்!  சிங்கத்தின் மீது தீராத ஆசை. கொடியும் அவுங்களுக்குச் சிங்கக்கொடிதான்.  ஒரு சில பல்லவ மன்னர்கள்தான் நந்தியைக் கொடியில் வச்சுக்கிட்டவங்க.

பிரமாண்டமான மலை  கிடைச்சால் விடமுடியுமோ?  இங்கே ஆறடி உயரக் குகை முழுசும் ரொம்பி நிற்கும் அளவில் நரசிம்ஹரைச் செதுக்கி  இருக்காங்க. குகை நரசிம்ஹர்களில் பெரிய உருவம் இவர்தானாமே!!!!

ரோமச முனிவர், குழந்தைவரம் வேண்டி சக்ரத்தீர்த்தக் குளத்தில் ( இங்கே இருக்கும் தாமரைக்குளம்தான்)முங்கி எழுந்து  பெருமாளை தியானிச்சு தவம் செய்யறார்.
வகைவகையான விஷ்ணு அவதாரங்களில், இவர் மனசுலே பதிஞ்சது நரசிம்ஹம்தான் போல.....    அன்று ப்ரஹலாதனைக் காப்பாத்த எடுத்த நரசிம்ஹம் போலவே எனக்குக் காட்சி கொடுக்கணுமுன்னு வேண்டவும், ஆஹா.... வேஷங்கட்ட இன்னொரு சான்ஸுன்னு பெருமாளும் அதே கோபாவேசத்தோடு உக்ர ரூபத்தில் வந்துட்டார்.  முனிவருக்குத் திக்னு ஆகிப்போச்சு. இவ்ளோ உக்ரம் தாங்க முடியலையேன்னு  தவிக்கிறார். தேவர்களும் ஃப்ரீ ஷோ நடக்குதேன்னு வந்து குமிஞ்சுட்டாங்க.

இப்போ இந்த உக்ரத்தை எப்படித் தணிக்கலாமுன்னு  யோசனை. ஏற்கெனவே நடந்த சம்பவம் ரிபீட் என்பதால் அப்போ என்ன செஞ்சாங்களோ அதையே இப்பவும் செய்யணும்.  கூப்பிடு அந்தப் பொடியன் ப்ரஹலாதனை.....  அவனும் வந்தான்.  நமோ நாராயணான்னு  உள்ளம் உருகச் சொல்லிக்கிட்டேக் கிட்டப்போறான். குழந்தையைப் பார்த்ததும் ஆவேசம் அடங்குச்சுன்னாலும்  முழுசும்  கோபம்  போகலை.  அடுத்து என்ன செய்யலாம்? கூப்பிடு தங்கமணியை..... யாராக இருந்தாலும் பொண்டாட்டியைப் பார்த்தால்  பொட்டிப் பாம்பில்லையோ.....

வேண்டிக்கூப்பிட்டதும், 'என்ன கலாட்டா இங்கே'ன்னு கேட்டுக்கிட்டே லக்ஷ்மி வந்தாங்க.  அவ்ளோதான்.... 'ஒன்னும் இல்லையேம்மா.... இங்கே ரோமச முனிவர் கேட்டாரேன்னு வந்தேன்,  அதுக்குள்ளே நீ  இங்கே.... ஹிஹி...'

"சரி. சரி.  முனிவருக்கு என்ன வேணுமுன்னு கேட்டுக் கொடுத்துட்டுச் சட்னு வாங்க.   வீட்டுக்கு (வைகுண்டம் ) போகலாம்."

முனிவர் பார்த்தார்.....   இந்தச் சான்ஸை விட்டால் இனி இப்படி ஒன்னு கிடைக்கவே கிடைக்காது. 'பெருமாளே  நீங்களும், லக்ஷ்மியம்மாவும் இங்கே இப்படியே  தங்கி,  வர்றவங்க எல்லோருக்கும் அருள்புரிய வேணும்'னு விநயமா வேண்டினார். அப்படியே ஆச்சு!

நரசிம்ஹரும், நரசிங்கவல்லியுமா நமக்கும் காட்சி கொடுக்கறாங்க. 

அதென்னவோ  இந்தப் பயணத்துலே  நிறைய நரசிம்ஹர் கோவில்களே நமக்கு அமைஞ்சு போச்சு.  கருணைக் கடல்.....  அவன்  அன்புக்கு எல்லை இருக்கா என்ன?  தன்னை எப்போதும் துவேஷிச்ச ஹிரண்ய கசிபுவைக்கூட, வதம் செய்ய அவதரிச்ச சமயத்தில், அவனை ரெண்டு கைகளாலும் தூக்கிப்போய், வாசப்படியில் உக்கார்ந்து, அவனை ரெண்டு தொடைகளிலும் இருக்கும்படி மடியில் கிடத்தியவன், சட்னு வயித்தைக் கிழிச்சுத் தள்ளாமல்....  மெள்ள மெள்ளக் கீறினான். இட்ஸ் நாட் டூ லேட்..... இப்பவும் மனம் திருந்திட்டால் விட்டுடலாம்.  கோபம் முகத்தில் இருக்கே தவிர விரல் வழியா அன்பே வழியுது ! (ஒரு உபன்யாசத்தில் கேட்டது, நம்ம வழக்கம் போல் துளி மஸாலா சேர்த்தேன் ) 
எவ்ளோ ஸ்நேகமுள்ள சிம்ஹம் பாருங்க....
படுசுத்தமான பிரகாரம். உள்ளே போய் கருவறைக்கு முன் நின்றால் போதும்....  யோக நிலையில் அமர்ந்தபடி, நம் மனம் நிறைஞ்சு வழிய தரிசனம் கொடுக்கறார்  நரசிம்ஹர்! தகதகன்னு தங்கக்கவசம் ! கண்களில் துளிக் கோபம் இல்லை!
ஸ்ரீ நரசிங்கவல்லித் தாயாருக்குத் தகதகன்னு தங்க விமானத்தோடுத்  தனிச்சந்நிதி!   தாயாருக்கு இங்கே ஸ்பெஷல் ட்யூட்டி ஒன்னு இருக்கு. கோபக்காரப் புருஷனை அடைஞ்ச பெண்கள், இங்கே வந்து வேண்டிக்கிட்டால் போதும்.  அவரைப் பொட்டிப்பாம்பா ஆக்கிருவாங்க. எல்லாம் ஏற்கெனவே எக்ஸ்பீரியன்ஸ்டு இல்லையோ!
இந்திரனே இங்கே மலையாக படுத்திருப்பதாக ஐதீகம். அதனால் பௌர்ணமி கிரிவலம் இங்கேயும் உண்டு.   அஞ்சு மைல் நீள மலையைச் சுத்திவரப் பாதை இருக்கணுமே....  கருவறையைச் சுத்தி வரமுடியுமுன்னு நினைக்கிறேன். அங்கே ஒரு படிகளைப் பார்த்தும் மேலே ஏறிப் போகலை.
நரசிம்ஹ அவதாரம் செஞ்சது தேய்பிறை சதுர்த்தசி என்பதால் பிரதோஷ பூஜை இங்கேயும் விசேஷமாம்.
பிரகாரம் வலம் வந்தோம்.  படு சுத்தம்!  'என்னை' மட்டும்தான் தரைக்குள்ளே பாதி இறக்கிட்டாங்க.... ப்ச்....

கோவில் காலை 6 முதல் 11 வரையும், மாலை 5 முதல் எட்டுவரையும் திறந்து இருக்கும். அதுக்கேத்தாப்போலப் போய் தரிசனம் பண்ணிக்கலாம்.

மதுரையை ஆண்ட  மன்னர் வரகுணபாண்டியரின் அமைச்சர் மாறன்காரி, இந்தக் கோவிலை சீரமைச்சு விரிவு பண்ண ஆரம்பிச்சுருக்கார்.  அவர் காலத்துக்குப்பின் அவருடைய தம்பி மாறன் எயனர் திருப்பணியை முடிச்சுக் கொடுத்து குடமுழுக்கு ஆனதாக கல்வெட்டு சொல்லுது.   இதெல்லாம் நடந்தது கிபி 770 னு கோவில் குறிப்பு. ஆமாம்... அந்தக் காலத்தில் நமக்கு இந்த கிபி கிமு எல்லாம் எப்படித் தெரியுமாம்? கல்வெட்டில் இது இருக்காதுன்னு நினைக்கிறேன். நமக்குத்தான் கல்வெட்டு மொழி தெரியாதேப்பா....
 இந்தக் கோவில், நம்ம  திருமோஹூர் கோவிலின்  உபகோவிலாம். ஒரே நிர்வாகம்.  அங்கத்துக் காளமேகப் பெருமாள்,  கஜேந்த்ர மோக்ஷம் விழாவுக்கு இங்கே வந்து போறார்!
இதே ஒத்தைக்கடை ஏரியாவில்தானே  ஒரு நாலு கிமீ தூரத்தில்  அந்தக் கோவிலும் இருக்குன்னு அங்கேயும் போனோம். நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு! 
மோஹினி அவதாரம் எடுத்துப் பிறரை மோஹிக்க வச்சத் திருமோஹூர் பெருமாள், நம்ம சக்கரத்தாழ்வார் தரிசனம் கிடைச்சது.

ஆண்டாளம்மா   அலங்காரம் அருமை. நம்ம தூமணிமாடத்தும் ஆச்சு :-) இங்கே கோவில் பகல் பனிரெண்டுவரை திறந்துருக்கும் என்பதால் ஒரே நாளில் அங்கேயும் இங்கேயுமாப் போய் வந்துடலாம்தான்.



உள்ளே கோவில் சுத்தம் பரவாயில்லை என்றாலும், ராஜகோபுரத்துக்கு முன்  தெருவாசல் சுத்தம் போதாது........   கோவில் நிர்வாகம் கவனிச்சால் தேவலை.
 கோவிலைப்பற்றி முந்தி எழுதுன அதேதான் இப்பவும்.  அப்பப் படிக்கலைன்னா இப்பப் படிச்சுக்கலாம். 
 

அப்போ இருட்டு. இப்போ வெளிச்சம். அதான் இப்ப எடுத்த படங்களை(யும்) இதுலே சேர்த்துருக்கேன்.

தொடரும்.......  :-)