இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் (ஓரளவு) நல்லபடி முடிஞ்சது. இனி அந்த ஜபத்தை விட்டுட்டுப் புதிய ஜபங்களை ஆரம்பிக்கணும். ரெண்டாவது நோக்கம்தான் இப்போ, கண்முன்!
எப்போ சிகிச்சையை ஆரம்பிக்கலாமுன்னு நம்மவர் கேட்டுக்கிட்டே இருக்கார். நானும் அதைப்பத்தித்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்லிவைப்பேன். நம்ம லோட்டஸிலிருந்து ஒரு இருநூறு மீட்டர் தூரத்தில் பழமுதிர்நிலையம் கடை ஒன்னு இருக்கு. அங்கேதான் நாம் தயிர், ஜூஸ் , பழங்கள் எல்லாம் வாங்கி வச்சுக்குவோம். தினமும் தயிர் இல்லைன்னா கஷ்டம். கடைக்குள்ளே நம்மவர் போனபிறகு, நான் காரில் உக்கார்ந்தபடியே வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேனா..... கடையைத் தொட்டடுத்த ஆமடாவாடி ரெஸ்டாரண்ட் போர்டுக்கு அந்தாண்டை ஆயுர்வேத மருத்துவமனைன்னு கண்ணில் பட்டது.
இந்த ஆமடாவாடியைப் பலமுறை பார்த்திருக்கேன். குஜராத்தி சாப்பாடு. நாம் அஹமதாபாத்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் ஊரின் பழைய பெயர் ஆமடாவாட்தான் ! அந்நியர்கள் நம் நாட்டுக்குள்ளே புகுந்து இடம் பிடிச்சு உக்கார்ந்ததும்..... பல இடங்களின் பழைய பெயர்களை மாத்திட்டது உண்மை. இப்பதான் பாரதம் கொஞ்சம் முழிச்சுக்கிட்டதால், ஒவ்வொரு பெயரா மாத்திக்கிட்டு இருக்காங்க. இந்தியா என்ற பெயர்கூட வெள்ளைக்காரன் வச்சதுதான். பாரதம் என்பதே பழைய பெயர்.
எப்படி திடீர்னு இந்த போர்டு கண்ணில்பட்டதுன்னு கொஞ்சம் திகைப்புதான். இவ்ளோ கிட்டே வேற இருக்கு. என்னன்னுதான் போய் விசாரிக்கலாமுன்னு உள்ளே போனோம். ட்ரைவ் வேன்னு கொஞ்சதூரம் போனதும் பார்த்தால் கொஞ்சம் விசாலமான முற்றத்தில் புள்ளையார் இருக்கார். வலப்பக்கம் இருக்கும் கட்டடம் ஆயுர்வேத மருத்துவமனை.


முற்றத்தின் அடுத்தபகுதியில் அம்மன் சிலை. அந்தாண்டை ஆமடாவாடி ரெஸ்ட்டாரண்ட்.
மருத்துவமனைக்குள் போனோம். தன்வந்த்ரி 'வா' ன்னார் . வரவேற்பில் இருந்தவங்களிடம் முழங்கால் வலி பற்றிச் சொன்னதும், ச்சீஃப் டாக்டருக்கு விவரம் போனது. அவரைப்போய்ப் பார்த்தோம். இதுவரை செஞ்சுக்கிட்ட சிகிச்சைகளின் விவரம் சொன்னதும், பி ஆர் பி யில் .அவருக்கு' நம்பிக்கை இல்லைன்னவர் குறிப்பிட்ட சில தைலவகைகளை சூடாக்கி ஒத்தடம் கொடுக்கணும். அப்புறம் இன்னும் என்னென்னன்னு விளக்கியவர் , உள்ளுக்கு எடுத்துக்க மருந்துகளும் உண்டுன்னார். எனக்கு உள்ளுக்கு மருந்து எதுவும் எடுத்துக்க விருப்பமில்லைன்னு சொன்னேன். (ஏகப்பட்டதை தினமும் முழுங்கும்போது புதுசாக இது வேறையா ? )
மூணுவாரம் சிகிச்சை நல்லதுன்னார். முதலில் ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கறேன். அப்புறம் ஒரு பத்து நாள் உள்ளூர் பயணம் இருப்பதால் அது முடிஞ்சதும் திரும்பி சிகிச்சைக்கு வர்றேன்னதும், 'பிரச்சனை இல்லை. உள்ளூர் பயணத்துலே காலில் தேய்ச்சு மஸாஜ் செய்ய வேறு சில மருந்துகள் தர்றேன்'னு அவரும் சொன்னார். இன்றைக்கு மத்யானம் சிகிச்சை ஆரம்பிக்கலாமான்னதுக்கு நாங்க நாளைக்கே வர்றோம். காலை பத்துமணிக்கு நேரம் கொடுங்கன்னுட்டு, நம்ம மற்ற விவரங்கள் எல்லாம் எழுதிக்கொடுத்துட்டு போனோம். வரவேற்பில் இருந்த ம்யூரல் ஓவியம் சூப்பர். ரொம்பப்பழசு போல... நிறம் மங்கிக்கிடந்தாலும்.... அநந்தபதுமன் அழகே !
இந்தக் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை, கொஞ்சம் புகழ் பெற்றதும், ரொம்பப் பழங்காலத்துலே ஆரம்பிக்கப்பட்டதுமா இருக்கு. சென்னையிலேயே ஏகப்பட்ட மருத்துவமனைகள்.இங்கே நியூஸியிலேயே வடக்குத்தீவில் ஒரு கிளை இருக்குன்னா பாருங்க! நமக்கு மருந்து அங்கே இருந்துதான் வருது.


சனிக்கிழமையா இருக்கே.... ஒரு கோவிலுக்குப் போகணும்னு கிளம்பி ஜிஎன் சாலை ஸ்ரீ பத்மாவதித் தாயார் கோவிலுக்குப் போனோம். அங்கே ஏதோ விழாவுக்கான ஏற்பாடுகள் ! இன்னும் ரெண்டுநாளில் ப்ரம்மோத்ஸவம் ஆரம்பம் ! உள்ளே போய் தாயாரை ஸேவிச்சுக்கிட்டு, முன் ஹாலில் இருக்கும் திருப்பதி லட்டு விற்பனையில் கொஞ்சம் லட்டும் வாங்கினோம். பகவத்கீதை புத்தகமும் கிடைச்சது. கோவில் ஆரம்பிச்சதும் பூக்கடைகள் வந்துறாதா? அங்கே கொஞ்சம் பூவும் வாங்கினோம்.
லோட்டஸ் திரும்பினதும், பாலராமனுக்கு மலர் சூட்டி, ' இங்கே இருக்கும்வரைதான், உனக்கு பூ. நியூஸி வந்துட்டால்..... பூச்சரம் எல்லாம் கிடையாது' ன்னு எச்சரிக்கை செய்ய மறக்கலை. செடிகளில் இருக்கும் பூக்களைப் பறிக்க எனக்கு மனசே வராது.
நம்மவருக்கு வழக்கமா பேண்ட்ஸ் தைச்சுக் கொடுக்கும் ஐஸ்வர்யம் ரேமண்ட்ஸ், ரெடியாயிருச்சுன்னு ஃபோன் பண்ணியிருந்தாங்க. போய் வாங்கிக்கிட்டுப் பக்கத்துலேயே இருக்கும் நம்ம கீதாவில் பகல் சாப்பாடு. இந்த கீதா கஃபே பார்க்க ஆடம்பரமா இல்லாம ரொம்ப சாதாரண அலங்காரத்தோடுதான் இருக்கும் என்றாலும் வயித்துக்குக் கேடு வராத சமையல் என்பதால் எனக்கு கீதாவில் சாப்பிடப் பிடிக்கும். அவ்வளவாப் பசி இல்லைன்னு ஒரு காஃபி எனக்கு. நம்மவருக்கும் விஜிக்கும் அவரவருக்கு வேண்டியது.
அடுத்துப்போக வேண்டியது நம்ம கண்கண்ணாடிக் கடை. சென்னை ஷாப்பிங்னு ஒரு தனி லிஸ்டில் இது எப்பவும் இருக்கும். நியூஸியில் தொன்னுத்தியொன்பது சதம், லென்ஸுகள் சீனத்தில் இருந்துதான். கொஞ்சம் கனம் கூடுதல். விலைன்னு பார்த்தால் அப்படியொன்னும் பெரிய வித்யாசமெல்லாம் இல்லை. இங்கே நியூஸியில் கொடுக்கும் காசுக்கு, அங்கே கனமில்லாத Varilux லென்ஸ் போட்டு வாங்கிக்கலாம். இங்கே கண் டெஸ்ட் பண்ணிக்கப்போனால்கூட, அங்கே நம்ம கண்ணாடியைக் கையில் வாங்கிப் பார்த்துட்டு, 'இறகு மாதிரி கனமே இல்லாம இருக்கு. எங்கே வாங்கினீங்க' ன்னு கேக்கும்போது இண்டியான்னு கொஞ்சம் பெருமையாச் சொல்வேன்.
நம்மவருக்குக் கண்பிரச்சினைகள் இருப்பதால் அடிக்கடி கண்ணாடி மாத்திக்க வேண்டியிருக்கு. நம்மவருக்குக் கண் பரிசோதனை செஞ்சதும், நீயும் பண்ணிக்கோம்மான்னார். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. இப்பப் போட்டுருக்கும் கண்ணாடிக்கு வயசு பனிரெண்டு. இங்கே வாங்கியதுதான். அவுங்களும் நம்ம பழைய ரெகார்ட் பார்த்துட்டு எப்படி இத்தனை வருஷமாப் பத்திரமாப் பாதுகாத்து வச்சுருக்கீங்கன்னு ஆச்சரியப்பட்டாங்க. கண் பரிசோதனை செஞ்சதில் ரொம்பக் கொஞ்சமாத்தான் மாற்றம் இருக்கு. கண்ணாடி மாற்றிக்க வேண்டியதில்லைன்னுதான் சொன்னாங்க. ப்ரேம்தான் கொஞ்சம் நெளிசல். அதுவுமே நம்ம அலாஸ்கா பயணத்தில் கப்பலில் போகும்போது, கண்ணாடியைக் கழற்றிப் பக்கத்தில் வச்சுட்டு வேறென்னமோ பார்த்துக்கிட்டு இருந்தப்ப, நம்மவர்தான் படக்குன்னு வந்து பக்கத்தில் உக்கார்ந்துட்டார். அதுவும் அந்தக் கண்ணாடி மேலே.....
புது ப்ரேம் போட்டு வாங்கிக்கோன்னு தொந்திரவு செஞ்சாரேன்னு புதுசுக்குத் தலையாட்டிட்டேன். இங்கே கடை மக்கள் எல்லோரும் ரொம்ப நட்பாக இருப்பாங்க, பழையவர்கள் போய் புதியவர்கள் வந்தாலுமே....
கண்ணுக்குப்பின் அடுத்துப் பல் என்று நம்மவரின் பல்ப்ரச்சனைக்கு டென்டிஸ்ட்டைப் பார்த்தோம். தொடர் விஸிட். ஒரு நல்ல சமாச்சாரம் என்னன்னா.... கண்ணாடிக் கடைக் கட்டடத்தின் பக்கவாட்டில்தான் டென்ட்டல் க்ளினிக். 2 இன் 1
திரும்பி லோட்டஸ் வரும் வழியில் நம்ம அம்பிகா(அப்பளம்)ஸ்டோர்ஸை ஒட்டி இருக்கும் காப்பிரெடியில் ஒரு ஸ்டாப். ஃபில்டர் காஃபி இஸ் எவ்ரிதிங். ஓக்கேன்னுட்டு நாங்க மூணுபேரும் டீ வாங்கிக் குடிச்சோம். நம்ம லோட்டஸுக்கும் இந்த டீக்கடைக்கும் வெறும் முன்னூறு மீட்டர் தூரம்தான். நாம் எப்பவும் தி நகர் ஏரியாவில் சுத்தும்போது, தேவையோ இல்லையோ லோட்டஸுக்கு வந்துட்டு வந்துட்டுப்போறது ஒரு பழக்கமாவே ஆகிருச்சு.


ஒரு வியாபாரத்தில் வேறொரு போட்டியே இல்லைன்னா என்ன ஆகும் ? அவன் வச்சதுதான் விலை, அவன் வச்சதுதான் சட்டம் இப்படிப் பலதும் இருக்குல்லே ? இங்கே நியூஸியில் நம்ம ஊர் இருக்கு பாருங்க..... இங்கிருந்து நேரடியா இந்தியாவுக்குப் போகணுமுன்னா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டும்தான். வேற ஏர்லைன்ஸ் எடுக்கலாமுன்னா..... வடக்குத்தீவு ஆக்லேண்ட் போனால்தான். இல்லைன்னா....அண்டைநாடு அஸ்ட்ராலியா போய் அங்கிருந்து சிங்கப்பூர், இந்தியா. இப்படி காதைச்சுத்தி மூக்கைத் தொடும் வேலை வேணாமுன்னு எப்பவுமே நாம் நம்மூரில் இருந்து நேரா சிங்கப்பூர், அங்கிருந்து சென்னைதான்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அவன் மனசுக்குத் தோணும் டிக்கெட் விலை, லக்கேஜ் எடைன்னு அவனிஷ்டத்துக்குக் கொள்ளையடிச்சுக்கிட்டு..... ப்ச். இந்த முறை லக்கேஜ் எடையில் கை வச்சாச். இங்கிருந்து போகும்போது ஆளுக்கு முப்பது கிலோ, அங்கிருந்து வரும்போது ஆளுக்கு இருபத்தியஞ்சு கிலோ. இங்கிருந்து கொண்டு போக அறுபது கிலோவுக்கு ( ரெண்டு டிக்கெட்)என்ன இருக்கு ? முப்பதுகிலோவே தேறாது..... நமக்கெல்லாம் அங்கிருந்து வரும்போதுதான் லக்கேஜ் எடை கூடும். பயந்து பயந்து பொருட்கள் வாங்கணும். அதனால் பிரச்சனை வேணாமுன்னு கூடுதல் எடை ஒரு பத்து கிலோவுக்கு உண்டான காசைக் கட்டிருவோம்.
இந்த முறை கொஞ்சம் மாத்தி யோசிச்சு வேறொரு திட்டம்னு முடிவு. இப்பதான் நிறைய பொருட்கள் ஆன் லைனில் வாங்கறதும், மக்கள் அனுப்பி வைக்கறதுமா கூரியர் சர்வீஸ் நல்லாத்தானே இருக்கு. அதே போல நாமே அங்கிருந்து அனுப்பிட்டால் ஆகாதா?
முதலில் மகள் குடும்பத்துக்கும், இன்னும் சில முக்கிய நபர்களுக்கும் வாங்குவதை முதலில் அனுப்பி வச்சுடலாம். கடைசியில் நாம் கிளம்பறதுக்கு முன்னால் இன்னொரு பொதியை நம்ம வீட்டுக்கே அனுப்பினால் ஆச்சு. நம்கூட விமானத்தில் கொண்டு வர்றதைவிட கூரியர் சார்ஜ் குறைவுதான்.
முதல் பொதியை இன்னும் ரெண்டு நாட்களில் அனுப்பலாமுன்னு இருந்ததால்..... ஷாப்பிங் வேலையை நேரம் கிடைக்கும்போது செஞ்சுக்கணும். சலோ.... கடைக்கு !
போத்தீஸ் துணிக்கடைக்கு கடந்த மூணு பயணங்களில் போகவே இல்லை. என்னமோ... பெரிய கடைகள் வேணாமுன்னு அப்போ தோணுச்சு. இந்த முறை போனோம். பயங்கரக்கூட்டம் கடைக்குள்ளில். மற்றவர்களுக்கானவைகளை வாங்கிட்டுக் கீழே பணம் அடைக்க வந்தால் புடவைகள் பிரிவில் அப்படி ஒரு வியாபாரமும் கூட்டமும்.
இப்பெல்லாம் யூஸ் & த்ரோ கலாச்சாரம் வந்துருச்சு போல..... புடவைகள் மலிவாகத்தான் இருக்கு. தரம் ? அந்தக் காலம் போல அசல்பட்டேதான் வேணும் என்றில்லாமல் பார்க்கப் பட்டுப்புடவை போலவே (!) சிந்தடிக் ஸில்க் குவிஞ்சுகிடக்கு. என் வழக்கப்படி விலையை நியூஸி டாலரில் மாத்திப் பார்த்தால்...... இங்கே ஒரு கிலோ கத்தரிக்காய், வெண்டைக்காய் விலையைவிடக் கம்மி ! நானும் மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கடந்து சில புடவைகளை எடுத்தேன்தான். அதுக்குண்டான ப்ளவுஸ் துணிகளைக் கையோடு நம்ம டெய்லரிடம் கொடுத்துட்டால் ஒரு வேலை மிச்சம்.
கடைக்குன்னு போனால் நேரம் எப்படியோ போயிருதுல்லே.....
மணி எட்டரைன்னதும் டின்னருக்கு எங்கே போகன்னு யோசிச்சு இதே ஜி என் ரோடுலே இருக்கும் சங்கீதாவுக்குப் போனோம். போற வழியில் காஃபி மாமா கண்ணில் பட்டார் ! சங்கீதா வாசலில் வரிசையா நாற்காலிகளில் உள்ளே போகக் காத்திருக்கும் மக்கள். நாமும் ஜோதியில் கலந்தோம். காத்திருப்பு நேரத்தில் கண்முன்னே பூக்கடை. கனகாம்பரம் பார்த்ததும் விடமனசில்லை.
நம்ம முறை ஒரு இருவது நிமிட்டில் வந்தது. அவரவருக்கு வேண்டியதைச் சொல்லியாச். சாப்பாடானதும் நம்மவரும் விஜியும் டீ. நான் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.
லோட்டஸ் திரும்பும்போது மணி பத்தாகப்போகுது. விஜியை மறுநாள் காலை ஒன்பதே முக்காலுக்கு வரச் சொல்லியாச்.
நாளைக்கதை நாளைக்கு......
தொடரும்..........:-)