காலையில் கண் முழிக்கும்போதே மனசு பரபரப்பா இருந்தது. இன்றைக்கு நாம் வந்த நோக்கம் நிறைவேறும் நாள். தரிசனத்துக்கு எங்கே வரணும், அங்கே என்னென்னெ வசதிகள் பக்தர்களுக்குச் செஞ்சுவச்சுருக்காங்கன்னு இருந்த குறிப்புகளை எல்லாம் திரும்ப ஒருக்கா சரிபார்த்துக்கிட்டோம்.
கைப்பைகள், கெமெரா, செல்ஃபோன் எல்லாம் அனுமதி இல்லையாம். ஆனால் நமக்கு லாக்கர் வசதி இருப்பதால் அங்கே வச்சுட்டுப்போகலாமாம். வீல்சேர் பக்தர்களுடன், கோவில் வாலண்டியர் ஒருவர் கூடவே வந்து தரிசனம் பண்ணி வைப்பார்களாம். கேட்கவே மனசுக்குத் திருப்தியா இருக்குல்லே ! நமக்கு தரிசனத்துக்கு ஒதுக்கிய நேரத்தில் அங்கே போய் , 'வந்தாச்சு'ன்னு சொன்னால் போதும், இல்லே !!! நம்ம நேரம் பகல் 3 முதல் நாலரை வரை ! ஒரு ரெண்டரைக்கு அங்கே இருந்தால் போதும்தானே ?
ராமன் தரிசனத்துக்குன்னு தனியா உடைகள் தைச்சுக்கணுமுன்னு இருந்தேன். காவி உடைதான் பொருத்தமாக இருக்குமுன்னு ஏதோ ஒரு தோணல். ஆரஞ்சு சிகப்பில் கிடைச்சாலும் போதும்னு பாண்டிபஸார் கடைகளில் தேடுனதில் நம்ம கீதா கஃபே பக்கம் ' லால்கோ'வில் சுமாரா ஒன்னு ஆப்ட்டது. தைக்கக்கொடுத்து வாங்கி வச்சுக்கிட்டேன். நம்மவருக்கு 'ராமராஜ்' ரெடிமேட்.
கடமைகளை முடிச்சுக்கிட்டு காலை ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கீழே ' விந்த்யாஸ் 'போய் வந்தாச்சு. கொஞ்சம் லேட் ப்ரேக்ஃபாஸ்ட்தான். ஆட்டோவை ஒரு பத்துமணிக்கு வரச் சொல்லி இருந்தார் நம்மவர். பகல் ரெண்டுவரை நேரம் இருக்கே..... அக்கம்பக்கம் எங்கியாவது போகலாமுன்னு...... பார்த்ததில் நந்திக்ராம் கண்ணில் பட்டது. ஐராவிலிருந்து ஒரு 20 கிமீதான்.
இன்றைக்கு வந்த ஆட்டோ ட்ரைவர் சஞ்சய். வண்டி என்னமோ அதேதான். ட்ரைவர்கள் மட்டும் மாத்திமாத்தி வர்றாங்க. எல்லாம் 'மாமா'வின் நண்பர்களும் உறவினரும்தானாம். கல்யாணக்கொண்டாட்டம் எப்படிப்போகுதுன்னு கேட்டேன். ராத்ரி மூணுவரை ஆட்டம்பாட்டம்தானாம் !
ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. பரதன் அந்த சமயம் தன் தாய்மாமன் நாட்டுக்குப் போயிருக்கான். பரதனும், சத்ருகனும் எப்பவும் ஒன்னாவே இருப்பதால் அவனும் கூடப்போயிருக்கணும்.
அப்பதான் மந்திரையின் துர்போதனையைக் கேட்ட கைகேயி , (ராமனைத் தான் பெற்ற பிள்ளை பரதனைவிட அதிகமாக நேசித்தவள் இவள் ! ) சட்னு மனம் மாறி, தசரதனிடம் தான் முன்பு பெற்ற இரு வரங்களின்படி, 'பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யணும், ராமன் பதினான்கு வருடம் காட்டுக்குப் போகணும்' என்று கேட்கிறாள். கொடுத்த வாக்கை மீற முடியாத தசரதன், சரின்னுட்டு, மனம் கலங்கி கீழே விழுந்தான். ஹார்ட் அட்டாக் !
ராமனுக்கு அரசனாகும் வாய்ப்பு பறி போனதைப்பத்திக் கவலையே இல்லை. தாய்மார்களிடம் சொல்லிட்டுக் காட்டுக்குப் புறப்பட்டுப் போறான். கூடவே லக்ஷ்மணனும், சீதையும்.
இதுக்கிடையில் பரதன், அண்ணனுடைய பட்டாபிஷேக செய்தி அறிஞ்சு, கைகேயநாட்டிலிருந்து புறப்பட்டு வர்றான். ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் என்னதான் வேகப்பயணம் என்றாலும்கூட சிலபல நாட்கள் ஆகி இருக்கும் இல்லே ?
அதுக்குள்ளே அயோத்யாவில் தசரதனின் மரணம் ! நாடே துக்கத்தில் மூழ்கிக்கிடக்கு. எல்லா விவரமும் கேட்டறிஞ்சவன், தன் தாயை நல்லாத் திட்டிட்டு, ராமனைத்தேடிக் காட்டுக்குப் போறான். காடுன்னு ஒரு சின்ன ஊர் இருக்கா என்ன? பரந்து விரிஞ்சுபோகும் காட்டுப்பகுதியில் ஒற்றர்களைப் பலதிசைகளுக்கும் அனுப்பி, ராமன் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிச்சுடறான். அங்கே ஓடிப்போய், அண்ணன் காலில் விழுந்து தன்னுடைய தாயின் கேவலச் செயலுக்கு மன்னிப்பை வேண்டறான். 'திரும்பி என்னோடு வந்துருங்க. நீங்கதான் அயோத்யாவின் அரசரா இருக்கணும்'னு கெஞ்சறான்.
ராமனோ..... 'தந்தையின் விருப்பப்படி' பதினாலு ஆண்டுகள் வனவாசம் முடிஞ்சாட்டுதான் வருவேன். தகப்பன் சொல்லை மீறமுடியாது'ன்னுட்டான். பலவிதமாக் கெஞ்சிக்கேட்டும் ராமன் பிடிவாதமா மறுத்துட்டதால், 'உங்க பாதரக்ஷைகளைக் கொடுங்க. சிம்மாசனத்தில் அவைகளை வச்சு, நீங்க ஆட்சி செய்யறதாகவே இருக்கட்டும். நாட்டு நிர்வாகத்தை நான் வெளியில் இருந்து உங்கள் சார்பில் கவனிச்சுக்கறேன். நீங்க திரும்பி வரும்வரை அயோத்தி நகருக்குள் காலடி எடுத்து வைக்கமாட்டேன்'னு சபதம் போட்டுட்டான். கூடவே இன்னொன்னும் சொன்னான். " அண்ணா, பதினாலு வருஷம் முடிஞ்ச மறுநாளே நீங்க அயோத்யாவுக்கு வந்துறணும். ஒரு நாழிகை தாமதமானால் கூட நான் உயிரோடு இருக்கமாட்டேன். தீவளர்த்தி அதுக்குள்ளே பாய்ஞ்சுருவேன். இது சத்யம் !"
அயோத்தி நகருக்குள் போகாமல் பரதன் தங்கி இருந்த இடம்தான் இந்த நந்திக்ராம். 'பரத் குண்ட்'னு இதுக்கு இன்னொரு பெயரும் வாய்ச்சது. பாதரக்ஷைகளைத் தலையில் தாங்கி வந்தான். அரசபீடத்தில் கொண்டுபோய் வச்சது சத்ருகனாகத்தான் இருக்கணும். அதான் அயோத்யாவுக்குள் காலடி வைக்கமாட்டேன்னுட்டானே.....
பாவம், ராமன். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைன்னு..... காட்டுக்குள்ளே நடக்கவேண்டியதாப் போச்சு ..... ப்ச்....
ஆச்சு.... பதினாலு வருஷம் முடிய ஒரே ஒருநாள் பாக்கி. ராமன் வந்துருவான்னு பார்த்தால் அதுக்கான அடையாளம் ஒன்னும் இல்லை. நிறையக் கட்டைகளை அடுக்கி தீமூட்டச் சொல்லிட்டுக் காத்திருக்கான். நேரம் நகர்ந்துக்கிட்டு இருக்கு!
பதிமூணு வருஷம் ஆனபோது, சீதையை ராவணன் கவர்ந்துகொண்டுபோய், ராமன் அவளைத் தேடோதேடுன்னு தேடி, கடைசியில் ஆஞ்சு உதவியால் இடம் தெரிஞ்சு, சண்டைக்குப்போய், ராவணனைக்கொன்னு சீதையை மீட்டு வந்ததெல்லாம் சொல்ல ஆரம்பிச்சால் பெரிய ராமாயணம் ஆகிரும். உங்களுக்குத் தெரிஞ்ச சமாச்சாரங்கள்தான் எல்லாம், இல்லையா ?
இங்கே நம்ம ராமேஸ்வரத்தில், ராவணவதத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்க, சிவபெருமானை பூஜித்தபிறகு, அயோத்யாவை நோக்கிப் புறப்படறாங்க. அப்பதான் பதினாலு வருஷக்கெடு முடிய இன்னும் கொஞ்சூண்டு நேரம்தான் பாக்கி இருக்குன்னு தெரிஞ்சது, ராமன் பதறிட்டான். பரதனும் சொன்ன சொல்லைக் காப்பாத்துபவன், இல்லையோ ?
நம்ம ஆஞ்சுகிட்டே நடந்த சமாச்சாரத்தைச் சொல்லி, சட்னு கிளம்பிப்போய் பரதனைப் பார்த்து, நான் வந்துக்கிட்டே இருக்கேன் என்ற விவரம் சொல்லுன்னான். ஆஞ்சு வாயு புத்ரன், மனோவேகத்தைவிட அதிவேகமாப் பறந்து நந்திகிராம் போனால்..... எரியும் தீயில் விழப்போகும் பரதன் முன் 'ஜெய் ஸ்ரீ ராம்'னு கூவிக்கிட்டே இறங்கினான்.
கடைசி நொடியில் யார்றா இதுன்னு திகைச்ச பரதனிடம், 'நான் ராமதூதன். ஆஞ்சு என் பெயர். ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் வந்துக்கிட்டே இருக்காங்க. நீங்க அவசரப்பட்டு இப்படி செஞ்சுக்கப்போறீங்களேன்னுதான், உங்களைத் தடுத்து நிறுத்த என்னை அனுப்பினார் ஸ்ரீ ராமர்'னு சொன்னதும், நல்ல சேதி கொண்டுவந்த ஆஞ்சுவை அப்படியே ஆலிங்கனம் செய்தான் பரதன். நடந்த சம்பவம் என்னவோ இதுதான். ச்சும்மா ஒரு கால் டீஸ்பூன் துள்ஸீஸ் மசாலா சேர்த்துருக்கேன். அந்த இடத்துக்குத்தான் இப்ப வந்து இறங்கறோம். சஞ்சய்க்கும் நம்ம செங்கல் சமாச்சாரம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு.....
வளாகத்தில் ஏகப்பட்ட கடைகள். சாமி சமாச்சாரம்தான் விற்பனை. கோவில் முகப்பில் 'ஸ்ரீ பரத் ஹனுமான் மிலன் மந்திர்'னு பெயர்பலகை. உள்ளே போறோம்.
மிகப்பெரிய ஹால். ஹாலின் மறுபக்கம் மேடையில் மூலவர் ! வெண்பளிங்குச் சிலை ! பரதனும் ஹனுமனும் ஆலிங்கனம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கும்பிட்டுக்கிட்டோம். எதிர்ப்புறம் இந்தாண்டை ஸ்ரீ ராமர் காலில் விழுந்து வணங்கும் பரதன் & ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் என்று படங்கள் வச்ச ஒரு சந்நிதி.




சனம் வந்து விளக்கேத்திவச்சுக் கும்பிடுது. குடும்பம் குடும்பமா வந்து போறாங்க. கூட்டத்துக்குக் குறைவில்லை !
வெளியே வளாகத்தின் இடதுபக்கம் பரத் குகை. தக்ஷின் முகி ப்ராச்சீன் ஸ்ரீ பரத் குஃபான்னு போர்டு, பாதரக்ஷைகளின் படத்தோடு! இந்த தெற்கு நோக்கிய குகையில்தான் பரதன் தங்கி இருந்துருக்கான். கோவிலில் இருந்து வெளியே போகும் சனம் நேரா அங்கே போகுது. கூடவே நாமும்.
சந்து போல இருக்கும் வழியில் போனால் இடதுபக்கக்குகையில் ஆஞ்சு சிலை. பெண்கள் சிலர் உக்கார்ந்து பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க.
எதிரில் நேரா இருக்கும் கொஞ்சம் பெரிய குகையில் மூணுபக்கங்களிலும் சில சந்நிதிகள். நடுவில் இருக்கும் சந்நிதிக்கு மூணு படி இறங்கிப்போகணும். குகைக்குள் குகை !



இடதுபக்கம் பெரியவர் ஒருவர் உக்கார்ந்துருந்தார். பண்டிட். கொஞ்சம் தக்ஷிணை போட்டுக் கும்பிட்டுக்கிட்டோம். ஆசிகள் வழங்கினார்.
வளாகத்தின் இன்னொரு பக்கம் 'யோகிராஜ் ஸ்ரீ பரத் ஜி கா ப்ராச்சீன் மந்திர்'னு பெயர் போட்ட இன்னொரு கோவில். மூலவராக ஸ்ரீராமனும் பரதனும் கட்டிப்பிடித்தபடி நிற்கும் வெண் பளிங்குச்சிலை. இங்கேயும் பண்டிட் இருந்து தீர்த்தம் வழங்கினார்.
முக்கியமான கோவில்களை தரிசிச்சத் திருப்தியில் நாமும் அங்கிருந்து கிளம்பினோம். மணி பனிரெண்டே முக்கால்.
கிராமத்துச்சாலை. கரும்பு, கடுகுன்னு வயல்கள்! அங்கங்கே செங்கல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆமா..... செங்கல் ரொம்பவே முக்கியம் !
நேரா நம்ம ஐரா போயிட்டு, கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பணும்.
தோ... வர்றேண்டா குழந்தை !
தொடரும்......... :-)
5 comments:
நானும் நந்திக்ராம் போயிருந்தேன். அப்போ கொஞ்சம் வித்யாசமா இருந்தது.
வாங்க ஸ்ரீராம்,
போனவருஷம் புதுக்கோவில் வந்த பின் ஊரின் அடையாளமே மாறியிருக்கே !!!!
பரதனும் ஹனுமனும் ஆலிங்கனம்..ஆஹா அழகு மா
வாங்க அனுப்ரேம்,
ஆமாம்ப்பா...... அழகே அழகு !
'ஸ்ரீ பரத் ஹனுமான் மிலன் மந்திர்" கண்டு தரிசித்தோம்.
Post a Comment