Monday, March 18, 2019

அடைப்பும் திறப்பும்..... !!!!! (பயணத்தொடர், பகுதி 80 )

நம்ம நாச்சியார்கோவிலில் இருந்து நேராப் போனது நம்ம சக்கரராஜா கோவிலுக்குத்தான்.   என்ன விசேஷமோ.... கோவில் வாசலிலும் வளாகத்திலும் ஏகப்பட்ட கூட்டமும் நெரிசலும். வண்டி பார்க் செய்ய இடமே கிடைக்கலை.  நாங்க மட்டும் இறங்கி நடந்து போறோம். ரமேஷ் எங்கியாவது வண்டியை  நிறுத்திட்டு வந்து சேர்ந்துக்குவார்.
போற போக்கில் வலதுபக்கம் ஆஞ்சிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டுப் படியேறிப்போகும்போதே.... தேசிகனை எட்டிப் பார்த்தால், நேத்து சொன்னதைப்போலவே  ' சீக்கிரம் மேலே போங்க'ன்னார்!

உத்தராயண வாசல் வழியாத்தான் போகணும் என்பதால்  அந்தப்பக்கம் சுத்திக்கிட்டு மூலவரை தரிசிக்கப்போனோம்.  அங்கே வாசலாண்டை ஒருத்தர் நின்னுக்கிட்டுச் சீக்கிரம் போங்கன்னார்.  நல்ல கூட்டம் வேற வெளியில் நிக்குது.  என்னவோ ஏதோன்னு நாங்க போய் ஸ்ரீ சக்கர ராஜாவைக் கும்பிட்டு வெளியே  உத்தராயண வாசலைத் தாண்டியதும் நமக்குப் பின்னால் வந்த பட்டர்ஸ்வாமிகள் இருவர் வாசலை மூட ஆரம்பிச்சாங்க.  நாம்தான் கடைசி போல!
அதுக்குள்ளே நாதஸ்வரமும் மேளமுமா இசை ஒலிக்க ஆரம்பிச்சது.  என்னவோ விசேஷம்னு நின்னு பார்க்கும்போதே....  இந்த  உத்தராயண வாசல் கதவுகளை ஜஸ்ட் ஒரு மூணு இஞ்ச் இடைவெளி விட்டு மூடிட்டுப் பூஜை செய்ய ஆரம்பிச்சாங்க பட்டர்கள்.

ஆஹா.....  இன்றைக்கு உத்தராயண வாசல் மூடி தக்ஷிணாயண வாசல் திறக்கும் உற்சவமா................

(இதைப்போல் ரெண்டு வாசல்கள் இருக்கும் விஷ்ணு கோவில்களில்  ஆறுமாசம் ஒரு வாசல், அடுத்த ஆறுமாசம் இன்னொரு வாசல்னு  திறந்து வச்சுருப்பாங்க!   நம்ம பூலோக ஒரு வருஷம்,தேவலோகத்துலே  ஒருநாள்.  அங்கே இப்போ பகல் பொழுது முடிஞ்சு இரவு ஆரம்பிக்கும் சமயம். நல்லவேளை  இந்த டேலைட் ஸேவிங் என்ற சனியன் அவுங்களுக்கு இல்லை!! )
நாலுபேர்கள் சுமக்கும் சின்ன சிவிகையில் இருந்தபடி படியேறி வர்றார் பச்சை அலங்காரத்தில் இருக்கும்  க்ஷேத்ரபாலர்!  அவரே சாட்சி.

வாசல்கதவுக்கு விஸ்தாரமான அபிஷேகம், பூஜைகள் எல்லாம் முடிச்சுக் கதவை பூட்டியாச்சு.   ஒரு சின்ன வீடியோ போட்டுருக்கேன் பாருங்க.!









பூட்டிய கதவு !  இனி ஆறு மாசம் இப்படியேதான் இருக்கும்.

இனி தக்ஷிணாய வாசல் திறக்கும் வைபவம். சீக்கிரம் அங்கே போகலாம் வான்னுட்டு 'நம்மவர்' பரபரன்னு படிகள் இறங்கி அங்கே போயிட்டார்.  சனக்கூட்டத்தைத் தொடர்ந்து நானும் அங்கே போனேன்.

இதுக்குள் 'நம்மவர்' நிகழ்ச்சிகளைப் படங்களாக எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தார். இந்தப் பதிவில் நிறைய படங்கள், வீடியோ க்ளிப்புகள்  எல்லாம் எடுத்து துளசிதளத்துக்கு உதவிய 'நம்மவருக்கு' நம் வாசக நண்பர்களின் சார்பாக  நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். படங்கள் சுமாராத்தான் இருக்கு. ஆனாலும் நிகழ்ச்சிகள் பதிவாகி இருக்கே.... அது போதும்!

பட்டர்ஸ்வாமிகள் கதவருகே காத்திருந்தார். க்ஷேத்ரபாலரும் படியேறி வந்தவுடன் பூஜை ஆரம்பிச்சது. மூடும்  கதவுக்குச் செஞ்ச அத்தனை மாலை மரியாதை அபிஷேகம்,   எல்லாம் இங்கேயும் விஸ்தாரமாக நடந்து முடிஞ்சதும், தீபாராதனை காண்பித்து, க்ஷேத்ரபாலரிடம் சாவியை வாங்கிக் கதவைத் திறந்தாங்க!

க்ஷேத்ரபாலர் உள்ளே நுழைஞ்சார்!   கூடவே சனமும். நாங்களும் ஜோதியில் கலந்தோம்.   இன்றைக்கு ரெண்டு வாசல் வழியாகவும் போய் ஸ்ரீ சக்கரராஜாவை ஸேவிக்கும் பாக்கியம் கிடைச்சது நமக்கு!

வருஷத்தில் ரெண்டே நாட்கள்தான்  இப்படி.  உள்ளூர்வாசிகள் கொடுத்து வச்சவங்க. நமக்கு(ம்) லபிச்சதே!
கீழே: தக்ஷிணாயவாசல் திறப்பு.

என்ன ஒன்னு.... பாலும், தயிரும், மஞ்சளும், சந்தனமும், தண்ணீருமா கீழே வழிஞ்சு நம்ம காலாண்டை உலகப்படம் வரையும் போதும் , அப்புறம்  வாசலை நோக்கி நாம் நகரும் போதும்  எங்கே வழுக்கிருமோன்னு கொஞ்சம் பயந்தது நிஜம்...
மூடிய உத்தராயண வாசலுக்கு உள்ளே ஒரு மூலையில் சரபோஜி மஹாராஜா, வெண்கலச்சிலையா நின்னுருக்கார்.
அந்தத் தொடைப்பக்கட்டையையும், குப்பைத் தொட்டியையும் வெளியே வச்சுருக்கக்கூடாதா.....   ப்ச்.

ஸ்வாமியைக் கும்பிட்டதும், கீழே இறங்கி வந்தோம்.இந்தப் படிகளுக்கு நேரெதிராத்தான்  மடப்பள்ளி.  இங்கே சின்ன சுவர் மாதிரி  ஒரு அமைப்பு. சனம் வரிசையா அங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்துருக்க, நம்ம தேசிகன்,  நைவேத்யப் பிரஸாதங்களைத் தோளில் சுமந்துக்கிட்டுப் படியேறிப்போனார்.  அவர் கண்டருளப்பண்ணித் திரும்பி வந்ததும் பிரஸாத விநியோகம் ஆரம்பிச்சது.

நம்மைப்போலவே பலரும் அன்றைய பிரஸாதத்துக்குக் கொடுத்துருக்காங்க. அவரவருக்குத் தனிப் பாத்திரங்களில்  சக்கரைப்பொங்கல் தயாராக  இருக்கு. ஒருத்தர் விநியோகம் பண்ணி முடிச்சதும் அதே இடத்தில் அடுத்தவர் தொடரலாம்.
அவரவர் ஏற்பாடு செய்தவைகளை அவரவரே விளம்பலாம். விளம்பினோம்.  பாத்திரம் காலி!  அப்புறம்தான் நினைவுக்கு வருது நாம்  பிரஸாதம் எடுத்துக்கலைன்றது.  கடைசியில் பாத்திரத்தில் ஒட்டி இருந்ததைத் தேடிப்பிடிச்சு எடுத்த துளியில் ஆளுக்கு அரைத்துளி! அமிர்தம்!

த்ரோபதியின் அக்ஷயப் பாத்திரத்தில் ஒட்டி இருந்த துளிக் கீரையைக் கிருஷ்ணன் வழிச்சு வாயில் போட்டுண்டான்.... நினைவிருக்கோ? 

இன்றைக்கு ஏகப்பட்டபேர்...  தெரிஞ்சுருந்தால் இன்னும்  கொஞ்சம் அதிகமாவே ஏற்பாடு செஞ்சுருக்கலாம். இந்த தேசிகன் ஒரு வார்த்தை சொல்லி இருக்கப்டாதோ?

திரும்ப ஒருக்கா மேலே சந்நிதிக்குப்போய், ஸ்ரீ சக்கரராஜாவுக்கு நம்ம விண்ணப்பத்தை  ஞாபகப்படுத்திட்டு மனநிறைவோடு ராயாஸுக்குத் திரும்பி வந்தோம்.

(விண்ணப்பம் ஸாங்க்ஷன்டு! இதோ மே மாசம் கல்யாணம், மச்சினர் மகனுக்கு! பெருமாளே......  எல்லாம் உன்  கருணை!)

வெளிமுற்றத்து வாசல் மண்டபத்தாண்டை ரமேஷ்  இருந்தார். உள்ளே வரவே இல்லையாமே...........  அட ராமா...........
பொதுவாக் கோவில்வாசல்களில் வண்டியை நிறுத்தியதும், நம்ம சீனிவாசனுக்குச் சொல்றதைப்போலவே ரமேஷிடமும், உள்ளே வந்து சாமி கும்பிட்டுக்குங்கன்னுவேன். ஆனால் இவர்  அவருக்கு இஷ்டமுன்னா வருவார்.  கஷ்டமுன்னா  தலையை ஆட்டிட்டு வர்றதே இல்லை.  இதைக் கவனிச்சுக்கிட்டு இருந்த 'நம்மவர்' எதுக்கு வீணாக் கூப்புடறேன்னுவார். ஆனாலும் மனசு கேக்குதா?  இவ்ளோ தூரம் வந்துட்டு ஒரு எட்டு உள்ளே வரலை பாருன்னு ஆதங்கமா இருக்கே... ப்ச்...

அறைக்குப் போகும்போது மணி ஒன்பது.  ரூம் சர்வீஸில் எதாவது வாங்கி ராச்சாப்பாட்டை முடிச்சுக்கணும்.

இட்லி, தோசை, பஜ்ஜி.  எல்லாம் ஹாட் கேஸில்  அழகா வச்சு அனுப்பி இருக்காங்க. சூப்பர் சர்வீஸ்!
இன்றைக்கு ரொம்பவே சுத்தி இருக்கோம். ஆனாலும் உடலுக்குத்தான் களைப்பே தவிர  'கிடைச்சது பாரேன்'னு மனசு ரொம்ப குஷியாத்தான்  இருக்கு!

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பது இதுதான், இல்லே?


தொடரும்.......  :-)


10 comments:

said...

ஒரு கதவு மூடினால் இன்னுமொரு கதவு திறக்கும்....

உண்மை.

ஆறு மாதம் ஒரு முறை நடக்கும் அந்த நிகழ்வுகளைக் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

சிறப்பான தரிசனம் எங்களுக்கும்.

said...

இவ்வாறாக ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிதே. விழா நிகழ்வினைப் பகிர்ந்து எங்களையும் சக்கரராஜாவை நினைக்க வைத்துவிட்டீர்கள். நன்றி.

said...

அட்டகாசமான சேவை ...

ஒரு கதவு மூடி அடுத்தது திறப்பதை காணும் போது அருமையா இருக்கு ...


அந்த நீர் போறதுக்கு சின்ன வழி பண்ணா இன்னும் சிறப்பா இருக்கும்.. அது எப்போ நடக்கும் மோ ..

மிக மகிழ்ச்சி மா உங்க பிரார்த்தனை நிறைவேறியதற்கு...

said...

மிகச்சிறப்பு அருமை நன்றி.

said...

அட... டீச்சரே எல்லாருக்கும் பிரசாதம் கொடுத்திருக்கீங்க. அருமை. அதைவிட என்ன மகிழ்ச்சி வேணும் உண்ணக் கொடுத்து உண்டு மகிழ்வதைக் கண்டு மகிழ்வதினும் பெருமகிழ்ச்சி ஏது? தாய்க்கே உரிய மகிழ்ச்சியாச்சே அது.

கோயிலுக்குள்ள வரனும் வரக்கூடாதுன்னு நம்மளா முடிவு செய்றோம். அவன் முடிவு செய்றதுதான். உள்ளத்துக்குள்ளயே ஒருத்தர் கோயில் கட்டினாராம். இத்தனைக்கும் அவர் எந்தக் கோயிலுக்கும் போறவரில்லை. ஆனால் கடவுள் அந்த உள்ளக் கோயிலுக்குத்தான் போனாராம். எல்லாம் அவன் செயல்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மற்ற பண்டிகைகள், விழாக்கள் போல இது வெவ்வேற நாட்களில் இல்லை பாருங்க. ஆடி, தை மாசப்பிறப்பு நாட்கள்தான். கொஞ்சம் திட்டமிட்டால் நிகழ்வுகளுக்குப் போய்வர முடியும், இல்லையா?

விரைவில் உங்களுக்கும் அமையட்டும்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்கள் ஊர். இதுவரை உங்களுக்குக் கிடைக்காமலா இருந்துருக்கும்? நமக்கு பெருமாள் தயவால் கிடைச்சது!

எல்லாம் அவன் கருணை!!!

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நீர் போக வழியெல்லாம் இனி வச்சால் அதுலே தடுக்கி ஆட்கள் விழ நேரிடும். கருங்கல்தரை.

உடனே துடைச்சுவிட்டால் போதும். சட்னு காய்ஞ்சு போயிரும். தேவஸ்தானம் ஏற்பாடு செய்யுமுன்னு நம்புவோம்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிரா,

சரியாச் சொன்னீங்க..... எல்லாம் அவன் செயல் !!!!

ஆனாலும் எனக்கென்னமோ ஆதங்கமா இருந்தது உண்மை. நான் பெற்ற இன்பம்.... வகைதான்...