Friday, July 21, 2017

சொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)

காலையில் கண்ணைத் திறக்கும்போதே   இன்றைய  கடமைகள் மனசில் வரிசை கட்டி நின்னது.   சரியா இருவத்திநாலு மணி நேரம் இருக்கு. என்னென்ன செஞ்சுக்கலாமுன்னு சின்னதா ஒரு திட்டம் போட்டுக்கிட்டோம்.
அனிதா சொன்னதுபோல.... உடுப்பு  சாயங்காலத்துக்குள் ரெடி ஆகுமான்னு மனசிலொரு சின்ன சந்தேகம்,  ஓரமா உக்கார்ந்துக்கிட்டு லேசா அரிச்செடுக்குது.

முதல் வேலையா  நாம் முன்னே  குடிஇருந்த செக்டர் 21க்குப் போகணும். எனக்கொரு தோழி அங்கே இருக்காங்க.  நாம் இருந்த வீட்டுக்குப் பக்கம்தான். ரெண்டு நிமிச நடை.  அங்கே இருந்தவரை, அவுங்க வீட்டுக் கருவேப்பிலைதான் நம்ம சமையலுக்கு!   சாம்பார் ரசத்துலே போட்டால் நல்லா ருசியா இருக்கும்னு எனக்குச் சொன்னாங்க :-)  ஆஹா....  அப்படியா? அது சரி.....

இங்கே கருவேப்பிலை கடையில் இல்லவே இல்லை. விசாரிச்சுக் களைத்த நிலையில் புதுத்தோழி நீருவிடம் சொன்னால்..... வீட்டு வாசலில் நிக்கும் செடியைக் காமிச்சு, 'இஸ் மே ஸே தோட் கி ஜாயியே. சாம்பார் ரஸம் மே ச்சோடேங்கேத்தோ பஹூத் டேஸ்ட்டி ஹோத்தா ஹை' ன்னாங்க. ஆஹாங்...... அப்படியா?

"எப்ப வேணுமுன்னாலும் பறிச்சு எடுத்துக்கிட்டு போங்க. பூரா துனியா தோட் கி ஜாதா யஹாங் ஸே."

ஓஹோ......தேங்க்ஸ் ஜி.

வர்றோமுன்னு தகவல்  சொல்லலாமுன்னா   ஃபோன் நம்பரை நம்ம லிஸ்ட்டுலே காணோம். (நல்ல தோழி... நான்!)  ஒரு ஆட்டோ  பிடிச்சு அங்கே போய்ச் சேர்ந்தோம்.  சண்டிகரில் பொதுவா  இந்த அஞ்சு வருசத்தில்  அவ்வளவா மாற்றங்கள் ஏதும் தோற்றத்தில் இல்லை.  ஆளாளுக்கு அவுங்க இஷ்டம்போல் ஒன்னும் செஞ்சுக்க முடியாது. நகர அமைப்பு அப்படி. இதுக்கான சட்டதிட்டங்கள் தனி !
நம்மைப் பார்த்த தோழிக்கு  அப்படி ஒரு மகிழ்ச்சி.  அவுங்களவர்  ஆஃபீஸ் போய் இருந்தார்.  அவருக்கு நல்ல பெரிய உத்யோகம்.  ஃபோன் செஞ்சு விவரம் சொன்னாங்க தோழி. அடுத்த கால் மணியில் அவர் வீட்டுக்கு வந்துட்டார். கை நிறைய  பலகாரங்கள் ஃப்ரம் கோபால்ஸ் :-)

நமக்கு அவுங்க  இப்போ சம்பந்தியாயிட்டாங்கன்னு தெரிஞ்சு எனக்கும்  சந்தோஷம்!  மகன், தென்னிந்தியப் பொண்ணைக் கல்யாணம்கட்டி இருக்கார்!
ஒருமணி நேரம் போனதே தெரியலை. கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு.  எங்களையெல்லாம் சேர்த்து க்ளிக்க  ட்ரைவர்  இருக்கார் !  செல் ஃபோன் கேமெரா வந்தபிறகு அநேகமா எல்லோருமே நல்லாத்தான் படம் எடுக்கறாங்க :-)
அங்கிருந்து அப்படியே  பொடி நடையில் நாம் இருந்த பழைய வீட்டுக்குப் போனோம்.  ரெண்டு நிமிச நடை. இந்த வீடுதான்.  மாடியிலே நாமும் கீழே ஓனரும்.  இப்போ  வேற யாரோ குடி இருக்காங்களாம்.
ஓனர் (இவரும் அரசாங்க அதிகாரிதான்)  வேலைக்கும்,  ஓனரம்மா ஒரு கல்யாணத்துக்கும்  போயிருந்தாங்க.  மகள் வீட்டுலே இருந்தாங்க.  நாம் அங்கே இருந்தப்ப மகள் தில்லியில்  மருத்துவப்படிப்பு. இப்போ இங்கே  மருத்துவர்.  இன்றைக்கு  டே ஆஃப். ஆஹா.... நல்லதாப் போச்சு.  முதல்லே பிக்ஸியைப் பத்தித்தான் விசாரிப்பே!  அவன்  ப்ரீடருடைய பண்ணைக்கு  அப்பவே  போயிட்டான்.  நல்லா இருக்கானாம்.

'நம்ம தெரு'வைக் கொஞ்சம் க்ளிக்கிட்டு, இன்னொரு ஆட்டோ பிடிச்சு அறைக்கு  வந்தோம். வெயிலில் சுத்தக்கூடாதுன்னு நம்மவர் கட்டளை.
எனக்கு குஜராத் எம்போரியம் போகணும்.  யானை ப்ரிண்ட் துணிகள் பெரும்பாலும் அங்கேதான் கிடைக்கும். சண்டிகரில் இன்னொரு பெரிய கஷ்டம் என்னன்னா...... இந்த செக்டர் நம்பர்கள்.  ஏரியாவுக்கு பெயர்கள் கிடையாதுன்றது ஒரு விதத்தில் நல்லது... இல்லேன்னா அரசியல்வியாதிகள் நகர் நகரா உருவாகி இருப்பாங்க  :-)


இந்த நம்பர்கள் கூட  ஆறாவது செக்டர் பக்கத்துலே ஏழாவது, ஒன்பதுக்குப் பக்கத்துலே பத்துன்னு இருக்காது.  அப்படியும் இப்படியுமா ஒரே எண்கள் குழறுபடியாத்தான் இருக்கு.

 இதைக்கூட தன் உள்ளங்கையை விரித்து  விரல்களில் கணு கணுவா இருக்கும் பகுதியைக் காமிச்சு  'இப்படி'ன்னு  சொல்லிக்கூடக் கொடுத்தார் நண்பர். எதாவது புரிஞ்சால் தானே?  அது ஆச்சு  அஞ்சு வருசம் என்பதால் சுத்தமா மறந்தே போச்சு.

படத்துலே பார்க்கும்போது   எல்லாம் அடுத்தடுத்துத் தெரியும். ஆனால்  நேரில்  அங்கே பார்க்கும்போது நமக்குத் தலையும் வாலும் உடம்பும் புரியாது. இதைப்பத்தி ஏற்கெனவே  அங்கே போனதும் புலம்பித் தள்ளியாச் :-) அங்கே இருந்த சமயம், ஒரு பெரிய  வரைபடம் வாங்கி சுவத்தில் ஒட்டி வச்சுருந்தேன்.  அப்பமட்டும் புரிஞ்சுருக்குமுன்னா  நினைக்கறீங்க?
இப்பத்திய பிரச்சனை என்னன்னா.....    வாடகை வண்டி எடுத்தால் ட்ரைவருக்கு செக்டர் நம்பர் சொல்லணும். அதுவும் ஒவ்வொரு செக்டருக்கும்  ஏ பி சி டின்னு நாலு உட்பிரிவும் இருக்கே....  அது உள்பட.
'வலை இருக்கக் கவலை ஏன்'னு   நம்பரைக் கண்டுபிடிச்சு நாலுமணி வாக்குலே கிளம்பினோம். ஆட்டோதான் வாசலில் நிக்குதே.  அங்கே போனா யானைகளையே காணோம். ட்ரெண்ட் மாறிப் போச்சு போல....  அக்கம்பக்கம்  இருக்கும் கடைகளில் பார்த்தால் நல்ல ஸல்வார் ஸூட் செட்டுகள் இருக்கு.  ம்ம்ம்.... சொல்ல மறந்துட்டேனே....   இங்கெல்லாம் துணிகளுக்கு ஒரு செக்டர், ஊசிக்கு ஒன்னு, நூலுக்கு ஒன்னு  எல்லாத்துக்கும் தனித்தனி வேற!  வரிசையா  பாங்க், வரிசையா  ஃபோன் கம்பெனின்னு.....


ரொம்ப விலை மலிவாயும்,  அழகழகான டிஸைன்களுமா  இருக்கறதை விட முடியுதா? அதான் எக்ஸ்ட்ரா லக்கேஜுக்கு பணம் கட்டி இருக்காரே.....   ஒரு கடைக்குள் போய்ப் பார்த்து  நாலு செட் வாங்கியாச்சு :-)

அடுத்து இன்னொரு ஆட்டோவில் செக்டர் 31 D.   நம்ம முருகர் இருக்கார்  அங்கே! ராஜகோபுரத்தைப்  பகல் வெளிச்சதில் முதல்முதலாப் பார்க்கிறேன்.  கொஞ்சம் ஒல்லி உடம்புதான்.  கோபுரம் கட்டுமுன்  பயன் படுத்திக்கிட்டு இருந்த  வழிக்கு மேல் அலங்கார அமைப்பு வச்சு கேட் போட்டுருக்காங்க.
இதுக்குள்ளே போனால்  பின் பக்கத்து  வளாகத்தில்   வடக்கர்களின் கோவில் (எல்லா சாமிகளும் உண்டு. பளிங்குச்சிலைகள்) வரும். அதுக்குத் தனி வழி வச்சுருக்காங்களான்னு பார்க்க விட்டுப்போச்சு.  கேட் பக்கத்தில் ஒரு பூக்கடை ஒன்னு !  இதெல்லாம் புதுவரவு !
கோவிலுக்குள்ளே போய்  முருகனையும், அவன் மாமன், மாமி, தாய் தகப்பன்னு  எல்லாரையும் கும்பிட்டுக்கிட்டோம்.  வேதபாடசாலைப் பசங்கள்  பழைய வழியில்,   இப்போ புதுசா வந்துருக்கும்  அக்னிகுண்டத்தாண்டை  விளையாடிக்கிட்டு இருக்காங்க.
இந்த அக்னிகுண்டமே  முந்தி கோவிலுக்குள்  அம்மன் சந்நிதிக்கும், நவகிரக சந்நிதிக்கும் இடையிலே இருந்ததுதான். இப்ப திறந்த வெளி என்றதால் புகைப் பிரச்சனை இல்லாம இருக்கும்!  உள்ளே இருந்த காலத்திலும் புகைப் பிரச்சனை இல்லை.  ஹோமகுண்டத்துக்கு மேலே   ஸீலிங்கின் உட்புறத்தில்  ஒரு எக்ஸாஸ்ட் ஃபேன் போல ஒன்னு  வச்சு  அது புகையை இழுத்துக்கும் விதமா டிஸைன் செஞ்சு வச்சுருந்தார்  ராஜசேகர்.

கோஷ்டத்தில் இருக்கும்  சாமி சிலைகளுக்கு  அபிஷேகம், குளியல் எல்லாம்  தினப்படி நடக்கும் போதும், ஒரு சொட்டுத் தண்ணீர் வெளியே வழியாமல்  உட்புறமா  உறிஞ்சி எடுக்கும் விதமா  பைப் லைன் எல்லாம் அமைச்சுக் கட்டுனது,  இந்தக் கோவில்.  நம்ம ராஜசேகர்,  விமானக் கட்டுமானம்,  அதில்  ஃப்யூல் உறிஞ்சி எடுக்கும் மெக்கானிசம் எல்லாம் தெரிஞ்ச  ஏர்க்ராஃப்ட் எஞ்சிநீயர் என்பதால் முருகனுக்கும் நல்லதாப் போயிருச்சு:-)

நாளைக்குக் கிளம்பறோமுன்னு  ஆஞ்சிகிட்டேயும் முருகனிடமும்  சொல்லிட்டு,  இன்னொரு ஆட்டோவில்  செக்டர் 17க்குப் போறோம்.  வழியில்  19 இல் ஒரு துப்பட்டாக் கடையில் சின்னதா ஒரு  பர்ச்சேஸ்.  நம்ம யானை கமீஸுக்கு  துப்பட்டா ஒன்னு :-)
சரியா ஆறு மணிக்கு  'போஷாக்' போய்ச் சேர்ந்தோம்.  அனிதா இருந்தாங்க. நம்மைப் பார்த்ததும் சிரிச்ச முகத்தோடு ஒரு வரவேற்பு. கீழே பேஸ்மென்டுக்கு ஆள் அனுப்புனதும்  டெய்லர் வந்துட்டார்.  உடைகள்  பொதியைத் திறந்து  காமிச்சாங்க.  சரியாத்தான் வந்துருக்கு.  நாம் சொன்ன மாற்றங்கள் எல்லாம் செஞ்சுருக்காங்க.  டெய்லர்  கையோடு வச்சுருந்த  மெஷரிங் டேப்பால்  நாம்  கொடுத்த அளவும் உடுப்பு அளவும்  சரியா இருக்குன்னு அளந்து காமிச்சார். நல்ல நீட் ஒர்க்.  இந்த ட்ரெஸ் டிஸைன் பண்ணவங்க பாலிவுட் டிஸைனர்களில் ஒருவரான அனிதா டோங்ரே.

நல்லபடியா பேக் செஞ்சு கொடுத்து, கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கும்போது  வெளியே எடுத்து   வார்ட்ரோபில் எந்தமாதிரி தொங்க விடணும் என்பதெல்லாம் சொல்லி, அதுக்குண்டான விசேஷ  ஹோல்டர் எல்லாம் கொடுத்தாங்க. கல்யாண ஃபோட்டோ அனுப்புங்கன்னு  கூடவே ஒரு  வேண்டுகோளும்.
(கல்யாணம் நல்லபடியா  முடிஞ்சதும் படம் அனுப்பி வச்சேன்.  டிஸைனருக்கும்  தனி  மடலில் அனுப்பினேன். ரெண்டு இடங்களில் இருந்தும் பதிலும் வந்துச்சு.  அவுங்களுக்கும் நமக்கும்  மகிழ்ச்சி & மகிழ்ச்சி :-)  

உடுப்புப் பொதி நல்ல கனம்!  ஆறு கிலோ  இருக்கு.  இதே செக்டர்தான் என்றாலும்   தூக்கிக்கிட்டு  ஹொட்டேல் வரை நடக்க முடியாது.    எதுக்கு இருக்கு ஆட்டோ?  தீஸ் ருப்யா!

அறைக்கு வந்ததும்  பெட்டிகளை  ரீ அரேஞ்ச் செஞ்சு உடுப்புகளைக் கசங்காமல் வச்சார் நம்மவர்.   வந்த வேலை முடிஞ்சது.  இனி  டின்னர்  போயிட்டு வந்து  ரெஸ்ட் தான்.  காலையில்  இங்கிருந்து கிளம்பறோம்.

தொடரும்...........  :-)



13 comments:

said...

லவ்லி. அருமை. நன்றி.

said...

சண்டிகர் பயணம் அருமை. டுரெஸைப் பார்த்தும் நியூசிலாந்து திருமண போட்டோ நினைவுக்கு வந்தது. நீல கலர் போல ப்ரௌன்லயும் ஒரு டிரெஸ் படத்துல தெரியுதே அதுவும் வாங்கினீங்களா?

said...

பழைய நண்பர்களைச் சந்திக்கிறதும் இன்பம் தான். அவங்களுக்கும் ஒரு மகிழ்ச்சி. இந்த நட்புகள் கருவேப்பிலை மாதிரி தொட்டாலே வாசம் ஒட்டிக்கும். இது போல நட்புகள் நன்று.

மறுபடியும் முருகன் ஒங்களைப் பாக்க வரவெச்சுட்டானே. பாசமோ பாசம். வாழ்க. வாழ்க.

said...

இனிய நினைவுகளும், ஜாலியான பர்ச்சேஸுமா..

said...

ஐந்து கிலோவுக்கும் மேலான எடை உடுப்புகள் அணிபவர் பாடு

said...

சண்டிகர் நினைவுகள் இதம்....

தொடர்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நீலம்... ப்ரவுன்..... எதுவும் வாங்கலை. இது வேற கடை. பக்கத்துலே இருக்கும் பச்சை வாங்கினேன் :-)

said...

வாங்க ஜிரா.

அதான் முருகன் ஸ்பெஷல் !!!!

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நம்மூர் புடவைகளும் லேசுப்பட்டவை அல்ல. என்னோட ஒரு புடவை ரெண்டரைக்கிலோ இருக்கு.

வட இந்திய லெய்ங்கா என்ற வகையில் ஏகப்பட்ட வேலைப்பாடுகள் இருப்பதால் கனம் அதிகம்தான். ஆனால் அதை உடுத்துபவர்கள் பொருட்படுத்துவதில்லை :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பொதுவாவே கொசுவத்திகள் பலதும் மனதுக்கு இதம்தானே :-)

said...

மீண்டும் சண்டி இல்லம் இனிய நினைவுகள்......