Friday, April 12, 2019

இந்த முறை ' பார்த்துட்டுப் போ'ன்னான் !!! (பயணத்தொடர், பகுதி 91 )

பலமுறைகள் போயும் ஸேவிக்கமுடியலை...

அடுத்த முறை நல்லா விசாரிச்சுக்கிட்டுக்கோவில் திறந்திருக்கும்போது உள்ளே போய் தரிசனம் செஞ்சுக்கணும்.  பெருமாள் வழி காட்டாமலா போயிருவார்.....னு போனமுறை புலம்பியது அவனுக்குக் கேட்டுருக்கும் போல....
இந்த முறை ' பார்த்துட்டுப் போ'ன்னான் !!!

அதிதியில்  காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பிட்டோம். பாண்டிச்சேரியில் வேறெங்கும் போகும் உத்தேசமில்லை. வெறும் ராத்தங்கல்தான். லக்ஷ்மியைப் பார்த்ததே போதும் எனக்கு!

உண்மையில் நேத்தே திருவஹீந்த்ரபுரத்தில் இருந்து புறப்பட்டதும், இங்கே நைட் டின்னர் முடிச்சுட்டுக் கொஞ்சம் ரமேஷுக்கு ஓய்வு கொடுத்துட்டுக் கிளம்பி சென்னைக்குப் போயிருக்கலாம்தான். ஆனால் நைட் டைம் ட்ரைவிங் எங்களுக்கு ஆகறதில்லை.  ட்ரைவருக்குக் கட்டாயம் ரெஸ்ட் வேணும் . அதில் போய்  சுணக்கம் பார்க்கக்கூடாது.

ரெண்டாவது காரணம் லக்ஷ்மி. 

மூணாவது.....   திருவலந்தை  ஆதிவராஹர்!!!

பலமுறை போயிருந்தாலும் தரிசனம் மட்டும் வாய்க்கலை. ஸ்தலசயனப்பெருமாளும் இந்தக் கணக்கில்தான் முந்தியெல்லாம்.   சென்னையில் இருந்து கிளம்பி மஹாபலிபுரம் வந்ததும்....   கலைச்செல்வங்களையெல்லாம்  கண்டுக்கிட்டபின் கோவிலுக்கு வந்தால் நடை சாத்தி இருக்கும்.  மாலை நாலுநாலரைக்குத் திறப்பாங்கன்னாலும்.....   லேட்டாக் கிளம்பினால் சென்னை வந்து சேர நேரமாகிரும். வண்டலூர் கிட்டே ட்ராஃபிக்லே மாட்டிப்போம்....

அப்புறம்தான்  ஊருக்குள் போனதும்,  முதலில் கோவில்னு மாத்திக்கிட்டேன்:-)  அப்போதான் தெரிஞ்சது பகல் மூணு மணிக்கே கோவில் திறந்துடறாங்கன்னு!  அடடா.... எத்தனை முறை கோட்டை விட்டுருக்கேன்..... ப்ச்.....

அதிலும் ஆதிவராஹர் கோவிலுக்குப் போக அதிர்ஷ்டம் இல்லை. அங்கே ஒரு கால பூஜை மட்டுமே. இங்கத்துப் பட்டர் ஸ்வாமிகள்தான் அங்கேயும் போய் வர்றார் என்பதால் நேரக்குழப்பம்.  என்னமோ போங்க.....   அவன் கூப்பிட்டுத் தரிசனம் தந்தால்தான் உண்டுன்னு ஆகிப்போச்சு.

அதிதியில் இருந்து மஹாபலிபுரம் வர ஒன்னே முக்கால் மணிஆச்சு.  ஸ்தல சயனப்பெருமாள் கோவிலுக்குப் போனப்ப மணி பத்தரை. நுழைஞ்சதும் முதல் விசாரிப்பு..... 'ஆதிவராஹர் கோவிலில் பூஜை ஆச்சா'ன்னுதான்.

'கார் இருக்கா'ன்னு நமக்கு எதிர்க் கேள்வி!

"இருக்கு!"

"சட்னு கிளம்பிப்போங்கோ, பட்டர் இப்பத்தான் போயிருக்கார் அங்கே"

அவர் சொல்லி முடிக்கும்வரை கூடக் காத்திருக்காமல் வெளியில் பாய்ஞ்சோம்.  ரொம்ப தூரமில்லை. ஒரு முக்கால் கிமீ இருக்கும். லைட் ஹௌஸ்  தாண்டி ரைட் எடுக்கணும்.
கோவில் வளாகத்துக்குள் டூவீலர் ஒன்னு நிக்குது. ஹப்பாடா....
கம்பிக் கதவு திறந்துருக்கு!  குகைக்கோவில் ! இனிதான் சந்நிதிக்கதவைத் திறக்கப்போறார் போல!
உள்ளே காலடி எடுத்துவச்சால் கொஞ்சம் இருட்டு. நாம்வேற வெளிச்சத்தில் இருந்து வந்துருக்கோமா....  ரெண்டு நிமிட்டில் பார்வை தெளிஞ்சது.

ஹைய்யோ!!!!
பூதேவியை வலது தொடையில் உக்கார்த்தி வச்சு வலது கையால் அவள் இடையையும் எடையையும் தாங்கிப்பிடிச்சு, அவளோட நீண்ட இடதுகாலின் பாதத்தைத் தன் இடதுகையால்  ஏந்திப்பிடிச்சுருக்கும் திருக்கோலம் !!!
காணக் கண் கோடி வேண்டும்...
( மேலே படம் மூலவர் இல்லை. அநேகமா இதைப்போலத்தான் இருக்கார்!)

ஆதிவராஹர்னு சொன்னாலும்.... திருவலந்தை ஸ்ரீ லக்ஷ்மிவராஹப் பெருமாள் னுதான்  கெஸட்டில் பெயர் !  ஹிஹி....

மூலவருக்கு  தீபாரத்தி காமிச்சார் பட்டர் ஸ்வாமி.  சடாரி, தீர்த்தம் கிடைச்சது. தினமும் ஒரு நேரம்தான்....  வந்து விளக்கு வச்சு, நெய்வேத்யம் அம்சிப் பண்ணிட்டுப் போயிருவாராம். இன்றைக்கு இவர் ட்யூட்டி.

அந்தச் சின்ன வெளிச்சத்தில் நிகுநிகுன்னு எப்படி இருக்கான் பாருங்கன்னு 'நம்மவரிடம்' சொல்லிச் சொல்லி மாளலை.
Hari & Haran

ஆதிவராஹருக்கு ஒரு கதை கூட இருக்கு. இந்தக் கோவிலில் இருக்கும்  வராஹரை அனுதினமும் பூஜித்தபிறகுதான்  பகல் உணவு சாப்பிடும் வழக்கம் இருந்துருக்கு  மன்னர் ஹரிகேசனுக்கு. ஒருநாள்  கோவிலுக்குப் புறப்படும் சமயம் கிழவர் ஒருத்தர் வர்றார். எனக்குப் பசியா இருக்கு. அன்னம் வேணுமுன்னு சொல்றார்.  பூஜையை முடிச்சுட்டு வந்து விருந்து வைக்கிறேன் என்று மன்னர் சொல்ல,  அவ்வளவு நேரம் என்னால் பசி பொறுக்கமுடியாது. இப்பவே சாப்பாடு வேணுமுன்னு நிர்ப்பந்தம் பிடிக்க, இந்த பேச்சுவார்த்தைகளில் கோவிலுக்குப்போக நேரமாகிருது.

என்ன செய்யலாமுன்னு யோசிச்ச  அரசர், இந்தக் கிழவரையே ஆதிவராஹனா நினைச்சு  சமைச்சு வச்சுருந்த சாப்பாட்டைப் படையல் போட்டுட்டார்.  கிழவருக்கு மனம் பூராவும் மகிழ்ச்சி. தன்னுடைய சுய உருவைக் காமிச்சார். சாக்ஷாத்  எம் பெருமாள் வராஹக் கோலத்தில்.  அங்கே இவரைத்தேடி வந்த மஹாலக்ஷ்மியை அப்படியே வாரியெடுத்து  வலப்பக்கத் தொடையில் அமர வைத்து, காட்சி கொடுத்துருக்கார்.  அதே கோலம்தான் கோவிலுக்குள்ளும்.   அகிலவல்லி சமேத  ஞானபிரான் !
Gaja Lakshmi

குகையின் பக்கவாட்டுச் சுவர்களில் எல்லாம் பெரிய பெரிய சிற்பங்களாச் செதுக்கித் தள்ளி இருக்காங்க.
Vishnu Durga

ஒரு தயக்கத்தோடு  படம் எடுக்க அனுமதி உண்டான்னு கேட்டதும், மூலவரை விட்டுட்டு படம் எடுத்துக்குங்கன்னார் பட்டர் ஸ்வாமிகள்.
Gangadhra
Brahma

ஒவ்வொன்னா நின்னு பார்த்து ரசிச்சுக் க்ளிக்க நேரமில்லை.  அனுமதி கிடச்சதே போதுமுன்னு  படபடன்னு சில க்ளிக்ஸ் ஆச்சு.  அவருக்கும் திரும்பிப்போகணுமே.....
Adhisesha & Vishnu

சந்நிதியைப் பூட்டிக்கிட்டுக் கிளம்பிட்டார்.  நாங்களும் வெளியே நின்னு  கல்விளக்குத் தூணையேக் கொடிமரமா நினைச்சு       ( குகைக்கோவில்களுக்கு விமானம் இல்லாததால் கொடிமரமும்  கிடையாது.  ) ஸேவிச்சுட்டுத் திரும்ப  வெறும் தரையில் கிடப்பவனைத் தரிசனம் செஞ்சுக்கப் போனோம். வராஹருக்குப் பைரவரே துணை !

எடுத்தபடங்களின் விவரம் ஒன்னும் தெரியலையேன்னு அங்கலாய்ப்புடன் வலை மேய்ஞ்சதில்  Indian History and Architecture பக்கத்தில் விடைகள் கிடைச்சது. அதையே நம்ம படங்களுக்கும் போட்டுருக்கேன்.  Indian History and Architecture அவர்களுக்கு நன்றி.

வெளிச்சம் போதாததால் படங்கள் சுமாராத்தான் வந்துருக்கு.

மகாபலிபுரம் ஆதிவராகப் பெருமாள் கோயில் குடைவரையின் சுவரில் இரண்டு இடங்களில் பல்லவ அரசர்கள் மற்றும் அவர்களுடைய தேவியர் உருவச் சிற்பங்கள் கல்வெட்டுப் பொறிப்புகளோடு     உள்ளன. அச்சிற்பங்களை     ஆராய்ந்த வல்லுநர்கள் அவை முறையே 

     (1) சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திர பல்லவன், 

     (2) முதலாம் மகேந்திர பல்லவன், முதலாம்
     நரசிம்ம பல்லவன் 

     (3) இராஜசிம்ம பல்லவன், மூன்றாம் மகேந்திரன் 

என்போர் உருவச் சிலைகள் என்ற கருத்துகளைக் கூறியுள்ளனர்.

இருப்பினும் அண்மைக்கால ஆய்வுகள் அவை இராஜசிம்மன், மூன்றாம் மகேந்திரன் ஆகியோருடைய உருவச் சிலைகள் என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன.

வல்லுநர்கள்  சொன்னால் சரியாத்தான் இருக்கும்!
ஸ்தலசயனப்பெருமாளின் தரிசனம் ஆச்சு!  கோவிலில் 'புராணத்தை' எழுதிப்போட்டுருக்காங்க. 'றை'யை 'ரை' ஆக்குனதுதான்.... சரி இல்லை....  ப்ச்.... (நாம் இருப்பது தமிழ்நாடு! )

இந்தக் கோவிலைப் பற்றி முந்தி எழுதியது  இங்கே.....   பார்க்க விருப்பமுன்னா பார்த்துக்கலாம்.  திரைக்கதை வசனம், பாடல்கள் அங்கே  இருக்கு:-)

ஜலமா இல்லை ஸ்தலமா...


நான் செஞ்ச ஒரே தப்பு


வைகுந்தவாசல் நல்லாவே இருக்கு!  மகிழ்ச்சி!!!
முன்மண்டபத்தில் திருப்பணி ஆரம்பிச்சுருக்கு.


நன்கொடை வசூலித்தவரிடம் ஒரு தொகை கொடுத்து நல்ல செயலைப் பாராட்டிட்டுக் கிளம்பினோம்.
மணி பதினொன்னுதான் ஆச்சு. நேரா லோட்டஸ்தான்னு நினைச்சால்....   கிரகங்கள் கூப்பிட்டன!!!!

தொடரும்........:-)


8 comments:

said...

வராகப்பெருமாளைப் பார்த்ததும் எங்கள் ஊரான கும்பகோணத்திலுள்ள ஆதிவராகப்பெருமாள் நினைவிற்கு வந்தார்.

said...

குகைக் கோவில் அழகு. பல கோவில்கள் இப்படி யாரும் வராமல் அழியும் நிலையில் இருப்பது வருத்தம்.

said...

அருமை, நன்றி.

said...

எந்தக் கோவிலில் குடைவரை சிற்பங்கள் என்பது தெளிவா எனக்குப் புரியலை. தலைசயனத்துலயா இல்லை திருவிடந்தையிலா அல்லது வேறு கோவிலா?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க கும்பகோணத்தில் இருக்கும் ஏராளமான கோவில்களுக்கு இன்னும் போகவே இல்லை. செக்கு மாடு போல ஒரு சில குறிப்பிட்ட கோவில்களுக்கே போய்க்கிட்டு இருக்கேன். அடுத்த முறை வழ்க்கத்தை மாத்திக்கணும் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொல்லியல்துறை பொறுப்பெடுத்துருக்கு. அதான் குப்பை சேராமல் பார்த்துக்கறாங்க. அதுவும் இல்லைன்னா...... ப்ச்..... உங்களுக்குத்தான் தெரியுமே.... நம்ம சனம் எப்படி வச்சுருக்குமுன்னு....

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

திருவிடந்தை இல்லை. இது திருவலந்தை. தலசயனப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரு முக்கால் கிமீ தூரம். தனிக்கோவில். சின்ன குகைதான் !