Tuesday, April 16, 2019

ஷார்ட்கட் அடப்ரதமன்! அட !!!! ( சமையல் குறிப்பு )

அதென்னவோ யுகாதி தொடங்கி ஸ்ரீராமநவமி விழா ஒன்பதுநாள் கொண்டாட்டமுன்னு  தினம் எதாவது இனிப்பு (சாமிப்ரஸாதம்!  ஆமாம்.... சாமி இனிப்பே வேணுமுன்னு சொல்றாரா என்ன? )செஞ்சுக்கிட்டே இருக்கேன். பீட்ரூட் ஹல்வா, போளி, கேஸரி இப்படி போற வரிசையில், தமிழ்ப்புத்தாண்டு தினம் காலையில் வேறொன்னும் செய்ய நேரமில்லாமப் போயிருச்சு. இங்கே நம் சனாதன தர்ம சபாவில்  நம்ம சித்திரை ஒன்னுதான் ( ஃபிஜி பஞ்சாங்கப்படி அன்றைக்கு சைத்ர நவமி!) ஒன்பதுநாள் திருவிழாவின் கடைசி நாள்.
பெருமாளுக்கு லட்டு ஜிலேபியேதான் வேணுமா? ஸோன்பப்டி தின்னால் ஆகாதோ? ஆனால்  கணி ஒருக்கி வச்சேன்....  பாவம் இல்லையோ நம்ம பெருமாள் !
எப்பவும் தமிழும் மலையாளமும் கைகோர்த்துக் கொண்டாடும் புதுவருஷம், இந்த முறை தனித்தனி தினமாம்.  நம்ம சித்திரை ரெண்டு, கேரளாவின் மேடம் ஒன்னு.  இந்த மேடம் யாரு?  ஹாஹா...  மேஷமாதம் இப்படி பேச்சுவழக்கில் மேடம் ஆச்சு :-) நம்ம பனிரெண்டு மாசங்கள் சித்திரை வைகாசின்னு ஆரம்பிச்சுப் போறதைப்போல் கேரள நாட்டில்  பனிரெண்டு ராசிகளின் பெயர்களே மாதங்களுக்கும்.

நேத்துக் கனிக்கணி ஆனதால் இன்று விஷுக்கணி அலங்காரம் முடிஞ்சது.  விசேஷ தின சாப்பாடெல்லாம் செய்யலை. வழக்கமான  சிம்பிள் சாப்பாடுதான் இன்றைக்கும். ஆனால்  விசேஷ தினப்ரஸாதம் மட்டும் செஞ்சுடணும்....
ஃப்ரீஸரில் இருக்கும் ஃபிலிப்பைன்ஸ் நாட்டுப் பலாப்பழத்தை எடுத்துப் பிரிச்சு வச்சேன்.  எல்லாம் ஒன்னோடொன்னு ஒட்டிக்கிடக்கு. மைக்ரோ வேவ் எதுக்கு இருக்காம்? இருவது விநாடிகள் வச்சு எடுத்தேன். சுளை (!) பிரிக்க வருது. ஆனால் இது கூழச்சக்கை....  ப்ச்......  பலாப்பழ வாசனை மட்டும் போதும்...வேற வழி?
ஸ்ரீலங்காவில் இருந்து  இங்கே இறக்குமதியாகும்  இடியாப்ப மாவு வாங்கி வச்சுருந்தது நினைவில் வந்ததும்....  ப்ரஸாத மெனு சட்னு மனசில் வந்துருச்சு!
இலையடை செய்யறோம்!

இந்த இடியாப்ப மாவில் வெறும் குளிர்ந்த நீர் சேர்த்துப் பிசைந்தால் போதுமாம். அப்படித்தான் எழுதி இருக்கு :-)
நான் கெட்டிலில் கொஞ்சம் தண்ணீர் சுடவச்சேன். 65 டிகிரி வெப்பம் மதி. அப்பாடா.... நம்ம கெட்டில் வெவ்வேற வெப்பத்தில் தண்ணீரைச்  சூடாக்கும் வகைன்னு உங்களுக்குத் தெரிவிச்சாச்:-)

ஒரு  கப் மாவு எடுத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு, அரை ஸ்பூன் நெய் சேர்த்துட்டு,  சுடுதண்ணீர் சேர்த்து மாவைப் பிசைஞ்சாச்சு.

அடுத்து  அடைக்கான ஃபில்லிங் ரெடி பண்ணனும். கடலைமாவு கால் கப், கால் கப் துருவின தேங்காய், கால் கப்  நாட்டுச் சக்கரை (ப்ரௌண் ஷுகர்) எடுத்துக்கிட்டேன்.
கடலைமாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துட்டுக் கூழ் போல  ஆனதும் அடுப்பில் மெல்லிய தீயில்   வச்சுப் பச்சைவாசனை போகும்வரை கிளறினதும்  தேங்காய்ப்பூ & சக்கரையையும் சேர்த்துட்டுக் கொஞ்சம் நெய் சேர்த்து இளக்கி எடுக்கணும்.  ஹல்வா போலச் சுருண்டு வரும்போது  ஒரு அஞ்சு சுளை பலாப்பழத்தைப் பொடியாக நறுக்கி  இதில் சேர்த்து ரெண்டு மூணு நிமிட் ஆனதும் ஏலக்காய்த்தூள் சேர்த்து எடுத்து வச்சாச்சு. பூரணம்  செய்யும் வேலை பூரணமாச்சு!

மேலே சொன்ன கடலைமாவு மேஜிக்கில் பலாப்பழம் இல்லாமல்  கிளறி எடுத்தால்  போளி செஞ்சுக்கலாம் என்பது கூடுதல் குறிப்பு:-)


மனசில்லா மனசோடு, புழக்கடைக்குப்போய் நம்ம வாழை மரத்தில் இருந்து ஒரு இலையை வெட்டி வந்தேன்.  அதைக் கழுவிட்டுச் சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி வச்சேன்.

இப்போ பிசைஞ்சு வச்ச மாவில்  கொஞ்சம் எடுத்து உருட்டி இலையில் வச்சு அப்படியே  கையால் தட்டியே வட்டமாக பரத்திவிட்டேன்.  எவ்வளோ மெலிஸ்ஸா தட்ட முடியுமோ அவ்வளவு.  நடுவில் ஒரு டீஸ்பூன் பூரணம் வச்சு இலையை ரெண்டா மடிக்கணும். அதுவும் ஆச்சு.  பத்தண்ணம் பண்ணி முடிச்சதும்  குக்கரில்  ஸ்டீமர் கிண்ணம் வச்சு அதில் அடுக்கி நீராவியில் வேகவச்சு எடுத்தேன்.

ஆச்சு நம்ம இலையடை!

என்னடா.... இது... தலைப்புலே அடப்ரதமன்னு போட்டுட்டு இலையடை ஆச்சுன்றாளேன்னு திகைப்பா?  நோ ஒர்ரீஸ்....   இதோ ப்ரதமனுக்கு வரேன்.  இது இலையடையின் பைப்ராடக்ட் !  எப்படி?

பத்தண்ணத்தோடு அடைகளை நிறுத்தியதால் பிசைஞ்சுவச்ச மாவு கொஞ்சம் மீந்து போயிருக்கு. இதைத்தான் ப்ரதமனாச் செய்யப்போறோம்.

குட்டிகுட்டியாச் சின்னச் சின்ன சீடைகளாக உருட்டி வச்சுக்கணும்.  அதை ஒவ்வொன்னா  கட்டைவிரல் ஆள்காட்டி விரலுக்கிடையில் வச்சு ஒரு  நசுக். எவ்ளொ மெலிஸ்ஸா முடியுமோ அவ்ளவு!  தட்டையா இருக்கும் சீடையை இலையடை அவிச்சு எடுத்த அதே ஸ்டீமர் பாத்திரத்தில்  போடணும். இப்படியே எல்லாச் சீடைகளையும் நசுக்கி எடுக்கணும். நான் பாதிவரை நசுக்  ஃபாலோ பண்ணிட்டு, நேரம் ஆகுதேன்னு சீடை உருண்டைகளையே சேர்த்துட்டேன். நீராவியில் சட்னு  வெந்துருச்சு.  கை பொறுக்கும் சூட்டில் அதை ஒன்னுரெண்டாக் கிள்ளி வச்சேன்.
இன்னொரு பாத்திரத்தில்  ஒரு அரைக் கப்  தேங்காய்ப்பாலும் அரைக் கப் தண்ணீரும்  சேர்த்து அடுப்பில் வச்சுக் கொதி வந்ததும்   எடுத்துவச்ச வெந்து கிழிந்த (!)  அடைகளைச் சேர்த்து ரெண்டு நிமிட் கொதி வந்ததும் முக்கால் கப்  நாட்டுச் சக்கரை சேர்த்து  இன்னும் ரெண்டு கொதிவந்ததும்  ஏலக்காய்த் தூள், ஒரு கப் கெட்டியான  தேங்காய்ப்பால் சேர்த்ததும்.... அடப்ரதமனும் ஆச்சு!

எப்படி  நம்ம  டூ இன் ஒன்? 


பெருமாளுக்குப் படைச்சுட்டேன்.  இனிப்பெல்லாம் சரியா இருக்கான்னு ஏதோ அவர் பார்த்துச் சொன்னால் சரி!
பூஜை முடிஞ்சு  'நம்மவருக்கு'  ப்ரஸாதம் கொடுத்ததும், சாப்பிட்டவர் 'அருமை'ன்னார் :-)

PINகுறிப்பு :

கைவேலையா இருந்ததால்  ப்ரதமன் மேக்கிங்  படம் எடுக்க விட்டுப்போச்சு.

இலங்கை இடியப்ப மாவு  சிகப்பரிசி என்றதால்  நிறம் பிங்க் :-)


8 comments:

said...

ஒரே ஸ்வீட்டா பார்த்து ஜொள்ஸ் பசிக்குது. எனக்கும் அனுப்பி வைங்க. :) கலர் அட்டகாசம்.

said...

அதுசரி.... இடியாப்பம் மாவு ஏன் கருத்த கலர்ல இருக்குன்னு கேட்க நினைத்தேன் (கேப்பை மாவுல செஞ்ச மாதிரி இருந்தது). நீங்க, அது சிகப்பரிசினாலன்னு சொல்றீங்க. ஏதோ.. நல்லா இருந்தாச் சரிதான்.

said...

அருமை அருமை

said...

வாங்க தேனே!

இனிப்பே இனிப்பைக் கேக்குதேப்பா !!!!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

உண்மையிலேயே சுவை அபாரமா இருந்தது. நேத்து ரெண்டு இண்டியன் கேர்ள்ஸ்
(எங்கூர் யூனி மாணவிகள் ) வந்துருந்தாங்க. இதுவரை ஒன்னும் ஆகலை :-)

அடுத்தமுறை வெள்ளை மாவு வாங்கிச் செஞ்சு பார்க்கலாம். அந்த அடையைக்கூட இன்னும் மெல்லிஸாத் தட்ட முடியுமான்னு பார்க்கணும்! ஸிலிகான் ஷீட் வச்சுப் பரத்தி விடலாமுன்னு இருக்கேன் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி நன்றி !

said...

ஆஹா.... பார்க்கவே நல்லா இருக்கே!

கூழன் சக்கை தான் பார்க்க ஒரு மாதிரி இருக்கு! ஃப்ரீசரில் வைத்தால் ஐஸாகி இருக்கிறதோ?

said...

சுவையோ சுவை.