Monday, April 08, 2019

திருவஹீந்த்ரபுரம் தேவநாராயணன்(பயணத்தொடர், பகுதி 89 )

ரெண்டரை மணி நேரப்பயணம் ஒன்னு இருக்கு இன்றைக்கு.  ஒன்னரைக்குக் கிளம்பினால் நாலு மணிக்குப் போயிருவோம். கோவில் திறக்கும் நேரமும் அதுதான் என்பதால் நிம்மதியா தரிசிக்கலாமுன்னு ஒரு கணக்கு.
இதே கோவிலுக்குப் போனமுறை வந்தப்ப 'அவ்வளவா' விவரம் தெரியாமல்  உச்சிபூஜை ஆரம்பிக்கப்போகுதுன்னு யாரோ சொல்ல, வேகவேகமாய்ப்  படிகள் ஏறி  ஹயக்ரீவர் தரிசனம் ஆச்சு. அப்புறம்தான் தெரிஞ்சது, கீழே இருக்கும் கோவில்தான் நாம் தேடிவந்த நூத்தியெட்டில் ஒன்னு என்பது.... தபதபன்னு படிகள் இறங்கி ஓடிக்  கடைசி அஞ்சு நிமிட் தரிசனம்தான் அப்போ நமக்கு.   முழுசாக் கோவிலைப் பார்க்கலையேன்னு மனக்குறை.  அதுதான்  இப்படி ஒரு ப்ளான் போட்டுத்தந்தார் 'நம்மவர்'.
திருவலஞ்சுழியில் இருந்து  ராயாஸ் வரும்போதே மணி பனிரெண்டு. கொஞ்சம் ஓய்வு, வலை மேயல், பெட்டிகளை அடுக்கிப் பயணத்துக்கு சரிப்படுத்துதல்னு கொஞ்சம் நேரம் போயிருச்சு.  பகல் சாப்பாட்டுக்குக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய்,  வெயிலுக்கு இதமா இருக்கட்டுமேன்னு தயிர்சாதம்.
சரியா ஒன்னரைக்குச் செக்கவுட் பண்ணிக்கிளம்பினோம்.

கொள்ளிடம் வழியாத்தான் பயணம். காவிரியில் தண்ணீர்?   நின்னு வண்டியை நிறுத்திட்டுத் தேடிப்பார்க்கணும். ஆனால் பாலத்துமேலே வண்டியை நிறுத்தக்கூடாதே......
சின்ன , பெரிய ஊர்களைக் கடந்து போய்க்கிட்டு இருக்கோம். என்ன ஊர்? என்ன பெயர்? னு ஒன்னும் தெரியலை.  இப்பெல்லாம் ட்ரெண்ட் மாறிப்போச்சு. முந்தியெல்லாம் கடைகளில் பெயர்ப்பலகை இருக்கும்பாருங்க... அதுலெ முழு விலாசமும் எழுதிப்போட்டுருப்பாங்க. பார்த்துப் படிச்சுக்கிட்டே போகும்போது  எங்கே இருக்கோமுன்னு தெரியும். இப்போ... கடைப்பெயர், செல் நம்பர் அவ்ளோதான்....   ப்ச்...

வடலூர் தாண்டிப்போயிருக்கோமுன்னு அப்புறம்தான் தெரிஞ்சது.... அடடா......    கோட்டை விட்டுட்டோமே......

நோ பார்க்கிங்னு கடலூர் ட்ராஃபிக் போலிஸ் போட்டு வச்சுருக்கும் இடத்தில் ஆடித்தள்ளுபடி விற்பனை.  எக்கச்சக்கமான வண்டிகளை நிறுத்திட்டு சனம் அலைமோதுது.....    (ஓக்கே... கடலூர் தாண்டறோம்!)

அண்ணன்தம்பி அஞ்சு பேருக்கும் நகைக்கடை வச்சுக்கொடுத்துட்டார்  அப்பா !  சின்ன ஊரோ பெரிய ஊரோ.... ஆளுக்கு ஒன்னுன்னு பிரிச்சுக்கிட்டு வியாபாரத்தில் கொழிச்சுக்கிட்டு இருக்காங்க  ஆலூக்கா ப்ரதர்ஸ் !   'நாங்க இருக்கோம், நாங்க இருக்கோமு'ன்னு  இடைக்கிடை ஜிஆர்டி வேற !   பெரிய பெரிய கடைகள் என்பதால் கண்ணுலே பட்டுச்சு... அவ்ளோதான்....  ஹிஹி....

சரியா நாலுமணிக்கு திருவஹீந்த்ரபுரம் வந்துட்டோம்.  கோவில் வாசலிலே மண்டபம் நிறைச்சுக் கடைகள். கலகலன்னு இருக்கு!
நமக்கிடதுபக்கம்  மேலே ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதிக்குப்போகும் படிகள். வலதுபக்கம் ஸ்ரீதேவநாதஸ்வாமியின் திருக்கோவில்!


கொஞ்சம் இருட்டா இருக்கும் வாசலில் நுழைஞ்சு போகும்போது பளிச்ன்னு மின்னும் கொடிமரம்!

நல்ல பெரிய கோவில்தான்.  ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திவ்யதேசக் கோவில்.  பராமரிப்பு போதாது.....
முதலில் பெருமாளை ஸேவிச்சுக்கிட்டோம். எப்பவும் தாயாரை வணங்கினபிறகுதான் பெருமாள்னு நியமம் இருந்தாலும்....   கால் சொன்ன பேச்சைக் கேக்காது.....
நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார், தேவநாதர்!

தாயார் சந்நிதிக்குப் போனால் மூடிக்கிடக்கு.  இனிமேல்தான்   பட்டர்ஸ்வாமிகள் வருவாராக இருக்கும். அதுக்குள்ளே ப்ரகாரம் வலம் வரலாமுன்னு போனால்.... 'குப்'னு ஒரு வயித்தைக் கிளறுனாப்லெ ஒரு துர்கந்தம்..... எங்கே இருந்து வருது?  கண்ணை ஓட்டினால் சேஷக்கிணறு.  சேஷனுக்குத் திருமஞ்சனம் பண்ணறோமுன்னு  அதுலேயே 'பால் தயிர் வெல்லம்' இன்னபிறன்னு கொட்டி வச்சுருக்காங்க போல..... பிரார்த்தனைக்கிணறு.....
பெருமாளுக்குக் குதிரைத்தலை கிடைச்சு உயிர் வந்தபின்(!!)  'தாகமா இருக்கு'ன்னு  சொன்னதும் கருடனும் சேஷனுமா ஆளுக்கொருபக்கம் பாய்ஞ்சாங்க.  மேலே மேலே   உசரக்கப் பறந்து போய் ஒருநதியையே கொண்டு வர்றார் பெரிய திருவடி.

இப்படியெல்லாம் ரொம்ப மெனக்கெடாம, பூமியில் சட்னு தன் வாலால் ஒரு அடி கொடுத்ததும்  கீழே இருந்து சரசரன்னு ஊத்தெடுத்து வந்துருது சேஷன் உண்டாக்கிய சேஷ தீர்த்தம். பெருமாள் தாகம் தணிந்தது!  (இதைக் கொஞ்சம் சுத்தமா வைக்கப்டாதோ? )

மனுஷ்யரூபத்தில் பெருமாள் இருந்துருந்தால் ஒரு சொம்பு தண்ணீர் குடிச்சு தாகத்தைத் தீர்த்துக்கலாம்.  ஆனால் குதிரைத்தலை..... குதிரைக்குத் தண்ணீர் காட்டணும், அது..... தானே மாந்திக்குடிக்கும்.... அதுதான்  பாதாளகங்கையையே கொண்டுவரும்படி ஆச்சு....

இந்தக்குதிரைத்தலை சமாச்சாரம் என்னன்னு தெரியுமோ?

தேவ அசுரர் யுத்தம் நடந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம். பல்லாயிரம் வருசங்களாகச் சண்டை போட்டே களைச்சுப் போயிருக்கார் பெருமாள்.  கொஞ்சம் ஓய்வெடுத்தால் தேவலை. அதுக்காக ரணபூமியில்  பாம்புப் படுக்கையில் கிடக்க முடியுமோ?  செத்தக் கண்களை மூடி ஒரு அஞ்சு நிமிட் இருந்தாலும் போதும்.  இது தேவலோக அஞ்சு மினிட் ஆக்கும், கேட்டோ.  உக்கார்ந்த மேனிக்கே, நாண் பூட்டிய வில்லின்  மேல்பாகத்துலே  தாடையை ஊனிக்கிட்டுக் கண்களை மூடி இருக்கார்.

தேவலோகத்தில் அப்பப் பார்த்து  யாகம் ஒன்னு நடக்குது. எல்லோரும் ப்ரஸண்ட், பெருமாளைத்தவிர. இவர் வந்தால்தான் யாகம் பூர்த்தியாகுமுன்னு  நினைச்ச இந்திரன்  இவரைத் தேடி வர்றான்.  கண் மூடி ஒரு உறக்கம். எப்படி எழுப்பலாமுன்னு  யோசிச்சவனுக்கு,  மடத்தனமா ஒரு ஐடியாக் கிடைச்சது.  கரையான் உருவம் எடுத்து வில்லின் நாணைக் கடிச்சு அறுத்தான். அது அறுந்த வேகத்தில்  வில்லின் நுனி  டாண்ன்னு தெறித்து நிமிரும்போது,  அதுலே முகத்தை ஊன்றிக்கிட்டு இருந்த  தலையை அப்படியே அறுத்துத் தூரத் தூக்கிண்டு போய் உப்பு சமுத்திரத்தில் போட்டது :-(   பெருமாள் தலையில்லாதவரா  திடுக்கிட்டு  நிக்கறார்.

இது இப்படி இருக்க,  குதிரை முகமுள்ள அரக்கன் ஒருவன், பராசக்தியை தியானிச்சுத் தவம் இருந்து  சில வரங்களையும், மரணமில்லாப் பெருவாழ்வையும்  வேண்டி நிக்கறான்.  நம்ம சாமிகள் இருக்காங்க பாருங்க....  ஒருவித அல்ப சந்தோஷிகள் என்றுதான் சொல்லணும். எவனாவது வரம் கேட்டால் அதிலுள்ள நன்மை தீமைகளையெல்லாம்  முன்னே பின்னே யோசிச்சுப் பார்க்காமல்,   'தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ கேள்' னு  உதார் விடுவதுதான் எப்போதும்.

அரக்கன் அப்போ ரொம்ப யுனீக்கா இருந்தவன்.  தன்னைப்போலவே குதிரைத்தலை உள்ள ஒருவனால்தான் தனக்கு முடிவு இருக்கணுமுன்னு  கேட்டுக்கிட்டான்.  ஆமென்!

இப்போ தலையில்லாத பெருமாளுக்குத் தலை ஒன்னு அர்ஜெண்ட்டா வேண்டி இருக்கு. இந்திரன் பார்த்தான்....  ஒரே கல்லுலே  ரெண்டு மாம்பழமுன்னு  ஒரு குதிரையைக் கொன்னு அதன் தலையைப் பெருமாள் கழுத்துலே வச்சுட்டான். மயங்கிக் கிடந்த பெருமாள் உயிர்ப்புடன் எழுந்தார்.

எதிர்பார்த்ததே நடந்தது. குதிரைத்தலை அரக்கன் காலி!

புதுத்தலை வந்ததும் பெருமாளுக்கு தாகமா இருக்கு.  கருடர் ஓடிப்போய் விரஜா நதியைக் கொண்டு வர்றார். ஆதிசேஷனோ....  பாதாளத்துக்குப்போய் அங்கே ஓடிக்கொண்டிருக்கும் பாதாளகங்கையைக் கூப்ட்டு வர்றார்.  இப்படி  அடிபொடிகள் சேவை.....   கருடனுக்கும், பாம்புக்குமே ஆகாது என்றாலும் பெருமாள் சேவையில் சொந்தக் காழ்ப்புகளுக்கெல்லாம் இடமில்லையாக்கும், கேட்டோ!

மேலே உள்ள பகுதி நம்ம துளசிதளத்துலே வந்ததுதான்.  கதை கதைன்னு ஒரு ஜீவன் கேட்பதால் இங்கே இன்னொருக்காப் போட்டுருக்கேன்.

கருடர் கொண்டுவந்த கருடாநதியைத்தான் கெடிலம் ஆறுன்னு சனம் சொல்லிக்கிட்டு இருக்காங்க.  அது உண்மை இல்லை. கருடர் நதியைக் கொண்டுவரலை.  நதி ஒன்னு இருக்குன்னு பார்த்துக்கிட்டு வந்து சொன்னதாக வலையில் இன்னொரு இடத்தில் வாசிச்சேன்.

சரி வாங்க மூக்கைப் பொத்திக்கிட்டே வலத்தைத் தொடரலாம்..... பெருமாள் குடை எனக்கு எப்பவுமே ரொம்பப்பிடிக்கும்!  ரெண்டு க்ளிக்ஸ் ஆச்சு.

ஸ்ரீராமன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, வேணுகோபாலன், ரங்கநாதர், ராஜகோபாலன், சக்ரத்தாழ்வார்ன்னு ஏகப்பட்ட சந்நிதிகள். ஆனால் எல்லாமே மூடித்தான் இருக்கு. இப்பதான் கோவில்  திறந்ததால் , கொஞ்ச நேரம் ஆகுமோ என்னவோ....


அங்கங்கே வாகனங்களும்,  அப்படியப்படியே போட்டு வச்சுருக்காங்க......   மனசுக்குள் சின்னப்புலம்பலோடு போறேன்.

சொர்கவாசல் பார்த்தால்.....   ப்ச்.... பெருமாளே புகுந்து போவாரான்னு இருக்கு.....   ஏன் ஏன் இப்படி..........
பிரகாரத்துலே இன்னொரு கொடிமரம் இருக்கு!  என்ன இது?  ஆஹா.,...  நம்ம வேதாந்த தேசிகர் சந்நிதிக்கானத் தனிக்கொடிமரம்.  காஞ்சிபுரம் தூப்புல் தேசிகர், இங்கே இந்த ஊரில்  நாப்பது வருஷம் தங்கி இருந்துருக்கார்.  ஔஷத மலையில் உக்கார்ந்து தவம் செய்யும்போது, பெரியதிருவடி தரிசனம் கொடுத்து, 'குதிரைத்தலை' சமாச்சாரம்  சொல்லி  பரிமுகத்தானை தியானம் செய்யச் சொல்லி இருக்கார்.
அதே போல் தியானிச்சதும்  ஹயக்ரீவர் தரிசனமும் கிடைச்சுருக்கு! அவர் முயற்சியால்தான் மலைமேல் ஹயக்ரீவர் சந்நிதி கட்டி இருக்காங்க. கல்விக்கடவுளான ஹயக்ரீவருக்கு உண்டான முதல் கோவில் இதுதானாம்!

ஹயக்ரீவர் மீதும் தேவநாதப் பெருமாள் மீதும்  தேவநாய பஞ்சாசத், அச்யுத சதகம், மும்மணிக்கோவை, இன்னும் சில சிற்றிலக்கியங்களையும்   இயற்றி இருக்கார். இவருடைய காலம்  பதிமூணாம் நூற்றாண்டில் இருந்து பதிநாலாம் நூற்றாண்டு வரை! ஜீவிச்சு இருந்தது  சரியா  நூத்தியொரு வருஷம்  !  இவருக்கான சந்நிதிதான் இங்கே கோவிலுக்குள்ளேயும்!
'வாடிம்மா, உனக்காக நான் இருக்கேன்'னு ஆண்டாள் மட்டும் சந்நிதிக்குள் இருந்து கூப்பிட்டாள். அழகி! தூமணி மாடத்து ஆச்சு!
பிரகாரத்தின் மூலையில் இருக்கும் புள்ளையாரைச் சுத்தி ஏகப்பட்ட பரிக்ஷை நம்பர்கள்.  இப்படி அசிங்கப்படுத்தினால் ஃபெயில்தான்.



அப்பதான் நீலமேகபட்டாச்சார்யாரைப் பார்த்தோம். இந்தக் கோவிலில் ஏகப்பட்ட வருஷம் சர்வீஸ். பரம்பரைப் பட்டர் ஸ்வாமிகள் !திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனைன்னு பெருமாளைத் தொட்டு சேவை செய்த கைகள்! இப்போ ரிட்டயர் ஆகிட்டாராம். ஆனாலும் பெருமாளைப் பார்க்காமல் இருக்க முடியுமோ?  இப்பவும் பெருமாளுக்குச் சேவை பண்ணுவதில் குறைச்சல் இல்லை. ததியன்னம் பிரஸாதம் செஞ்சு விநியோகிக்கிறார். நாமும் ஒரு தொகை அவரிடம் கொடுத்து அதைப் பிரஸாதம் செய்யப் பயன்படுத்திக்கச் சொன்னோம்.
இன்றைக்கு அவருக்கு நக்ஷத்திரப் பிறந்தநாளாம்.  ஆச்சு எம்பத்தியேழு வயசு!  இவரைப்பற்றி அப்ப (சம்பவம் நடந்த சமயம்! ) ஃபேஸ்புக்கில் எழுதுனப்ப, நம்ம சுமிதா ரமேஷ் (ஃபேஸ்புக் ப்ரபலம்) இவர், அவர்களுடைய உறவினர் என்று சொன்னாங்க. நல்லா இருக்கட்டும். பெருமாளின் அருள் இவருக்குக் கிடைக்கணும்னு மனதார அப்பவும் இப்பவும் வாழ்த்தினேன்!

வெளியே வந்ததும் எதிரில் இருக்கும்  மலை ஏறிப்போய் ஹயக்ரீவரை தரிசிக்கலாமான்னு தோணுச்சுன்னாலும் 74 + 74 படிகள் ஏறி இறங்க உடல்நிலை இடங்கொடுக்காதுன்னு  கீழே இருந்தே மலைக்கோவிலுக்கொரு கும்பிடு போட்டுட்டு நகர வேண்டியதாப் போச்சு.

.....   போனமுறை கிடைச்ச தரிசனம் இப்படி. (அப்ப எழுதினது இதைவிட நல்லாவே வந்துருக்கு.) விருப்பம் இருந்தால் எட்டிப் பாருங்களேன்.


ஒரே வளாகம் என்றாலும் இந்த ரெண்டு கோவில்களுமே தனித்தனி தரிசன நேரங்களுடன் இருக்கு!
இன்றையத் தங்கல்..... இடத்துக்கு இருட்டுமுன் போய்ச் சேரணும்.....    வாங்க கிளம்பலாம்....

தொடரும்......... :-)


9 comments:

said...

இதுவரை நான் பார்க்காத, பார்க்கவேண்டிய பட்டியலில் உள்ள கோயிலுக்கு இன்று உங்கள் மூலமாகச் செல்லும் வாய்ப்பு. நன்றி.

said...

பார்க்கவேண்டிய கோவில். இன்னும் வேளை வரலை. கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

said...

கடைசியாக இரண்டு சன்னதியை விட்டு விட்டீர்கள். ஒன்று ராமர் சன்னதி. ராமர் சீதை லக்ஷ்மணன் ஆகிய பஞ்சலோக சிலைகள் உள்ளன.. மற்றொன்று படியளந்த பெருமாள். உலகுக்கெல்லாம் படியளந்து விட்டு காலி மரக்காலை தலையணையாக வைத்து கிடக்கும் கோலமாக கருங்கல் சிலை. நான் மரக்கால் காலிதானா என்று துழாவி பார்த்த சம்பவமும் உண்டு.
Jayakumar

said...

ஒரு முறை இக்கோவிலுக்குச் சென்றதுண்டு - நினைவு தெரியாத வயதில். கடலூர் பல சமயங்கள் சென்றாலும் ஏனோ இப்படி கோவில்களுக்குச் சென்றதில்லை.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எல்லாத்துக்கும் நேரம் ஒன்னு அமையணுமே...... விரைவில் அவன் தரிசனம் கிடைக்கட்டும்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

விரைவில் தரிசனம் லபிக்கட்டும்!

said...

வாங்க ஜயகுமார்,

ராமர் சந்நிதி மூடி இருந்தது...... அந்த படி அளந்த பெருமாள் சந்நிதியைப் பார்க்கவே இல்லையே.... எந்தப்பக்கம்?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உள்ளூர் கோவில்கள் என்பதால் அப்புறம் ஆகட்டுமுன்னு நானும் இருந்துருக்கேன். இப்பதான் கோவில் கோவில்னு பைத்தியமாகிட்டேனோன்னு இருக்கு :-)

said...

கோவில்களில் ஆண்டாள் சந்நிதிகளைப் பார்க்கும்போது உங்கள் நினைவுதான். தூமணிமாடம் மறப்பதில்லை.:)