Wednesday, October 17, 2018

அப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் !!!!!(பயணத்தொடர், பகுதி 23)

கேதாரீஷ்வரில் இருந்து கிளம்புன ரெண்டாவது நிமிட் பஸாடி வாசலில் நிறுத்தியாச். ஜெய்ன் கோவில்களை பஸாடின்னு சொல்றாங்க.  வளாகத்தின் உள்ளே  மூன்று தனிக்கோவில்கள் !

மூணும் வெளிப்புறம் பார்க்கும்போது வெவ்வேற டிசைனில்!
முதல் கோவிலில் மூலவர்    தீர்த்தங்கரர் சாந்தி நாத்.
அடுத்துள்ள கோவிலில் ஆதிநாத்.
கடைசியில் உள்ள மூணாவதில் பார்ஷ்வநாத்.

சாந்திநாத்தும், பார்ஷ்வநாத்தும் பதினெட்டடி உயரச் சிலைகள்!

முதல் கோவிலின் வாசல் யானைகள் 'வா வா'ன்னதும் சகுனம் சரியா இருக்குன்னு அதுக்கு முன்னுரிமை கொடுத்தேன். வாசல் மண்டபத்துலேயே கடைஞ்செடுத்தத் தூண்கள். ஆனால் மினுமினுப்பு மிஸ்ஸிங்.  நல்லா உருட்டலை போல.....
இருட்டாத் தெரிஞ்ச வாசலுக்குள் போறோம். ரொம்பவே லேசாத்தெரியும் வெளிச்சத்தில் மின்னும் தூண்களோடு மண்டபம் ஒன்னு விசாலமாய். அந்தாண்டை கருவறையில் எல்லாம் துறந்து நிக்கிறார் நம்ம சாந்திநாத், பதினெட்டடி உசரத்தில்!

தலைக்குப்பின்னே  படம் எடுத்து நிற்கும் ஏழுதலைப் பாம்பு!  இங்கே  நமக்கும் படம் எடுக்கத்தடை இல்லை  :-)
மூணாவது கோவில் முன்னால்  பெரிய கல் கொடிமரம்!  அதுக்கு அந்தாண்டை கோவில் புஷ்கரணி. வலதுபக்கம் முன்மண்டபத்தோடு கோவில். உயரத்தூண்கள்!





பார்ஷ்வநாத்தும் பதினெட்டடியில்!  கிட்டப்போய்க் கும்பிடலாம்.... ஆனால் எல்லாம் இருட்டு. கண்கள் பழகக் கொஞ்ச நேரம் எடுத்துச்சு!
இந்தக் கோவில்கள் எல்லாமே தொல்துறையின் கவனிப்பில்தான்.   தினப்படி பூசை இருக்காதுபோல....  மூர்த்திகளின் காலடியில்  கொலுசு போட்டாப்லெ கொஞ்சூண்டு பூக்கள் வச்சுருந்தாங்க. ஓரமா முணுக் முணுக்ன்னு ஒரு விளக்கு .
நடுவிலே இருக்கும் ஆதிநாத் கோவில் ரொம்பப்பழசாத் தெரிஞ்சது.   ஆனால்  மூணில் இதுதான் கடைசியாக் கட்டுனதுன்னு விவரம் கிடைச்சது!!  அளவிலும் சின்னதுதான்.  வாசலில் யானைகளும், திண்ணைவச்ச முன்மண்டபமுமா அழகு!


மூலவரும் சின்ன சைஸில். நின்ற கோலம்!

இந்த ஆதிநாத்தான் முதல் தீர்த்தங்கரர். இவருக்கு இன்னொரு பெயரும் இருக்கு! ரிஷபதேவர்!

இவருடைய இளைய மகன்தான் பாஹுபலி. நாம் ஷ்ரவணபெளகுலாவில் பார்த்தோமே அவர்!. இவர் ஞானநிலை அடைந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டாலும் இந்த இருபத்திநாலு தீர்த்தங்கரர்கள் வரிசையில் இவர் இல்லை!
சமண மதத்தில் பிறவிப்பெருங்கடலைக் கடந்து ஞானநிலை அடைந்தவர்களைத் தீர்த்தங்கரர் என்று வழிபடறாங்க!  இதுவரை இருபத்தினான்கு தீர்த்தங்கரர்கள் அவர்களுடைய மதத்தில் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்கள் பெயரிலேயே வெவ்வேறு  ஊர்களில்,  கோவில்கள் உண்டு.

நம்ம சிங்காரச் சென்னையிலேயே எனக்குத் தெரிஞ்சு  ரெண்டு  ஜெய்ன் கோவில்கள் இருக்கு, தெரியுமோ?  ஒன்னு ஜி என். செட்டித் தெருவில் இருக்கும் சாந்திநாதர் கோவில்.  இன்னொன்னு கச்சேரி ரோடில் இருந்து கபாலி கோவிலுக்குத் திரும்புவோம் பாருங்க... அந்த  இடத்தில்!  இது பார்ஷ்வநாத் கோவில்னு நினைக்கிறேன். இதுவரை உள்ளே போனதில்லை.
சென்னையில் மட்டும் இருபத்தியொரு ஜெயின் கோவில்கள் இருக்காமே!!!! இது எனக்குப் புதுத் தகவல்!
ஆதிநாத்துக்குப்பின் அஜிதநாத்,அபிநந்தநாத், சுமதிநாத், பத்மபிரபா, சுபர்ஷ்வநாத், சந்திரபிரபா, புஷ்பதந்தர், சீதளநாத், சிரேயன்சுவநாத், வசுபூஜ்ஜியர், விமலநாத், அனந்தநாத், தருமநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனீஸ்வரநாதர், நமிநாதர், நேமிநாதர், பார்ஷ்வநாதர்  இப்படி இருபத்திமூணு தீர்த்தங்கரர் வரிசையில்,  கட்டக்கடைசியா  மஹாவீரர் இருக்கார். இவர் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு. கலி முத்திப்போனதால் அவருக்குப்பின் யாருமே தீர்த்தங்கரர் ஸ்தானத்துக்கு உயரலை போல!

ஹொய்சாலர்கள் ஆதிகாலத்துலே சமண மதத்தினர்தான். இவர்களுடைய ஆட்சி சுமார் முன்னூத்திப்பதினேழு  வருஷங்கள் நடந்துருக்கு!  அப்போ ஏராளமான சமணக் கோவில்கள் (பஸாதி)கட்டியிருக்காங்க.  போனமுறை 2010லே  உடுபி ஸ்ரீக்ருஷ்ண தரிசனத்துக்குப் போன பயணத்துலே நிறைய சமணக்கோவில்களையும் பார்த்தோம். விவரங்கள் எல்லாம் நம்ம துளசிதளத்தில் பயணப்பகுதியில் :-)

ஆ 'ரம்பம்' இங்கே ...  


பிட்டிதேவர், நம்ம ராமானுஜரால் வைணவமதத்துக்கு மாறி விஷ்ணுவர்தன் என்ற பெயருடன் ஆட்சி செஞ்ச காலத்தில்தான் சோமநாத்பூர் சென்னக்கேசவா கோவில், காலையில் நாம் பார்த்த ஹொய்சாலேஷ்வரா கோவில் எல்லாம் கட்டுன அதே காலக்கட்டத்தில்தான் இப்போ நாம் பார்க்கும்  மூணு கோவில்களும்( கொஞ்சம் முன்னே பின்னேன்னு ) கட்டப்பட்டது.  பிட்டிதேவர்தான் மதம் மாறினாரே தவிர அவர் மனைவி மஹாராணி ஷாந்தலா தேவி சமணமதத்தைவிட்டு வெளியே வரலை!
(பொதுவாப் பெண்களுக்கு மனதையும் மதத்தையும் மாத்திக்கறது கஷ்டமே! )

ஹிந்துக்கோவில்களின் வெளிப்புறச் சுவற்றில் இருக்கும் சிற்பக்கூட்டங்கள் ஒன்னும் இங்கே இல்லை.  வெறும் கற்சுவர்தான்!  (ஆனால் நம்ம யானைகள் வாசலில்  இருக்கின்றன !)

வழிபாடு இல்லாத கோவில் என்பதாலும், அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து போகாததாலுமோ என்னவோ  பராமரிப்பு அவ்வளவா இல்லை. கோவில் குளம்.... ப்ச்.... ஹூம்...
தொல்லியல் துறையில் இருக்கும் இக்கோவில்களை, யுனெஸ்கோ பாரம்பரியக்கோவில் பட்டியலில் சேர்க்கப்போவதாக ஒரு தகவல். ஒருவேளை அவுங்க பார்த்துக்கட்டுமுன்னு இவுங்க விட்டுட்டாங்களோ?

என்னவோ  போங்க.....

தொடரும்....... :-)



முக்கிய அறிவிப்பு: சிலபல காரணங்களால் துளசிதளத்துக்கு ஒரு வாரம் லீவு தேவைபடுகிறது.

மீண்டும் அடுத்த புதன் சந்திக்கலாம். புரிதலுக்கு நன்றி !






9 comments:

said...

கடந்த ஆண்டு பயணத்தின்போது இக்கோயிலுக்குச் சென்றுவந்தோம். புகைப்படங்களும் எடுத்தோம். கோயில்களில் இருந்த தூண்களைக் கண்டு அதிகம் வியந்தோம். பலருக்கு இந்த கோயில்கள் இருப்பது தெரியவில்லை என்பதை உணர்ந்தோம்.

said...

மிக அருமை. நன்றி.

said...

சமணக் கோயில்கள் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்கவே உண்டு. மகேந்திரவர்மன் காலம் வரைக்கும் பல்லவர்களும் சமணர்கள்தானே. அவ்வளவு ஏன்... இளங்கோவடிகள். கோவலன் கண்ணகி எல்லாருமே சமணர்கள்தானே. குஜராத்தை விட தமிழ்நாட்டில் நிறைய சமணக் கோயில்கள் இருக்குன்னு சொல்றாங்க.

சிலபல கோயில்கள் சமணக் கோயில்களாகவே இருக்க, பலப்பல கோயில்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இருந்த சிலைகள் மாற்றப்பட்டு சைவ வைணவக் கோயில்களாக மாறிருச்சாம். உள்ள சிலைய உடைச்சு மாத்தினாலும் அது முன்னாடி சமணக் கோயில்களா இருந்ததுக்கான அடையாளங்கள் பல கோயில்கள்ள இருக்குன்னு சொல்றாங்க. அந்தக் கோயில்களைப் பத்தியும் அந்தக் கோயில் அடையாள ஆதாரப் புகைப்படங்களையும் எங்கயோ பாத்தேன். எங்கன்னு மறந்து போச்சு.

தூத்துக்குடி பக்கம் இசக்கி கோயில்னு சொல்வாங்க. அதுகூட சமண மதத்துல வர்ர ஒரு பெண் தெய்வமாம். இன்னைக்கு நாம மாலையப் போட்டு சூடங்காட்டி திருநீறு குங்குமம் கொடுத்து கன்வர்ட் பண்ணீட்டோம் :)))))))))))))

விடுமுறை நல்ல பயனுள்ளதாக அமையட்டும் டீச்சர். நீங்கள் வணங்கும் கார்மேனியன் உங்களுக்கு அருளும் நலமும் அருளட்டும்.

said...

புகைப்படங்கள் அருமை!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஹளபீடு போறவங்களுக்கு டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் ஹொய்சாலேஷ்வர் கோவில்தான். போனமுறை நாங்க போனபோதும் நேரே அங்கேதான் கொண்டுபோய்விட்டாங்க.

கொஞ்சம் விளம்பரப்படுத்தினால் இந்த சமணக்கோவில்களுக்கும் மக்கள் வருவாங்க.... ஆனால் சாமிக்கே விளம்பரம் தேவையான்னு ஒரு எண்ணம்.... வருதே!

எந்தக் கோவிலானாலும் சரி, அங்குள்ள இறைவன் விரும்பினால்தான் நமக்கு தரிசனம் கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. கோவில்வாசல்வரை போயிட்டும்கூட சிலசமயம் தரிசனம் வாய்ப்பதில்லை.... எல்லாம் அவனிஷ்டம், இல்லையோ?

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஜிரா.

அதென்னவோ உண்மைதான். மூலக் கோவிலை மாத்தறது அந்தக் காலத்துலேயே இருந்துருக்கு. அந்தந்தக் காலக்கட்டத்தில் என்ன மதம் பலமா இருக்கோ அந்த சாமியை வச்சுருவாங்க போல! வல்லவனுக்கே வாழ்வு !

குமரி மாவட்டத்தில் திற்பரப்புக் கோவிலில் கூட சமணர் சிலைகள் வெளிப்புறச் சுவர்களில் இருக்கே!

நமக்கு எந்த சாமி ஆனாலும் சூடம் காட்டுனால்தான் திருப்தி... அதான்..... ப்ச்...

said...

வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன்,

ரசித்தமைக்கு நன்றி!

said...

அருமை..

குறிச்சு வச்சுகிறேன் அந்த பக்கம் போகும் போது உதவியா இருக்கும் ...

நிறைய பேர் நாத் ல முடியுது ..

என் பெரிய பையன் பேரு கீர்த்திநாத் ...