Friday, October 12, 2018

ரெட்டை சிவன் கோவில் !!!!(பயணத்தொடர், பகுதி 21)

பெலவாடியில் இருந்து கிளம்பின பதினெட்டாம் நிமிட் ஹளேபீடு வந்துட்டோம்.  இங்கே என்ன விசேஷம்? கோவில்தான்! வேறென்ன? ஹொய்சாலேஸ்வரர் கோவில்.  சிவன் கோவில். ஏறக்கொறைய  கால்நூற்றாண்டுக்கு முன்னால் வந்து பார்த்த கோவில்தான். அப்போ பதிவர் அவதாரம் எடுக்கலை என்பதால் சரியாப் பார்த்த நினைவில்லை.  ஆனால் இங்கே நாப்பது பழைய இந்திய நாணயங்கள்   காலணா, அரை அணா, ஓட்டைக் காலணா வகைகள் நாப்பது  வாங்கினேன்.  பேரம் பேசி நூறில் முடிஞ்சது :-)
அது போகட்டும்..... வாங்க உள்ளே போய்ப் பார்க்கலாம். இந்தப் பகுதியிலே ஒரு காலத்தில் கடலைப்போல  பெரூசா ஒரு ஏரி இருந்துருக்கு!  அப்போதைய மன்னர்கள் ஆட்சியில் வெட்டிவச்ச ஏரிதான்!  அந்த ஏரித் தண்ணீரே அகழியாகக் கோட்டை மதிலைச் சுத்திவரும் வகையில் ஒரு கோட்டையையும் உள்ளே ஒரு அரண் மனையையும் கட்டி,  இதையே தலைநகரமாகவும் ஆக்கி இருந்துருக்காங்க. த்வாரசமுத்ரான்னு அப்போ  இந்த  நகரத்துக்கு ஒரு பெயரும் இருந்துருக்கு!

நம்ம விஷ்ணுவர்தனின் பேரன்   இரண்டாம் வல்லாளதேவர் காலத்துலே  மேற்கே காவிரி முதல் கிழக்கே கிருஷ்ணா நதிவரை இடைப்பட்ட பிரதேசம் முழுசும் ஹொய்சலா சாம்ராஜ்யம்தான்!  சீரும், சிறப்பும் செல்வச்செழிப்புமா  இருந்த சமயத்தில்தான்  கோவில்களையெல்லாம்  கலை அழகோடு கட்டி இருக்காங்க.

 தென்னிந்தியா முழுசும்  அமர்க்களமா இருந்த காலம்!  தில்லி சுல்தானுக்கு சேதி தெரிஞ்சதும்,  படைகளை மாலிக்காஃபூர் தலைமையில் அனுப்பிக் கொள்ளையடிச்சுக்கிட்டு ஒட்டகங்களில் ஏத்தி சுமை சுமையா தங்க நகைகளையும்,  வெள்ளிப் பாத்திரங்கள் இப்படிக் கொண்டு போனதாக வரலாறு!

அதுக்கப்புறம்தான் தலைநகரை பேலூருக்கு மாத்திக்கிட்டாங்க.  த்வாரசமுத்ரா  பழைய நகரமா ஆகி இருக்கு!  ஹளேபீடு (பழைய நகரம்) பெயர் வந்தது இப்படித்தான்!   அந்த ஏரி, இன்னும் அதே பெயரில் கோவிலுக்கு அந்தாண்டை இருக்கு!
வளாகத்துக்குள் நுழையறோம். ரொம்பவே பெருசு.  பரந்த புல்வெளிக்கு நடுவே இவுங்க வழக்கப்படி கோபுரமில்லாத கோவில் சினிமாஸ்கோப் மாதிரி அகலமா இருக்கு!
நடைபாதையில் போகும்போதே.....    கைடு கிடைச்சுட்டார். இவர் பெயரும் ரகு!  இங்கே இந்தப்பெயர்தான் ஆகிவந்ததோ?  அஞ்சு மணி நேரத்தில் நாம் சந்தித்த  மூன்றாம் ரகு இவர்! கைடு லைசன்ஸ் பார்த்தேன். காலாவதி ஆகி இருக்கு. ப்ச்.....
மேடைக்கோவிலின் ஆரம்பத்தில் படிகள் ஆரம்பிக்கும் இடத்துலேயே ரெண்டு பக்கமும் சின்னதா சந்நிதிகள்.  மேடைக்கு ஏறிப்போனால் அங்கேயும் ரெண்டு சந்நிதிகள்.  அதுக்கப்புறம் இன்னும் எட்டுபடியில் கோவிலுக்கான வாசலும் த்வாரபாலகர்களுமா !
மேடைச்சந்நிதியில் புள்ளையார் இருக்கார்!  அழகெல்லாம் வெளியே கொட்டிக்கிடக்குதுன்னு  முதலில் அங்கெ இருந்துதான் ஆரம்பிக்கிறாங்க இந்த வழிகாட்டிகள்!
வெளிப்புறச் சுவர்களில் பாதி உயரத்துக்குச் சிற்பங்கள் வரிவரியா, வரிசை வரிசையா......மேல்பாதியில் கற்பலகையில் ஆயிரங்கண்களா துளைகள். பலகணி? வெளிச்சமும் காத்தும்  வேணும்தானே?
கீழே யானையில் ஆரம்பிச்சு, சிங்கம், குதிரை, வீரர்கள் (காலாட்படை?) இசைக்கருவிகளுடன் ம்யூஸிக் பார்ட்டி,  யாளி, அன்னம், சாமி,  திரும்ப வாத்தியகோஷ்டி, சாமின்னு  இருக்கும் வரிசையில் இடைக்கிடையே  பூக்களின் வரிசை போல ஒரு டிஸைன். மேல்வரிசையில் கூட்டத்தோடு கூட்டமா  பாலியல் சிற்பங்கள் வேற!
சிரச்சேதம் செஞ்சு வச்சுருக்காங்க பாற்கடலைக் கடையும் தேவாசுரர் வரிசையில்....   ஆரம்பத்துலேயே புள்ளையாரில்  கை வச்சாச்சு....   மனசு எப்படித்தான் வருதோ.....

 வலம்போறோம். இடதுபக்கம் தனி மண்டபத்தில் பெரிய நந்தி !  இவருக்கு முன்னால் கோவிலின் இன்னொரு வாசல்!  இதுதான்  தலைவாசலா இருக்கணும்.  கோவிலுக்கு நாலு பக்கங்களிலும் நாலு வாசல் இருக்கு இங்கே!
வாசல் நிலைக்கு மேலே உடுக்கையும் சூலமுமா  சிவன்! துவாரபாலகர்கள் கைகளில்லாத நிலையில்.....
கோணங்கள் இருக்கும் வகையில்தான் இங்கேயும். எல்லாப் பகுதிகளிலும் ஒன்னையும் விட்டுவைக்கலை. பலகணி இல்லாத சுவர்களில் கடவுளர்கள்.  கொஞ்சம் பெரிய அளவுள்ள சிலைகள்தான்.  நுணுக்கமான சிற்ப வேலைகளை நின்னு ரசிக்க நமக்கு ஆயுள் போதாது....
(அடிக்கடி இதைச் சொல்றேனோ....  என்ன செய்யறது.....  வேலைப்பாடுகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோணுது....)
இரண்டாம் வல்லாளதேவரும் அவருடைய மனைவியுமா சேர்ந்து கட்டி இருக்கும் கோவில் இது!  ஆளுக்கொன்னு ரெண்டு  முக்கிய சந்நிதிகளை அமைச்சுருக்காங்க. ஹொய்சாலேஸ்வரர், ஷாந்தலேஷ்வரர்னு  லிங்க ரூபத்தில் சிவன்கள் கருவறைகளில். ரெண்டு கோவில்கள்னு கைடு சொன்னார்.
தாத்தா பாட்டியின் நினைவுக்காகக் கட்டுனதாம்.  பாட்டி ஷாந்தலா தேவியைக் காலையில் பேலூர் கோவிலுக்குள் பார்த்தோமே.... நினைவிருக்கா?  நாட்டியராணி !
ராமாயண,மஹாபாரதக் காட்சிகள் அங்கங்கே இருக்கு. நமக்குத் தெரிஞ்ச 'கதை' என்பதால் சுவாரசியம் கூடுனது உண்மை :-)
வாலி சுக்ரீவன் சண்டையில் ஏழு மரத்துக்கு அந்தாண்டை ராமன் மறைஞ்சுருந்து அம்பு எய்துட்டான்!
  அபிமன்யூ சக்ர வ்யூகத்தில்  ...........
மிஸ்ஸைல்ஸ் வுட்டு சண்டையான சண்டை அர்ஜுனனுக்கும் கௌரவர்களுக்கும்.

பாரதப்போர் ?  ராமாயணமா?
சிவன்!   பக்கத்துலே குன்றைக்குடையாய் ஏந்தி....


 வேலையை இப்படி ரசித்துச் செய்யணும்.கல்லில் முத்துமணி மாலை...... பார்த்தீங்களா?
 மகிஷாசுரமர்த்தினி
அபிமன்யூவா இருக்குமோ?
 நாகலோகத்தில் நிம்மதியா உக்கார்ந்து தவம் செய்யறதைப் பார்த்தால்....

ப்ச்.....
 வாமனன்,  தானம் வாங்குமுன்னும் வாங்கியபின்னும்!

  கருடன் எதிரிகளுடன்...
 யானை ஓட்டம்.....
நாட்டியத்துலே இப்படி ஒரு பாதத்தைத் திருப்பி வச்சு நின்னு பாருங்க....   எப்படி....  முடியுதா?

     கொஞ்சம் ரெஸ்ட்
 துரியோதன்
பீமன்....
 ராவணன்.....

 சூரியன்


கோணங்கள் சந்திக்கும் இடம்...   ஹைய்யோ...
முழுசா ஒரு சுத்து வந்துருந்தோம்.  இப்போ உள்ளே போகலாமா?


கடையறதே முழு வேலையா இருந்துருக்கும்போலே!   சின்னதும் பெருசுமா கடைஞ்சு தள்ளி இருக்காங்க !
பூஜைபுனஸ்காரங்கள் ஒன்னும் இங்கே நடக்கறதில்லையாம். ஒரு பூச்சரமும், ஒரு விளக்குமா மூலவர் தனியா இருக்கார்.  நல்லவேளை... இருட்டுலே அம்போன்னு விடாமல் இதுவாவது செஞ்சுருக்காங்களே!  சந்நிதிக்கு முன்னால்  சின்ன நந்தி.
நந்திக்கு நாம் வந்து போன சேதியை, எஜமானரிடம் சொல்லவேணுமுன்னு காதுலே ஓதிட்டு வெளியே பெரிய  நந்தி மண்டபத்துக்கு வந்தோம்.
எம்பத்தியேழு வருஷமாத் தொடர்ந்து கோவில் வேலை நடந்துக்கிட்டே இருந்தும், முழுசா இன்னும் முடியவே இல்லையாம்.  நந்தியில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்காமே!
அதுக்கென்ன... நவீன சிற்பிகளா நாங்க இருக்கோமேன்னு யாரோ பலர், நந்தி தேவரின் ப்ருஷ்டத்தில் கைவரிசை காட்டிப் போயிருக்காங்க.  இதுக்குன்னே ஆணி எல்லாம் எடுத்துக்கிட்டு வருவாங்களோ?  முழிச்சுக்கிட்டத் தொல்லியல்துறை, தடுப்பு போட்டு வச்சுருப்பதால்  மாடர்ன் செதுக்கல்கள் குறைஞ்சுருக்கு.

தொல்லியல்துறையின் கவனப்பில் இருக்கும் இடம், கோவிலாக இருக்குன்றதால்  உள்ளே வரக் கட்டணம் ஒன்னுமில்லை.  பிக்னிக் வந்தமாதிரி கூட்டம் நிறைய இருந்தது.  அதிலும் நந்திமண்டபத்துலே இடம்புடிச்சுக்கிட்டு நகராமக் கலாட்டா செஞ்சுக்கிட்டு ஒரு இளையகூட்டம்.  மொழிதான் வேற.... மத்த எல்லாம்....
நந்திக்குப் பின்பக்க சந்நிதியில்  சூரியன்.
தோட்டத்தில் புள்ளையார் !

கோமடேஷ்வரர் ஒரு பக்கம்!
  காலை ஏழரை முதல் மாலை ஏழரை வரை திறந்துதான் வைக்கிறாங்களாம். வெளிநாட்டுக் கட்டட வல்லுநர்கள் பலர் வந்து பார்த்துப் பாராட்டிப் போயிருக்காங்களாம்!   இங்கே வாங்குன ஒரு புத்தகத்தில் போட்டுருந்தாங்க.  என்ன ஆனாலும்  வெள்ளைக்காரர் சொல்லுக்கு   மதிப்பு அதிகம் இல்லையோ!!!!

ஹொய்சாலர்களின் அரசுச்சின்னம் இந்த சாலைக்கு நடுவே!

தொடரும்........ :-)

12 comments:

said...

ஒரு முறை தஞ்சையம்பதி பின்னூட்டம் ஒன்றில் தமிழக சிற்பவேலைப்பாடுகளை மிஞ்சும் வகையில்கர்நாடகக் கோவில்கள் இருக்கும் போதுஏன் யாரும் அவைபற்றி எழுதுவதில்லை என்று கேட்டிருந்தேன் அந்தக் குறையை இப்பதிவு போக்கி விட்டது கல்லிலே கலை வண்ணம் என்பது இதுதானோ

said...

மிகப்பிரமாதம் நன்றி

said...

சிற்பங்களின் அழகைச் சொல்ல வார்த்தையே இல்லை. எத்தனை திறமையான சிற்பக் கலைஞர்கள்...

said...

கற்களின் வித்தியாசம்தான் (அதன் தன்மையின் வித்தியாசம்தான்) கர்நாடக கோவில் சிற்பங்கள் அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், தமிழகத்தில் கருங்கல்கள் என்பதால் அதற்கேற்ற நேர்த்தியுடனும் சிற்பங்கள் அமைந்திருக்கின்றனவோ?

said...

வெகு அழகு துளசிங்கோவ். பஞ்ச நாராயணக்கோட்டம்... காலச்சக்கரம் நரசிம்மா நாவலில் ஷாந்த்தலா தேவியைப் பற்றி வரும். நல்ல நாவல்

said...

ஹளபீடு - பழைய வீடு. ஹொய்சாளர்களின் பழைய தலையூர். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கீழ எறங்கி... வல்லாளராஜான்னு நம்ம பக்கம் சொல்ற மூன்றாம் வீரவல்லாளன் திருவண்ணாமலைக்கே வந்தாச்சு. அவரோட ஆட்சியில துவாரசமுத்திரம் என்னும் பழைய ஊரோட நினைவா அருணசமுத்திரம்னு திருவண்ணாமலைக்கு பேரு வெச்சாரு.

கல்லோட தன்மையைப் பொருத்துதான் செதுக்கும் சிற்பமும் அதோட வலிமையும் இருக்கும். வடக்க பாத்தீங்கன்னா... நல்ல வெள்ளையான சலவைக்கல்லுல சிலை வடிச்சிருப்பாங்க. ஆனா பாருங்க அதுக்கு வலிமை குறைவு. விழுந்தாலே ஒடஞ்சிரும்.

துவாரபாலகர்களோட ஒடஞ்ச கையைப் பாக்குறப்போ உள்ள ஒன்னுமில்லாம குடைஞ்ச மாதிரி இருக்கே.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

தமிழகக்கோவில்கள் போல வெவ்வேற வகையில் இல்லாமல், ஹொய்சலா மன்னர்களின் கோவில் ஒரே ஸ்டைலில் இருப்பதால் நம்ம சனம் அவ்வளவாக் கண்டுக்கலை போல....

ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... என்னமாதிரி நெளிவும் சுழிவும்.... அந்த மாக்கலில் எப்படி இழைச்சுருக்காங்கன்னு பார்த்தால்.... வாயடைச்சு நின்னது நிஜம்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,


சிற்பங்களின் முக பாவனைகள் கூட பளிச்ன்னு இன்னும் கண்ணுலேயே நிக்குதே!!!

என்னமா செதுக்கி இருக்காங்க, பார்த்தீங்களா !

கல்லின் தன்மையும் அப்படிப்பட்டதாவே இருந்துருக்கே! அதைச் சரியாக் கண்டுபிடிச்சதில்தான் அவுங்க வெற்றியே!

said...

வாங்க கண்ணன் ராஜகோபாலன்.

காலச்சக்கரம் நரசிம்மாவின் பஞ்சநாராயணம் கோட்டம் வாசிச்ச நினைவில்லை. மின்னூல் வந்துருக்கா? சுட்டி இருந்தால் அனுப்புங்களேன்....

said...

வாங்க ஜிரா.

ரொம்பச் சரி. சரித்திரத்தில் ஆழ்ந்துபோனால்... கிடைக்கும் தகவல்கள் வியப்பையே தரும்!

கல்லுக்குள் குடைஞ்சுருப்பாங்களா.. இல்லை இயற்கையாவே உள்ளே ஒன்னுமில்லாம வெற்றிடம் இருந்துருக்குமோ?

said...

கண் கொள்ளா காட்சிகள் ....அற்புதம்