Monday, October 29, 2018

மனசாட்சி சும்மா இருக்கா? ஒரே பிடுங்கல்.... !!!!! (பயணத்தொடர், பகுதி 26)

இங்கே கோட்டை ஒன்னு இருக்குன்னு  தெரிஞ்சதும் 'நம்மவருக்கு' ஒரே குஷி!   அங்கெ போயிட்டுப் போகலாமேன்னு  ஆரம்பிச்சார்.  சரி. அய்க்கோட்டேன்னு  அங்கே போனோம்.  மழையில் எங்கே இறங்கி நடந்து போய்ப் பார்ப்பதுன்னு......  வேணுமான்னு என் கவலை :-)
நல்லவேளையா  ம்யூஸியம் ஒன்னு இருக்காம். அதைப் பார்த்துடலாமுன்னு சொன்னாரா, ம்யூஸியம் வாசலில் இறங்கிப் பத்தடி நடக்கறதுக்குள்ளே நல்லாவே நனைஞ்சுட்டோம். கோட்டையாண்டை மழையைச் சட்டையே பண்ணாம நின்னுக்கிட்டு இருக்காங்க  நம்மாட்கள் இருவர் :-)

ஆரம்பத்துலே மண் கோட்டையா இருந்து, இப்போ கல்கோட்டையா நிக்குது.   திப்புவின் உபயம்.  திப்பு விட்டுவச்ச வீரபத்ரர் கோவிலை, வெள்ளையர் விட்டுவைக்கலை.  கோவிலை இடிச்சுட்டு  அதே இடத்தில் ஒரு சர்ச் கட்டியிருக்காங்க  வேறெங்கும் இடம் இல்லாதது போல்.....    காலப்போக்கில்  இந்த சர்ச்சுதான்  இப்போதைய இந்த ம்யூஸியம்.
அரசாங்க வேலையின் மெத்தனம் இங்கே அப்பட்டமாத் தெரியுது. நாம் போனப்ப அங்கேயும் பவர் இல்லை. இருட்டுக்குள்  போகணும். ஒரு எமெர்ஜன்ஸி லைட் வைக்கலாமுல்லெ?  ரெண்டு பெண்கள் ட்யூட்டியில்  மொட்டுமொட்டுன்னு இருட்டில் உக்கார்ந்துருக்காங்க.  இங்கே படம் எடுக்கக்கூடாதுன்னு ஒரு தகவல் பலகை.  ஆஹா.... எடுத்துட்டாலும்.......
ஒரு சுத்து சுத்திவர பத்து நிமிட்டே அதிகம்.  கண்ணாடிக் கப்போர்ட்லே என்ன இருக்குன்னு பார்க்க செல்ஃபோன் லைட்டைப் போட்டுக் காமிச்சார் 'நம்மவர்'.  நாலைஞ்சு உலோகச் சிலை.  பழைய ரெக்கார்ட் நோட்டுகள், ரெண்டு மூணு புள்ளையார். ஆச்சு.....    இதுலே மழைக்கு ஒதுங்க சனம் உள்ளே வந்து தரையெல்லாம் ஈரம் சொட்டச்சொட்ட.....  போதும் பார்த்ததுன்னு அசோக்கை வாசலுக்கு வரச்சொன்னோம். அப்படியும் நனைஞ்சோம்தான்....
மலைப்ரதேசம், கூடவே மழையும் சேர்ந்துருச்சு.கொஞ்சம் அதிகமாவே குளிர் ஆரம்பிச்சது..... அறைக்குத் திரும்பியதும் மைஸூரில்  வாங்கிய ஷால் எடுத்துப் போர்த்திக்கிட்டேன்.  மகளுக்குப் புடவை வாங்கிய கடையில்தான் இதுவும்.  வாழைநாரில் செஞ்ச 'துணி'யாம்.  விலை கொஞ்சம் அதிகமோன்னு தோணுச்சு. ஆனால் நியூஸியில் இது புதுமை இல்லையோன்னு.....

'வசதி' க்கு எதிரில் ஒரு கடையில் குடைகளைத் தொங்க விட்டுருந்தாங்க. வானவில் நிறங்கள்! பெருசா இருக்கு. நாம் சின்னதா ரெண்டு குடை வாங்கினால்  அவரவருக்கு ஆச்சுன்னு கேட்டால் ஒரே டிஸைனில் கிடைக்கலை.  போகட்டுமுன்னு வாங்கினோம்.

கோவில் ஒன்னு  நல்லா பெருசா இருக்குன்னதும் கிளம்பியாச்சு. ஸ்ரீ ஓம்காரேஷ்வர் கோவில். அசப்பில் பார்க்க  மசூதி போல வெங்காயக்கூம்பு!  ஊரைச் சுத்திச்சுத்தி வந்ததில்   தூரத்தில் வெங்காயம் கண்ணில் பட்டுக்கிட்டே இருந்ததே.... அது இதுதானா!!!

நம்ம வசதியில் இருந்து ரெண்டே கிமீ தூரம்தான்.  சின்ன கேட்டில் நுழைஞ்சு உள்ளே போனால் பெரிய குளம்!  குளத்துக்கு நடுவில் ஒரு  குட்டியான அமைப்பு. மண்டபமுன்னு சொல்றதா? இல்லே சந்நிதின்னு சொல்றதான்னு தெரியலை....  அந்த  இடத்துக்குப்போக  ஒரு நடைபாதை தண்ணிக்கு மேலே போட்டுருக்காங்க.   அந்த சந்நிதிக்கு நேரெதிரே கோவில் வாசல்! குளத்துக்கும் பாதைக்கும் சுத்திவரக் கம்பித்தடுப்பு!  நல்ல ஆழமாம். அறுபதடின்னு ஒரு பேச்சு!(நெசமாவா? )

சுமாரா நாலு க்ளிக் ஆனதும், கோவிலுக்குப் போகும் படிகளாண்டை போனோம். காலணிகள் வைக்க ஒரு இடம். பக்கத்துலே கோவிலுக்கான பூக்கள் வகைகளை விற்கும் சிறு வியாபாரிகள்.

ஒரு இருபதுபடிகளில் ஏறினால் கோவில் வாசல். பெருசா பிரகாரம். கண்ணெதிரே மூலவர் ஸ்ரீ ஓம்காரேஷ்வர் சந்நிதி!  தரிசனம் ஆச்சு.  சிவன்,   வழக்கம்போல் லிங்க ரூபத்தில்!


வளாகத்தின் நடுவிலே இருக்கும் கருவறையைச் சுத்தியே  வெராந்தா போல் இருக்கு. உள்ப்ரகாரமுன்னும் வச்சுக்கலாம்.   வெளியே  சுத்திவர நாலுபக்கங்களிலும்  அகலமான திண்ணைகளோடும் நீண்ட கட்டடங்கள்.  கேரளா கோவில்கள் நினைவுக்கு வராமல் இருக்கச் சான்ஸே இல்லையாக்கும்!  அந்தக் கட்டடங்களின் வெளிப்பக்கச்சுவர்களில் கடவுளர்களின் உருவங்களை வரைஞ்சுருக்காங்க. ரொம்ப அழகான ஓவியங்கள்.  கிட்டே போய் நின்னு பார்க்க முடியாமல் மழை.


1820 ஆம் ஆண்டு, அரசர்   இரண்டாம் லிங்கராஜேந்திரா கட்டுன கோவிலாம்.  ஏன் கட்டுனாருன்னு ஒரு கதையும் இருக்கு!

அரசர் செய்யக்கூடாத ஒரு செயலை இவர் செய்யும்போது ஒரு அந்தணர் பார்த்துடறார்.  வெளியே தெரிஞ்சால் அசிங்கமாப் போயிருமேன்னு நினைச்ச அரசர், கண்ணால் கண்ட சாக்ஷியைப் போட்டுத் தள்ளிடறார்.

 நிம்மதியாச்சுன்னு இருக்கமுடியுதா?  ஒரு சாக்ஷி போனால்... இப்போ மனசாக்ஷி போட்டுக் கொல்லுது..... கொஞ்சம் நல்லவர் போல!

தாங்க முடியாத ஒரு கணத்தில் தெய்வமே கதின்னு  சாமியை வேண்டிக்கிட்டு, கோவில் ஒன்னு கட்டித்தரேன். என் குற்றத்தை மன்னிச்சுருன்னு  பேரம் ஆச்சு.  அப்போ கட்டுனதுதானாம். காசியில் இருந்து  சிவலிங்கத்தைக் கொண்டுவந்து இங்கே பிரதிஷ்டை செஞ்சு,  ஓம்காரேஷ்வர் என்ற நாமகரணமும் ஆச்சு.

கோவிலைக் கட்டுனதுதான்  கட்டுனாரே.... எதுக்கு வெங்காயத்தை வச்சாருன்னு தெரியலையே..... இதையே பூண்டுக் கூம்பா வச்சுருந்தால்  குருத்வாரா ஸ்டைலா ஆகி இருக்கும்.  அரபிக்கட்டடக்கலையைச் சேர்த்தால் புதுமையாக இருக்குமுன்னு  அமைச்சர்கள் யாராவது ஆலோசனை சொல்லி இருப்பாங்களோ?

இதுலே பாருங்க.....  'கோவில் கட்டுனப்ப கூம்பெல்லாம் இல்லை. அப்புறம் திப்பு சுல்தான் காலத்துலே  மசூதிக் கூம்புபோல செஞ்சு இங்கே வச்சுட்டாங்க'ன்னு   சிலர் சொல்றதைப் பார்த்தால்...... சிரிப்புதான். திப்பு இறந்தது 1799 இல். இந்தக் கோவில் கட்டுனது 1820 இல்.  இருபத்தியோரு வருஷத்துக்குப்பின் ஆவியா வந்து கட்டி இருப்பார் போல!  என்னவோ  போங்க.....
மொத்தத்துலே மடிகேரியில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இந்தக் கோவிலும் ஒன்னு என்பதை மறுக்க முடியாது!   வெளியே குளத்துக்கு மூணு பக்கமும் நீளநீளக் கட்டடங்களாக் கட்டி விட்டுருக்காங்க.!
இந்த மழைமட்டும் இல்லைன்னா, இன்னும் கொஞ்சம் நல்லா நின்னு பார்த்து ரசித்திருப்பேன்.....

  ஊரைச்சுத்திச்சுத்தி (ஒருவழிப்பாதையில்) வரும்போது ஒரு சிலை ஒன்னு கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு. ஃபீல்ட் மார்ஷல் கரியப்பா அவர்களின் சிலை.   என்னவோ சரியான கோணத்தில் படம் எடுக்க முடியலை  :-(
ராச்சாப்பாட்டுக்குத் திரும்பவும்  உடுபி  அம்பிகா உபஹார்தான்!  குளிரா இருக்குன்னு சாப்பாடானதும்  கொடகு காஃபியைக் குடிக்கலாமுன்னு  ஆர்டர் செஞ்சால்.... வந்தது ரொம்ப சுமார்...  :-(
Thanks to google  for the above pic.

தொடரும்......... :-)


7 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

வாழநார்ல துணியா... எப்படியிருக்கும்னு பாக்கத்தோணுது. வாழநார் நஞ்சிறாதா?

பார்வதி : நந்தி, என்ன கொண்டு போற?
நந்தி : சிவபெருமானுக்கு அல்வாவும் ஜாங்கிரியும் கொண்டு போறேன்.
பார்வதி : நந்திங்குறது சரியாத்தான் இருக்கு. அவர் ஓம்”காரே”சுவரர். அவருக்கு இனிப்பு கொண்டு போகலாமா? போய் பஜ்ஜியும் போண்டாவும் வாங்கீட்டு வா. ஓம்சுவேட்டேசுவரர்னு பேர மாத்தினதுக்கு அப்புறம் அவருக்கு அல்வா ஜாங்கிரி கொடுத்துக்கலாம். இப்ப அத எங்கிட்ட கொடுத்துட்டுப் போ.
நந்தி : சரிங்கம்மா.

சும்மா ஒரு மொக்க ஜோக் :)

ஓங்காரேசுவரர் கோயில் அழகா இருக்கு. அறுபதடியெல்லாம் இருக்காது. சொல்லிக்கிறதுதான். ஆனாலும் நீர் நெரம்பி தளும்ப நிக்கிறது அழகாயிருக்கு.

குடகுல மட்டும் காப்பியே குடிக்கக்கூடாது. அவங்க காப்பியே வேற. லொடலொடன்னு தண்ணியா இருக்கும். காப்பித்தூள தண்ணீல கொதிக்க வெச்சு பேருக்கு பாலை ஊத்தி ஜீனியப் போட்டு இன்னும் கொதிக்க வெச்சு தண்ணியா அரமொழ தம்ளர்ல குடிப்பாங்க.

said...

விஷ்ணு கோவில்கள் பற்றி எழுதும்போது வரும்ஃப்லோ இதில் குறைவோ சிவன் கோவில் ஆனதால்

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜிரா,

வாழைநார்லே புடவை கூட வந்துருக்காமே! என்னிடம் சணல் நூலில் (ஜூட்) பூ வேலை செய்த ஸில்க் காட்டன் புடவை ஒன்னு இருக்கு! ஒருவேளை வாழைநாரில் பூ வேலைசெஞ்சுருப்பாங்க போல ! நான் பார்க்கலை.

இந்த ஷால் நல்லாவே இருக்கு! கொஞ்சம் கனம் அதிகம். கோடையில் குளுகுளுன்னு இருக்குமாம். குளிரில் கதகதப்புமாக !

ஜோக் நல்லா காரமா இருக்கு. எனக்குத்தான் காரம் ஆகாதே.... :-)

நானும் ஆறடியைப் பத்தால் பெருக்கிட்டாங்கன்னு நினைச்சேன். பத்தாம் வாய்ப்பாடு சுலபம்தானே? :-)

காஃபிக் கொட்டை வாங்கியாந்தால் நல்ல காஃபி நாமே தயாரிக்கலாம். ஆனால்.... இங்கே கொண்டுவர முடியாது. ப்ச்....

பயணங்களில் காஃபி நல்லதா அமைவதும் அதிர்ஷ்டம்தான். பேலூர் அன்னபூர்ணேஸ்வரியில் அருமையான காஃபி. பத்தே ரூபாய்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அப்படியா சொல்றீங்க? எப்படி வருதோ அப்படித்தான் எழுதறேன். ஒருவேளை கதைகள் அவ்வளவாக இல்லாததால் இருக்குமோ?

said...

அருமை...