Friday, June 16, 2017

விஷ்ணுப்ரயாக் (இந்திய மண்ணில் பயணம் 18 )

காலையில் கண்ணைத் தொறக்கும்போதே உடம்பு பரபரன்னு  இருக்கு.  இன்றைக்கு 'அவனை' பார்க்கப்போறோம்!  அறையின் பால்கனியில் நின்னு  எதிரே நிற்கும் த்ரோணகிரி மலையையும்,  இந்தாண்டை இருக்கும்  நந்தாதேவியின்(?)அழகையும் க்ளிக்கி மாளலை. அதுவும் காலைச் சூரியன் பட்டு மலைச்சிகரம்  ஜொலிக்குதே!



நம்மவருக்குப் பின்புலத்தில்  ஹாத்தி பர்வத், த்ரோணகிரி!




சாலையில்  ராணுவ வண்டிகள் நடமாட்டம்.  டூரிஸ்ட் பஸ்களும்தான்.  பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. அட ராமா.... காலையில் ஆறேமுக்கால்தானே ஆச்சு. அதுக்குள்ளேயா?
நம்மவரும் சீக்கிரம் கிளம்பலாமான்னார்! ஹைய்யோ!!!!  இது  என்னோட  வரி இல்லையோ?  :-)  சட்னு ரெடியாகி டைனிங் ரூம் போனோம். டோஸ்ட் அண்ட் காஃபி போதும்.  வந்ததும் உள்ளே அனுப்பிட்டு வாசலுக்குப் போய்ப் பார்த்தால் முகேஷ்  வண்டியைத் துடைச்சுக்கிட்டு இருக்கார். ரெடியா? ரெடி! 

ஏழரைக்கே கிளம்பியாச்.  கொஞ்ச தூரத்தில் செக்போஸ்ட் போல  ரெண்டு மூணு ஆர்மி ஆட்கள்.  வண்டியை ஸ்லோ செஞ்சதும்  எட்டிப் பார்த்துட்டு  போகச்  சொல்லி கையை அசைச்சாங்க.
மலையேற்றம்...  பாதையைப் பார்த்தீங்களா?  ZigZag...
20 கிமீ வேகம்தான்  போகலாம்.  போகணும்.....

காலையில் வேலைக்குப்போகும் ஆட்களை ட்ரக்கில் ஏத்திக்கிட்டுப் போறாங்களேன்னு பார்த்தால்  விஷ்ணுப்ரயாக் ஹைட்ரோ நம்மை  'ஓம் நமஷிவாயா' ன்னு சொல்லி வரவேற்குது!


கிட்டத்தட்ட  முப்பத்தியொன்பது இடத்துலே அணைகளைக் கட்டி 'பவர்' எடுத்துக்கிட்டு  இருக்காங்க, இந்தப் பகுதிகளில்!  அதுலே ரொம்பவே அடிபட்டது இங்கேதான்.  நிலச்சரிவு, பேய்மழை,  கேதார்நாத் பகுதி வெள்ளச்சேதம் இப்படி நடந்து    நதி முழுசும் கற்கள் அடிச்சுக்கிட்டு வந்து  ரொம்ப டேமேஜ் ஆகிப்போச்சு.
வேலை நின்னு போனதால் மின்சார உற்பத்தி குறைஞ்சு போய் பலவிதமான கஷ்டங்கள்.  ஒருநாளைக்கு ஒரு கோடி யூனிட் மின்சாரம் நஷ்டமாம்!  இப்பத் திரும்பவும் வேலைகள் ஆரம்பிச்சு நடக்குது.

சாலை முழுசும்  பாறைகளை வெட்டிய  கற்கள்! இதுலேயும் அங்கங்கே சில மாடுகள் அதுகபாட்டுக்கு தேமேன்னு ஒரு ஓரமா மேய்ஞ்சுக்கிட்டுப் போகுதுகள். என்ன இருக்கு திங்க?
கீழே பாதாளத்தில் அலக்நந்தாவும் தௌலி கங்காவும் சங்கமம் ஆகுது.   விஷ்ணுவின் காலடி பட்டதால்  விஷ்ணுப்ரயாக் !  அரைமணி நேரத்தில் வந்துருக்கோம். பதினாலு கிமீ தூரம்தான்...  இறங்கி நின்னு கொஞ்சம் க்ளிக்ஸும், ஒரு ஒன்னரை நிமிட்  வீடியோ க்ளிப்பும்.
இங்கே ஊருன்னு   பெருசாச்  சொல்லிக்க  ஒன்னும் இல்லை.  சங்கமம் ஆகும் இடம் என்பதால் பித்ரு பூஜைக்குத் தர்ப்பணம் கொடுக்கறதுக்காக  சின்னதாப் படித்துறையும் படிகளும் கட்டி விட்டுருக்காங்க.  நாரதர் தவம் இருந்து விஷ்ணுவின் அருள் பெற்ற தலமாம்.  தண்ணீருக்கு வேகம் அதிகம் என்பதால்  நதியில் இறங்கிக் குளிக்கப்போதுமான வசதிகள் இல்லை.
ஆனால் பக்கத்துலேயே சின்னக்குளமா ஒன்னு இருக்குன்னும் அதுக்கு விஷ்ணுகுண்ட் என்ற பெயரும் இருக்குன்னு  சொன்னவர் நம்ம முகேஷ்தான்.
பாஞ்ச் ப்ரயாக் வரிசையில் இப்போ நாம் கடைசியாப் பார்க்கிறது  இதுன்னாலும்கூட,    சங்கமமாகும் நதிகளின் வரிசையில் இதுக்குத்தான் முதல் இடம்!   மலையில் இருந்து இறங்கினதும் விஷ்ணுவின் காலடிக்கருகில் ஓடிவரும் அலக்நந்தா நதி இதுதான். அதனால் மதிப்பும் அதிகம்.  எல்லாம் இருக்குமிடத்தைப் பொறுத்துதான் இல்லையா?  அதுவுமில்லாமல் ஆகாயகங்கையா ஓடிக்கிட்டு இருந்ததில்  ஒரு   கமண்டலம் நீரை முக்கி எடுத்து  மஹாவிஷ்ணுவின் பாதம் , விண்ணை அளக்கும்போது  சத்யலோகத்தை எட்டிப் பார்க்க,  அந்த பாதத்துக்கு  அர்ப்பணித்த  நீராச்சே!  அதுதான்      அப்படியே இறங்கி  பூமிக்கு வந்ததாக(வும்) ஒரு புராணக்கதை இருக்கே!

வானத்துலே இருந்து அலேக்கா தாவி    இறங்கி  வந்ததால் அலக்நந்தான்னு பெயர் வந்துருக்குன்னு நாமும் ஒரு கதை     பண்ணிக்கலாம் :-)  உண்மையைச் சொன்னால்....  இதுதான் எல்லாத்துக்கும் மூலமா இருக்கு. இதுலே வந்துதான்  மற்ற நதிகள் வந்து சங்கமம் ஆகுது.  ஒன்னு ரெண்டுன்னு  அஞ்சாவது சங்கமம் ஆகுமிடம்  இடம்தான் தேவ்ப்ரயாக்.  அங்கேதான்  கங்கைன்னு நாமகரணமும் ஆகுது.  கங்கை கங்கைன்னு  கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.  எப்படி அலக்நந்தாவின்  புகழைத் தட்டி எடுத்துக்கிட்டா பாருங்க !!!

கங்கைக்கான  ரெண்டு கதைகளில்  எப்பவும் எனக்கு ஒரு சின்ன கன்ஃப்யூஷன் இருக்கும்.  பகீரதன் கதை ஒன்னு,  வாமன அவதார் கதை ஒன்னுன்னு....    இப்ப அந்தக் குழப்பம் ஒரு மாதிரி தீர்ந்தே போச்சு !

வாமன அவதாரத்துலே மஹாபலியிடம் மூணடி தானம் கேட்டு, விண்ணை  அளந்தபோது  பூமியில் இறங்குனது  ஆகாயகங்கை அலக்நந்தா.

பகீரதன், தன் முன்னோர்களின்  அஸ்தியைக் கரைக்க கங்கை வேண்டி தவம் செய்தபோது வந்து  இறங்கியவள்    ஆகாயகங்கை  பாகீரதி.

இந்த ரெண்டு நதிகளின் சங்கமம்  தேவ்ப்ரயாகையில் நடக்குது.   அப்போதான்  இவள் கங்கை ஆகிறாள்.   (இதுதான் என்  புரிதல்!)

ஊர்தான் சின்ன ஊரா உள்ளடங்கி இருக்கே தவிர ஏகப்பட்ட  ஆஷ்ரம்கள்  இடம் பிடிச்சுருக்கு. இஷ்டம் போல் விஸ்தாரமான இடம் வேறெங்கே கிடைக்கும், சொல்லுங்க.   புனித யாத்திரையா வரும் பக்தர்களைத் தவிர,  வெள்ளைக்காரப்பயணிகள் இந்த ஏரியாவில் அதிகம்.  தண்ணீரின் வேகம் அதிகமுன்னு  இருப்பதால் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் (White Water River rafting)  அனுபவிக்க  வர்றாங்களாம்.  இதுதவிர மலையேற்றம் இருக்கவே இருக்கு.
இங்கிருந்து ஒரு எட்டு கிமீ பயணிச்சால் கோவிந்தகாட் என்ற இடம்.  சீக்கியர்களின் புனிதத்தலம் இது.  சீக்கிய குரு கோபிந்த் ஸிங் இங்கே தவம் செஞ்சுருக்கார்.   லக்ஷ்மணனுக்கு  இங்கே ஒரு கோவிலுமிருக்கு. ஹேம்குண்ட் சாஹிப் என்ற  குருத்வாராவுக்கு  இங்கிருந்து ஒரு பதினெட்டு கிமீ நடை.
நேத்து நாம் ஔலியில் பார்த்த பஞ்சாபிகள் எல்லாம் இவ்ளோதூரம் நடந்து போய் வந்தவங்கதான்!

அந்த பூக்களின் பள்ளத்தாக்கு (Valley of the flowers  ) போகக் கூட இந்தப்பக்கம் தான் நடந்து போகணும்.


இவரும் பத்ரிக்குப் போய்க்கிட்டு இருக்கார்  சாலையின் ஒரு பக்கம் தனியாக?

போகப்போகப் பாதையின் அழகு இப்படி   :-(
இங்கே சாலைக்கு இந்தப்பக்கம் தடுப்புச்சுவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. நல்லதுதான்.   இல்லைன்னா... எட்டிப் பார்த்தா... பயமா இருக்குல்லே?
ஒரு வீக் ப்ரிட்ஜைக் கடக்கணும்.  பெருமாளே.... காப்பாத்து.....   பத்து டன்  இருக்கமாட்டோம்தானே?   திரும்பவும் ஒரு ஏத்தம்...






நீர்வீழ்ச்சி ஒன்னு போற வழியில்

கற்கள் சரியாமல் இருக்கக் கம்பிவலை போட்டு வச்சுருக்காங்கதான். ஆனால் இந்தக் கம்பி தாங்குமான்னு எனக்கொரு சந்தேகம்.
மெள்ளமெள்ள அடுத்த 20.5  கீமீ வந்துருந்தோம்.

தொடரும்..........  :-)


16 comments:

said...

படங்கள் பார்க்கவே
அச்சமூட்டுகிறது
நிச்சயமாக பயணிக்க மட்டுமல்ல
சௌக்கியமாய் போய் வரவும்
தெய்வ கடாட்சம் நிச்சயம் வேண்டும்
படங்களுடன் பகிர்வும்
மிக மிக அற்புதம்
வாழ்த்துக்களுடன்...

said...

வாங்க ரமணி.

உண்மைதான் !!

அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி என்பதுதான்......

said...

ஹாத்தி பர்வத் என்றால் யானை மலை இல்லையோ? எப்படி த்ரோணகிரி?

படங்களையும் அதனால் இடங்களையும், குறிப்பாக மலைப்பாதையில் நடைபயிலும் பைரவரையும் ரசித்தேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

கண்ணுக்கு எதிரே இருப்பது த்ரோணகிரி.

அதுக்கு வலது பக்கம் (நமக்கிடது) இருப்பது யானை மலை :-) மலை தொடர்கள் பக்கத்து பக்கதுலே கூட்டமா நிக்குதுகள் :-)

said...

அழகு. பிரமாதம். அருமை. நன்றி.

said...

// அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி //
இது சிவபுராணம். பார்த்தது விஷ்ணு. பாடுவது சிவன் பாட்டு. வாழ்க. வாழ்க.

said...

பார்க்கப் பார்க்க பரவசம். தொடர்கிறேன். இந்த மாதிரி இடத்துல ஜிலோன்னு ஒரு சின்ன தோட்டம் சூழ்ந்த இடத்துல டிவி போன்ற எதுவும் இல்லாம காலத்தை உபயோகமாக்க் கழிக்க ஆசை.

said...

பார்க்கப் பரவசமாகத்தான் இருக்கு. ஆனா ஆபத்துகளும் அதிகம் உண்டு.

said...

/வாமன அவதாரத்துலே மஹாபலியிடம் மூணடி தானம் கேட்டு, விண்ணை அளந்தபோது பூமியில் இறங்குனது ஆகாயகங்கை அலக்நந்தா./ இந்தக்கதை அறியாதது

said...

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// பாலத்தின்மீது பயணம், மோசமான பாதை....வித்தியாசமான அனுபவங்கள்.

said...

வாங்க விஸ்வநாத்.

ரசித்தமைக்கு நன்றி. ஆமாம்.... அவனும் இவனும் ஒன்றல்லவோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

டிவிதான் பிரச்சனைன்னா... ரிமோட்டைக் கொண்டுபோய் கடலில் போட்டால் ஆச்சு!

காலம் இருக்கும் இருப்பில் கணினி இல்லேன்னா.... தொலைஞ்சோமுன்னுல்லே இருக்கு!!!

said...

வாங்க கந்தசாமி ஐயா.

அழகும் ஆபத்தும் ஒன்னாவே இருக்கே!

நீங்களும் போய் வந்தீங்கதானே....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்த ரெண்டு கதைகளையும் ஏற்கெனவே ஹரித்வார் பயணத்துலே எழுதுனதுதான். அது ஆச்சு ஆறேகால் வருசம். நேரம் இருந்தால் இந்தச் சுட்டியில் பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2011/02/blog-post_11.html

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்க்கை முழுசுமே அனுபவங்கள்தானே!

said...

உத்திராகண்ட், ஹிமாச்சலம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மலைவழிப்பாதையில் பயணிப்பது கொஞ்சம் த்ரில்லான விஷயம் தான். எந்த நேரம் நிலச்சரிவு ஆகும் என்பதை கணிக்கவோ, யூகிக்கவோ முடியாது. ஆண்டவன் மேல் பாரத்தினைப் போட்டு பயணிக்க வேண்டியது தான் ஒரே வழி.

தொடர்கிறேன்.