Wednesday, June 14, 2017

ஜோஷிமத் என்னும் ஜ்யோதிர்மத் என்னும் சங்கரமடம் ((இந்திய மண்ணில் பயணம் 17 )

சின்ன ஊர்தான், ஆனால் எங்கெ பார்த்தாலும் ராணுவம். அங்கங்கே தடுப்பு வச்சு போறவர்றவங்களை கவனிச்சுக்கிட்டு இருக்காங்க. இதுகாரணமோ என்னவோ ஊர் முழுக்க ஒருவழிப்பாதைதான். சுத்திச் சுத்தித்தான்  எங்கே போகணுமுன்னாலும் .....  இதனால் பார்த்த ஸீன்களையே திரும்பத் திரும்பப்பார்ப்பது போல இருக்கு.

நர்ஸிங் கோவிலை விட்டுக் கிளம்பி சங்கரமடத்துக்குப் போறோம். சுத்து சுத்து...  ஔலி போகும் சாலையில் போய்  சட்னு உள்ளே திரும்பி நாலுமுறை வளைஞ்சால் சங்கரமடம்.  ஒரு இடத்தில், சாலை (!) ரொம்பவே குறுகல்.  நடந்துதான் இனி ....  இறங்குன சந்துக்குள்ளே ஒரு கோவில்.  என்ன கோவில்னு புரிபடலை.  எல்லாம் கலந்துகட்டி...     ஆனாலும் சாமி...சாமியோவ்..... இந்த கான்ஸெப்ட் கூட நல்லாத்தானே இருக்கு?  அவரவருக்கு எந்த சாமி பிடிக்குமோ... அவுங்களைக் கும்பிட்டுக்கலாம்.

அந்தக்கோவில் படங்களை இங்கே போடலை. ஆல்பத்தில் இருக்கு. அப்புறமாப் பாருங்க :-)




 அடுத்த   ரெண்டு நிமிச நடையில் ஜ்யோதிர்மட் வந்துருந்தோம். வெளிப்புற சுவத்துலேயே  உள்ளே இருக்கும் விஷேசங்கள் என்னென்னன்னு எழுதி  வச்சுருக்காங்க.  இடப்பக்கம் பெரிய நுழைவு வாசல். படிக்கட்டுகள் மேறிப்போனால், தென்னிந்திய   ஸ்டைல் விமானம். ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் கோவில்.   பண்டிட்  ஆரத்தி காமிச்சு தீர்த்தமும் சந்தனமும் கொடுத்தார்.


சங்கர மடம்னதும் நம்ம காஞ்சிமடம்  மாதிரி இருக்குமுன்னு நினைச்சேன். ஆனால்   அப்படி இல்லை. ஆள்  நடமாட்டமே இல்லாம காலியா இருந்தது.  மலைப்பகுதி என்றதால்  அதுக்கேத்தமாதிரியே   மேலே மேலே ஏறிப்போகுது கட்டடமும்.  பெரிய  முற்றம் மாதிரி....   வலது கைப்பக்கம்  சங்கராச்சார்யா கத்தி.  உள்ளே போனால் பெரிய ஹால். ஆசனம் போல் ஒரு மேடையில் சங்கராச்சார்யார் படம் வச்சுருந்தாங்க.  (நமக்குத்தான் சங்கராச்சார்யார்னதும் வேற முகம் ஞாபகத்துக்கு வந்துருதே! )


ஆதிசங்கரர், தன்னுடைய நேரடி சீடர்கள் நால்வரை தலைவர்களா நியமிச்சு  பாரதத்தின் நான்கு திசைகளிலும்  நாலு மடங்களை நிறுவியிருக்கார்.  கிழக்கே  கோவர்தன மடம் (பூரி)  மேற்கே காளிகா மடம் ( துவார்கா) தெற்கே சாரதா மடம்(ஸ்ருங்கேரி)  வடக்கே ஜ்யோதிர் மடம் ( ஜோஷிமத்) இப்படி.  இந்த ஜ்யோதிர் மடத்துத் தலைவர்தான் தோடகாச்சார்யார். அப்புறம் குரு சிஷ்ய பரம்பரை முறையில் மடத்துத் தலைவர்கள்  வந்து, இப்போ இருக்கும் தலைவர்   ஸ்ரீ ஸ்வரூப்பானந்த் சரஸ்வதி ஜி மஹராஜ்.
நமக்குத் தெரிஞ்ச காஞ்சி காமகோடி பீடம் ,  ஆதி சங்கரர்  நேரடியா நியமிச்சது இல்லை.  ஸ்ருங்கேரி ஸாரதா மடத்தின் கிளை ஒன்னு கும்மோணத்தில் திறக்கப்போய்,   அப்போது நிலவிய   அன்னியர்  படையெடுப்பு, அரசியல் காரணங்களால்    அது அப்படியே  காஞ்சிக்கு இடம் மாறினதுதான்.  இப்போ அங்கே தனி சாம்ராஜ்யம்!

அடுத்து நாங்க போனது  அம்பாள் சந்நிதி. ஸ்ரீ லலிதாம்பா த்ரிபுரசுந்தரி பகவதி ராஜராஜேஷ்வரி தேவி மந்திர்...  அட! நம்ம திருப்பு!  வெண்பளிங்குச்சிலைதான். அழகான முகம்!
மாடி போல இருக்கும் ஒரு இடத்தில் தோடகாச்சார்யார் குகைன்னு  பார்த்துட்டு அங்கே போனோம்.  இவர்தான் எட்டாம் நூற்றாண்டுலே  ஆரம்பிச்ச இந்த மடத்தின் முதல் தலைவர்.  குகைன்னா...  இருட்டு குகை இல்லை. ஒரு மேடையில் ஆதிசங்கரர் சிலை, சிவலிங்கங்கள், தோடகாச்சார்யார் சிலைன்னு  இருந்துச்சு.  அங்கே ஒரு ஸ்படிக லிங்கமும் கூட. க்ரில் கேட்  போட்டுருந்தாங்க மேடை முழுசும்.   மலையைக் குடைஞ்சு கட்டுன அறைதான் இது.

குகைச்சுவரில் மேலே சொன்ன நாலு மடங்கள் லிஸ்ட்டும் இருக்கு. அதில்  கிழக்கில் கோவர்தனமட், மேற்கில் ஷாரதாமட், வடக்கே ஜ்யோதிர்மட்,  தெற்கே  ஸ்ருங்கேரி மட்ன்னு  போட்டுருக்கு.  ஸ்ருங்கேரியில் ஸ்ருங்கேரி மட். என்ன பெயர் குழப்பமுன்னு தெரியலை....
நாங்க  அப்படியே சுத்திக்கிட்டு வெளியே பெரிய மொட்டை மாடிப் பகுதிக்கு வந்துருந்தோம். கண்ணுக்கெதிரில்  த்ரோணகிரி!

அங்கே ரெண்டு பேர் உக்கார்ந்து  பேசிக்கிட்டு இருந்தாங்க.  அதுலே ஒருத்தர்  'குகை பார்த்தாச்சா'ன்னார்.    'ஆச்சு' ன்னோம்.  'வாங்க தீபாராதனை காமிக்கிறேன்'னு  எழுந்து போனதும் நாங்களும் தொடர்ந்து போனோம். இப்ப நாம் பார்த்துட்டு வந்த அதே குகைதான். தீப ஆரத்தியில் ஸ்படிக லிங்கம் ஒரே பளிச்!
அப்புறம்  கீழே இறங்கி  வந்து,  இடப் பக்கம் திரும்பி ஆதிசங்கரர் தவம் செய்த குகைக்குப் போறோம். எதிரில் வந்துக்கிட்டு இருந்த ஒருவர், மேடைகட்டி விட்டுருந்த மரத்தைக் காட்டி 2500 வயசு அந்த மரத்துக்குன்னு சொல்லிட்டு, இன்னும் கொஞ்சம் தூரத்துலே குகை இருக்குன்னு சொல்லிட்டுப் போனார்.

அமர் கல்ப வ்ருக்ஷ மரமேடையையொட்டியே  ஜ்யோதேஷ்வர் மஹாதேவ் மந்திர்.  ஆதிகுரு சங்கராச்சார்யா தவம் செய்த இடம்னு  எழுதி இருக்கு.  இந்த ஜ்யோதேஷ்வர் பெயரால்தான் இந்த  இடத்து  சங்கர மடத்துக்கு ஜ்யோதிர் மட் என்ற பெயர் வந்து காலப்போக்கில்  ஜ்யோதிர் மருவி ஊருக்கே ஜோஷிமட்ன்னு பெயர்  வந்துருக்கு போல!   பழைய பெயர் திருப்பிரிதி.  இப்ப யாருக்கும் சொன்னால்  தெரியாது....
சின்னதா ஒரு அறை/கருவறை மட்டுமே  கட்டடம்.  எதிரே கருவறை முன் நந்தி வரிசை. வரிசையில் ஒரு லீடர்,  ஒரு அடி முன்னால்.... உக்கார்ந்துருக்கார்.  வாசலில் ஒரு புள்ளையார். கருவறைக்குள்ளே ஜ்யோதேஷ்வர், மார்பிள் தொட்டிக்குள்ளே... தொட்டுக் கும்பிடலாம்.  ஜோதி ஒன்னு எரிஞ்சுக்கிட்டே இருக்கு.  அகண்ட ஜோதி! அணையா விளக்கு!


பாதையில் கொஞ்சம் வலது பக்கம் திரும்பிக் கீழிறங்கிப்போனால் ஆதிசங்கரர் தவம் இருந்த குஃபா அறையும், முன்மண்டபமுமாக் கட்டி விட்டுருக்காங்க. குகையை அப்படியே விட்டு வச்சுட்டு கட்டுனதும் நல்லாத்தான் இருக்கு. சந்நிதி  மூடி இருந்தாலும் கம்பி வழியே தரிசிக்கலாம்.

ஆதிசங்கரர் சிலை அழகு.  கண்கள் எப்படி பளிச்ன்னு.... ஹைய்யோ!!!
தரிசனம் முடிச்சு திரும்பி நடந்து வரும்போது  வலது பக்கத்தில்  படிகள் மேலேறிப்போனால் இன்னொரு சந்நிதி. மூடி இருக்குன்னு  ஒரு பையன் சொன்னதால் போகலை.
ஆனால் பாதையில் இடதுபக்கம்  சனைச்சரனுக்குத் தனியா ஒரு சந்நிதி. சனி என்றதால் கருப்பு டைல்ஸ் போட்டுக் கட்டிடறாங்க வடக்கீஸ். சண்டிகரிலும் இப்படித்தான்.
உள்ளே சனி இருக்கார். போடு ஒரு கும்பிடு!
இன்னும் கொஞ்சதூரத்தில் இன்னொரு சந்நிதி.  ஸ்ரீ பாண்டவ் மந்திர். உள்ளே? தெரியலை.... பாண்டவர்கள் பூஜித்த சாமி!

இருட்ட ஆரம்பிச்சதும்  கலகலன்னு இருக்கும் கடைவீதி வழியே (அதுதான் வழி!) த்ரோணகிரி ஹொட்டேல் அறைக்கு  வந்துட்டோம். ரொம்பத்தான் சுத்தியாச்சு இன்றைக்கு.....

சாப்பிட மறுபடியும் கீழே  டைனிங் ஹால் போக சோம்பல். நம்ம விஜேயிடம் ரூம் சர்வீஸ் சொல்லி, ஜீரா ரைஸ், ஆலுகோபி கறியுடன் டின்னர் ஆச்சு.
பொழுதோடு  படுக்கலாம். நம்மவர் டிவி ஆன் செய்ததும்  அண்டைநாட்டுச் சண்டை....  இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப்போறாங்களோ....  ப்ச்....
சங்கரமடம் போகுமுன் பார்த்த கோவிலின் படங்களையும்  இன்னும் சங்கரமடத்தில் எடுத்த மற்ற படங்களையும்   ஃபேஸ்புக் ஆல்பத்தில்     போட்டுவச்சுருக்கேன்.

தொடரும்.........  :-)


11 comments:

said...

தம்பதி சமேதராய் லட்சுமி நாராயணர் ரொம்ப அழகாய் இருக்கிறார்.

said...

// தீப ஆரத்தியில் ஸ்படிக லிங்கம் ஒரே பளிச்! // மிக அருமை.
// ஆதிசங்கரர் சிலை அழகு // அழகு அழகு

அங்கங்கே எண்கள் இருக்கு, என்னதது ? // 5521 25 -46, 201324 //

said...

வாங்க ஸ்ரீராம்.

பெருமாளுக்கு என்ன? அலங்காரப்ரியன்! அழகுக்குக் கேக்கணுமா? :-)

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா.... எண்கள் !!!

அது அங்கே வரவேண்டிய ஃபோட்டோ நம்பர்ஸ். எடுக்க விட்டுப்போச்சு. இப்பப் பாருங்க......... காக்கா ஊஷ்.... :-)

said...

ரொம்ப நல்லாருக்கு. திருப்பிரிதி கண்டிப்பா போய் தரிசிக்கவேண்டிய இடம். உடம்ப் ஃபிட் ஆக இருந்தால், அங்கெல்லாம் 2-3 வாரம் தங்கி, மலைகளில் நடந்து பல கோவில்களைத் தரிசிக்கணும்.

said...

சிற்பங்களைச் செய்யும் போது வெண்பளிங்குக் கற்களைப் பயன்படுத்தாமல் ஏன் கருங்கற்களை நம்மூரில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஒரு சிற்பி விளக்கம் சொன்னார். கல்லின் வயது, நொறுங்கும் தன்மை, அதிர்வுகளைத் தாங்கும் தன்மைன்னு பலப்பல காரணங்கள். ஆனாலும் வடவர்கள் பளிங்குக் கற்களிலேயே சிலைகளை விருப்பமோடு செய்கிறார்கள். கருங்கல் அங்கு கிடைக்காதது கூடக் காரணமாக இருக்கலாம்.

அணையா சோதி என்று சொன்னீர்கள். சென்ற வாரம் நானொரு அணையா சோதி கண்டேன். அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று எடுத்தியம்பிய வள்ளலார் ஏற்றிய சோதி அது. வெளிச்சம் கொடுக்கும் விளக்கின் சோதி அல்ல அது. வயிற்றில் எரியும் பசி என்னும் நெருப்பை அணைக்கும் சோதி அது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வடலூரில் அவர் ஏற்றி வைத்த அடுப்பு இன்றும் அணையாமல் பசிப்பிணி போக்கி வருகிறது. அந்த அடுப்பைக் கண்டதே நான் பெற்ற பெரும்பேறு என்று நினைக்கிறேன்.

said...

வழக்கம் போல் படங்களுடன்பதிவு ரசிக்க வைக்கிறது

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வருசத்துலே ஆறுமாசம் பயணம் செஞ்சுக்க முடியாது அங்கே... அரசு அனுமதிக்கறதில்லை.

போகும்போது சம்மரில் போங்க. நிறைய ட்ரெக்கிங் இடங்கள் உண்டு.

said...

வாங்க ஜிரா.


கருங்கல் கிடைக்காமலா, சேரமன்னன் கண்ணகி சிலைக்குக் கல் எடுத்து வந்தான்?

பளிங்குக்கல்லில் சிலை செதுக்குவது கொஞ்சம் எளிது போல. மொழு மொழுன்னு செதுக்கலாம் என்றாலும், நம்ம பக்க நகாசு வேலைகளுக்குச் சரிப்படாதோ என்னமோ?

பசி என்னும் அணையாத் தீ ஒன்னு இருக்கே! உங்க வடலூர் பதிவு பார்த்தேன். ஒரு சமயம் அந்தப் பக்கம் போகவேணும். அருட்பெரும் சோதி.. தனிப் பெரும்கருணை !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

said...

ஸ்படிக லிங்கம் அழகு.

மற்ற விவரங்களும் சிறப்பு.

தொடர்கிறேன்.