Wednesday, April 29, 2015

கிருஷ்ணனின் பூஜையில் லக்ஷ்மணன் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 45)

வழக்கம்போல் எழுந்து மெயில் பார்த்து, குளிச்சுக் கிளம்பி காலை ஆகாரத்துக்குக் கீழே போனோம்.  அறைவாடகையில் இது சேர்த்தி. பஃபேதான். உள்நாடு வெளிநாடுன்னு ரெண்டு வகைகளையும் வச்சுருந்தாங்க.  இட்லி வச்சுருந்த இட்லிப்பாத்திரம் எனக்கு ரொம்பப்பிடிச்சது.




எத்தனை வகை இருந்தால்தான் என்ன? நமக்கு வழக்கமான இட்லி வடைதான்:-) சாப்பிட்டு முடிச்சு, ஒரு கோவிலுக்குப் போறோம்.  நமது பட்டியலில்  இந்தப் பகுதியில் தரிசிக்க வேண்டிய கோவில் இப்ப இது ஒன்னுதான்.

  அட!  பாயஸம் இருக்கே! காலங்கார்த்தாலை வேணாம்,போ........


திருமூழிக்களம். ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் மஹாக்ஷேத்ரம்.  108 திவ்ய  தரிசனக்கோவில்களில்  ஒன்னு. ஏர்லிங்க் ஹொட்டேல் பணியாளரிடம்  வழி கேட்டோம்.  அங்கமாலி  வருமுன் ஒரு சர்ச் இருக்கும். அதுலே லெஃப்ட் எடுத்துப்போனால் அத்தானி, மெலக்காடு, எலாவூர் ரோடு. அதிலேயே போனால்  கோவில் வந்துரும்.  ஏகதேசம் ஒரு எட்டுகிலோ மீட்டர் என்றார்.

 ஐயோ.... எந்த சர்ச்?  வழியெல்லாம் சர்ச்சுகள்தானே?  செயிண்ட் ஜோஸஃப்னு உண்டாகும் என்றார். லக்ஷ்மணப்பெருமாள் என்னு சோதிச்சால்  மதி.

பெருமாள் மேலேயே பாரத்தைப்போட்டுட்டுக் கிளம்பிட்டோம். செங்கமநாடு பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் வரை சரியா வந்தபின்  திருப்பத்துலே  ரைட் எடுக்காம கொஞ்சம் தூரம் போனபின்,  எட்டுகிமீக்கு மேலேயே  ஆச்சேன்னு  வழியில் இருந்த ஒருவரிடம் கேட்டு சரியான வழி பிடிச்சுக் கோவிலுக்கு வந்து சேர்ந்துட்டோம். திருமூழிக்களம்  ஸ்ரீ லக்ஷ்மணப்பெருமாள் க்ஷேத்ரம் என்ற அலங்கார வளைவின் முகப்பில்  நடுவிலே ராமலக்ஷ்மணர்கள் சீதையுடன். ரெண்டு பக்கமும் புள்ளையாரும், ஐயப்பனும்.


சட்னுபார்க்கத்  திண்ணைகள் வச்ச சாதாரண வீடு போலத்தான் கோவில்முகப்பு இருக்கு.  ஆனால் உள்ளே  ரொம்பவே பெருசுதான்.  திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு,   அவுங்க ஆட்சியின் கீழ் உள்ள எல்லாக் கோவில்களுக்கும்  ஒரே டிஸைனில்  தரையில் டைல்ஸ் பதிச்சுருக்காங்க.

 மேலும்  வட்டக் கருவறைகள்,  முன்மண்டபங்கள், திண்ணைகள்,  உம்மரம் எல்லாம்  ஒன்னுபோலவே இருப்பதாலும்  கோவில் கட்டிடத்தைப் பார்க்கும்போது வரம் பரவசம் மிஸ்ஸிங்.  கொஞ்சூண்டு  போரடிக்குதுன்னும் சொல்லலாம்.    ஆனால் 108 தரிசிக்கணும் என்ற ஆவல்தான் என்னை இழுக்குது.  நல்லவேளை....  பெருமாளுக்கு வெவ்வேற பெயர்களும் கதைகளும் இருப்பதால் கொஞ்சம் சுவாரசியம்  ஒட்டிக்கிட்டு இருக்கு.






இங்கேயும் துலாபார வழிபாடு விசேஷம்.  கோவிலுக்குள் நுழைஞ்சவுடன் பெரிய தூண்களுடன் இருக்கும் மண்டபத்தில் தராசு வச்சுருக்காங்க.  அதுக்குப் பக்கத்தில் ஒரு   ஏழடுக்கு தீபம். வெண்கலம்.  ஆனால் காலப்போக்கில் களிம்பேறிக்கிடக்கு. அதுலே உச்சியில் இருக்கும் பெரிய திருவடி அட்டகாஸம்!  அந்த மூக்கு ஒன்னே போதும்!  ஹைய்யோ!  அதைப்போல ஒன்னு கிடைச்சால்....   கிடைச்சால்?  எனக்கு அதிர்ஷ்டம்தான்!  என்ன மூக்குமா!

அதுக்கப்பால் கொடிமரம், பலிபீடம் அதைக்கடந்தால் கோவில்  உள்ப்ரகாரம்போகும் நடை!

இந்தப்பக்கம் இதுவரை நாம் பார்த்து தரிசிச்ச கோவில்கள் எல்லாம் கிருஷ்ணாவதார காலம் என்றால் இந்தக் கோவில் அதுக்கும் முந்தின ராமாயணகாலத்துக்குக் கொண்டு போயிருது!


ராமனை காட்டுக்கு அனுப்பியாச்சு.  மகனுக்குப் பட்டம் கட்டப்போறாங்கன்னு மனசு நிறைய மகிழ்ச்சியா இருக்காள்  கைகேயி.  மகிழ்ச்சியை முழுசுமாக் காமிச்சுக்க முடியாத நிலை. ஒரு பக்கம்  கணவர் இறந்து போயிருக்காரே:(  தாத்தா  வீட்டுக்குப்போயிருந்த  பரதன் அவசரச் சேதின்னு  தகவல் வந்ததும்  அவசரமா அயோத்திக்குத் திரும்பறான். வந்ததும்தான்    தாய் செஞ்ச களேபரம் புரியுது.

தகப்பனுக்குரிய ஈமக்கடன்களைச் செஞ்சு முடிக்கிறான்.  மகன் பட்டம் கட்டி அரசாளப்போகிறான் என்று கனவு கண்ட கைகேயியின் தலையில் இடி விழுந்தாப்போல.....  ' இப்பவே போய் அண்ணனைக் கூட்டி வந்து அவரையே பட்டம் சூட்டிக்கச் செய்யறேன் பார்'ன்னு ராமனைத்தேடி காட்டுக்குப் போறான் பரதன்.

அரசமரியாதையுடன்  ராமனைக்கூட்டி வரணும்  என்று பெரும்படையுடன்  வந்த பரதனை, தூரக்கே இருந்து பார்த்த லக்ஷ்மணன்,  ராமனுடன் போர் புரிய வந்துருக்கான் இவனென்று தவறுதலா நினைச்சுக்கிட்டு,  பரதனை இப்பவே கொல்லப்போறேன்னு கிளம்பறான்.  அண்ணன் ராமன் விடுவானோ?  அப்படியெல்லாம் இருக்காதுன்னு  சமாதானப்படுத்தறான்.  உண்மையில் அப்படித்தான் இல்லையாக்கும்.

ராமாயணமுன்னு ஒரு சொல் சொன்னதுக்கே கதை எப்படி நீண்டுபோகுது பாருங்க:-)

14 வருஷம் முடிஞ்சு  ராமலக்ஷ்மணர்கள்  அயோத்யா திரும்பி ராமர் பட்டாபிஷேகம் எல்லாம் நடந்து நல்லாட்சி செய்யும்போது, பரதனை இப்படித் தப்பா நினைச்சுட்டோமேன்னு மனம் வருந்திய லக்ஷ்மணன்,  திருமூழிக்களம் என்ற பெயரில் இப்ப இருக்கும் இந்த க்ஷேத்ரத்துக்கு  வந்து  பெருமாளை சேவித்து மன்னிப்பு கேட்டான்.  ப்ராயச்சித்தமா  கோவிலை நல்லா கட்டிக் கொடுத்துருக்கான். அப்போதிருந்து  இங்கே மூலவருக்கு லக்ஷ்மணப்பெருமாள் என்ற பெயர் வந்தது.

அதே சமயம் பரதன் இங்கே வருகை தந்து லக்ஷ்மணனைத் தழுவி அன்புமொழிகள் பேசினார்.  அவர்  ராமாவதாரத்தில்  சங்கு (பாஞ்சஜன்யம்)  அம்சம் என்பதால் ,   அவர் நினைவாக  இங்குள்ள தீர்த்தம்  சங்கு தீர்த்தம் என்ற பெயரை க் கொண்டிருக்கு.  (லக்ஷ்மணன்  ஆதிசேஷனின் அம்சம்)

மூலவருக்கு  திருமூழிக்களத்தான்  என்ற பெயரும் உண்டு.  ஆனால் லக்ஷ்மணப்பெருமாள் என்னும் பெயரே எல்லோருக்கும் தெரிஞ்சுருக்கு.   தாயார் பெயர்   மதுரவேணி நாச்சியார்.  தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது.  பெருமாள் திருமார்பில் இருக்கிறாள் என்றே நினைச்சுக்கணும்.

 வட்டக்கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் கிழக்குநோக்கி ஸேவை சாதிக்கிறார்.  நான்கு கைகள். சங்கு சக்கரம் கதை தாமரைப்பூ!  பூ இருக்கும் கை இடுப்பில் இருக்கு!

ஒரு சமயம் ஹரித மகரிஷிக்கு இங்கே தரிசனம் கொடுத்த பெருமாளிடம், மக்கள்  அனைவரும்  உன்னிடம் வந்து சேர எளிய வழியைச் சொல்லணுமுன்னு  விண்ணப்பிக்க, அவர்  ஸ்ரீ ஸூக்தியை என்னும் திருமொழியை  வழங்கினாராம்.  அதான் ஊருக்கு திருமொழிக்களம் என்று பெயர் வந்து அது காலப்போக்கில் திருமூழிக்களமா ஆகிக்கிடக்கு.

ஆழ்வார்கள்  வந்து பாடி மங்களசாஸனம் செய்த  108 திவ்ய தேசக்கோவில்களில்  இதுவும் ஒன்னு.  நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்  வந்து தரிசனம் செஞ்சு  மங்களசாஸனம் செஞ்சுருக்காங்க.

கோவில் காலை 5 முதல் 11 வரையும், மாலை   5 முதல் எட்டுவரையும் திறந்துருக்கும்.  இங்கெல்லாம் இதுவரை கவனிச்சதில் மாலை கோவில்திறக்கும் நேரம் அநேகமா அஞ்சு முதல் எட்டு. காலை நேரம்தான்  கோவிலுக்குக்  கோவில் மாறுபட்டு இருக்கு. பயணம் போகுமுன் பார்த்து வச்சுக்கிட்டால் நல்லது.

த்வாபர யுகத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன்,பூஜித்து வந்த  ராமர் அண்ட் ப்ரதர்ஸ்  சிலைகள்  , த்வாரகையைக் கடல்கொண்டபோது நீரில் முழுகிப்போனது,  பின்னொரு காலத்தில் வாக்கேல் கைமல் என்ற மகரிஷிக்குக் கிடைத்தன.  தனக்குக்கிடைச்ச பாக்கியத்தை நினைச்சுக்கிட்டே  அன்றைக்கு  இரவு தூங்கும்போது கனவில் வந்த  பெருமாள், இந்தச் சிலைகளை பாரதப்புழாவின் கரையில்  பிரதிஷ்டை செய்யும்படிச் சொல்லி இருக்கார்.

சரின்னு கொண்டு போன மகரிஷி,  ஒரு இடத்தில்  அவைகளைச்சேர்த்து வைக்காமல்  நாலு சிலைகளையும் நாலு இடத்தில் பிரதிஷ்டை செய்துட்டார்.  ஒன்னு சொன்னா  நாலாச் செய்யறவர் போல! த்ருப்பறையாரில் ஸ்ரீ ராமன்,   திருமூழிக்களத்தில்  லக்ஷ்மணன், இரிஞ்ஞாலகுடாவில் கூடல்மாணிக்யம் கோவில் பரதன்,  பயம்மல் (Payammal ) என்ற ஊரில்  சத்ருக்னன்  என்ற இந்த நான்கு கோவில்களைத்தான் நாலம்பலம் என்று  சொல்றாங்க.  இன்னும்  யாரும் ஆரம்பிக்கலை போல..... இந்த நாலு கோவிலையும் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா இன்னின்னது கிட்டும் என்று.

நாம் வேணுமானால் ஆரம்பிச்சு வைக்கலாம்.  மூழிக்களம்  லக்ஷ்மணப்பெருமாள் கோவிலில் இருந்து கிளம்பினால் 27.7 கிமீ  சத்ருக்னன்  கோவில், அங்கிருந்து  ஒரு 6 கிமீ பரதன்,   பின்னே த்ருப்பறையார்  ஸ்ரீராமன் ஒரு 15.3 கிமீ.  ஆக மொத்தம்  49  கிமீதான்.  தமிழ்நாட்டுலே கோவையில் ஆரம்பிச்சு வச்சாப்போதும். பக்தர்களை திரிஸ்ஸுர்   கொண்டு வந்து நாலம்பலம் வழிபாடு கொண்டுபோய் தரிசனம் செய்ய வச்சுட்டு நேரா குருவாயூர்கொண்டுபோய் அங்கே  நைட் ஹால்ட். காலையில்  க்ருஷ்ணனை ஸேவிச்சுக்கிட்டு மதியம் கிளம்பினால் நேரா கோவை!  ப்ளான் நல்லா  வொர்க்கவுட் ஆகுமுன்னு நினைக்கிறேன்.  அதுக்குமுன்னே நாம் செய்ய வேண்டியது ஒரு ஏழெட்டு டெஸ்ட்டிமனி செட் செஞ்சுக்கணும். பிரபலமான(!)  ஒரு ஜோஸியரோ, இல்லை ஸ்வாமிகளோ  நாலம்பலம் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா  பலன்கள் இதிதுன்னு  சொல்லணும்.  பிரச்சனை இல்லை.சொல்லுவாங்க.

இல்லைன்னா பேசாம நாம் ஆரம்பிக்கப்போகும் ஆஸ்ரமத்தில்,  துளஸியானந்தமயா  சொல்வாங்க பாருங்களேன்!


ஒரு முக்கால்மணிக்கூறில் தரிசனம் நல்லபடியா நமக்குக் கிடைச்சது. ஏகாந்த தரிசனம்தான், இங்கேயும்!  காலை நேரப்பூஜைகள் முடிஞ்சு  பெருமாளும் பட்டரும் விஸ்ராந்தியா இருந்தாங்க.   மற்ற கோவில்களில்  பூஜை நேரத்துலே  வாத்தியங்கள் முக்கியமா இடைக்கா  வாசிப்பதைப்போல்  இங்கே இல்லையாம்.  ஸ்வாமிக்கு சப்தம் வேணாமுன்னு இருக்கு போல!  சைலன்ஸ் ப்ளீஸ்.......

வெளிப்ரகாரம் சுத்தும்போது நமக்கு வலது  பக்கம் வரும் கோவில்  சுவரில்(!)  மரச்சட்டங்களில்  கேரளத்துக்கே உரிய பித்தளை அகல்கள்.   கூரையும் சுவரும் தொடும் இடத்தில் இருக்கும் யாழிகள்தான்  வேறமாதிரி ! அசப்பில் வரிக்குதிரை:-)





அலங்காரவளைவின் அருகில் ஒருகடையில் பழுத்த நேந்திரம்.  இதுவரை  இங்கே  சாப்பிடலையே. அப்புறம் கேரளம் வந்து என்ன பயன்? மூணு பழங்களை வாங்கி  ஆளுக்கொன்னா உள்ளே தள்ளிட்டுக் கிளம்பி  ஆலுவா அறைக்கு வந்தோம். இப்போ சரியான வழி தெரிஞ்சுட்டதால்  பதினைஞ்சே நிமிசம்தான் ஆச்சு.

நம்மைப் பார்த்தவுடன்  ஏர்லிங் பணியாளர்  விஜய் , ஓடிவந்து  அம்பலம் கிட்டியோன்னார்.  நல்லோணம் கிட்டின்னு சொல்லிட்டு  அடுத்த  ஊருக்குப்போக மூட்டையைக் கட்டுனோம். சரியா பத்துமணி!  அபிமன்யூவும்   வரவேற்பினருகில் இருந்தார். அஞ்சு நிமிசப்பேச்சோடு  முடிச்சுக்கிட்டோம். இந்த  இடுகைகளின்  லிங்கை அவருக்கு அனுப்பணும். அனுப்பறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்:-)


தொடரும்..........:-)



25 comments:

said...


"கிருஷ்ணனின் பூஜையில் லக்ஷ்மணன் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 45)"= துளசிதளம் = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal.

said...

அழகான படங்கள்... விளக்கங்கள் உங்கள் பாணியில் ரசித்துக்கொண்டே சிரித்துக் கொண்டே வாசித்தேன் அம்மா...

said...

கோவில்களில் கூட்டம், நெரிசல், சத்தம் ஏதுமில்லாமல் சுத்தமாய் அமைதியாய் இயற்கை சூழ இருந்தால் வரம் வேண்டாமலேயே மனத்துக்கு நிம்மதியும் நிறைவும் கிடைத்துவிடும். லக்ஷ்மணப் பெருமாள் கோயிலைப் பார்த்தவுடனே மனம் நிறைகிறது. தலபுராணம் சுவாரசியம். பகிர்வுக்கு நன்றி துளசி மேடம்.

said...

//இந்த நாலு கோவிலையும் ஒரே நாளில் தரிசனம் செஞ்சா இன்னின்னது கிட்டும் என்று.//
-- உண்மை. நாலம்பல தரிசனம் ராமாயண மாதம் என்று சொல்லப்படும் கர்கடக (ஆடி) மாதத்தில் செய்யப்படும்.நீங்கள் சொன்னபடி குருவாயூர் + நாலம்பலம் சுற்றுலா உண்டு.
Jayakumar

said...

நானும் இந்தப் பெருமாளை சேவிச்சிருக்கேன்.

said...

இட்லிக் கொப்பரையிலேயே இட்டிலியை வெச்சிட்டாங்களா :)

மரச்சட்டங்கள்ள பித்தளை விளக்குகளை வைச்சிருக்குறதுல எனக்கு ஒரு ஐயம்.

அந்த விளக்குகள் எரியும் போது அது மரத்தைக் கருக்கிடாதா? நாட்பட எரியும் போது சட்டமே கருகிப் போக வாய்ப்பிருக்கே. தீப்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமல்லவா?

கருடாழ்வார் மூக்கு அபாரம்.

said...

நாலம்பலம் நிஜமாவே இருக்கு. துளசி சொல்லிப் பலிக்காத கதையுண்டோ. கருடாழ்வார் வடிவமைத்த தாரோ. வெகு அழகு. அபிமன்யூவுக்கு அனுப்பி விட்டீர்களா.
கோவிலில் பெருமாள் படம் விற்க மாட்டோர்களோ. நூத்தியாறை யும் பிரேம் போட்டு வைக்கலாமே. இங்கே வெறுமனே உட்கார்ந்திருப்பதற்கு உங்கள் தலபுராணங்கள் ஆறுதல் கொடுக்கின்றன. கோவில்கள் நூசியைக் கொண்டு ஜிலோன்னு கிடக்கின்றன. ஆனால் வெகு அழகுப்பா. தாங்க்ஸ் துளசி.

said...

த்ரிப்பரையார் கோவிலுக்குப் போனதுண்டு. நாலம்பலம் கேள்விப்பட்டிருந்தாலும் போனதில்லைஇந்த கோவில்களின் தல வரலாறு புத்தகமாகக் கிடைக்கிறதா. அல்லது கேட்ட கதைகள் மூளையில் சேவ் ஆகிறதா. கேரளக் கோவில்களில் நாச்சியார் என்ற பெயர் உள்ள தெய்வம் இருக்கிறதா?

said...

கோவில்கள் வெளியிலிருந்து பார்க்க வீடு போலத்தான் இருக்கு. நுழைவாசலில் குறுகலாக படிகள் வேறு! உள்ளே போனால் அந்த பிரம்மாண்டம் அசத்துகிறது. எல்லாப் பெருமாளும் கூட ஒரே மாதிரி தான் கையில் தாமரைப் பூவோட சேவை தருகிறார்கள். மற்ற கோவில்கள் போல இங்கு பூஜா காலத்தில் வாத்தியம் வாசிப்பது இல்லையா? திருவல்லாவில் ஒரு சேட்டன் வாத்தியம் வாசித்துக் கொண்டே பாடினார், பாருங்கள். மிக மிக இனிமையான குரலில் உருகி உருகி பாடினார். 'அடிப்பொளி' என்று சொல்லிவிட்டு வந்தேன்.

said...

இட்லி வடை கண்களால் நாங்களும் ரசித்தோம் . படங்கள் கதைகள் அருமை ! துளசியானந்தமயி பலனையும் யோசிச்சு சொல்லிடுங்க . கூடிய விரைவில் நாலம்பலம் ட்ரிப் famous ஆகிடும் .

said...

தங்களோடு நாங்களும் தரிசனம் கண்டோம், புகைப்படங்கள் அத்துனையும் அருமை.

said...

அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்தலுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சிரிப்பு, உடலுக்கு ரொம்ப நல்லது:-)

said...

வாங்க கீதமஞ்சரி.

வீண் ஆடம்பரங்களொன்னும் இல்லாத கோவில்கள். உண்மையாக வழிபடும் மக்கள்ஸ் வந்து போவதால் நிம்மதியாகவும் அமைதியாகவுமிருக்கு!

said...

வாங்க ஜயகுமார்.

ஆஹா.... நம்மை முந்திக் கொண்டார்களா!!!

தகவலுக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ரொம்ப நல்லது!

said...

வாங்க ஜிரா.

அகல் விளக்கு முனையில்தான் திரி. மரச்சட்டம் வரை போகாது. அதுவும் ஒரு சிலமணி நேரங்கள் மட்டுமேதான்

இதுவரை சட்டங்களுக்கு ஒன்னுமாகலை (டச்வுட்!)

கருடர் அபாரம்!

said...

வாங்க வல்லி.

108 மூர்த்திகளுடன் போஸ்ட்டர் நம்மிடம் கூட இருக்கே! முந்தி எப்பவோ சென்னையில் வாங்குனதுதான். ரொம்பச் சின்ன படங்கள். பெருமாளின் மூக்கும் முழியும் தெரிய வாய்ப்பே இல்லை:(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

விஷ்ணு கோவில்களில் நாச்சியார் என்ற பெயர் உள்ளது. சில இடங்களில் மட்டுமே தாயாருக்குத் தனி சந்நிதிகள். மற்றவைகளில் வெறும் பெயரோடு சரி.

என்னிடம் ஒரு 108 வைஷ்ணவ திருத்தல மகிமை என்ற புத்தகம் இருக்கிறது. ரொம்பப் பழைய புத்தகம். அதிலும் பல கதைகள் சுருக்கமா இருக்கு. அப்புறம் கோவில்களில் பட்டர்களிடமும் விசாரிச்சுத் தெரிந்து கொள்வேன். முக்கியமாக வயதான பெரியோர் கிடைச்சால் வெல்லம் தின்னாப்போல! ஏகப்பட்ட கதைகள் கிடைக்கும். கண்களையும் காதுகளையும் திறந்து வச்சால் மதி:-)

பின்னே அதில் கொஞ்சம் மசாலா சேர்த்து நம்ம ஸ்டைலில் எழுதுவேன்.

முக்கியமா இந்த 108 திவ்ய தேசக்கோவில்களில் கேரளத்திலும், ஆழ்வார்கள் பாடலை மார்பிள் கல்வெட்டில் பதித்து வச்சுருக்காங்க. உள் ப்ரகாரங்களில் இருப்பதால் படம் எடுக்க முடிவதில்லை:(

said...

வாங்க ரஞ்ஜனி.

இங்கே மட்டுதான் வாத்திய கருவி இல்லை. பெருமாள் வேணாமுன்னுட்டார்!

மற்ற கோவில்களில் அதிகாலை பூஜையிலும் சந்தியா நேரப் பூஜையிலும் இடைக்கா வாசிக்கிறார்கள். அருமைதான்.

said...

வாங்க சசி கலா.

ஏற்கெனவே நாலம்பல டூர் இருக்காமே! இப்பநாம் ஆரம்பிக்கும் டூர் வகையில் நல்ல நல்ல பலன்களைக் கண்டுபிடிச்சுச் சொல்லணும். எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தேவைப்படும் பலன்களா இருக்கணும். வாங்க.உக்கார்ந்து யோசிக்கலாம்.

said...

வாங்க மகேஸ்வரி.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க புதுவை வேலு.

வாழ்த்துகளுக்கு நன்றி. தங்களுக்கும் வாழ்த்து(க்)கள்.

said...

அருமையான தகவல்கள் மற்றும் படங்கள்.....

நினைவில் வைத்துக் கொள்ள உங்களைப் போல முடியுமா.... :)))

தொடர்ந்து பயணிக்கிறேன்....