Showing posts with label 108 திவ்யதேசம். Show all posts
Showing posts with label 108 திவ்யதேசம். Show all posts

Wednesday, June 21, 2017

ஜெய் பத்ரி விஷால்....... (இந்திய மண்ணில் பயணம் 20)

அடுத்த பனிரெண்டு கிமீ பயணம் கொஞ்சம் ஆபத்தான பாதையில்தான். ஒரு பக்கம் மலை, அடுத்த பக்கம் பாதாளம். சாலையில் பாதுகாப்புக்கான கட்டைச்சுவர்கள் இல்லை.
கீழே அலக்நந்தா அவ பாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்காள்.
ஃபைபர் ஆப்டிக் கேபிள் போடும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. போட்டு முடிச்சுட்டால்  இணையத்துக்கு வேகம் வந்துரும்.
மலையில் இருந்து இறங்கிவரும் சின்னச்சின்ன நீர்வீழ்ச்சிகள் அங்கங்கே!         சனம்  அங்கங்கே  குளிக்குது.  ஆத்தை அசிங்கப்படுத்தாமல் இருக்கணுமே  பெருமாளே.....

உயரம் அதிகமாறதை உணர முடியுது.   சில இடங்களில் மட்டும்  மலைச்சரிவு பாதுகாப்பா அங்கங்கே ரீடெய்ன் வால் கட்டியிருக்காங்க.  இந்த பதினொரு கிமீ தூரம் வர்றதுக்கே 43 நிமிசம் எடுத்துருக்கு.  இதோ பத்ரிநாத் வந்தே வந்துட்டோம். ஊருக்கு முன்னாலேயே நாம் தங்கும் ஹொட்டேல் 'ஸரோவர் போர்ட்டிக்கோ' வந்துருது.

வண்டி விட்டு இறங்குனதும் இந்தாண்டை நீல்கந்தா மலைச்சிகரம், வெண்பனிப் போர்வையில்!  இந்த நீல்கந்தா மட்டும் ஊருக்குள்ளே எங்கே போனாலும் நம்மை விடாமல் பார்த்துக்கிட்டே நிக்குது.  அதுக்குத் தெரியாமல் நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது :-)
ஹொட்டேலுக்குள் நுழைஞ்சதும் சகுனம் ரொம்பச்சரி.  ரெண்டு பெரிய யானைகள் வரவேற்க, புள்ளையாரும் நாராயணனும்மா நின்ற கோலத்தில் ! நடுவில் சிம்மவாஹினி சந்தோஷி மாதா! நம்ம பக்கத்து ஸ்டைல் குத்துவிளக்கொன்னு  நின்னு நிதானமா முத்துச்சுடரோடு!
அறைக்குப்போன அஞ்சாவது நிமிட்டில் கிளம்பிட்டோம். பெருமாளே.... இதோ வந்தேன்.....
சரியா ஒரு கிமீ தூரத்துலே இருக்கார் பத்ரிநாத்.  கிளம்பிப்போய் கடைகள் நெரியும் ஒரு முட்டில்  வண்டியில் இருந்து இறங்கிக்கணும்.  வலதுபக்கம் கார் பார்க்கிங் ஏரியா.  இடது புறம்   சந்துலெ இருக்கும் கடைகளுக்கு நடுவில் நீந்திப்போனால்  கடைசியில் ஒரு பாலம். பாலத்துக்கு அந்தாண்டை கோவில்.

பாலத்துக்குக்கீழே அலக்நந்தா கொந்தளிச்சுக்கிட்டுச் சுழிச்சு ஓடறாள், படு வேகமா! கோவில் கொஞ்சம் மேடானபகுதியில் இருப்பதால் சந்துக்குள் இறங்கினதும்  பார்வைக்குத் தெரிஞ்சுருது!
மொட்டைமாடி போல ஒரு இடத்துலே நின்னு,   'ஹைய்யோ.... கிடைக்குமா'ன்னு ஏங்கிக்கிடந்த  கோவிலைப் பார்த்ததும்  கண்ணுக்குள்  கரகரன்னு  தண்ணீர்  சேர்ந்தது உண்மை.

கோவிலையொட்டியே மலைச்சரிவில் நெருக்கமா ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் ஜேஜேன்னு இருந்தும்கூட... கோவிலின் அலங்காரமும் மிடுக்கும் அழகும் தனியாத்தான் தெரியுது!
பாலத்துக்கு  ஒரு அலங்கார நுழைவு வாசல்! ருத்ராக்ஷ சரங்களைத் தொங்கவிட்டுருக்காங்க.

பாலத்துக்கு அந்தாண்டைப் பக்கமும் ஒரு அலங்காரவளைவு. அங்கிருந்து படிகள்!

தலையை உயர்த்தி அண்ணாந்து கோவிலைக்  கும்பிட்டப்போ  வானத்தில்  வட்டமிடும்  ரெண்டு கருடர்கள்!  சகுனம் ஓக்கே! மேலே ஏறாமல்  கீழ்ப்புறம் இறங்கிப்போறோம்.  தப்த் குண்ட் இங்கேதான்!
மக்கள் வெள்ளம்தான் எங்கேயும்!   இந்த வெந்நீர் குளத்துக்கு,  நீர் வரும் சின்ன  வழியில் கைநீட்டி  தண்ணீர் எடுத்துத் தலையில் தெளிச்சதோடு சகல பாபங்களும் போயே போச்!


இந்தத் தண்ணீரை ரெண்டு  குளங்களில் பாயும்படி செஞ்சுருக்காங்க. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி இடங்கள். ஆண்கள் பகுதியில்  கூட்டம் அதிகம். பெண்கள் பகுதியில்  காலின்னு சொல்லலாம். ஒரு அம்மா மட்டும் கரையில் உக்கார்ந்து  உள்ளே இறங்கலாமா வேணாமான்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க.


பெரியக்காவின் நாத்தனார், அந்தக் காலத்துலேயே பத்ரிநாத் பயணம் போய் வந்துருந்தாங்க. அது இருக்கும் ஒரு அம்பத்தியஞ்சு வருசத்துக்கு முன்னால்.... எப்பவாவது பேச்சு பயணத்தைப்பற்றித் திரும்பும்போது கதைகதையாச் சொல்வாங்க. சின்னப்புள்ளைங்களா, நாங்கெல்லாம் கூட உக்கார்ந்து 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருப்போம். (அதானே... அப்பெல்லாம் ப்ளொகா, இல்லை ஃபேஸ்புக்கா? ... எல்லாத்தையும் எழுதிப்போட்டுவிட? )

அப்போ இந்த சுடுதண்ணி ஊத்து பத்திச் சொன்னப்ப...  ஒரு துணியில் அரிசியை கொஞ்சம் லூஸா மூட்டை கட்டி, ஒரு குச்சி முனையில் தொங்கவிட்டு, அந்த சுடுதண்ணிக்குள்ளே முக்கி வச்சுருப்பாங்களாம்.  கொஞ்ச நேரத்துலே அது  சோறா வெந்துருக்குமாம். இப்படித்தான் உருளைக்கிழங்கு, சிலகாய்கறிகள்னு   வேகவச்சு சாப்புட்டாங்களாம் அந்தப் பயணத்தில்.   எல்லாம் ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர்  சமைக்கிறதுதான்:-)

இப்ப அந்த அளவு சூடெல்லாம் இல்லை.  வேறெங்கிருந்தோ  தண்ணீரை விளாவி பைப் லைனில் வருதுன்னு நினைக்கிறேன். நல்ல குளிக்கும் பதத்தில்  இருக்கும் சூடுதான்.  மெள்ளக் காலை நனைச்சுப் பார்த்தேன். இதம்.  ஆனால்.... குளிக்கலை.
நம்மவரைக் குளிக்கிறீங்களான்னு கேட்டதுக்கு தலையை ஆட்டுனார் 'நோ'ன்னு:-)  முழு பாரத தேசமும் இங்கே சங்கமம்தான். எத்தனை விதம், எத்தனை மொழி, எத்தனை வகைன்னு.....   இப்படிப் பார்க்கறதே பெரிய புண்ணியம்தான்.
அலக்நந்தா கரையில் பித்ரு தர்ப்பணம் கொடுக்கறது  ரொம்பவே விசேஷமுன்னு  பண்டிட்கள் மக்களுக்கு  அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காங்க. நாரத் குண்ட், ப்ரம்ம கபாலம் இங்கே மட்டும் தர்ப்பணம் கொடுத்துட்டீங்க.... இனி  வேறெங்கும், எப்பவுமே கொடுக்க வேணாமாம்..... காசியில் ஆயிரம் முறை தர்ப்பணம் செய்த பலன் இங்கே ஒருவாட்டி செஞ்சாலே கிடைச்சுருமாம்! ( அதனால்  எல்லாக் காசையும் இங்கேயே கொடுத்துப்போயிருங்க. அதுதான் புண்ணியங்களில் பெரியது!)

 அடடா.... இதுக்கெல்லாம் ஆயுத்தமா வரலைன்ற கவலையே வேணாம். கை நிறையக் காசு  வச்சுக்கிட்டு,  சரின்னு தலை ஆட்டுனாப் போதும். சகல ஏற்பாடும் நொடிகளில்! கிடைச்ச இண்டு இடுக்குகளில் சட்னுஒரு  துணியை விரிச்சுப்போட்டு பூஜை ஆரம்பிச்சுடறாங்க.

இப்படி ஒருத்தருக்கு  புது பாக்கெட்டைத் திறந்து பஞ்சகச்சம் கட்டி விட்டுக்கிட்டு இருந்தார் ஒரு பண்டிட்.  அவர் பெயர் ஜோஷி. கட்டிவிடப்பட்டவர் பெயர் தோஷி.  அடடா என்ன இப்படி ஒரு பெயர்ப்பொருத்தமுன்னு  அனுமதி வாங்கிக்கிட்டு க்ளிக்கினேன். ரொம்ப மகிழ்ச்சியா போஸ் கொடுத்தாங்க  ஜோஷி அண்ட் தோஷிஸ்.




பூஜைக்கான பொருட்களை விற்கும் கடைகளும் வியாபாரிகளும் சகல இடங்களிலும்!  எப்போ யாருக்குத் தேவை இருக்குமோ என்ற எண்ணம்தான் :-)
தாம்பாளம் போல தட்டுலே  உலர்ந்த பழவகைகள், பாதாம் முந்திரின்னு  நட்ஸ் வகைகளை அழகா அடுக்கி அதுக்கொரு மஞ்சள் கண்ணாடிப் பேப்பர் போட்டு அடுக்கி வச்சுருக்காங்க.  நம்ம பர்ஸின் கனத்துக்குத் தக்கபடி வாங்கிக்கிட்டு பத்ரிநாதரை தரிசிக்கக் கோவிலுக்குள் போகலாம்.
மாடிக்குப்போக ரெண்டு பக்கமும் படிகள் கட்டி இருப்பாங்க பாருங்க அப்படி ஒரு டிஸைன்.  எதாவது ஒரு பக்கத்தில் ஏறி லேண்டிங் பகுதியில் நின்னு  கண்ணெதிரே இருக்கும்   பத்துப்பனிரெண்டு படி வரிசையில் ஏறிப் போகணும்.  இந்தப் பகுதிதான் இங்கத்து  ஃபோட்டோ ஸ்பாட்!  இங்கே நின்னு படம் எடுத்துக்கலைன்னா பத்ரி யாத்திரை பூர்த்தி ஆகாது !  தெய்வக்குத்தம் வேணாமேன்னு நாமும் சிலபல க்ளிக்ஸ் :-)
நல்ல கலர்ஃபுல்லான  வாசல்!    ரெண்டு பக்கமும் சிங்கம்!  சிங்க வாசல். ராஜஸ்தான் ஸ்டைல்!  சிம்ஹத்வார்!  மேலேறுனதும் ரெண்டு பக்கமும் கருட்ஜி!  கொஞ்சம் கிழமுகத்தோடு இருக்கார்!


படிகள் முடியும் இடத்தில் பக்கத்துக்கு  பாஞ்ச் யானை வரிசை.  மூலை  என்றதால்   பாஞ்ச் பாஞ்ச் தஸ்ன்னு!   சகுனம் டபுள் ஓக்கே!   வாசலில் தலைக்கு மேலே ஒரு பெரிய காண்டாமணி!  கைக்கு எட்டலைன்னாலும் ஒரு  ஹைஜம்ப் பண்ணி  அதை அடிச்சாத்தான் திருப்தி :-)டங்..... எட்டூருக்குக் கேக்கும் ஒலி!
 பயங்கர போக்குவரத்து. ஆளில்லாத கோவில் படியை க்ளிக்குனா  ஒரு பவுன் இனாம்!  ஊஹூம்ம்ம்ம்   முடியவே முடியாது. ஒரு தலையாவது எட்டிப் பார்த்துரும்:-)

இதுக்கப்புறம் கோவிலுக்குள் படம் எடுக்கத் தடை !

தொடரும்...........  :-)


Wednesday, August 17, 2016

நாச்சியார் கோவில் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 74)

ஏற்கெனவே தரிசனம் செஞ்சுருந்த கோவில்களுக்குப்  போகவேண்டாம் என்று நினைச்சாலும் கூட....   இவ்ளோ தூரம் வந்துருக்கோம். ச்சும்மா ஒரு எட்டு பார்த்துட்டுப்போயிடலாமேன்னு தோணுது. அதிலும்  மனைவிக்கு முன்னுரிமை கொடுத்து, அடங்கி இருப்பவனை விட முடியுதா?

நாச்சியார் கோவிலைப் பார்த்ததும் இறங்கிட்டோம்.  சாமி பிடிச்சுருக்குன்னு சொல்றதைப்போல....   இங்கே முன்மண்டபத்துத் தூண்கள் ரொம்பவே  பிடிச்சுருக்கு எனக்கு.  நம்ம ஒப்பிலியப்பன் கோவிலில் இருந்து 5.4 கிமீ தூரம்தான்.
அருள்மிகு  சீனிவாசப்பெருமாள் திருக்கோவில்! அஞ்சு நிலை ராஜகோபுரம். வெளியே கோபுரவாசலை ஒட்டியே  புள்ளையாருக்கு ஒரு சின்ன சந்நிதி!  கும்பிடு போட்டுட்டுக் கோபுரவாசல்வழி   உள்ளே நுழைஞ்சதும்  பெரிய பெரிய தூண்களுடன் நீண்டு போகும் முகமண்டபம். தூண்களோட சைஸைப் பார்த்தால் திருமலைநாயகர் மஹால் நினைவு வரத்தான் செஞ்சது. ஆனால் உயரம் கொஞ்சம்(!) குறைவுன்னு நினைக்கிறேன்.  இதுலே கொஞ்சதூரத்தில் கொடிமரமும் பெரிய திருவடிக்கானக் குட்டிச் சந்நிதியும்.
பிரகாரத்தில் வலம்போனால்.... முற்றத்தில் நீராழிமண்டபம் போல ஒரு அழகான மண்டபம். தேர்போல வடிவமைச்சு இருப்பாங்க போல. படிகள் முடிவில்  தேர்ச்ச்க்கரத்துக்கான் வட்டம். ஆரங்கள் இல்லை:-( முற்றத்தின் இடப்பக்கம் அன்னதானக்கூடம்.
மூலவர் சீனிவாசப்பெருமாள். ஹென்பெக்டு ஹஸ்பெண்ட் :-)  இப்படிச் சொன்னது உள்ளூர்காரர் ஒருவர்தானாக்கும்!
 ஒரு 7 வருசத்துக்குமுன்னே  முதல்முறையா  இந்தக் கோவிலுக்குப் போயிருந்தோம். நாம் தங்கி இருந்த ஆனந்தத்தில்   அன்றைக்கு மாலை ஒரு பாட்டுக் கச்சேரி.  சிறப்பு விருந்தினர் யாராம்?   ஹாஹாஹா....    நாம்தான் வேற யாரு?  முதலில்  அரங்கமே நமக்குன்னுதான் இருந்துச்சு. அப்புறம்  இன்னொரு குடும்பம் (வெளிநாடு)வந்தாங்க.  ம்ருதங்கவித்துவான் நாச்சியார்கோவில் ரகு.  உமையாள்புரம் சிவராமனின் செட். 

கச்சேரி ஆனாட்டு,  ம்ருதங்கக்காரருடன் கொஞ்சம் பேச்சு. நாச்சியார் கோவில் ரகுன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.   அப்போதான் நான் சொல்றேன், 'இப்போதான் நாச்சியார் கோவில் போயிட்டு வந்தோம்.    அழகான கோவில், இல்லையோ?'   " ஆமாமாம்.  எங்க பெருமாளை மாதிரி ஒரு ஹென்பெக்டு ஹஸ்பெண்டை வேறெங்கிலும் பார்க்க முடியாது :-)"

ஆஹா   ...மதுரை...மதுரை....
வஞ்சுளவல்லி, வஞ்சுள மரத்தடியில் கிடைச்ச குழந்தை!  அதென்ன....   பொண்குழந்தைகள் எல்லாமே  அங்கே இங்கேன்னு 'கிடைக்கறதுகள்'?  என்னமோ மர்மமா இருக்கே!

பெருமாளுக்கு இங்கே ரெண்டே கைகள்தான்.  மேதாவி முனிவரிடம்  பெண்கொடை கேட்டுக் கையேந்தி நிற்கிறாராம்.

நம்ம மேதாவி முனிவர்  கொஞ்சம் அப்பாவிதான் போல!   மஹாலக்ஷ்மியே தனக்குப் பொண்ணா வந்து பிறக்கணுமுன்னு  வேண்டிக்கிட்டவர்.  பாருங்களேன்...  அவனவன் பெண்குழந்தையா.... வேணவே வேணாமுன்னு அலறியடிச்சுக்கிட்டுக் கருவிலேயே அதுக்கு சமாதி கட்டும் இந்தக் காலத்தில் இருக்கும் எனக்கு  .... என்ன தைரியத்தில்  இவர் அதுவும் ஒரு முனிவர்....  பொண் குழந்தை வேணுமுன்னு  வேண்டி இருக்கார்னு வியப்புதான்.

நம்ம புராணங்களில் பார்த்தீங்கன்னா சாமிகள் எல்லாம்   மரத்தடியிலோ,  இல்லை  தடாகங்களில் இருக்கும் தாமரை மலர்களிலோ  டைரக்ட்டா குழந்தையாவே வந்து  அவதரிச்சுடுவாங்க.  அதே போல் ஒரு வகுள மரத்தடியில் பெண்குழந்தையொன்னு இவருக்குக் கிடைக்குது!  வகுளம் = மகிழம். மகிழ மரத்தடியில் பாப்பா!  மகிழமரம்தான் இங்கே தல விருட்சமும்!

வகுளமரத்தடியில் கிடைச்ச பாப்பாவுக்கு வஞ்சுளவல்லின்னு நாமகரணம் ஆச்சு.  ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து  இங்கே வந்துட்டாங்க  மஹாலக்ஷ்மித் தாயார்.   கொஞ்சம் பெரியவளாகட்டுமுன்னு  பெருமாள் ஸ்ரீவைகுண்டத்துலேயே காத்திருந்தார்.  பிக்கல் பிடுங்கல் இல்லாமல்   ஹாயா இருந்துருப்பார்னு நினைக்கிறேன்.

இங்கே சின்னப் பாப்பா வளர்ந்து பெரிய பாப்பா ஆகியிருந்த சமயம்,  பெருமாள்  வர்றார்.  மனைவி எங்கே  போய்ப் பிறந்தாள்னு தெரியாததால்  தேடிக்கண்டுபிடிக்க நாலு பேர் வேணுமேன்னு  இவரே தன்னையும் சேர்த்து அஞ்சு  ஆளா  வர்றாராம்.

சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன்,  வாசுதேவன், புருஷோத்தமன் இப்படி  தன் பிள்ளை, பேரன்னு தன் குடும்ப அங்கத்தினர்கள் பெயரிலேயே   ரூபம் எடுத்தாச்சு.   நாலுபேரை நாலு திசைக்கு அனுப்பித் தேடிப் பார்க்கச் சொல்றார்.  அவுங்களும்  தேடிக் கண்டுபிடிச்சு சேதி சொன்னதும்,
மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு அஞ்சு  இளைஞர்களும் வந்து சேர்ந்தாங்க.

ஆசிரமவாசலில் நின்ன அதிதிகளைப் பார்த்து  மகிழ்ந்த முனிவர் , அவுங்களை உள்ளே வரவேற்று,  சாப்பாடு போடறார்.  சாப்பிட்டு முடிச்சவங்களுக்குக் கைகழுவத் தண்ணீர் ஊத்தச் சொல்லி மகளிடம் சொல்றார்.  நான் அப்பாவின்னு நினைச்சது இப்பத்தான். தடிதடியா வாலிபப் பசங்க  வந்துருக்காங்க.   அதுவும் முன்பின் தெரியாதவங்க. வயசுக்கு வந்த பொண்ணை இப்படியா அவுங்க முன்னால்  கொண்டு நிறுத்தறது?
நாலு பேரும்  ஓசைப்படாமத்  தலை குனிஞ்சு சாப்பிட்டோமா,  குனிந்த தலை நிமிராமல்  கை கழுவுனோமான்னு  போனப்ப , அஞ்சாவதா வந்தவன்                 ( வந்தவர்)  பொண்ணைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டான். உண்ட வீட்டுக்குச் செஞ்ச துரோகமில்லையோ?  பயந்துபோன பொண்ணு 'குய்யோ முறையோ'ன்னு கத்த, வந்து பார்த்த மகரிஷிக்கு கோவம் பொங்கிக்கிட்டு வந்துச்சு. சபிக்கப்போகும் தருணம் அந்த 'அஞ்சாத அஞ்சாமத்து ஆள்' (வாசுதேவன் என்ற பெயர்) உங்க பொண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கோன்னு கெஞ்சினாராம். இவன் யாரடா போக்கிரின்னு நினைக்கும்போது தன்னுடைய 'சுயரூபத்தை' வெளிப்படுத்தி இருக்கார் பெருமாள்.

ஆஹா.... ... விஷ்ணுவே மாப்பிள்ளையா வந்தாக் கசக்குமா? ஆனாலும் இப்ப மாமனார் கை ஓங்கி இருக்கு. 'பொண்ணைத் தா' ன்னு கெஞ்சிக் கேட்பவரிடம் சில கண்டிஷன்களைப் போட்டுக்கணும். இந்த நொடியைத் தவறவிட்டா.....அப்புறம் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமா?

"என் பொண்ணுக்குத்தான் எல்லாத்துலேயும் முதலிடம் கொடுக்கணும். அவள்தான் இங்கே அதிகாரம் செய்யறவளா இருக்கணும். நீ வீட்டு மாப்பிள்ளையாக் கிட. இன்னும் சுருக்கமாச் சொன்னால் அவள் பேச்சைக்கேட்டு நீ ஆடணும்"

பொண்ணு கிடைச்சாப்போதுமுன்னு  எல்லாத்துக்கும்  தலையை ஆட்டிட்டார் வாசுதேவன். அப்புறம்?

அம்மாதான் இங்கே எல்லாம். இடுப்பிலே சாவிக்கொத்து கூட இருக்கு. கெஞ்சும் முகபாவத்தோடு கை நீட்டும் பெருமாளும், அவரைவிட ஒரு எட்டு முன்னால் நிற்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருமா இருக்காங்க கருவறையில். பெருமாளின் முகம், பாவனை அட்டகாசம்.  கூடவே வந்த மற்ற பாய்ஸ் என்ன ஆனாங்க?   அந்த நாலுபேரும்தான்  கருவறை பின்பக்கம்  நின்னுக்கிட்டு இருக்காங்க.
மனைவி சொல்லே மந்திரம் என்றநிலை என்பதால்  பக்தர்களுக்கு அருளும் பொறுப்பை எல்லாம்  பவர் ஆஃப் அட்டர்னின்னு பெரிய திருவடிக்குக் கொடுத்துட்டார். அவரும் பொறுப்பை ஏத்துக்கிட்டு விஷக்கடி முதல் சகல வேண்டுதல்களுக்கும்  இல்லை என்னாமல்  வரங்களை வாரி வாரிக்கொடுப்பதால்  அவருக்குத்தான் பக்தர்கூட்டம் அதிகம்!

 அர்த்தமண்டபத்தில்  கல்கருடர் ஜம்முன்னு  உக்கார்ந்துருக்கார்.  வெள்ளிக் கண்களும்,   உடலை ஒட்டிப்பிடிக்கும் வெள்ளிப்பாம்புகளுமா பலே ஜோர்!  நகைநட்டுக்கூட இவருக்குப் பாம்பணிதான்! இருக்கும் ஒரு ஒன்பது பாம்ப்ஸ்!   இந்தச்சந்நிதிக்கு மூலவரும் இவரே உற்சவரும் இவரே!.  திருவுலாப் போகும் நாட்களில் இவரையே அலாக்காத் தூக்கிண்டு போறதுதான் வழக்கம்.

சந்நிதியை விட்டு வெளிவரும்போது நாலு பேரால் தூக்கமுடியும் அளவுக்கான கனம் கொண்டவர் போகப்போக கனம் கூடிக்கிட்டே வர்றாராம். நாலு எட்டாகி  எட்டு பதினாறு, முப்பத்திரெண்டு ஆகும் அளவுக்குக் கனம் கூடிப்போகுதாம்.  ஊர்வலம் முடிஞ்சுத் திரும்பக் கோவிலுக்கு வரும்போது கனம் குறைஞ்சுக்கிட்டே வந்து கடைசியா நாலு பேர் தூக்கி உள்ளே வைப்பதற்குத் தோதாய் கனத்தைக் குறைச்சுக்கறாராம்.
பூக்கள் அலங்காரத்தில் பிரமாதமா இருக்காங்க  வஞ்சுளவல்லியும் வாசுதேவனும்.  உற்சவருக்கு'இடர்கடுத்த திருவாளன்' என்று பெயர்.  மூலவருக்கு திருநறை நம்பி என்னும் பெயரும் உள்ளது. அதைக் கொண்டுத்தான் ஊருக்கும் திருநறையூர் என்ற பெயர்.  ஊருக்குப் புராணப்பெயர் வேறொன்னு... சுகந்தகிரி க்ஷேத்ரம்!
 நம்ம திருமங்கை ஆழ்வார் இங்கே வந்து  இந்தப்பெருமாளுக்கு மட்டுமேன்னு நம்பி நம்பின்னு உருகி உருகி நூற்றுப்பத்து  பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார். அந்த வகையில் இது 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்னு.  ஆமாம்  அது என்ன நூத்துக் கணக்காக? எல்லாம் ஒரு  நன்றிக்கடன்னும் சொல்லிக்கலாம்.

அவருடைய பழைய வாழ்க்கையில்  ஒரு குறுநிலமன்னராக இருந்தார். பெயர் நீலன்.  பெருமாளிடம் அளவில்லாத பக்தி அப்பவே!  தன்னுடைய செல்வத்தையெல்லாம்  பெருமாளுக்கான கோவில், குளம், கட்டி வெட்டுவதற்கே செலவு செஞ்சவர்.  அப்படியும் இவரை  வைணவராக யாருமே ஏத்துக்கலை.

தோள்களில் சங்கு சக்கரம் முத்திரை இல்லாதவர் வைணவர் கிடையாதுன்னு அப்போ ஒரு எண்ணம்.  இதை யார் வேணாவந்து வச்சுடமுடியாது.  ஆச்சாரியன், தன் சிஷ்யரின் நியம நிஷ்டைகளைப் பார்த்து,  அவருக்குத் திருப்தியானால்தான்  பழுக்கக் காய்ச்சிய  சங்கு சக்கரச் சின்னங்களை தோளில் பதிப்பார்கள்.

நீலன், பெருமாளிடம் வந்து வணங்கி,  தன்னை ஒரு வைணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டறார். மனம் இரங்கிய மஹாவிஷ்ணு, தானே ஆச்சாரியனாக வந்து முத்ராதானம் செஞ்சு வைக்கிறார்.  அதனால்தான் இங்கே பெருமாள்  ரெண்டே கைகளோடு இருக்கார்னு சொல்றாங்க. அப்ப,பொண்ணு கேக்க  நாலுகையோடு வந்தரா என்ன?  அப்பவும் சாதாரண மனுஷ்யனா ரெண்டு கைகள்தானே இருந்துருக்கும், இல்லையோ!

பெருமாள் தன்னை ஏற்றுக்கொண்ட நன்றியில் பரவசமான  மன்னர் திருமங்கை 110 பாசுரங்களாப் பாடித் தீர்த்துட்டார்!


கோவில் காலை 7.30   முதல் பகல் 12.30 வரையிலும், மாலை  4.30 முதல் இரவு 9 மணி வரையும் திறந்துருக்கு.

இந்தக்கோவில் அமைப்பிலே எனக்குப்பிடிச்ச இன்னொரு சமாச்சாரம்  தெருவிலே நின்னால்.... கண்பார்வை போகும் நெடுந்தொலைவிலே பெருமாள் கருவறையில் தெரிகிறார்.  போற போக்கில்கூட ஒரு கும்பிடு போட்டுட்டுப் போகலாம்.
 நீளமான முன்மண்டபத்தைக் கடந்து படிகளேறி  அர்த்தமண்டபம் தாண்டி அங்கேயும் சிலபடிகளேறி  அப்புறமாத்தான்  கருவறை.  !  நல்ல விளக்கு போட்டு வச்சுருப்பதால்  பளிச்ன்னு இருக்கார் பெருமாள்.  (இதே போல் திருப்பதியில் இருக்கப்டாதோ அந்த ஸ்ரீநிவாசன்? இருட்டுலே மொச்சுமொச்சுன்னு நிக்கறது...   ஒரு விநாடி கவனிச்சுப் பார்க்குமுன்பே  வல்லரக்கிகள் கையைப்பிடிச்சு இழுத்துக் கடாசறதுன்னு....  ப்ச்      இந்தக் கோவிலுக்கே சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் என்றுதானே போர்டே போட்டு வச்சுருக்காங்க! )
பெருமாள் நின்ன இடத்தில் இருந்தே தெருவில் நடக்கும் போக்குவரத்தைப் பார்த்துக்க முடியும்!
பஞ்சக்ருஷ்ண க்ஷேத்ரங்கள் (க்ருஷ்ணாரண்யம்)  என்று அஞ்சு கோவில்கள் விசேஷமாம்.  திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் மற்றும் திருக்கண்ணங்குடி.  முக்தி தரும் பனிரெண்டு திருக்கோவில்களில் திருநறையூரும் உண்டு என்கிறார்கள்.

நமக்கும் முக்தி கிடைச்சாச்சுன்னு நம்பிக்கையோடு நம்பியிடமும், நம்பிக்கை நாயகி வகுளவல்லியிடமும்  சொல்லிக்கணும்.
போனமுறை  எழுதின பதிவில்  இன்னும் நல்ல படங்கள் இருக்குன்னு எனக்கொரு தோணல்.  விருப்பம் இருந்தால்  இங்கே க்ளிக்கலாம்.

திவ்யதேசக் கோவில்தான் இதுவும்.  பார்க்க சிம்பிளாத் தெரியும்  ப்ரமாண்டமான கோவில்.  பக்தர்கள் குடிக்க நல்லதண்ணீர் சுத்திகரிச்சுக் கொடுக்கும் அமைப்பும், மழைநீர் சேகரிக்கும்   அமைப்பும் நல்லாவே இருக்கு!

இப்பவே  மணி அஞ்சரை தாண்டியாச்சு. இந்தியாவில் ஆறானாப்போதும், சட்னு இருள் கவிஞ்சுருதே!   அடுத்துப்  போகும் கோவிலுக்காகத்தான்  இந்தமுறை கும்மோணம் வந்ததே.........  ரெண்டு கோவில்களை  இன்னொருக்கா நல்லாப் பார்க்கணும் என்று  வந்ததுதான் இப்போ.

அந்தக் கோவிலை தரிசனம் பண்ணிட்டுத் திரும்ப கும்பகோணம் போகும்வழின்னு நாச்சியார் கோவில் வழியேதான் திரும்பி வர்றோம். கோவில் புஷ்கரிணி இருக்கும் நிலை.....   யக்......   என்னப்பா இவ்ளோ அநியாயம்?   ச்சே.....  





தொடரும்............  :-)