Wednesday, June 26, 2019

உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி..... (பயணத்தொடர், பகுதி 109 )

மன்னர்கள் கோவில்களைக் கட்டுன காலமெல்லாம் போய் இப்போ மக்கள் கட்டும் காலமாகிப்போச்சு...

அதனாலே?
இஷ்டத்துக்கு இடத்தை வளைச்சுப்போட்டுப் பிரகாரங்களைக் கட்ட முடியாது இல்லையா?

ஒரே கட்டடத்தில் 'இருக்கும்' எல்லா சாமிகளையும் அங்கங்கே சின்னச்சின்ன சந்நிதிகளா அமைச்சால் ஆச்சு. தவிர மன்னன் என்றால் அவனுடைய இஷ்ட தெய்வத்துக்கு மட்டும் கோவிலை நிர்மாணிக்கலாம்.  மக்கள் என்றபடியால் அவரவருக்கு ஆயிரம் தெய்வங்கள். புராணங்களில் சொல்லப்பட்டவைகளைவிட, இந்த கலிகாலத்தில் இன்னும் ஏகப்பட்டதுகள் வேற  வந்துக்கிட்டு இருக்குல்லையோ.... ப்ச்....

சீதைக்கோவிலில் இருந்து திரும்பி வரும் வழியில், இதே பாதையில் காலையில் போகும்போது பார்த்து வச்ச புத்தர் கோவிலையும் எட்டிப் பார்த்தபிறகு (ரொம்பச் சின்னதுதான். ஜஸ்ட் ஒரு புத்தர் சிலை மட்டும் ) அடுத்துப்போனது  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்!

இந்த நுவரா எலியாப் பகுதியில் தேயிலை பயிரிடுவதற்கான இட அமைப்பும் காலநிலையும் இருப்பதைக் கவனிச்ச ப்ரிட்டிஷார், 1824 ஆம் வருஷம் செடிகளை நட்டுப் பயிரிட ஆரம்பிச்சாங்க. அதுக்குப்பின் அங்கே தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய  இந்தியாவிலிருந்து (அப்போ பாரதம்)மக்களைக் கூட்டிப்போனதும் நடந்துச்சு. அப்போ இந்த வேலைக்குன்னு போனவங்க பெரும்பாலும் தமிழ்ப் பேசும் மக்களே!

அப்ப இது அவுங்க தேவைகளுக்காகக் கட்டப்பட்டக் கோவிலா இருக்கணும். சரியான காலம் தெரியலை. ஆரம்பகாலத்திலே  ரொம்பச் சின்னக் கொட்டிலில் ஒரு  கல்லில் சூலம் சாய்ச்சு வச்சுக் கும்பிட ஆரம்பிச்சுருக்காங்க.
1930 ஆம் ஆண்டுதான்  கோவிலைக் கட்டியதாம். அப்புறம் 1960 களில் கொஞ்சம் விஸ்தரிச்சுக்கட்டி இருக்காங்க. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்து நிக்குது இப்போ!  ராஜகோபுரம் கூட 2005 ஆம் ஆண்டுதான் கட்டுனாங்களாம்.

இது சம்பந்தமா ஒரு சின்ன வீடியோ ஒன்னு யூட்யூபில் கிடைச்சது. விருப்பம் இருந்தால் எட்டிப் பாருங்க. தமிழில்தான் கதைக்கிறாங்க! 1996 செப்டம்பரில் மகாகும்பாபிஷேகம் செஞ்சப்ப 54 சிவாச்சாரியார்கள் பங்கேற்று நடத்துனாங்களாம்!




பழைய காலம் போல  மல்ட்டிகலர் சுதைச்சிலைகள் இல்லாம, இப்பெல்லாம் ராஜகோபுரங்களுக்கும், கோவிலின் மற்ற விமானங்களுக்கும் அழகா டெர்ரகோட்டாவும் தங்கமுமா வண்ணம் பூசிடறாங்க. பார்க்கவே அழகா அட்டகாசமா இருக்கு!

அதுவுமில்லாம, தமிழ்நாட்டைவிட, இங்கே இலங்கையில் கோவில் பராமரிப்பு ரொம்பவே நல்லா இருக்குன்னு எனக்குத் தோணுது. அடிக்கடி பழுதுபார்த்துப் புதுவண்ணம் பூசி அருமையா வச்சுருக்காங்க. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னே போய் வந்தோமே அசோகவனம் சீதைக்கோவில், அது கூட தங்கமா ஜொலிக்குது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும் :-)

நல்ல உயரமான அஞ்சடுக்கு ராஜகோபுரம்.   கோவில் மணிக்கூண்டு (மணிக்கோபுரம்)இங்கெல்லாம் நல்ல தனி மண்டபமாக் கட்டி இருக்காங்க. !

கோவில் வாசலுக்கு எதுத்தாப்லெ தனி மண்டபத்தில் ஒரு சிலை.  யாருன்னு தெரியலை....   மாரிக்குக் காவல் தெய்வம் யாரு? கருப்பு வேட்டியும் முறுக்கு மீசையுமாக் கையில் கதை வச்சுக்கிட்டு, இடதுகாலை மடக்கி, வலதுகாலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்துருக்கார்!  ஐயனாரோ?
ராஜகோபுர வாசலில் நின்னு பார்த்தாலே கோவில் மூலவர் முத்துமாரி, ஜொலிக்கும் கருவறையில் இருக்காள்!  கிட்டப்போய்ப் பார்த்தால்  கழுத்து நிறைய எலுமிச்சை மாலைகள்!
ஆடிவெள்ளிக்கிழமை! சிறப்பு அலங்காரம்! அதுவும் அரசு விடுமுறை (போயா)தினம் வேற ! கேட்கணுமா? நிறையப் பெண்கள்  குடும்பத்தோடு கோவிலுக்கு வந்து வெவ்வேற சந்நிதிகளில் விளக்கேத்திவச்சுக் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
விஷ்ணுதுர்கைக்கு ராஹு காலப்பூஜை நடக்குது !







புள்ளையார், முருகன், சிவன், நவகிரஹங்கள், ஐயப்பன்னு சந்நிதிகள்  உள்ளுக்குள்ளேயே சுத்திவர .........
உற்சவமூர்த்திகளுக்குத் தனியிடம். நல்ல அலங்காரத்தில் !

கோவில் நோட்டீஸ் போர்டு பார்த்தால்.....  வாழும் கலை மையம் இலங்கையில் நல்லாவே காலூன்றி இருக்காங்க போல!
இன்னொருக்காப்போய் முத்துமாரியம்மனைக் கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பிப்போன இடம் 'த ஒன்லி ஒன் இன் ஸ்ரீலங்கா '! !

தொடரும்....... :-)

PINகுறிப்பு:  துர்கை, மாரியம்மன் மூலவர்களுக்கெல்லாம் இந்த எலுமிச்சம்பழம் மாலை போடுவது எனக்கு உடன்பாடில்லை. எவ்ளோ கனம்?  கழுத்து என்ன ஆறது?  அம்மன்கள் பாவமில்லையோ....  ஒரு தட்டில் எலுமிச்சம் பழங்களைக் குவிச்சு அம்மன்முன்னால் வைக்கப்டாதோ? 

இது என் சொந்தக் கருத்து. யாரும் பொங்க வேண்டாம்...


14 comments:

said...

எலுமிச்ச மாலை பற்றிய உங்களின் கருத்தை ஏற்கிறேன். இருந்தாலும் அந்த மாலையுடன் அம்மனைக் காண்பது மிகவும் அழகாக இருப்பதாக உணர்கிறேன்.

said...

சுவாமிக்கு அலங்காரம், அது பெருக்கும் பக்தி என்றுதான் பார்க்கணும்.

எங்கள் முன்னோர், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்துகொண்டு இருந்தபோது, பெருமாளுக்கு பால் அமிஸ்யை பண்ணும்முன்பு, பாலுக்குள் விரல் விட்டு ரொம்ப சூடா இல்லையா என்று செக் பண்ணிட்டுத்தான் கண்டருளப் பண்ணுவாராம். அதனால் பெருமாளாலேயே "என் அம்மாவோ" என்று அழைக்கப் பட்டதாக்க் கூறுவார்கள்.

அன்பு மேலிடும்போது உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது.

said...

நாங்கள் சென்றநேரம் கோவில் மூடி. உங்கள் பகிர்வில் அம்மன் தரிசனம் கிடைத்தது.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

அழகுதான். ஆனால் கனம் அதிகம். ஒருசமயம் இந்த எலுமிச்சை மாலையைக் கையில் எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. அப்பதான் இவ்ளோ கனத்தைச் சுமக்கணுமா? அம்மன் கழுத்து வலிக்காதான்னு பாவமா இருந்தது. இதைப்போலத்தான் பழ அலங்காரமுன்னு ஆஞ்சிக்கு அன்னாசிப்பழமெல்லாம் தொங்க விடுவாங்க.... ப்ச்....

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கடவுளைத் தனியாப் பிரிச்சுப் பார்க்க முடியறதில்லை. நம்ம குடும்பத்தில் ஒருவர் என்றபடியால் நமக்குள்ளதே அவருக்கும்...... கொஞ்சம் இளகி இருக்கும் நைவேத்யம் என்றால் ஸ்பூன் வச்சுக் கொடுப்பேன்.

சூடா இருக்கு, பார்த்துச் சாப்பிடுடான்னும் சொல்வேன் :-)

said...

வாங்க மாதேவி.

போயா தினத்தைத் தவிர மற்ற நாட்களில் கோவில்நடையை ரெண்டு மூணுதரம் அடைக்கிறாங்க போல !

said...

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்...நல்ல தரிசனம் மா..


மணிக்கூண்டு வெகு அழகு ...

said...

வாங்க அனுப்ரேம்,

அங்கே அநேகமா எல்லாக் கோவில்களிலும் கோவில் மணிக்கூண்டு ஒவ்வொரு வித அழகுப்பா !!

நானும் போகும் கோவில்களில் எல்லாம் மணிக்கூண்டு எப்படி இருக்குன்னு கவனிக்கத்தான் செஞ்சேன்.

said...

அழகான கோவில். நான் சென்றதேயில்லை. உங்க பதிவின் மூலம் அம்மனை தரிசித்தாயிற்று. இன்னும் பார்க்காத கோவில்கள் இருக்கு. இங்கு எல்லாக்கோவில்களும் அழகா பராமரிப்பாங்க. சில இடங்களில் ஒருவரது கவனிப்பு நிர்வாகம் என இருக்கு. இன்னும் நீங்க நல்லூர் கந்தசுவாமி கோவில் (யாழ்ப்பாணம், வடக்கில்) போனீங்களா தெரியாது. அங்கு போயிருந்தால் நிறைய பிரமிப்பாக இருந்திருக்கும். பங்க்சுவாலிட்டி கோவில்

said...

//பாலுக்குள் விரல் விட்டு ரொம்ப சூடா இல்லையா என்று செக் பண்ணிட்டுத்தான் கண்டருளப் பண்ணுவாராம். அதனால் பெருமாளாலேயே "என் அம்மாவோ" என்று அழைக்கப் பட்டதாக்க் கூறுவார்கள்.//

இங்கே ஶ்ரீரங்கம் கோயிலில் தான் இப்படிச் சொல்லுவார்கள். அவரை நடாதூர் அம்மாள் என்றே அழைப்பார்கள். இன்னமும் இந்தப் பெயரில் ஓர் இல்லம் வீதிகளில்(சித்திரை வீதி) காணப்படும்.

said...

எத்தனை அழலான கோவில். உங்கள் மூலம் நானும் ரசித்தேன்.

said...

வாங்க ப்ரியசகி,

யாழ்பாணம் பக்கம் போகலை. அடுத்தமுறை பார்க்கலாம்......

பொதுவா எல்லாக் கோவில்களும் பார்த்தவரை நல்ல பராமரிப்பே !

said...

வாங்க கீதா,

எத்தனை அற்புதமான விவரங்கள் !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்வருகைக்கு நன்றி !