Friday, June 21, 2019

வடைக்கும் ஆஞ்சிக்கும் ஒரு சம்பந்தம் இருக்குதோ? (பயணத்தொடர், பகுதி 107 )

பின்னவல யானைகளைப் பார்த்தபின்  நாம் போகும் இந்த நூறு கிமீ பயண தூரம்  கடக்க எப்படியும் மூணரை மணி நேரம் ஆகிருமாம். இருட்டுமுன் போய்ச் சேர்ந்தால் சரி. சின்ன ஊர்களையும். சட்னு வரும் கடைகளையும் பார்த்துக்கிட்டே போறோம்.  கம்போலா என்ற ஊரை நெருங்கும் சமயம்..... ட்ராஃபிக் போலீஸ் நின்னு  வண்டிகளை ஒழுங்குபடுத்தறாங்க. எதிர் வாடையில் எதோ கோவில் திருவிழா போல!




மேளதாளத்துடன்  ஊர்வலம்!  கொடியும், கிரகமும், கோலாட்டமும், இன்னும் கைகளில் என்னென்னவோ வச்சுக்கிட்டும்  சாலை ஓரமா ஆடிக்கிட்டே போறாங்க. டீச்சர்களும், கொஞ்சம் பெண்மணிகளுமாப் பள்ளிக்கூடப்பிள்ளைகள் !



இன்றைக்குச் சதுர்த்தசிதானே?  ஒருவேளை இவுங்க பஞ்சாங்கத்துலே பவுர்ணமியோ?  போயா......? கரகம், காவடின்னு தமிழும் சிங்களமும்  சேர்ந்துதான்  இருக்கு!

கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரப்பயணம் முடிஞ்சநிலையில் 'புசல்லவ ' என்ற ஊர் பெயர் பார்த்ததும் என்னமோ பிடிச்சுப்போச்சு.

நமக்கு அதிகம் நெடில் என்றால் அவுங்களுக்கு அநேகமா குறில்தானோ?

ஃபிஜின்னதும்  கரும்பு, மலேசியான்னதும் ரப்பர், ஸிலோன்னதும் டீன்னு ஒரு எண்ணம் மனசுக்குள்ளே வருது பாருங்க.... அந்த டீத்தோட்டங்கள்  இங்கே இந்தப் புசல்லவ  ஊரில் இருந்தே ஆரம்பிக்குது போல. சாலையும்  கொஞ்சம் சமவெளியிலிருந்து ஏத்தம்தான்....
டீ எஸ்டேட்டுகளைக் கடந்து போகும்போது  புசல்லவ கடைவீதி வந்துருச்சு.  மணி நாலரை ஆகப்போகுதே. எங்கியாவது ஒரு டீ குடிச்சுட்டுப் போகலாமேன்னு 'நம்மவர்' சொன்னார். ட்ரைவரும் கொஞ்சம் கை காலை நீட்டிக்கணுமே....
மஞ்சு கொண்டுபோய் நிறுத்துன டீக்கடையில்  டீயை விட வடை சூப்பர்!  அடடா....  ஒன்னோட நிறுத்திட்டோமே.....ன்னு அப்புறம் தோணுச்சு.
வாசலில் ஆப்ப அடுப்பு.  அடுக்கா ஆப்பங்கள் ! பக்கத்துலே கண்ணாடிப்பெட்டி அலமாரியில் பலகாரங்களைச் சுட்டுப் போட்டு வச்சுருக்காங்க. ஆப்பத்துக்குத் தொட்டுக்க என்னன்னு கேட்டேன். சொதியாம்.... ப்ச்.....




கடைவீதியில் 'கடச்சக்க' இருக்கு!  கேரளாவுக்கும் இலங்கைக்கும் செடிகொடிமரவகைகளிலும் சமையலிலும் கூட ஒரு ஒற்றுமை இருக்குல்லே!

கடைவீதி திரும்புமிடத்தில் ஒரு மசூதியும் ஹிந்துக்கோவிலும்  (முருகன் கோவில்) அடுத்தடுத்து!

இப்போ நாம் போறவழியிலேயே கொஞ்ச தூரத்தில்  ஆஞ்சி கோவில் இருக்காம். போயிட்டுப் போகலாம்....   ஒரு பனிரெண்டு கிமீ தூரம்தான். வளைஞ்சு நெளிஞ்சு போற (மலைப்பாதை) சாலையில் இருந்து ஒரு லெஃப்ட் எடுக்கணும். எடுத்தோம்.
சின்மயா மிஷன் கட்டி இருக்கும் கோவில்.  (Wavendon Hills ) அடிவாரத்தில் ஒரு ஆஃபீஸ். பக்கத்துலேயே ஒரு புள்ளையார் கோவில்.   கார் போகும் பாதைதான்.   பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டுக் கோவிலுக்குப் போறோம். ஒரு குன்றின் மேல் ஏறிப்போகணும். நிறைய படிகள்! வளாகம்/வெளிமுற்றம் வரை அம்பத்தியஞ்சு.... எண்ணிட்டொம்லெ :-)



கல்பாவிய பெரிய முற்றத்துலே  ஏழு படிகளோடு உயரத்தில் கோவில்! முகப்பில்  ராமலக்ஷ்மண சீதையுடன் ஆஞ்சி!


வாசலைக் கடந்தால் பெரிய கூடம். அந்தாண்டை கருவறையில் கைகூப்பிய நிலையில் ஆஞ்சி. கோவில் கூடத்தில் ராமலக்ஷ்மணர் சீதையின்  விக்ரஹம்  வச்சுருக்காங்க.

கோவிலுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை.  வாசலில் இருந்து பார்த்தாலே  தெரிகிறார் பதினெட்டு அடி ஹனுமன். ஒரு மூணடி மேடையில் நிக்கறார்.  சந்தனக்காப்பு போட்டுருந்தாங்க.
தரிசனம் ஆச்சு.  பலவிதமான பூஜை நடபடிகள் இருக்காம். விவரம் போட்டுருந்தாங்க. சங்காபிஷேகத்துக்குக் கொஞ்சம் சங்குகள் தயார் நிலையில். இந்த இடத்தில் ஒரு வெள்ளி வலம்புரிச்சங்கு ஒரு மேடையில்!



வெளியில் ஒரு செல்லம்தான் சுத்திக்கிட்டு இருந்தது. நாங்களும் அதன்கூடவே போய் வளாகத்தைச் சுத்திப் பார்த்தோம். சந்நிதிக்குப் பின்னம்பக்கத்தில் இன்னும் சில கட்டடங்களும் ஷெட் போல ஒரு அமைப்பும்கூட இருக்கு.

சின்மயாநந்த சரஸ்வதி  ஸ்வாமிகள் 1980 இல் இலங்கைக்கு வந்துருக்கார். அப்போ  இங்கே ஒரு  ஆன்மிக சமாச்சாரத்துக்காக அவுங்க மிஷனின் கிளை ஒன்னு தொடங்கலாமுன்னு தோணி இருக்கு.

அடுத்த வருஷம் இந்தக் குன்றில் (Wevanden Hills) பத்து ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்காங்க. இந்த நிலத்துக்கு Rambodha என்ற பெயரும் அவர் வச்சுட்டுப்போனதுதான்.  அப்படியே இருந்துருக்கு இந்த நிலம்.

சின்மயாநந்தரின் மறைவுக்குப்பின் (1994ஆம் ஆண்டு)  மிஷனின் பொறுப்பேற்ற தேஜோமயாநந்தர்,
'ஹனுமன், இந்தக் குன்றிலேதான்  முதல்முதலிலே வந்து இறங்கினார். அதனால் இதில் ஒரு கோவில் கட்டலாம்' ன்னதும்  1999 இல் வேலையை ஆரம்பிச்சுருக்காங்க. கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உசரத்துலே இருக்கு இந்த இடம். நிலத்தைச் சரிப்படுத்திக் கோவிலைக் கட்டி முடிச்சு, 2001 ஏப்ரல்  எட்டாம்தேதி மஹா கும்பாபிஷேகமும் ஆச்சு !
மனக்குரங்கு வழக்கம்போல்.... ஆரம்பிச்சது....  மஹேந்த்ரமலையில் இருந்து வானில் பாய்ந்த ஹனுமன், பறந்து வந்து இறங்கியது இங்கெதான்னு எப்படித் தெரியும்?  இன்னும் கொஞ்ச தூரத்துலே எட்டாயிரத்துச் சொச்சம் அடி உயரமுள்ள  பெரிய மலையான  மவுண்ட் பெட்ரோ ( இப்ப இதன் பெயர் Pidurutalagala )வில் தானே இறங்கி இருக்கணும்?  
அதன் தலையைத் தட்டி அடக்கினேன். சாமி விஷயத்துலே லாஜிக் பார்க்கக்கூடாது.  பெரியமலை நேஷனல் பார்க் ஆச்சே. அங்கே கோவில்கட்ட விடுவாங்களா?  அந்தப்பெரியமலையின் தொடர்ச்சியாத்தானே  இதுவும் குட்டியா இருக்கு. அங்கே ஒரு கால் பதிச்சுச் சின்னக்குன்றுக்குத் தாவினார்னு நம்பணும். நம்புனால்தான் சாமின்னதும் 'குரங்கு' ஓக்கேன்னது. பிழைச்சுப்போகட்டும்... விடுங்க!

மேலே இருந்து பார்க்கும்போது  தூரத்தில்  கொத்மலை அணையின் நீர்த்தேக்கம் ( Kothmale Dam) தெரியுது.   கொத்மலை ஆறு, மாவேலிகங்கை நதியின் கிளை ஆறு!


சுத்திவரப் பச்சைப்பசேல்னு குளுமையா இருக்குமிடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் உக்கார்ந்து காற்றை அனுபவிக்கலாமுன்னா எங்கே? இப்பவே மணி அஞ்சே முக்கால். இன்னும் ஒரு முப்பது கிமீ போகணும்னு கிளம்பவேண்டியதாப் போச்சு.

இங்கிருந்து ஒரு ஆறரை கிமீட்டர் தூரத்தில் இருக்கும் ரம்பொடா வழியாகத்தான் போறோம். ரம்பொடா டன்னலுக்குள் ( இலங்கையின்  அதி நீளமான சுரங்கப்பாதை இது. கால் கிமீ நீளம்  ) நுழைஞ்சு அந்தாண்டை போய் மலைப்பகுதியில் இருந்து இறங்கும் அருவியைப் போகிற போக்கிலே க்ளிக்கிட்டுப் பயணத்தைத் தொடரும்போது மழை பிடிச்சுக்கிச்சு.  சரியான மழை. எதிரில் வரும் வண்டியோ, ரோடோ ஒன்னுமே தெரியலை. கொஞ்சம் நிதானமாகவே போகலாமுன்னு சொன்னதுக்குச் சரின்னார் மஞ்சு.

நுவரா எலியா போய்ச் சேர்ந்தப்ப மணி ஏழு!  நாம் தங்கப்போற ஹொட்டேல்  க்ரீன் ஸ்டார் தேடி அந்த இருட்டிலே போனால்..... அந்தக் கட்டடத்துக்கு வழி எங்கூர் பால்ட்வின் தெரு (The steepest street in the world) மாதிரி செங்குத்தா இறங்குது.

வலையில் பார்த்து புக் பண்ண ஹோட்டேல்தான்.  வரவேற்பில் இருந்த  இளைஞர், 'கழிவு நீர் குழாயில்  பிரச்சனை. அதனால் இன்னொரு ஹொட்டேலுக்கு  உங்க புக்கிங்கை மாத்தறேன்'னார். அதுவும் அவுங்களுதுதானாம்.

"சரி, ஏதோ ஒன்னைக் கொடுங்க. எங்கே இருக்கு?"

" பக்கத்துலேதான்.  ஒரு நிமிச நடை. கார்பார்க்கிலிருந்து நடந்தே போகலாம்."

"அப்ப காரை இங்கே விட்டுட்டா? சரிப்படாதே...."

'வழி காமிக்க ஆள் அனுப்பறேன்'ன்னார். அவருடன் திரும்ப  'மலை ஏறி' அடுத்த (சந்து) தெருவுக்குள் போனால் 'லா காட்டேஜ்' இருந்தது.

முதல்வேலை முதலில் :-)
மாடியில் அறை. பரவாயில்லை. சுத்தமாவே இருக்கு!  மாடிப்படிகள்தான், வெளிப்புறம், பக்கவாட்டில்!
வரவேற்பின் ஒரு பக்கம் டைனிங் ஹால்.

டின்னருக்குப் போனோம். கொஞ்சம் பருப்பும் சோறும்  போதும் எனக்கு.  நைட் ட்யூடி மேனேஜர் தான்  விளம்பினார்.  இளைஞர். தமிழர்.  இந்த ஏரியாவில் அநேகமா எல்லோருமே தமிழர்கள்தானாம்.  நல்லதாப் போச்சு நமக்கு!




உருளைக்கிழங்குக் கறியும் பப்படமும் பருப்பும் சோறும்!  கடைசியில் ஒரு டீ!

தொடரும்......:-)


6 comments:

said...

தமிழர்கள் இருக்கும்போது நம்மூரில் இருக்கும் உணர்வு ஏற்படல் இயல்பே.

said...

ஒரு இடத்துக்குப் போனால் கண்ணால் பார்த்து ரசிப்பதோடு எங்களுக்கெல்லாம் முடிந்துவிடும். ஆனால் அந்த இடத்தைப் பல கோணங்களிலும் படம்பிடித்து, அவ்விடம் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான தகவல்களைத் திரட்டி, தொகுத்து அழகாய்ப் பதிவது உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது. பாராட்டுகள் டீச்சர். மனக்குரங்கை அடக்கிய விதம் சூப்பர்.

said...

தட்டிய கருத்து மகாவலி நீளத்தில் இருந்ததால்... தனிப்பட்ட செய்தியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. :-)

said...

அந்த சாலையில் பார்த்த முருகன் கோவிலில் ..முருகன் குடை பிடித்து இருப்பது போல இருக்கு காட்சி அவரின் வேலும் மேல் உள்ள குடையும் சேர்ந்து ...


ஆஞ்சி அழகு ..நாமக்கல் ஆஞ்சநேயர் நியாபகம் வந்தார் ....

பசுமையான காட்சிகள் எங்கும் ...

said...

நானும் தைமாதத்தில்தான் ரம்பொட அனுமார் கோவில் சென்று வந்தேன் ஊருக்கு போயிருந்த சமயம், உங்க பதிவு எனக்கு நாங்க சென்ற டூரை ஞாபகப்படுத்திகிறது. புசல்லாவ டீ ரெம்ப பிரபல்யம். பச்சைபசேல் என எஸ்டேட் இருக்கும். நாங்க கேரளா போயிருந்த சமயம் அந்த இடங்களை பார்த்து இவ்விடத்தோடு ஒப்பிட்டு பார்த்தோம்.
கீதமஞ்சரி சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் டீச்சர்.

said...

ஆஞ்சி வந்து இறங்கிய இடம் என்று கூறும் கோயிலுக்கு பின்யுறமுள்ள மலையில் பலவிதமான மூலிகைமரங்கள் உள்ளதாக சின்மயாமிசன் எங்கள் நண்பர் கூறினார்.