Wednesday, November 07, 2018

தங்கக்கோவில் !!!! (பயணத்தொடர், பகுதி 30)

வசதியில் பாண்டியராஜன், மேனேஜர். தமிழ்க்காரர்.  வேலை பார்க்கும் பெரியசாமி, விக்கி, ஜான் ஜோஸ்  எல்லாருமே திருச்சியாம். திருச்சின்னா ப்ரொப்பர் திருச்சி இல்லையாக்கும்.  தொட்டடுத்து இருக்கும் சிற்றூர்கள். இவர்களைத்தவிர கீழே வரவேற்பில் இருக்கும் ஷரத், கண்ணூர்வாசி. எல்லோரும் இளைஞர்கள் வேற !


ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையா நின்னு எல்லா வேலைகளையும் அழகாச் செய்யறாங்க.
காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் சமயம் எல்லோரையும் ஒன்னாப் பார்க்கமுடியுது.  சிரிச்ச முகத்துடன் நல்லாவே உபசரிக்கிறாங்க. எல்லோருக்கும் நன்றி சொல்லிட்டு, மூணு மசால்வடையையும் முழுங்கினேன்.  நல்ல ருசியாக்கும்!

முப்பத்தியஞ்சு கிமீ தூரத்தில் இருக்கும் குஷால் நகருக்கு இப்போ போறோம். போற வழியில் காவிரி நதி ஓடும் பாலத்தைக் கடந்து போகணும். பாலத்தையொட்டி, காவிரி அம்மனுக்கு ஒரு கோவில்!  அழகும் அம்சமுமான மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறாள்!   இறங்கிப்போய்ப் பார்க்கலாமுன்னா எங்கே.....  வண்டியை நிறுத்தக்கூட இடமில்லை. நெரிசலான போக்குவரத்து....


வண்டியில் இருந்தே கும்பிட்டேன். அடுத்த எட்டாவது நிமிட்  புத்தமடத்துக்குப் போயாச்சு !

திபெத் நாட்டைச் சேர்ந்த புத்த பிக்ஷுக்கள் நடத்தும் மடம். சுமார் அஞ்சாயிரம் பிக்ஷுக்களும், பிக்ஷுணிகளுமா இங்கே இருக்காங்களாம்.
நம்ம ஹிந்து மதத்துலே  சைவம், வைணவம் பிரிவுகளில் வெவ்வேற மடங்கள் இருப்பதுபோல புத்த மதத்திலும் நிறைய மடங்கள் வெவ்வேற குருமார்களால் ஆரம்பிக்கப்பட்டு  நடந்துக்கிட்டு இருக்கு!

திபெத் நாட்டைச் சீனா பிடிச்சுக்கிட்ட பிறகு  தலாய் லாமா இந்தியாவுக்கு வந்துட்டாரில்லையா? அதே போல இன்னும் வேற சில மடங்களில் இருந்தும்  குருமார்கள் வெவ்வேற இடங்களுக்குப் போயிட்டாங்க.  அப்படி ஒரு மடத்து குரு ஒருவர்  His Holiness Pema Norbu Rinpoche  ( குருபீடத்தில் பதினோராவது பட்டம்) 1959 லே இந்தியாவுக்கு வந்தவர்,  தென்னாட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போ அவருக்கு வயசு இருபத்தியேழுதான்! கையில் முன்னூறு ரூபாயும்,  கூடவே வந்த சிஷ்யர்களும்தான் அவர் சொத்து!

கர்நாடக அரசு, ஒரு மூங்கில்காடா இருந்த இடத்துலே  மடம் கட்டிக்க இடம் கொடுத்து உதவுச்சு! சின்ன மடம்தான்.  அதுலே ஒரு புத்தர் கோவிலை வெறும் எம்பது சதுர அடியில் கட்டி இருக்காங்க, 1963 லே!   இப்ப அது எப்படி வளர்ந்து நிக்குதுன்றதைக் கண்ணால் பார்த்தால்  வியப்புதான்!  அம்மாம் பெரிய வளாகம்!

பத்மசம்பவா புத்த விஹாரா என்ற புதுக்கோவிலை  1999 இல் செப்டம்பர் 24 இல்  திறந்து வச்சுருக்கார் நம்ம தலாய் லாமா அவர்கள். (ஹா.... செப்டம்பர் 24 !!!!  நம்ம துளசிதளம் பிறந்த நாள் ஆச்சே!  'நம்மவர்' பிறந்தநாளும் அன்றைக்குத்தானே!  மறக்க முடியுமா? ) இந்தக் கோவிலுக்கு இன்னொரு பெயர்தான் தங்கக்கோவில் !    உள்ளே போனதும் , பெயர்க்காரணம் சுலபமாக் கண்டுபிடிச்சுடலாம் :-)

காலை எட்டுமணிக்குக் கிளம்பி ஒரு மணி நேரப்பயணத்துலே இங்கே வந்துட்டோம்.  வர்ற வழியிலேயே  வண்ண வண்ண  துணிக்கொடிகள் அங்கங்கே  கண்ணுலே பட்டுக்கிட்டே இருந்தது. நேபாளிலும்,  சீனாவிலும்   இப்படி  புத்தமதக்கொடிகளைப் பார்த்தது நினைவிருக்கோ?

வாசலில் நம்மை இறக்கிவிட்ட அசோக், பார்க்கிங் ஏரியா   எதிர்வாடையில் இருக்குன்னுட்டு அங்கே போயிட்டார்.
நுழைவு வாயிலுக்கான கேட், திபெத் கலாச்சாரம்.  கடந்துபோனால் பெரிய வளாகத்தின்  மூணு பக்கங்களிலும்  நீளநீளக் கட்டடங்கள்.   நினைவுப்பொருட்கள், வழிபாட்டுச்சின்னங்கள் இப்படி சின்னதா ஒரு  விற்பனை ....  நாலாவது பக்கம் கட்டட வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.

 நேரா உள்ளே போகும் வழின்னு சொல்றாப்போலே   வளாகத்தின் அந்தாண்டைப் பகுதிக்குக் கோலம் வரைஞ்ச பாதை!  என் இடம் னு உரிமை கொண்டாடிக்கிட்டு ஒரு செல்லம்  உக்கார்ந்துருக்கு.

  இங்கேயும் ஒரு நீளக்கட்டடம். நடுவில் ஒரு நுழைவு வாயில். ரொம்ப அழகான கோவில் கண் முன்னால்!  முகப்பில் குரு மஹராஜின் படம்! அம்பது வருசம் இங்கேயே  இருந்து, தான் ஆரம்பிச்சு வச்ச மடம்,  இத்தனை பெருசா விரிவடைஞ்சு, பள்ளி, கல்லூரி, புதுக்கோவில்ன்னு கொழிக்கறதைப் பார்த்துட்டுத் தன் எழுபத்தி ஏழாவது வயசுலே இவருடைய பிறந்த நாளிலேயே சாமிகிட்டே போயிட்டார்.
தரையெல்லாம் கோலமே கோலம். பாண்டியர்கள் சின் னம் கூட..... அப்போ....  ஒருவேளை....    ஹாஹா....


புத்த பிக்ஷிக்கள்  பலர், அவுங்கபாட்டுக்கு அவுங்க வேலையைப் பார்த்துக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டுமாப் போய்க்கிட்டு இருக்காங்க. நாமும் வந்த வேலையைப் பார்க்கலாமா?

நமக்கிடதுபக்கம் ரொம்பவே அகலமா இருக்கும் புதுக்கோவிலுக்குப் போறோம். காலணிகளை வாங்கி வச்சுக்க ஒரு அமைப்பு. படிகளேறி மேலே போனால்  பெரிய கதவு. பெரிய ஹால்.  ஹாலின் அந்தாண்டைக்கோடியில்  வரிசையா மூணு தங்கச் சிலைகள், ப்ரமாண்டமாய்!  தங்கக்கோவில்!
நடுவிலே  நமக்குத் தெரிஞ்ச  கௌதமபுத்தர். அவருக்கு ஒருபக்கம் நீண்ட ஆயுஸு  கொடுக்கும்  'அமிடாயுஸ்'புத்தர், இன்னொருபக்கம் குரு பத்மசம்பவா !  மூவரும் நாப்பதடி உயரச்சிலைகளா இருந்த கோலத்தில் ஸேவை!  தகதகன்னு மின்னும் தங்கம்!  சுத்திவர இடைவெளி இல்லாம வரைஞ்ச சித்திரங்கள்!  மேற் கூரை/விதானங்களையும் விட்டுவைக்கலை. புத்தர் வாழ்வில் நடந்த சம்பவங்களின் ஓவியங்கள் அங்கங்கே!
இந்த ஓவியம் வரைதல் எல்லாம் கோவில் வெளிப்புறச்சுவரிலேயே ஆரம்பிச்சுருது!  கதை சொல்லும் ஓவியங்கள்தான்! நமக்குத்தான் அது என்ன கதைன்னு புரியலை.


சின்னப்பிள்ளைகள் இருவர்,  சித்திரங்களைப் பார்த்து வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

திபெத்தியன் புத்தமதக் கல்வி சொல்லித்தரும்  மடங்களில் இதுதான் பெருசாம்!

அப்பழுக்கு இல்லாத மின்னும் தரையில்  அஞ்சு நிமிட் உக்கார்ந்து தியானம் செய்யலாம். எங்கே.... மனசு அடங்கலையே....  சுத்திவர  அழகு,  அமைதியா இருந்தாலுமே ஆள் நடமாட்டம் அதிகம்.....
புதுக்கோவிலைத்தவிர அங்கங்கே வெவ்வேற  கோவில்கள்.  எல்லாமே ஒவ்வொரு அழகில்!  உள்ளே  கொலுப்படிக்கட்டு மாதிரி அமைப்பில் புத்தர்கள்!  சுத்தமாவும் பளிச்ன்னும் பராமரிக்கிறாங்க !

விளக்கு ஏத்திவைக்க ஒரு தனி அமைப்பு.  அங்கே ஏற்கெனவே  தயாரா இருக்கும் விளக்கை ஏத்தி வச்சுக் கும்பிட்டுக்கலாம்.
செல்லங்கள் சில அங்கங்கே..... அந்தந்த கோவிலுக்குக் காவல்தெய்வங்களாட்டம் உக்கார்ந்துருக்கு. நல்ல கவனிப்பு போல!  ஆரோக்கியமா இருக்காங்க.

தோட்டத்தைப் பற்றிச் சொல்லியே ஆகணும்.   விதவிதமான பூக்கள். அதிலும் செம்பருத்திகளின் நிறங்களைப் பார்க்கணுமே.... ஹைய்யோ!



நினைவுப்பொருட்கள் எதாவது வாங்கிக்கணும். மூணு யானை கிடைச்சது :-) அழகான புத்தர் தலைகள் !  கனம் கூடாதே நமக்கு.... இல்லையோ?
காலை ஏழு முதல் மாலை ஆறுவரை பார்வையாளர்களுக்கு அனுமதின்னாலும்  ஒன்பது மணிக்கு மேல் போனால்தான்  அவுங்களோட  தினசரி வழிபாட்டுலே குறுக்கிடாமல் இருக்கலாம்.  அங்கேயே தங்கும் வசதிகளும் இருக்கு.  புத்தமதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு இங்கே தங்கி பூஜைகளில் கலந்து கொள்ள இது ஒரு வாய்ப்புதான்.
ஒரு மணி நேரம் அங்கே இருந்துருக்கோம்.  வெளியே வந்தால்  ஊரில் அக்கம்பக்கம் எல்லாம் மஸாலாப்பொருட்கள் விற்கும் கடைகள்தான் ஏராளம். இந்த கூர்க் பிரதேசமே இப்படித்தான்   மஸாலாவோ மஸாலாக்களால் நிரம்பி வழியுது.  கொகோ கிடைப்பதால்  சாக்லெட்கள் செஞ்சு அது ஒரு பக்கம் விற்பனையில்.  பயணப் பாதைகளில் அங்கங்கே ஹோம்மேட் சாக்லெட் ன்னு போர்டுகள் பார்த்தோம்.
இன்னும் ரெண்டு மணி நேரப்பயணம் இருக்கு நமக்கு.  முக்கியமான ஒரு இடத்துக்குப் போறோம். பனிரெண்டு மணிக்குள் அங்கே இருந்தால்,  போற வேலை இன்றைக்கே முடியும் சாத்யதை உண்டு.

'அதெல்லாம் போயிடலாம். கவலைப்படாதீங்க'ன்னு சொல்லி வண்டியை முடுக்கினார் அசோக்.

தொடரும்....... :-)


13 comments:

said...

பார்த்த இடங்கள் பலவென்றாலும் பார்க்காத இடங்கள் ஆயிரமுண்டு

said...

ஹிமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் புத்த மத வழிபாட்டுத் தலங்கள் சென்றதுண்டு. அழகான ஓவியங்கள் இவ்விடங்களில்...

தென்னிந்தியாவில் இப்படி புத்தர் வழிபாட்டுத் தலம் இவ்வளவு அழகாய்..... இப்போது தான் பார்க்கிறேன்.

தகவல்களும் படங்களும் வழமை போல சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

குஷால் நகரத்துக்கும் இதுவரை போனதில்லை. இந்தக் கோயிலைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இதுக்கும் போகனும்.

பாண்டியர் சின்னம் இருப்பது பெரிய வியப்பில்லை. கொரியாவிலேயே பாண்டியர் சின்னம் உண்டு. பாண்டிய இளவரசி கொரிய மன்னர் ஒருவரைத் திருமணம் செய்ததாக வரலாறு உண்டு. அந்த அரசியின் சமாதி இன்னும் இருக்கு. தமிழ்நாட்டிலிருந்து அங்க போனப்போ அந்தம்மா கொண்டு போன கல்லை சமாதில நட்டுவெச்சிருக்காங்க. அதிலும் ரெட்டை மீன்கள் உண்டு. ரெட்டை மீன் தான் பாண்டியர்கள் சின்னம். நிறைய பேர் ஒற்றை மீன்னு நெனைப்பாங்க. அது தவறு. இரண்டு மீன்கள்.

பௌத்தம் தமிழகத்துக்குப் புதிதில்லையே. அந்த வகையிலும் எதாவது தொடர்பு இருக்கலாம். அசோகர் இலங்கைக்கு மகளை அனுப்பிச்சார்னு படிக்கிறோம். அந்தக் காலத்துல யார் எங்கருந்து எங்க போனாங்களோ? பல்லவ நாட்டு போதிதருமர் சைனா வரைக்கும் போயிருக்காரே. யுவாங் சுவாங், பாகியான் எல்லாம் இந்தியாவுக்கு வந்திருக்காங்களே.

said...

அங்கு நான் எடுத்த புகைப்படங்கள் இவை:
https://photos.app.goo.gl/Mc6yDopZOLUxrF4S2

said...

தங்கத்தில் புத்தர் திருமேனிகள். பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போலுள்ளது.

said...

பிரமாண்டம்.
புத்தர் வழிபாட்டுத் தலங்கள் பிரமாண்டமாகவேஅமைத்துக் கொள்கிறார்கள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லாம் பார்க்க நம் ஆயுள் போதாதே ! கிடைச்சவரை மகிழ்ச்சிதான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும் அருணாச்சல் ப்ரதேஷ் பக்கம் நேரில் போகலை. எல்லாம் உங்க கெமெராக்கண் மூலம்தான்! பார்க்கலாம்.... வாய்க்குமா என்று!

நாங்களும் இவ்ளோ பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை!

said...

வாங்க ஜிரா.

கர்நாடக மாநிலத்தில் நாம் பார்க்கவேண்டிய இடங்கள் ஏராளம். சமயம் கிடைக்கும்போது விடக்கூடாது என்பதை நினைவில் வச்சுக்கணும்!

பயணக்கட்டுரைகளின் முன்னோடியாச்சே யுவான் சுவாங் !

said...

வாங்க ஞானசேகர்.

உங்கள் படங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கின்றன. பகிர்தலுக்கு நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உண்மையிலேயே ரொம்ப அழகு! சாந்தியும் சமாதானமும் நிறைந்த அமைதியான கோவில்!

said...

வாங்க மாதேவி.

அட! ஆமாம்.... இதுவரை நாங்கள் தரிசித்த அனைத்து புத்தர் கோவில்களும் பிரமாண்டமாகவே இருப்பதை, உங்க பின்னூட்டம் வந்தபின்தான் உணர்க்கின்றேன் !

பெரியவர் என்பதால் பெருசாக வச்சுட்டாங்களோ!

said...

அருமை....