Monday, March 13, 2023

குழலும் தமிழும்.......................... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 25

வராஹி தரிசனம் ஆனதும் வந்த வழியே போகாமல் எதிர்ப்புறம் போனதும்  அங்கே ஆஞ்சி இருந்தார்.  அவர் தலைக்குமேல் சின்ன மாடத்தில்  ராமனும் சீதையும் !  வட இந்திய ஸ்டைலில் சிந்தூரம் பூசுன ஆஞ்சி. 
கோவிலுக்குப் பின்னே,  கங்கையின் படித்துறைகளில் ஒன்னு . மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத படித்துறை போல..... படகுகள் பார்க்கிங்தான்.  காலைச்சூரியன் வந்து அரைமணி ஆகி இருக்கு இப்போ ! 
படியில் ஏறிவந்து ஓய்வெடுக்கும் ஒரு பழைய படகின் பக்கத்துலே சின்ன அழகான குடும்பம் ஒன்னு !  ஐவர் ! ஒரு பழைய துணியை வச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க.  தாயைக் காணோம்.  ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போயிருக்காளோ ? 



தொட்டடுத்து இருந்த இன்னொரு படித்துறையில் கொஞ்சம் கூட்டம் இருந்தது.  இது த்ரிபுரா பைரவி Gகாட் !   படித்துறையின் மேலேயே கங்கையைப் பார்த்தபடி அலக்நந்தா கெஸ்ட் ஹௌஸ். இது மாடியில். கீழே.....   கேரளா கேஞ்சஸ் ரெஸ்ட்டாரண்ட்.  தோசா கார்னர் !  கேரளா எங்கே இருக்கு.... கங்கை எங்கே இருக்கு !!   ரெண்டுக்கும் முடிச்சுப்போட்டான் பாருங்க.... அங்கே இருக்கான்  பிஸினஸ் மேன் ! 

தெற்கே இருந்து வர்ற சனம்,  (பழைய ஆட்கள், 30 to  50's Kids ) ஒருநாளைக்கு மேலே சோறில்லாமல் தாக்குப்பிடிக்காது.  அதுவும் இப்போதைய  தலைமுறை பலவகை உணவுகளுக்குப் பழக்கப்பட்டாச்சு.   அதனால்  இவுங்களைக் கணக்கில் எடுத்துக்கலை......    என் மாமனார்,மாமியாரைச் சின்ன மச்சினர்  நேபாளம் டூர்  கூட்டிப்போனப்ப.....  சோறு சோறுன்னு படுத்தியெடுத்துட்டாங்கன்னு   மச்சினர் சொன்னார்.  இவ்ளோ சொல்றேனே.... எனக்குமே சோறில்லாமல் முடியாது.  வெறுஞ்சோறு கிடைச்சாலும் போதும் ! 


காசிக்குப்போய் வர்றதுன்றது பழைய தலைமுறைக்கு , வாழ்நாளில் ஒரு முக்கியமான யாத்திரை.  எல்லாப் பொருட்களையும் சுமந்துபோய் அங்கேயே சமைச்சுச் சாப்பிட்டுத் திரும்பினவங்கதான் பெரும்பாலும். காலப்போக்கில் மனுஷன் வெளியிடங்களில் சாப்பிடத் தொடங்குனதும்......  சாப்பாட்டுக்கடை பிஸினஸ் ஆரம்பிச்சு  ஜோரா நடந்துக்கிட்டு இருக்கு !  யாத்திரை வரும் தென்னிந்தியர்களுக்கு  இப்போ இட்லி தோசை கூட எல்லா ஊர்களிலும் கிடைச்சுருது இல்லே ! 
படித்துறைகளில்  மக்கள் நடமாட்டம் கூடிக்கிட்டே வருது.... நாமும் வேடிக்கை பார்த்துக்கிட்டே மெயின் ரோடுக்குப் போகும் பாதைன்னு  மனக்கணக்குப் போட்டுக்கிட்டு சந்துகளில் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு  கட்டடத்தைக் கடக்கும்போது  குழலிசை கேட்டது. விநாடி நேரம் நின்னு எங்கே இருந்து வருதுன்னு பார்த்தால்  இது ஒரு கோவில். ஸ்ரீ தர்மேஷ்வர் மந்திர்.  கல்கத்தாவாசி ராம்ஸ்வரூப் பழைய கோவிலைப் புதுப்பிச்சுக் கொடுத்துருக்கார். இங்கே  நிறைய கோவில்களை வங்காள மாநில மக்கள்  கட்டிக்கொடுத்துருக்காங்க.  கங்கைக்கும்  இவுங்களோடு ஒரு பந்தம் இருக்கு. புகுந்த வீடு !   கடைசியா அங்கேதானே போய்க் கடலில் கலந்துடறாள், இல்லே !



கோவிலுக்கும் நுழைஞ்சோம்.   வாசலுக்கு இடதுபக்க ஹாலில் சமதளத்தில் இருந்து ஒரு அடி தாழ்வாக, சதுர வடிவில்  கட்டியிருக்கும்  இடத்தில் மூலவர் !  அவர் தலைக்கு மேல் தாராபிஷேகத்துக்கான கலசம் ! பெரிய பெரிய மணிகள்!  மூலவரை வலம் வந்து வணங்கலாம் . ஒரு பக்கமா தபஸ்வி ஒருவர் , த்யானத்தில் இருக்கார்.  

வலப்பக்கக் கூடத்தில் புள்ளையார் சந்நிதி. முன்னால் ஒரு நாலு  சிவலிங்கங்கள், ஆளுக்கொரு நந்திகளுடன்.  ஒரு இளைஞர் , செல்ஃபோனில்  ஸ்ருதி செட் பண்ணிட்டு குழலை வாசிச்சுக்கிட்டு இருக்கார்.  ஒரு ரெண்டரை நிமிட் வீடியோ எடுத்தேன்.

https://www.facebook.com/1309695969/videos/829152101854783/

ப்ரமாதமான வாசிப்புன்னு சொல்ல முடியாது..... ஆனால் சாமிக்கான தொண்டுன்னு நினைச்சுக்கிட்டு வாசிக்கிறார்.  முகம் கூட கல்கத்தா வாசின்னு சொல்லுதோ !  கோவிலுக்குள் வர்ற சனம்  தும்மிக்கிட்டும் பேசிக்கிட்டும், சங்கீதத்தைச் சட்டைசெய்யாம  இருக்கு.... ப்ச்....
வாசலுக்கு எதிரில் சந்தில் ஒரு  காங்க்ரீட்  திண்ணை. அஞ்சு நிமிட் உக்கார்ந்துட்டுக் கிளம்பினோம்.  அடுத்த ரெண்டாவது நிமிட்டில்  ஒரு செல்லம் கிட்டே வந்து பார்த்துச்சு.  க்ளிக்குமுன், இன்னொரு இளைஞர்  ஒரு விஸில் அடிச்சதும், செல்லம் பாய்ஞ்சு அவராண்டை ஓடுச்சு. ஆஹா... இது அவரோட செல்லம். அங்கே  இருந்த நாற்காலியில் உக்கார்ந்துக்கிட்டதும் இது போய்ப் பக்கத்தில் நின்னது. இப்ப படம் எடுக்கலாமுன்னு ரெண்டுபேரும் போஸ் கொடுத்தாங்க :-) அவரென்னவோ ஒரே மாதிரிதான் இருந்தார். விதவிதமா போஸ் கொடுத்தது செல்லம்தான் :-)





நமக்கிடதுபக்கம் இன்னொரு கோவில் ! கோவில் சுவரில் தமிழ் எழுத்து !  தமிழைப் பார்த்ததும் அங்கே பாய்ஞ்சேன் !   அடுத்த சுவத்துலே தெலுகு எழுத்துகள்.  எனக்குப் பேசத்தான் தெரியுமே தவிர படிக்கத்தெரியாது. தெலுகு படிக்கத்தெரிந்தவர்கள் அங்கே பாயட்டும் ! 

கிட்டேப்போய்ப் பார்த்தால் 

'  ஓம் சக்தி
திரு விஷ்வ பூஜ கௌரி பார்வதியம்மை
ஆதி அன்னபூரணா உடனுறை சதுர் அத்ம லிங்க
திவுதாஸேஷ்வர் சிவாலயம்
காசி காண்டம் 80 ன் படி தர்ம கூப்
மீர் காட் வாராணசி
சிவ சிவ'

(இந்தப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டப்ப நம்ம அபி அப்பா கொடுத்த பின்னூட்டம்தான்  அட்டகாசம் !  
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
விரல்ல ரத்தம் தொட்டு எழுதி போலீசுக்கு அலிபி கொடுக்கும் கேரக்டர் ஆர்டிஸ்ட் காசியிலும் கூட இருக்காய்ங்கலா? )


ஆஹா.....   தமிழகப் பயணம் தவிர்த்து  வேற எங்கேயாவது தமிழ் எழுத்துப் பார்த்தால் வரும் மகிழ்ச்சி இப்போதும் வந்தது.  ஹரித்வார் பயணத்தில் கங்கை ஆரத்தி முடிஞ்சவுடன்,  படித்துறையாண்டை  இருக்கும் கோவில்களைச் சுத்தி வந்தப்ப.... 'ஸ்ரீ கங்கா கோவில் 'னு எழுதியிருக்கும் கங்காமாதா கோவிலைப் பார்த்தப்ப மனம் பூரிச்சது உண்மை !  அதேதான் இப்பவும் !
இதேதான் மகளுக்கும். அவளுக்குத் தமிழ் படிக்க வராதுன்னாலும் தமிழ் பேச வரும்.  நியூஸி வந்த புதுசுலே...ஒரு சூப்பர் மார்கெட்லே .......  17 வருஷத்துக்கு முன்னால் எழுதிய பதிவில் இருந்து......

சூப்பர் மார்க்கெட். ராத்திரி ஒரு எட்டு மணி இருக்கும். வியாழக்கிழமை.அன்னைக்கு இங்கே 'லேட் நைட்'ன்னு சொல்ற நாள்.(இப்பக் காலம் மாறிப்போச்சு. 24 மணிநேரம் திறந்திருக்கற சூப்பர் மார்க்கெட்டெல்லாம் வந்துச் சக்கைப்போடு போடுது!)நானும், நாலுவயசு மகளும் ஒரு ஷெல்ஃபுலே சாமான்களை எடுத்துக்கிட்டு இருக்கோம். எங்க இவர் வேற ஷெல்ஃப்லே ஏதோ தேடிக்கிட்டு இருக்கார். 'இங்கேயும் இல்லே'ன்னு குரல் ஒண்ணு காதுலே வுழுது. என்னோட தலை அந்த மொழிக்குக் கட்டுப்பட்டுஅப்படியே ஒரு திரும்பல். அங்கே யாரும் இல்லை, ஆனா என் காலு மட்டும் சத்தம் வந்த திசையிலே பாயுது.கொஞ்சம் வயது முதிர்ந்த பெண்ணும்,ஆணும்.


" இந்தியாவா? தமிழ் பேசுனீங்களே?"

" அட, நீங்களும் தமிழா?"

'அப்பா, தமில் தமில்' னு சொல்லிக்கிட்டே அப்பாவைத் தேடி ஓடும் மகள்!

'வாங்க வீட்டுக்கு, இங்கே பக்கத்துலேதான்'ன்னு கையோடு கூட்டிக்கிட்டு போயாச்சு. 'விட்டாக் காணாமப் போயிருவாங்களோ'ன்ற பயம்?:-)


சரி...........   பழையதை விட்டுட்டுப் புதுசுக்கு வரலாம்.
கோவில் முகப்பில்    சதுர்லிங்காத்மக்  திவோதாஷ்வேஷ்வர் மஹாதேவ்
 காஷி  விஷ்வபாஹூகா  கௌரி மாதா பார்வதி
ஆதி அன்னபூரணி மந்திர் காஷி 'கண்டம்' 80 கே அனுஸார் னு ஹிந்தியிலும்,  இங்லிஷிலும்  எழுதி வச்சுருக்காங்க.

வாசலில்  ஒரு தீபஸ்தம்பம். காசி மன்னர் திவோதாஸா நினைவுக்கு விளக்கேற்றவாம். இவர்தான் கங்கைக்கரையில்  காசி நகரை நிர்மாணித்தவர் !
 காசி மன்னர்  திவோதாசா , தினந்தோறும் வந்து வழிபட்ட கோவில் இதுன்னு சொல்றாங்க. 
 
உள்ளே போனால்....   ஸ்ரீ   திவோதாஷ்வேஷ்வர் மஹாதேவ்  , லிங்க வடிவத்தில் இருக்கார்.  சின்னக் கோவில்தான். ஒரே ஒரு அறை. அறையின் நடுவில்  கீழே ஒரு ரெண்டடிப் பள்ளத்தில்  சின்னதும் பெருசுமா நாலு  சிவலிங்கங்கள். எல்லாருக்கும் பொதுவா ஒரு சின்ன நந்தி ஒரு ஓரமா.
எதிர்ச்சுவரில்  மூணு மாடங்களில் மூணு சந்நிதிகள்.  ஆதி சக்தி  மாதா  பார்வதி,  அன்னபூரணி தேவி & புள்ளையார். 

பண்டிட் அப்பதான் மாடத்துக் கடவுளர்களுக்கு, அபிஷேகம் முடிச்சுப் புடவை மாத்திக்கிட்டு இருந்தார்.  ரொம்பவே ஈஸியான கட்டு. முழுப்புடவையையும் கொசுவி  சிலையின் மார்பில் செருகிட்டு ரெண்டு முனைகளையும்  எடுத்துத் தோளில்   மாட்டினால் ஆச்சு.  மேலே ஓரங்களில் ஆணி அடிச்சுருக்காங்களோ என்னவோ !

இனி கீழே இருக்கும் சிவன்களுக்கு அபிஷேகம், அலங்காரம் பாக்கி.  கொஞ்சம் நேரம் ஆகுமுன்னு சொன்னதால் உண்டியலில் கொஞ்சம் தக்ஷிணை போட்டுட்டு, சாமி கும்பிட்டதும் வெளியில் வந்துட்டோம்.

அடுத்த சந்து கங்கைக்குப் போகுது.  கூட்டம் வர ஆரம்பிச்சாச்சு.  ரெண்டு படம் க்ளிக்கிட்டு எதிர்ப்புறம் வந்தால் டீக்கடை திறந்து வியாபாரம் ஆரம்பிச்சாச்சு.  வெறும் வயத்தில் இருக்கோமேன்னு  ஆளுக்கொரு டீ ஆச்சு...

தஸ் அஸ்வமேத் Gகாட் ரோடு வந்ததும் , எதிர்ப்புறம் போய் நம்ம பங்கால் டோலா ரோட்  வழியா  சீதாவுக்கு வந்து சேர்ந்தோம்.




எனக்குக் கால் வலி, கோபாலுக்குத் தொண்டை வலி லேசா ஆரம்பிச்சது.  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  அதே டோஸ்ட் &  டீ !

தொடரும்....... :-)






5 comments:

said...

அருமை நன்றி

said...

சிந்தூரம் பூசிய ஆஞ்சி.
குட்டிச் செல்லங்கள் என மனதை நிறைத்து நிற்கிறார்கள்.

said...

ஸ்ரீ தர்மேஷ்வர் மந்திர்...அருமை மா

said...

சின்னச் சின்னதாக எத்தனை கோவில்கள்...... தமிழ் எழுத்து கண்டதும் வரும் ஈர்ப்பு - டிட்டோ...... செல்லங்கள் - அழகு. பயணம் நமக்கு அளிப்பதே இப்படியான சந்தோஷங்கள் தானே..... ஆதலால் பயணம் செய்வோம்.

said...

குட்டி குட்டியாய் எத்தனை கோவில்கள்...  இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகம் போல.  புல்லாங்குழலில் அவர் என்ன வாசித்தார்?  சினிமாப் பாட்டா, பக்தி பாட்டா?!!