Monday, January 30, 2023

நாட் கோட், காசி (கோவிட்டுக்குபின் பயணம்) பகுதி 7

கவலைப்படக் கொஞ்ச நேரம் கொடுக்காம எண்ணி நாலாவது நிமிட்லே  வலப்பக்கம் திரும்பி வண்டியை நிறுத்தினார் ரிக்‌ஷாக்காரர். அட, ராமா....     ரிக்‌ஷாவில் ஏற மல்லுக்கட்டுன நேரத்துக்குப் பொடிநடையாவே வந்துருக்கலாம் !  கண்ணுக்கு எதிரா இருக்கும் கடையின் பெயர்ப்பலகை.... ஆஹா... இறங்கி  வலப்பக்கமா நடந்து போகணுமாம். இதுவும் சந்துன்னு தனியாச் சொல்ல வேண்டியதில்லைதானே? ஆனால் கொஞ்சம் அகலமான சந்து.
எப்படி இறங்குனேன் ? இறக்கப்பட்டேன் ! இந்தாண்டை கீழே குதிச்ச கோபாலும். ரிக்‌ஷாக்காரருமா இறக்கியே விட்டுட்டாங்க.  காசிக்கு வந்தா எதையாவது விடணுமாமே.........  நான் சைக்கிள் ரிக்‌ஷாவை விட்டேன் !

பராக்குப் பார்த்துக்கிட்டே நடந்ததுலே ஒன்னரை நிமிட்டில்  பெயரைப் பார்த்துட்டேன். சின்ன முகப்பு வாசல். செக்யூரிட்டி, நம்மை லிஃப்டுக்குள் போகச் சொல்லி முதல் மாடிக்கு அனுப்பினார்.  சின்ன வராந்தா முழுசும் காலணிக்கடல்.......  அதுலே நீந்திப்போகணும் போல....  கடலிலே நம்மதையும் சேர்த்துட்டுபோனால்.... வலப்பக்கம் ஒரு பெரிய  கூடத்திலே  டைனிங் ஹால்.....   'வாங்க.... அங்கெ உக்காருங்க'ன்னு இடத்தைக் காமிக்கிறார் ஒருவர். 
 'இல்லைங்க. நாங்க சாப்ட்டாச்சு. இங்கே ஆஃபீஸ் எங்கெ ? ' ன்னதும், வலப்பக்கம் கையைக் காண்பித்தார்.. அங்கே நடுவில் உள்ள கதவு வழியாக உள்ளே போறோம். ஹம்ம்மா....... வெளியில் இருந்து பார்க்கத்தான் சின்னதாக இருக்கே தவிர  பெரிய பெரிய கூடங்களாகப் பரந்து விரிஞ்சு, அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே  இருக்கு !

வலப்பக்கக்கூடத்தில் அலுவலகம். ஏராளமான சனம் ! நடுவில் போட்டுருக்கும் பெரிய மேஜையைச் சுத்தி மக்கள் கூட்டம் ! பின்புறச் சுவர்மாடங்களில்  நம்ம ஸ்வாமிகள் ! நம்ம முழியைப் பார்த்தே புது ஆட்கள்னு ஒருவர் நமக்கு வணக்கம் சொல்லி 'வாங்க'ன்னார். குசலபிரசனம் ஆரம்பிச்சது.  நம்மவர் சொந்த ஊர் போடின்னதும் அவர் முகத்தில் ஒரு பளிச்! பக்கத்தூர்க்காரராம்!

 'வாங்க. முதல்லே கோயிலைப் பார்த்துட்டு வரலாம்'னு நம்மைக் கீழ்தளத்துக்குக் கூட்டிப்போனார். திறந்த வெளி முற்றத்துக்கு இங்கிருந்தே படி இறங்குது. பாதாளஈஸ்வரர் சந்நிதி முதலில் ஒரு தனியறையில் ! தரையிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கு. பஞ்சலிங்கங்கள்  என்றேன். கோவில் விளக்கம் சொல்லிக்கிட்டே வந்தவர் 'உலகில் வேறெங்கும் இல்லாத பஞ்சநந்திகள்  இங்கே இருக்காங்க'ன்னார்.

அடுத்தாப்லே இருக்கும் இடைவெளியைக் கடந்து  இன்னொரு வாசல் வழியா உள்ளே போனால் கோவில்! முழுசா ஒரு கோவிலே இருக்கு, ஒரு ப்ரகாரத்துடன்!

பஞ்சநந்தி.... ன்னதும் ஓடிப்போய் மூலவர்  நகரேஸ்வரர்  முன் உக்கார்ந்துருக்கும் நந்தியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷ, பூ மாலைகளை நகர்த்திக் காமிச்சாரா... அட! ஆமாம்........  கழுத்துக்குக்கீழே நாலு நந்திகள் !

மூலவர் சந்நிதியை வலம் வந்தோம்.  கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி!
 நமக்கிடதுபக்கம் சிறு மேடைபோல சுவர் முழுக்கக்கட்டி அதில் சிவலிங்கங்கள், ஒரு மூலையில் நம்ம முருகர் மனைவிகளுடன் ! 






அம்மன் சந்நிதி!   அம்பாள் பெயர் நகரேஸ்வரியாம் ! கீழ்தளத்தில் இப்படி ஒரு முழுக்கோயில் பார்த்துட்டுப் பிரமிச்சு நின்னது உண்மை. நிலைவாசப்படியின் மேல் சின்னதா ஒரு சரித்திரம்!  




கோவிலைக் கூட்டிப்பெருக்கும்  சோனாலி. ஆறுவருஷமா இங்கே வேலை செய்யறாங்களாம்.
ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் விஸ்தாரமான பெரிய திண்ணைகளில்  சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் ! 
கோவிலைச் சுத்திக்காட்டிய ராஜேந்திரனுடன்  திரும்ப மாடிக்கு வந்தோம். நம்மவர் ஒரு தொகையை  நன்கொடையாகக் கொடுத்தார்.  காசி விஸ்வநாதர் தரிசனம் ஆச்சான்னு கேட்ட ராஜேந்திரனிடம், இன்னும் இல்லை. நேத்து ராத்ரிதான் வந்தோம்.  இப்போ போய் விசாரிக்கணும் என்றதும்,  இதே ரோடில் நேரா கேட் நாலுக்குப் போயிருங்க. அங்கே உங்களுக்கு எல்லா விவரமும் கிடைக்குமுன்னார்.  பகல் சாப்பாட்டுக்கு மறக்காம வந்துருங்கன்னார். 


ராஜேந்திரன், தீபாவளி சமயத்தில் வந்து ஒரு வாரம் தங்கி, இங்கே உதவி செஞ்சுட்டுப் போவாறாம்.  இது இல்லாமல், 'எப்பத் தோணுதோ அப்போ வந்துட்டுப் போவேன்'னார்!  என்ன ஒரு கொடுப்பினை !

கண்ணில் பட்டதை யெல்லாம் க்ளிக்கினப்ப, ஒரு இடத்தில் பகல் சமையலுக்குக் காய்கறிகளை  நறுக்கிக்கிட்டு இருந்தாங்க.
இங்கேயே தங்கறதுக்கு அறைவசதிகள் இருக்குன்னேன்.  அப்ப  உன் கங்கைக்கரை ? ன்னார் நம்மவர் !

அதானே....... ?

தொடரும்............. :-)

10 comments:

said...

அருமை நன்றி

said...

ஆஹா நாட்கோட் ...இரு நாட்கள் இங்கு தான் தங்கி இருந்து தரிசனம் செய்தோம் அம்மா ...நான் , கணவர் , மாமியார் மற்றும் ஒரு அத்தை என நால்வர் சென்றோம் .அவர்கள் இருவரும் வேறு எங்கும் இது போல சென்றது இல்லை, எனவே இங்கே தான் புக் செய்தோம். அதுவும் இங்கு இடம் கிடைப்பது இப்பொழுது எல்லாம் மிக கடினமாகவே உள்ளது.பயம் இல்லாமல் லாக்கரில் உடைமைகளை வைத்துவிட்டும் தங்கலாம்.

தங்கும் இடம், உணவு எல்லாமே நம்மூர் போல இருப்பதால் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

பாதாள லிங்கம், கோவிலில் பூசை நடப்பது...தினமும் விஸ்வநாதருக்கு செல்லும் சம்போ என அனைத்தையும் காண முடிந்தது ...என்ன நிறைய படம் எடுப்பேன் இங்கு அத்தனை எடுக்கவில்லை . மனம் எல்லாம் பரவசம் ...அதில் மறந்துவிட்டேன் ...

said...

பஞ்சலிங்கங்கள் வணங்கிக் கொண்டோம்.

நந்தி பகவானின் கழுத்துக்கு கீழே நாலு நந்திகள் அபூர்வம் இப்பொழுது தான் பார்க்கிறேன்.

said...

நாட்கோட் பத்தி காசிக்குப் போனவங்க சொல்லிக் கேட்டதுண்டு. போகும் வாய்ப்பு கிடைச்ச இங்கதான்ன்னு முடிவு பண்ணியாச்சு!!!

விவரங்கள் எல்லாம் அருமை

கீதா

said...

உங்கள் புண்ணியத்தில் சுக தரிசனம்!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

ஊரில் இருக்கும் நம்ம வீடுகள் போலவே கூடம் கூடமா இருக்கு. மக்களும் கூட்டம் கூட்டமா !!!

நானும் சில சமயங்களில் படம் எடுக்காமல் வேறொரு உலகில் சஞ்சரிச்சும் இருக்கேன் !

said...

வாங்க மாதேவி.

அதான் ராஜேந்திரனே சொன்னார்... உலகில் வேறெங்குமே இப்படி இல்லைன்னு !

said...

வாங்க கீதா.

குழுவா வர்றவுங்க டார்மென்ட்ரியிலேயே கீழே பாய் விரிச்சுப்போட்டுத் தங்கிடறாங்க. தனி அறைகளும், ஏஸி அறைகளும் கூட இருக்காம். எப்படி இருக்குன்னு எட்டிப் பார்த்திருக்கலாம். மறந்துட்டேன்..... நீங்க போகும்போது முன்கூட்டியே ரிஸர்வ் பண்ணிடுங்க. இடம் கிடைப்பது இப்பெல்லாம் கஷ்டம்தானாம். மக்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. அந்தக் காலத்துலே காசிப் பயணம் என்பதே அபூர்வம். இப்ப ?

said...

வாங்க ஸ்ரீராம்,

இப்போ காசியில் உண்மையாகவே சுகதரிசனம்தான் !!!!