Wednesday, January 18, 2023

கோவிடுக்குப்பின் போய் வந்த இந்தியப் பயணம் பகுதி 2


வழக்கமாச்  சென்னைக்குப்போய்ச் சேர்ந்த மறுநாள் காலை தி.நகர் பெருமாள் தரிசனத்துக்குப் போயிருவோம்.  நாம் வந்த சேதியைச் சொல்லிப்புட்டு, பயணம் முழுசும் காத்து ரக்ஷிக்குணே பெருமாளேன்னு வேண்டிக்கிட்டு வர்றதுதான்.  சரியா காதுலே வாங்கிக்கலைன்னு இப்பத் தோணுது !
கோவில் தரிசன விவரங்கள் போட்டு வச்சுருக்காங்க.  ஒரு ஏழெட்டுப்பேர் இருந்தாங்க. நல்ல தரிசனம் லபிச்சது. பெருமாளுக்கும் ஏழரைக்குத்தான் ப்ரேக்ஃபாஸ்ட்! எதிர்சாரிக்குப் போயிட்டால் சீக்கிரம் லோடஸ் திரும்பலாமுன்னு  போனால், பூக்காரம்மாவும் பூக்களுமா  மலர்ந்த முகத்தோடு  இருக்காங்க. ரிச்சுவலை விட முடியுமா ? தலைக்குப் பூ ஆச்சு ! 


அம்மாவுக்கு  லக்ஷ்மின்னு பெயர்.  ஹேர்ப்பின் ஒன்னு எடுத்துக்கொடுத்தாங்க.  அதெல்லாம் முன்னேற்பாடுடன்தான் வருவேன்னேன் :-)

லோட்டஸில்  ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி. நாம்தான் போணி பண்ணனுமாம்!  எல்லாம் வழக்கம்போலே.... இட்லிப்பொடிக்கு  நல்லெண்ணெய்யும் வச்சுருக்காங்க. சிலபல க்ளிக்ஸ் ஆச்சு:-)
















 இட்லி ஒன்றுதான் மாறாத ஐட்டம். மற்ற எல்லாமே  தினம் வேவ்வேற  என்பதால் போரடிக்கச் சான்ஸே இல்லை . தினமும்  நம்ம தட்டைப் படம் எடுத்து மகளுக்கு அனுப்பிருவேன்.....  இந்தியாவின் அருமை தெரியட்டுமேன்னு :-) லோட்டஸில் எனக்குப் பிடிச்ச ஒரு அம்சம் இந்த ப்ரேக்ஃபாஸ்ட்தான். நியூஸி திரும்புனதும் அதிகம் மிஸ் பண்ணுவதும் இதைத்தான். 

அஞ்சு நிமிட் நடையில் இருக்கும் பழமுதிர்நிலையத்துக்குப்போய்  காய்கனிகளைக் கேமெராக் கண்ணால் தின்னுட்டு, பெருமூச்சும் விட்டுட்டுக்  கொஞ்சம் பழங்கள் வாங்கி வந்தோம். அப்படியே வழியில் இருக்கும் சுஸ்வாதில் கொஞ்சம் இனிப்பும் காரமும்!






பெட்டிகளைப் பூட்டி வச்சுட்டுப்போனால்,  'நம்ம அறை' காலி ஆனதும்  சுத்தம் செஞ்சுட்டு மாத்தி வச்சுடறோமுன்னு ட்யூட்டி ஸ்டாஃப் சொன்னாங்க. நம்மவர் தடதட்ன்னு டாய்லெட்ரி எல்லாம் எடுத்து வச்சார்.

நம்ம சதீஷுக்கு ஏற்கெனவே விவரம் அனுப்பினதால் சரியா ஒன்பதரைக்கு வண்டி அனுப்பிட்டார்.  அண்ணன் வீட்டுக்குப்போய் வரணும்.  எங்க குடும்பத்துக்கு மூத்தவரா இருக்கும் பெரியத்தை,   பெருமாள்கிட்டே போயிட்டாங்க.  எங்காத்து வேளுக்குடின்னு சொல்வேன்.  புரட்டாசி மாச சனிக்கிழமை வீட்டுலே பெருமாளுக்குத் தளிகை போட குடும்பம்  முழுக்க வந்துருக்காங்க. எல்லாரையும் பார்த்துப்பேசி, சாமி கும்பிட்டு  சாப்பாடெல்லாம் ஆனதும், பெருமாள் கூப்டுட்டான் !  நாளன்னைக்கி  பதிமூணாம்நாள் காரியத்தில் கலந்துக்குவோம். ஹூம்.... அண்ணிக்கு ஆறுதல் சொல்லிட்டு  தி.நகர் திரும்பிட்டோம். 
இன்னும்  ஆறேநாளில் தீபாவளி. பாண்டிபஸாரில்  கூட்டத்துக்குக் குறைவுண்டோ ?  நாமும் ஜோதியில் கலந்தோம். ரெண்டே ரெண்டு செட் துணிகள் எனக்கும், நம்மவருக்கு ஒரே ஒரு ஜிப்பாவுமா  பர்ச்சேஸ் முடிஞ்சது. மத்ததெல்லாம் வந்து வச்சுக்கணும் :-)
நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு ரெண்டே நாளில் தரணுமுன்னு கேட்டுக்கணும். தீபாவளி பிஸியில் உனக்கு நேரத்துக்குக் கிடைக்காதுன்னு 'நம்மவர்' அருள் வாக்கு சொன்னார்.  ஜிப்பாவுக்குக் கை நீளமுன்னு அதையும் தான் கொடுத்துருக்கோம். எனக்கில்லைன்னா உமக்கும் இல்லைன்னு ஆசி அளித்தேன்.
மதிய சாப்பாடு கீதா கஃபே! எனக்கு ஒரு தோசை, அவுங்க ரெண்டு பேருக்கும் மினி மீல்ஸ்.  அவுங்க ?  நமக்கு சதீஷ் அனுப்பிய ட்ரைவர் சரத், ரொம்பவே அமைதியான சுபாவம்.  பார்த்தவுடனே நமக்குப் பிடிச்சுப்போச்சு.  கப்பல் வேலை. மரைன் எஞ்சிநீயர். மூணுமாசம் லீவில் வந்துருக்கார். போரடிக்குதுன்னு  அப்பப்ப சதீஷின் ரெண்ட்டல் கார் கம்பெனியில்  காரோட்டறார். 

வந்த முதல்நாளே ரொம்ப சுத்தவேணாமுன்னு கொஞ்சம் ஓய்வு.  அறை மாத்தியிருந்தாங்க. இப்பத்தான் நிம்மதியா இருக்கு !  தினத்தந்தி கிடைச்சது....  கன்னித்தீவு இருக்கான்னு பார்த்தால் இருக்கு !!!! 

நியூஸியில் இருந்தப்ப ஒருநாள் திடீர்னு சங்கீதா மிக்ஸர்  வேணும்போல இருந்தது.  அதை நினைவு வச்சுக்கிட்டே இருந்தேன். அஞ்சு மணிக்குக் கிளம்பி நம்ம அநந்த பதுமனை தரிசிக்கப் போறோம்.  போற வழியில் சங்கீதான்னு போனால் பெயரை மாத்தியிருக்காங்க. கீதம் ! 
அநந்தனைப் பார்க்கப்போகும்போது அன்புத்தோழி ஒருவரையும்  பார்த்தே ஆகணும் என்பது வழக்கமாகிப்போனதால்..........  முதலில் தோழின்னு சின்ன மாற்றம். ஆள் அடையாளமே தெரியாமல் ஒல்லிச்சுப் போயிருக்காங்க. மகரோ.... அம்மாவை மிஞ்சும் ஒல்லிக்குச்சி !  அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் நான் :-)



கோவிட் காரணம் எங்கேயுமே வெளியில் போறதில்லையாம்... ப்ச்....  அப்ப எழுத்து ? அதுவுமே முடங்கித்தான் கிடக்கு.  கொஞ்சநேரம் பழங்கதைகள் பேசிட்டு, பூப்பிசாசுக்கு சமர்ப்பித்ததை சந்தோஷமா வாங்கிக்கிட்டு கோவிலுக்குப் போனோம். 
நம்ம அநந்தபதுமன், அன்று போலவே இன்றும்! வந்துருக்கேன்ற விவரம் சொல்லிட்டு, நிம்மதியான  தரிசனத்துக்கு நன்றியும் சொல்லிட்டு, அங்கிருந்து நேராப்போனது வேளச்சேரி மச்சினர் வீட்டுக்கு!  எட்டுமணி இருட்டில் வீடு அடையாளம் தெரியலை. முன்னால் நின்ன மரம்  இப்போ இல்லை.  போனவருஷம் நடந்த மகளின் கல்யாணசமயம், முகப்பைக் கொஞ்சம் மாத்தியிருக்காங்களாம்.  கொஞ்சநேரம் இருந்து பேசிட்டுக் கிளம்பி லோட்டஸ் வந்தாச்சு. 
ராச்சாப்பாடு வேண்டியிருக்கலை. காலையில் வாங்கி வச்ச பழங்களே போதும்தான். 

தொடரும்......:-)




8 comments:

said...

தொடரட்டும்,
படிக்கக் காத்திருக்கோம்

said...

காய்கறிப் படங்கள் கவர்கின்றன.

said...

டின்னருக்கு வைச்சிருக்கீங்க பாருங்க அது சூப்பர்...

ப்ரேக்ஃபாஸ்ட் செமையா இருக்கே நிறைய ஐட்டெம்ஸ்.

கன்னித் தீவு// பேரிலியே இருக்கே கன்னி ன்னு வயசாகுமா என்ன...இப்பவும் வருதே!

அனந்துவ பார்க்க போற இடத்துல இருக்கற சங்கீதாவா மாறிடுச்சு? ஆங்க் எப்ப மாத்தினாங்க பெயர்? அல்லது ஹோட்டல் நிர்வாகமே மாறிடுச்சா? எனக்கு எப்படித் தெரியாம போச்சு பாருங்க...வெரி பேட் என் தங்கை பொண்ணு!! அதுக்கு பின்னாடிதான் இவ்வளவு நாள் இருந்தா...!!!

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

இங்கேதான் நம்ம காய்கறிகள் சரியாக் கிடைக்கறதில்லையே... அதான் படம்புடிச்சு வச்சுப் பார்த்துக்கிட்டே.... இங்கே முட்டைகோசையும் காலிஃப்ளவரையும் வெட்டணும்......ப்ச்....


அந்த முருங்கைக்கீரை.........தளதளன்னு.... ஹைய்யோ !

நம்மூர் ஃபிஜி இண்டியன் கடையில் ஃப்ரோஸன் முருங்கைக்கீரை 400 கிராம் பேக்கட் 10 $ நிறமெல்லாம் இழந்து ஐஸில் கெட்டிப்பட்டு இருக்கும். அதையும் வாங்கி சமைக்கறதுதான். ஆசையை விடமுடியலையே........ இந்த நாக்கை............

said...

வாங்க கீதா,

பயணத்துலே சாப்பாடு விஷயத்தில் கவனமா இருக்கணுமேப்பா ! ப்ரேக்ஃபாஸ்ட் பஃபே என்பதால் அவரவருக்குப் பிடிச்ச மாதிரி :-)

இந்த சங்கீதா.. நம்ம திநகர் ஜி என் செட்டி சாலையில்தான். எல்லா சங்கீதாவுக்குமே பெயர் மாற்றம் நடந்துருக்கு!

said...

லோட்டஸ் மெனு பார்க்கவே ஆசையை தூண்டுகிறது.
உறவுகள் நட்புகள் சந்திப்புகள் தொடரட்டும் .

said...

வாங்க மாதேவி,

வயித்துக்குக் கேடு செய்யாத சிம்பிள் மெனு !