Friday, September 28, 2018

எங்கே பார்த்தாலும் நம்மாட்களே! (பயணத்தொடர், பகுதி 15)

காலையில் கண் முழிச்சதும் ,ஜன்னலாண்டை போய் அரண்மனை தெரியுதான்னு பார்த்தா....  ஆஞ்சி தரிசனம் கொடுத்தார்! ஓக்கே ! நல்ல நாளா அமையப்போகுது !
ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனால், அஸ்ஸாம் இளைஞரின் நல்ல உபசரிப்பு !  அப்பதான் பட்டுப்புடவை கட்டிய மங்கையர் பலர் நம்ம எதிர்த்த வரிசை மேசைக்கு வந்தாங்க. சூப்பர் புடவைகள் ! பொருத்தமான ப்ளவுஸ் !  நகைநட்டுதான் மிஸ்ஸிங்!   அவுங்களோடு வந்த ஆண்களில் ஒருவர் நம்மூர் உடையில்!  எல்லோரும் பிரிட்டனில் இருந்து வந்த வெள்ளையர்கள்.  இங்கே ஒரு கல்யாணம், இதே ஹொட்டேலில் நடக்கப்போகுது இன்னும் கொஞ்ச நேரத்தில்! மாப்பிள்ளையின் உற்றார் உறவினர்களாம்!

ரொம்ப அழகா இருக்கீங்கன்னு பெண்களிடம்  சொன்னதும்  முகத்தில் பூரிப்பு!  இங்கேதான் தங்கி இருக்காங்களாம்.  நேத்து புடவை ஷாப்பிங் செஞ்சுருக்காங்க.  உடனே ப்ளவுஸும் தைச்சுக் கிடைச்சுருச்சு! ஹொட்டேல் மக்கள்தான் புடவையைக் கட்டி விட்டாங்களாம்! சூப்பர்!  பாதி சாப்பிடும்போது படம் எடுக்க வேணாமுன்னு இருந்துட்டேன்.  ஒருத்தரை மட்டும் கோபாலோடு ஒரு க்ளிக் :-)

ஒன்பதுக்குக் கிளம்பிட்டோம்.  நேத்துப்போன அதே சாலையில்.... ஆஹா...  மதில்மேல் பாம்பு வரப்போகுதுன்னு ரெடியா இருந்து க்ளிக்கினேன் :-) மெயின் ரோடில் இருந்து வலப்பக்கம் திரும்பினால் ஸ்ரீரங்கபட்னா !   நாம் திரும்பவேணாம்.நேராப் போறோம். கிட்டத்தட்ட அம்பத்தியொன்பது கி மீ பயணதூரம்.  ஒன்னரை மணி நேரம் எடுத்துச்சு.  திருநாராயணபுரம் என்ற புராணப்பெயரும் இப்போதையப் பெயரான மேலக்கோட்டை என்ற ஊருக்குள் நுழையறதுக்கு முன்னாலேயே மலையும், கோபுரமும் தெரிஞ்சது!  'பெருமாளே.... இதோ வந்தோம்'னு  சொன்னேன்.
நம்ம ஸ்ரீ ராமானுஜர் இங்கே (பக்கத்தூர்லே)வந்து பனிரெண்டு வருஷம் தங்கி இருந்தார் என்ற ஒரு காரணம் போதும், நாம் இங்கே வர்றதுக்கு! படிகள் ஆரம்பிக்கும் இடத்துலே போய் வண்டியை நிறுத்தின ஜெய், இப்படியே ஏறி மேலே போங்கன்னார்.  திக் னு ஆச்சு எனக்கு.
வண்டியை விட்டு இறங்கினதும்,  படிவாசல் திண்ணைக் கடைக்காரர், இப்படியே காரில் மேலே போங்க. பாதை இருக்கு.  பாதி மலைவரை போகலாம். வழி நல்லாத்தான் இருக்குன்னு என் நெஞ்சில் மோர் வார்த்தார்!
பெருமாளே பெருமாளேன்னு மனசுக்குள் சொன்னபடி திரும்ப வண்டியில் ஏறிக்கிட்டோம். மேலே போகும் பாதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல முடியாட்டாலும், ஓரளவு நல்லாவே இருக்கு.  ஒரு இடத்தில் திரும்புனதும் நிறைய வண்டிகள் நிக்கறதைப் பார்த்து நாமும் அங்கே போய் நிறுத்தினோம்.  பார்க்கிங் ஏரியா !

'செருப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டுருங்க'ன்னு பக்கத்துக் கார் ட்ரைவர் சொன்னார்.  சரின்னு வெறுங்காலைத் தரையில் வச்சவுடன், சுரீர்ன்னு   கூரான கல் பாதத்தைப் பதம் பார்த்தது. இன்னொரு  வண்டியின் ட்ரைவர், 'போட்டுட்டுக்கிட்டே போங்க.  அங்கே போய் கழட்டிக்கலாமு'ன்னார்.  சரின்னு செருப்பைப் போட்டுக்கிட்டு நடக்கறோம். ஒரு பதினைஞ்சு மீட்டர் நடந்ததும் மலைப்படிகள் வந்துருது. மலையில் காலணிக்கு அனுமதி இல்லை. மேலே காலணி பாதுகாப்பும் கிடையாது.  இங்கே கோவிலுக்குப் பூஜைப்பொருட்கள் விற்கும் கடையில் தேங்காய் பழத்தட்டை வாங்கிக்கிட்டு  கடையிலே செருப்பை விட்டுடலாம்னு ஜெய் சொல்றார்.

அட ராமா.....  பொதுவா தேங்காய் பழத்தட்டு வாங்கறதில்லை. இதோ இருக்கு வண்டி. அங்கேயே செருப்பை விட்டுடலாமுன்னு வண்டிக்குத் திரும்பறோம். படிக்கருகில் உள்ள  கடையில் இருக்கும் பெண்,  இங்கே செருப்பை விட்டுட்டுப் போங்கன்னாங்க. பூஜைத்தட்டு வேணாமுன்னு சொன்னேன். பரவாயில்லை. நீங்க விட்டுட்டுப் போங்கன்னாங்க.
படிகளில் ஏற ஆரம்பிச்சோம். கொஞ்சம் கோணாமாணாப் படிகள்தான். ஒவ்வொரு படிக்கும் உள்ள  உயரம் ஒரே போல இல்லாம  கூடுதலும் குறைவுமா இருக்கு!  குத்துமதிப்பா வெட்டி இருப்பாங்க போல!

மொத்தம் நானூறு படிகளாம். பாதிதூரம் வந்துட்டதால் இனி இருநூறு படிகள் ஏறுனாப் போதும்தானே!  (அப்புறம் தெரிஞ்ச விவரம் இங்கிருந்து நூத்தியம்பது படிகள்தானாம்! )

படி ஏறப்போகும்போதே  மரத்தடிக் கடையில் பலாப்பழம் பார்த்தேன்.  வாசனை ஆளைத் தூக்குது !  நம்மாட்கள் வேற குழந்தையும் குட்டியுமா  மரத்தாண்டையே சுத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் வாங்கி, அவுங்களுக்குத் தரலாமேன்னு......
நம்மவர் அதெல்லாம் வேணாமுன்னார். அப்புறம்  அவரே வாங்கிக் கொஞ்சம் தள்ளி உக்கார்ந்திருந்த சிலருக்குக் கொடுத்தார்.  ஒருத்தர் வாய் அசைஞ்சதும் நாலுபேர் ஓடியாந்தாங்க.  பழக்காரம்மா, தண்டத்தைக் காமிச்சதும் போயிட்டாங்க.... ப்ச்... பாவம்....

பசங்க படங்களைத்தான் ஏராளமா க்ளிக்கி இருக்கேன்னு இப்போ தெரியுது. பேசாம தனி ஆல்பம் போட்டுடணும் :-)

என்னதான் அரக்கனை வதம் பண்ணினேன்னு  சொல்லிக்கிட்டாலும் நல்லவனோ கெட்டவனோ, நல்லதோ அல்லதோ....  ஒரு உயிரைப் போக்கினது மனசுக்கு பேஜாரா இருக்கு பெருமாளுக்கு!  அதுவும் உயிரையும் உலகையும் காக்கும் கடமையில் இருப்பவன்னு பெயர் வேற வாங்கி இருக்காரே!

ப்ச்......  மனசு சமாதானம் ஆகும்வரை எங்கியாவது போய் அக்கடான்னு உக்கார்ந்து தியானம் செய்யலாமேன்னு புறப்பட்டுப்போறார் நரஸிம்ஹர். ஒரு மலை முகடு ஆப்ட்டது!   உக்கார்ந்துட்டார்!  இந்த மலையும் இதைச்சுற்றியுள்ள  இடமும் கடந்த நான்கு யுகங்களிலுமே இருந்துருக்கு, ஒவ்வொரு பெயரில்!
இங்கெயோ... ப்ரஹலாதனுக்கு இன்னொரு கஷ்டம்....  என்னதான் சொல்லுங்க...  பெத்த தகப்பனின் முடிவுக்குத் தானும் ஒரு காரணமா இருந்துட்டோமேன்னு ....   இவனுக்கும் மனசு பேஜார். பித்ருஹத்தி தோஷம் பிடிச்சுருச்சு.  தோஷ நிவர்த்தி என்ன?

வேறென்ன.... அதே பெருமாள்தான்.... நீயே சகலமும், நீயே எல்லாமுன்னு இருப்பவன் செய்றதையே இவனும் செஞ்சான். பெருமாளை தியானிச்சு தவம் செய்யறான்.  தன்னுடைய செல்லப்பிள்ளை இப்படி உடல்  வருத்திக்கறதைப் பார்த்த பெருமாளுக்கு மனசு தாங்கலை.

அப்படியே யோகநிலையில் ப்ரஹலாதனுக்குக் காட்சி கொடுக்கறார்.  அப்புறம்?

'இப்படியே இருந்தால் உம்மைப் பார்த்துக்கொண்டே தியானிப்பேன்'னு  சொன்னதும், இது ஏதடா வம்பாப்போச்சு. இங்கேயே உக்கார்ந்துருந்தால் மற்ற ஜீவராசிகளைக் காப்பாற்றுவதெப்படின்னுட்டுத்  தன்னைப்போலவே சிலை ஒன்றை பிரஹலாதனுக்குக் கொடுத்தார்னு சொல்லவா?  :-)

வழக்கம்போல் காட்சி கொடுத்ததும் சொல்ல வேண்டிய வசனம், தானே வருது!  'என்ன வரம் வேண்டுமோ கேள்!'  இவனுக்கும் பொதுவான அந்தக் கால வழக்கப்படி இன்னொரு வசனம்!  'இதே ரூபத்தில் இருந்து எல்லா மக்களுக்கும் அருள் புரிய வேணும்!'   சுயநலமா   எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு கேக்கத்தெரியாத காலம் அது!  கலி பொறந்தாட்டு அத்தனையும் போச்சு .... ப்ச்....

தன்னுடைய  உருவத்தை அப்படியே சிலாரூபமா பிரஹலாதனுக்குக் கொடுத்தார்.  அவனும் அதைக் கொண்டுபோய்  நரஸிம்ஹர் தியானம் செய்த மலையிலேயே பிரதிஷ்டை செய்தான்!

அந்த நரஸிம்ஹரை தரிசிக்கத்தான் இப்ப  முழங்கால் கெஞ்சக்கெஞ்சப் படியேறிக்கிட்டு இருக்கேன் !

நல்லவேளையா படிகளின் ரெண்டு ஓரங்களிலும் கைப்பிடிக் கம்பி போட்டு வச்சுருக்காங்க.  கேசவா, நாராயணா, கோவிந்தான்னு.... மெள்ள மெள்ள....

அங்கங்கே  சின்ன மண்டபங்கள். அதன் வழியாப் போறோம். அங்கங்கே படிகளின் ஓரமா உக்கார்ந்து  மோர், சின்ன கூடை, புளியோதரை மிக்ஸ், ஊறுகாய் மசாலா இப்படி  விற்கும் பெண்கள்.


ஒரு எண்பது படிபோல ஏறியதும்  கொஞ்சம் பெரிய மண்டபம். அதன் வலப்பக்கத்தில் ஆஞ்சியின் சந்நிதி!  காலுக்கு ரொம்பப்பிரச்சனை இல்லாமல்  தரிசனம் செஞ்சு திரும்பணும். அதுக்கான சக்தியைக் கொடுன்னு உள்ளே போய் கும்பிட்டுக்கிட்டோம்.  நிக்கவும் இல்லாம உக்காரவும் இல்லாம வேற ஒரு போஸ் கொடுக்கறார். விசாரிக்கலாமுன்னா  சந்நிதியில் யாரும் இல்லை.  வர்றப்போ பார்க்கலாம்.

போற வழியெல்லாம் நம்மாட்கள்.....  யாரையும் தொல்லைப்படுத்தலை.....   இறங்கி வரும் பக்தர்களிடமிருந்து பழம் கிடைச்சுக்கிட்டே இருக்கு அவுங்களுக்கு!


மேலே ஏறும்போதே கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரை நின்னு பார்த்துட்டுக் க்ளிக்கும் கடமையைச் செய்ய மறக்கலை.



ஒரு இடத்தில் நின்னு பார்க்கும்போது கீழே தெரியும் கோவில்குளமும் அக்கம்பக்கமும் 'சட்'னு  ஏற்கெனவே பரிச்சயமான இடமாத் தோணுச்சு. போன ஜென்மத்துலே இங்கே வந்துருக்கேனா என்ன?  அட! ஆமாம்.... இது நம்ம திருநீர்மலை ஏறிப்பார்க்கும்போது  இதே மாதிரித்தானே இருக்கும், இல்லே!
ஒரு வழியா ராஜகோபுரத்தாண்டை போய்ச் சேர்ந்தாச்சு.  கோவிலைப் பழுதுபார்த்துச் சரி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதனால்  கோவில் திறந்துருக்கும் நேரத்தில் சின்ன மாற்றங்கள்.

கோவில் முகப்பில் நரஸிம்ஹர்  'வா' ன்னு கூப்புட்டார்.  உள்ளே போறோம்.  படம் எடுக்கலாமான்னு தெரியலை. ஆஃபீஸ் இருக்கறாப்போலவும் இல்லை. எதுக்கு வம்புன்னு கெமராவைக் கைப்பைக்குள் வச்சுட்டேன்.
இப்படி அப்படித் திரும்பி  கொஞ்சம் படிகட்டுகள்  ஏறி வலப்புறமாப் போனால்  மண்டபம். அதுலே வலப்பக்கம் கருவறை !   மூலவர் பெரிய உருவம்!  அழகான அலங்காரத்தில் கண்கள் மின்ன ஜொலிக்கிறார்.
வரிசை நகர்ந்து போகும்போது,  அந்தாண்டை நின்னு தீர்த்தம் கொடுத்துக்கிட்டு இருந்த பட்டர் ஸ்வாமிகளை,  மூலவராண்டை நின்னுக்கிட்டு இருந்த ஸீனியர் பட்டர்,  நமக்குப் பின்னால் இருந்த பக்தர் ஒருவருக்கான  ஸ்பெஷல் பூஜைக்கு உதவி செய்யக்கூப்ட்டார்.  அவர் இந்தப் பக்கம் வந்ததால் நமக்குத் தீர்த்தம் கொடுக்க ஆள் இல்லை. அதனால் என்ன? அடிச்சோமே ப்ரைஸ்!  ஸ்பெஷல் பூஜை முழுவதையும் பெருமாளுக்கு முன்னே நின்னு, கண்கொட்டாமல் பார்த்து அனுபவிக்கக் கிடைச்சது பாக்கியம்!  பத்து நிமிஷம் போல் ஆச்சு! கூடை கூடையாய் துளசியும், பூக்களும், மாலைகளுமா ......   ஹைய்யோ!!!

ரொம்பத் திருப்தியோடு தீர்த்தம் வாங்கிக்கிட்டு அந்தாண்டை போனால்  மஞ்சள் நூலில் ஒரு  பென்டன்ட்/டாலரைத் தொங்கவிட்டு, நரஸிம்மன் ப்ரஸாதம்னு சொன்ன நபரிடம், ஒரு குறுக்குக் கேள்வியும் கேக்காமல் அவர் சொன்ன இருபதைக் கொடுத்தேன்.

கோவிலுக்குள் நாம் ஏறிவந்த படிகள் சாதாரணப்படிகள் இல்லையாம்!  நவக்ரஹங்களே இப்படிப் படியாக வந்து கிடப்பதாகச் சொல்றாங்க. (படியாய்கிடந்து பவளவாய் பார்க்க வேணாமோ? அதுசரி.  அங்கே கருவறைன்னு அடைஞ்சு கிடக்காமல் பெரிய மண்டபம் போலத்தானே  இருக்கு!)

திப்பு சுல்தான் இந்தப்பக்கம் படைகளைக் கொண்டு போனப்ப, யானைப்படையில் சில யானைகளுக்கு உடம்பு சரியில்லாமப் போயிருக்கு.  என்ன செய்யலாமுன்னு திகைச்ச சமயம், அவருடைய படைத் தளபதிகள், மலைமேல் இருக்கும் நரசிம்ஹரை வேண்டிக்கலாமுன்னு சொன்னதும், வேண்டிக்கிட்டார்.  யானைகளுக்கு உடம்பு சரியாப்போனதும், நன்றிக்கடனா ஒரு பெரிய முரசைக் கோவிலுக்குக் காணிக்கையாக் கொடுத்துருக்கார். (போருக்குப் போகும் சமயம் போர் முரசெல்லாம்  கொண்டு போவாங்கதானே ! அதிலிருந்து ஒன்னு நம்ம நரசிம்ஹருக்கு ! ) Pic from google. Thanks.
  பகல் பூஜை சமயம் அந்த முரசைக் கொட்டும் சப்தம் சுத்துபத்து கிராமங்களுக்குக் கேக்குமாம்!
திருப்பணி நடப்பதால்  கோவிலை முழுசுமாச் சுத்திப் பார்க்க முடியலை. அங்கங்கே மூங்கில் கட்டைகளால் தடுப்பு.  முரசையும் பார்க்கக்கிடைக்கலை.... ப்ச்....

இப்ப இருக்கும் இந்தக் கோவிலுக்கு வயசு ஆயிரத்துக்குப்பக்கம்!  ஹொய்சல மன்னர்கள் கட்டித் தந்ததாம்.

ராஜகோபுரவாசலுக்கு வந்தால் ஜிம்னாஸ்ட்கள் ரொம்ப பிஸி!
மெள்ள இறங்கினோம். எனக்கு இறக்கம் பிரச்சனையே இல்லை. அதோ 'நம்மவரு'க்குப் பின்னே தெரியும் மண்டபத்தின் இடதுபக்கம்தான்  அந்த ஆஞ்சி சந்நிதி இருக்கு! பட்டர்ஸ்வாமிகளும் இருந்தார். தீபாராதனை காண்பிச்சுப் பிரஸாதமாத் துளசியும் கொடுத்தார்!


பெரிய சதுரக்கல்லில்  புடைப்புச் சிற்பமா இருக்கார் ஆஞ்சி. சின்ன விசாரிப்பில் கிடைச்ச விவரத்தை அன்றைக்கே ஃபேஸ்புக்கில் பதிஞ்சு வச்சேன்.  கீழே பாருங்க.....   ஹிஹி

அபூர்வ ஆஞ்சி!!! வேறெங்கும் இப்படி முழங்காலை மடிச்சு முட்டி போட்டுருக்கும் ஆஞ்சி இல்லைன்னு பட்டர்ஸ்வாமிகள் சொன்னார்.

முட்டிவலிக்காரர்கள் இவரை முட்டிபோட்டு வணங்கினால் வலி குறையுமாம்!!!

இந்த விவரங்கள் ஏதும் தெரியாமலேயே மேல்க்கோட்டை ஸ்ரீ யோகநரஸிம்ஹரை தரிசனம் செய்ய மலையேறும்போது, பாதி வழியில் இருந்த ஆஞ்சி சந்நிதியில் போய் வணங்கி கால்களுக்கு பலம் கொடுன்னு வேண்டிக்கிட்டேன்.

ஓக்கே ! நோ ஒர்ரீஸ் என்றார்.

அதேபோல் பிரச்சனை இல்லாமல் ஏறிப்போய் அருமையான தரிசனமும் ஆச்சு.

கீழே வரும் வழியில் நன்றி சொல்லப் போனபோதுதான் இவர் முட்டிவலி ஸ்பெஷலிஸ்ட் என்ற சமாச்சாரமும் தெரியவந்தது !!

அட!!! ஊர் உலகத்துக்குச் சொல்ல வேணாமோ ?
தயக்கத்தோடு, படம் எடுத்துக்கவான்னு கேட்டதுக்கு, சரின்னுட்டார் பட்டர் ஸ்வாமிகள்!!!

கார்பார்க் வரை படிகளில் இறங்கிவந்து, செருப்பை விட்டுட்டுப்போன கடையில் நம்ம காலணிகளை எடுத்துக்கிட்டோம்.  கடைக்காரப்பெண்மணிக்குக் கொஞ்சம் ரூபாய்கள் கொடுத்தப்போ, வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க. வற்புறுத்திக் கொடுத்துட்டு, அவுங்க அனுமதியோடு ஒரு க்ளிக்!  மேல்க்கோட்டை ராதா! நான் மத்ராஸ் துளசின்னேன். ராதா என்ற பெயரில் எனக்கு ஒரு நெருங்கிய தோழி இருப்பதையும்  மறக்காமல் சொன்னேன் :-)
கீழே மலையடிவாரத்துக்கு வந்ததும் கோவிலுக்குப் போகணுமுன்னு ஜெய்யிடம் சொன்னோம். இங்கே அங்கேன்னு சுத்திட்டுப் 'பார்க்கிங் கிடைக்காது . நீங்க இப்படியே இறங்கிப்போய் பார்த்துட்டு வாங்க'ன்னார்.  ட்ரைவருக்கு இது புது இடமாத்தான் இருக்கணும். வழி ஒன்னும் சரியாத் தெரியலையோ....
கோவில் குளம், கல்யாணி தீர்த்தம்!  அதையொட்டி இருக்கும் பாதையில் போனோம். முஹூர்த்த நாள் என்பதால் ஏகப்பட்டக் கல்யாணங்கள் அங்கங்கே நடந்துக்கிட்டு இருக்கு!  வலப்பக்கம் இருந்த மண்டபத்தில் ஒரு கல்யாணம்.  எனக்குப் பொண்ணு மாப்பிளையைப் பார்க்க எப்பவும் பிடிக்கும் என்பதால்  உள்ளே போனேன்.  கல்யாண வீட்டாரின் வரவேற்பு அருமை.
அன்பளிப்பாகக் கொஞ்சம் ரூ கொடுத்து, மணமக்களை ஆசிர்வதிச்சோம். பெருமாளே.... நல்லா இருக்கட்டும்!

  இருந்து கல்யாண விருந்து சாப்பிடச் சொல்லி பயங்கர உபசாரம்!'  பரவாயில்லை. வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாமு'ன்னு கிளம்பினோம்.  குளக்கரையின் எதிரில் ஒரு அழகான மண்டபம்!

பெரிய சைஸ் திருக்குளம்தான்.  நாலுபக்கமும் நீண்டு போற படிகள்.  அவ்ளோதூரம் கடந்து போனால்தான் எதிர்க்கரையில் தெரியும் கோவிலுக்கு போக முடியும்.  கல்யாணக்கூட்டம் வேறு நெரிசலாய் இருக்கு எல்லாப் பக்கங்களிலும். கோவிலைக் கிட்டே வரவழைச்சுப் பார்த்தால் ராமர் சந்நிதி !
மணி இப்போ பனிரெண்டு. கோவில் மூடியிருப்பாங்க, இல்லை? ப்ச்.... அப்புறம் பார்க்கலாமுன்னு  கிளம்பி  நாம் இங்கே வந்த பாதையிலே போய் ட்ரைவரை வரச்சொல்லி செல்லில் கூப்பிட்டால்...  பதிலே இல்லை.  ரெண்டுமூணு  முறை கூப்பிட்டதும்  எதிரிலே ஓடிவர்றார் ஜெய்.  இது ஒன்வே. வண்டி அங்கே இருக்கு. வாங்க போகலாமுன்னதும் கொஞ்சம் நடந்து போகவேண்டியதாப் போயிருச்சு.

திரும்ப ஒன்னரை மணி நேரப் பயணத்தில் ஹொட்டேலுக்கு வந்துட்டோம். சும்மா சொல்லக்கூடாது.... வழியெங்கும் பசுமை!  விவசாயம் நல்லாவே நடக்குது!  தண்ணிப் பஞ்சமில்லை !  மணியும் ஒன்னரை ஆச்சு.  ஜெய்யை சாப்பிட அனுப்பிட்டு உள்ளே போனால்  ட்ராவல் டெஸ்க்கில் ஆள் இருக்கு. டெனிஸ் ஃப்ரம் கேரளா!

மறுநாள் முதல் அஞ்சு நாளுக்கு வண்டி வேணும்.  நாம் போக விரும்பும் இடங்கள் என்னென்னன்னு சொல்லி, நல்ல அனுபவம் உள்ள நம்பிக்கையான ட்ரைவரும், நல்ல வண்டியும் வேணும். முக்கியமா ட்ரைவருக்கு  ஹிந்தியோ,  இங்க்லிஷோ பேசத் தெரியணும்.

எல்லாம் விசாரிச்ச டெனிஸ்,  மத்த விவரம் முடிவு பண்ணிக்க தன்னுடைய பாஸ் கிட்டே பேசிட்டுத் தகவல் சொல்றேன்னார்.

நாங்களும் அறைக்குப்போய் கொஞ்சம் ஓய்வு.  பகல் சாப்பாட்டுக்கு எங்கேயும் போகலை. சென்னையில் தோழி கல்யாணி கொடுத்த  மாம்பழங்கள் இருக்கு!  திருப்பதி லட்டு, சாமுண்டியின் லட்டு, சுஸ்வாத் தீனின்னு   கைவசம் இருக்கே!  எல்லாத்துலேயும் கொஞ்சம் கொஞ்சம்!

நாளைக்கு  வேற ஊர் என்பதால் மைஸூரில்   இன்னும் ஒரு சில இடங்களைப் பார்த்துக்கலாமா?   ஒரு மூணு , மூணேகாலுக்குக்  கிளம்பலாம்.

தொடரும்........... :-)


15 comments:

said...

எனக்கு மிக பிடித்த இடம் இது..

சாந்தமான யோக நரசிம்மர்..ஆஹா..

அப்போ செல்லுவ நாராயணன் பார்க்கலை யா மா..இல்ல நாளைக்கி வரங்களா...

said...

மிகச்சிறப்பு அருமை நன்றி

said...

இரண்டு தரம் சென்றிருக்கிறேன்.

said...

மேல்கோட்டை நரசிம்மர் கோயில் போன நினைவு இல்ல. மலைமேல எதோவொரு கோயிலுக்குப் போனேன். எந்தக் கோயில்னு மறந்து போச்சு.

உங்களுக்கு பிடிச்ச ஆஞ்சியே உங்களத் தேடி வந்து முட்டிவலியை போக்கியிருக்கார்.

குரங்குக்கூட்டங்களப் போக்குறப்போ குரங்கோட குரங்கா இருந்திருக்கலாமேன்னு தோணும். மரத்துல ஏறுவது எறங்குவது தாவுவது குதிப்பதுன்னு எதாவது ஒன்னு செஞ்சுக்கிட்டேயிருக்கும்.

said...

ஆவலுடன் தொடர்கிறேன். இந்த இடங்களுக்கெல்லாம் கண்டிப்பாகச் சென்றுவரவேண்டும் என்று மனதில் எண்ணம் தோன்றுகிறது.

இராமானுசர், வைணவர்களுக்கு கொடுத்துள்ள ஆறு கட்டளைகளில் (?) ஒன்று, மேல்கோட்டையில் வாழவேண்டும் (அதாவது ஆறில் ஏதாவது ஒன்றாவது வாழ்நாளில் செய்யவேண்டும்).

said...

@ ஜி.ராகவன் சார் - //குரங்கோட குரங்கா இருந்திருக்கலாமேன்னு// - மனிதன் உள்பட எல்லா விலங்குகளும்/பறவைகளும் சுகம் குறைவாகவும் துக்கம் அதிகமானதாகவும் உள்ள வாழ்க்கையையே அனுபவிக்கின்றன. அதனால் எந்த உயிராக இருந்தால் என்ன, அனுபவம் ஒன்றுதான் இல்லையா? புண்ணியம் செய்திருப்பவை உணவும் உறைவிடமும் சுலபமாகக் கிடைக்கும் இடங்களில் பிறக்கின்றன அல்லது வளர்கின்றன. சில, ச்ரேஷ்டமான இடங்களில் வாழ்கின்றன (கோவில், விசுவரூப தரிசனம் தினமும் என்று), ச்ரேஷ்டமான வேலைகள் செய்கின்றன (பெருமாளை சுமந்து செல்வதோ இல்லை அவருக்கான நீரை எடுத்துச் செல்வதோ)....

said...

அங்கே வைர முடி சேவை பிரதானமாமே

said...

மேல்கோட்டை நரசிம்மர், முட்டிவலி ஆஞ்சி.... தரிசனம் கிடைத்தது! உங்கள் தயவில்....

சரியான வழி தெரியாத ஓட்டுனர் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.

தொடர்கிறேன்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

பயங்கரக் கூட்டம் என்பதால் மறுநாள் மறுபடியும் போனோம்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா... இருமுறை!

said...

வாங்க ஜிரா.

குரங்கு, ரயில், கடல் , யானை எல்லாம் எவ்ளோ பார்த்தாலும் அலுக்காதவைகளே!

ஆஞ்சி கூட அன்றைக்கு முட்டிவலி வராமப் பார்த்துக்கிட்டாரே தவிர ......

காலுன்னு ஒன்னு இருந்தால் கால் வலின்னும் ஒன்னு இருக்கும்னு சொல்லிட்டார்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எல்லாம் பெருமாள் கட்டளை !

அவன் கூப்பிட்டால் போய் தரிசனம் செஞ்சுக்கணும்! சிம்பிள் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மைதான். நாலு லக்ஷம்பேர் கூடுவாங்களாமே!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இப்பெல்லாம் இளவயது மக்கள் சிலர் சொந்தமா ஒரு வண்டி வாங்கிக்கிட்டு, எதாவது தனிப்பட்ட ட்ராவல் கம்பெனியுடன் சேர்ந்துக்கறாங்க. அனுபவம் போதாது. ஓனர் ட்ரைவர். சிட்டி ரன்னுக்கு ஓட்டுவதுதான் பெரும்பாலும்!