Friday, September 21, 2018

வரம் கிடைச்சதும் குணம் மாறிடுது, இல்லே? (பயணத்தொடர், பகுதி 12)

ஒரு கையிலே வீச்சருவா.... இன்னொரு கையிலே படமெடுக்கும் பாம்புன்னு  முரட்டு மீசையும், மிரட்டும் பார்வையுமா  சுமார் பனிரெண்டடி உயரச் சிலையா நின்னு  நம்மையெல்லாம் வரவேற்கிறார் மகிஷாசுரர்!  சின்னதா ஒருமேடையும், கம்பி போட்ட வேலியும், சுத்திவரச் செடிகளுமா இருக்கு அமைப்பு!
இவர்தான் இங்கத்து ஃபோட்டொபாய்ன்ட்.  அவரோடு படம் எடுத்துக்க சனம் அலைமோதுது!   யாரோட குறுக்கீடும், அவுங்க முகங்களும் ஃப்ரேமுக்குள் வராம,  முன்னழகும், பின்னழகும் க்ளிக்கக் கொஞ்சம் காத்திருக்கவேண்டி வந்தது எனக்கு :-)
ஆமாம்....  இவனுக்கு எருமைத் தலை இல்லையோ?  எப்படி மனுசத்தலைக்கு மாறினான்?
சாமுண்டி ஹில்ஸ் என்னும் குன்றுக்குக் காரில் ஏறி வந்துருக்கோம்.  மைஸூரு அரண்மனைக்கும் , குன்றுக்கும் இடையில் தூரம் பதிமூணு கி.மீட்டர்.  அருமையான சாலை போட்டுருக்காங்க. கிட்டத்தட்டக் கால் நூற்றாண்டுக்கு முந்தி வந்தப்பவும் மலைச்சாலை இருந்ததுதான்.  ஆனா இப்போ இன்னும் கொஞ்சம் அகலமாவும், அழகாவும் இருக்கு!

குன்றின் உயரம் ஆயிரம் மீட்டருக்கு மேலே! மூவாயிரத்து நானூறு அடி! மேலே ஏறிவரப் படிகளும் இருக்கு. ஆயிரத்தெட்டுப் படிகள் ஏறணுமே! ஐயோ....
அரக்கர் குல அரசன் ரம்பா. அவனுடைய தங்கமணி ரொம்ப அழகு. ஆனால்  முகம் மட்டும் எருமை முகம்.  எப்படின்னு கேள்வி கேக்கப்டாது.....    ராஜு மெச்சிந்தி ரம்பா (தெலுகு பழமொழி)ன்னு இருக்கும்போது இங்கே ரம்பாவே மெச்சினது தேவலோக ரம்பையை விட அழகுன்னுதானே இருக்கும், இல்லையோ!  சொன்னா நம்ப மாட்டீங்க....கழுதை முகம் உள்ள  பெண்ணையும் ஒருத்தன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியிருக்கான். இதை அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்.
 இப்போ எருமைதான் முக்கியம். அவுங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது, அப்படியே அம்மாவைக் கொண்டு! மகிஷன்னு பெயர் வச்சாங்க.  அசுர குலமானபடியால், குரு சுக்ராச்சாரியாரிடம் கல்வி, கேள்வி எல்லாம் ஆச்சு.

தன்னை இப்படிப் படைச்ச பிரம்மாவிடமே தனக்கு வேண்டியதை வாங்கிக்கலாமுன்னு மகிஷன், பிரம்மாவை மனதில் நிறுத்தித் தவம் செய்யறான்.  தவம் முற்றிப்போனதும், பிரம்மா அவன் முன் தோன்றி, என்ன வரம் வேண்டும்னு கேட்க, 'எனக்கு மரணமே  வரக்கூடாதுன்னு வரம் கொடுங்க'ன்னுட்டான். திடுக்கிட்டுப்போன பிரம்மா, 'அதெப்படி? என்னால் படைக்கப்பட்ட  உயிர்களுக்கு என்றாவது ஒருநாள் மரணம் சம்பவித்தே தீரும். இதை என்னாலேயே மாற்ற முடியாது. வேறெதாவது கேள்'னுட்டார்.
 என்ன இருந்தாலும் படிச்சவன் இல்லையா? டக்குன்னு வேற வரத்தைக் கேட்டுட்டான் மகிஷன். ' தேவர்கள் உட்பட எந்த ஆணாலும் நான் கொல்லப்படக்கூடாது.  நான் காதலிக்கும் பெண் கையால் மரணம்னு மாத்தி எழுதிக்குங்க'ன்னான். ஓக்கேன்னுட்டார் பிரம்மா. வேற வழி?

மரணம் இல்லைன்னதும் ஆணவம், அகம்பாவம் எல்லாம் வந்துருச்சு!  எல்லோரையும் இம்சை செய்யத் தொடங்கினான். அக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போச்சு. தேவர்கள் எல்லாம் போய்  பிரம்மாவிடம் 'எல்லாம் உம்மால் வந்த வினைதான்'னு  சண்டை போடறாங்க. 'என்னை அறியாமல் எப்படியோ வரம் கொடுத்துட்டேன். மன்னிச்சுக்குங்க. எங்க அப்பாட்டே போய்க் கேக்கலா'முன்னு சொன்னதும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டாங்க.

'ஏம்ப்பா.... நான் ஒருவன்தான் (புருஷன்) ஆண். மற்ற எல்லா உயிர்களும் பெண் அம்சங்களேன்னு நானே சொல்லி இருக்கேனே. அவன்தான் எந்த ஆணாலும்  தான் கொல்லப்படக்கூடாதுன்னு வரம் வாங்கி வச்சுருக்கான். இப்ப நான் போய்க் கொன்னால் 'நான் பெண்ணுன்னு ஆகிடாதா?  என்னால் ஆகாது'ன்னுட்டார்.

கட்டக் கடைசியா  கைலாஸம் போய் சிவன்கிட்டே கேட்டுடலாமுன்னு அங்கே போய் நடந்ததைச் சொன்னாங்க. பிரம்மா கொடுத்த வரத்துலே ஒரு லூப் ஹோல் இருப்பதைக் கவனிச்ச பார்வதி,  'ஆண்தானே கூடாது. பெண் ஓக்கேதானே? நானே போய் அவன் கதையை முடிக்கிறேன்'னு கிளம்பினாங்க. அப்ப சிவன் சொல்றார்,  'ஒரு நிமிட் நல்லா யோசனை பண்ணிக்கோ.  அவன் காதலிக்கும் பெண் கையால் சாவுன்னு கேட்டுருக்கான்'னு ஞாபகப்படுத்தினார்.
நோ ப்ராப்லம்னு கிளம்பின அம்பாள், முதலில் அழகே உருவான பெண்ணாக மகிஷன் முன்னால் போய் நிக்கிறாள்.  பிரமிச்சுப்போனவன், அவளை மனமாரக் காதலிக்கிறான். அவன் மனசில் ஓடும் எண்ணத்தைத் தெரிஞ்சுக்கிட்ட அம்பாள்,  தன் சக்தியை எல்லாம் திரட்டி சாமுண்டி என்ற பெயரில் அவனோடு போர் தொடங்கிட்டாள்.
மகிஷன் என்ன லேசுப்பட்டவனா?  பத்துநாளாத் தொடர்ந்த தீவிரமான போரில் கடைசியில் பத்தாம் நாள், அம்பாள் மகிஷனை வதம் செஞ்சுட்டாள்!  அன்றைக்கு தசமி திதி வேற!  அது விஜயதசமி ஆச்சு!  தசரான்னு பத்து நாள் கொண்டாட்டம் இப்படித்தான் ஆரம்பிச்சதுன்னு  ஒரு புராணக் கதை! மகிஷனைக் கொன்றதால் மகிஷாசுரமர்த்தினி என்ற  பட்டமும்  கிடைச்சது!
பத்துநாள் போராட்டத்தால்  களைப்பாக இருந்த  அம்பாள், வதம் செய்து முடிச்சதும், கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க  பக்கத்தில் இருந்த குன்றின் மேல்  வந்து உக்கார்ந்தாள்.   மகிஷன் சேதி அறிஞ்ச தேவர்கள் அனைவரும் ஓடிவந்து அம்பாளைப் பாராட்டறாங்க!  இப்படியே அமர்ந்து எல்லோருக்கும் நன்மையை அருளவேணுமுன்னு  வேண்டுதல் வைக்கிறாங்க.  அப்படியே ஆச்சு !

சாமுண்டி கோவில் கொண்ட இடத்துக்குத்தான் நாம் இப்போ வந்துருக்கோம்.
போனமுறை வந்தப்பக் கோவில் வாசலாண்டை வந்திறங்கிய ஞாபகம். இப்ப என்னன்னா.... மகிஷன் சிலையாண்டையே  பார்க்கிங் வச்சுருக்காங்க. கம்பித் தடுப்பு வேற !  ஒரு  நானூறு மீட்டராவது நடந்தாத்தான் கோவில்!  அடப் பெருமாளேன்னு நினைக்கும்போதே.... நமக்கான வண்டியை அனுப்பிட்டார் பெருமாள். கோல்ஃப் கார்ட் போல  நீளவண்டி வந்து நின்னது. அதுலே போகலாமேன்னு ஓடிப்போய் விசாரிச்சால், அது சீனியர் சிட்டிஸன்களுக்கானதாம்! அடிச்சக்கை. நாமும் சீனியர்ஸ்தானே! எல்லாம் கோவில் ஏற்பாடுதான்.
அமிதாப் பச்சன்தான் வண்டி ஓட்டறார். கோவிலாண்டை இறக்கி விட்டவர், 'தரிசனம் முடிச்சதும் இங்கேயே வந்துருங்க'ன்னார்.
ஏழுநிலை ராஜகோபுரத்தோடு முகப்பில் புள்ளையார்!  கோபுர வாசலுக்கு எதுத்தாப்லெ தேங்காய் உடைக்க ஒரு இடம் இருக்கு. கோவிலைச் சுத்தியும் கம்பித்தடுப்பு! அதுக்குள்ளே வரிசை கட்டி நிக்குது  சனம்!  தினமும் பக்தர்கள் கூட்டங்கூட்டமா வர்றாங்களாம்!

ஒருமுறை  ஒரு கோவிலில் இந்த கூண்டு போல இருக்கும்  அமைப்பில் தரிசன வரிசைன்னு போய் நின்னு ஒன்னரை மணி நேரத்துக்கு மாட்டிக்கிட்டோம். கூண்டு திறந்தவுடன் பதறியடிச்சுக்கிட்டு வெளியே ஓடி வந்தது தனிக்கதை. அதிலிருந்து கூண்டு வரிசையைப் பார்த்தாலே ஒரு பயம்.
அப்பதான் அமிதாப் பச்சனோடு பேசிக்கிட்டு இருந்த நபர் வந்து, சிறப்பு தரிசனம் இருக்குன்னார். நூறு ரூபாய். அதுக்கான கவுன்ட்டரில் போய் ரெண்டு டிக்கெட் வாங்கிக்கிட்டுக் கோவில் வாசலுக்கு முன்னால் வந்ததும், கம்பித்தடுப்பில் இருந்த கேட்டைத் திறந்து உள்ளே அனுப்புனாங்க. கோபுரவாசல் கதவு  வெள்ளி ! அதுலே தேவியின் பல ரூபங்கள் இருக்கு. நமக்கு நின்னு பார்க்க நேரம் இல்லை. பின்னால் வரிசையில் வரும் சனம் நம்மைத் தள்ளிக்கிட்டு உள்ளே போறாங்க.
கண்முன்னே  அர்த்த மண்டபமும் அடுத்தாப்லெ கருவறையும்!  கொடிமரம், பாத பீடம் தாண்டி நேராப்போய் தேவி தரிசனம் ஆச்சு.  நல்ல கருப்பில் பளபளன்னு மின்னறாள்  தேவி சாமுண்டி!  உக்கார்ந்துருக்கும் ஸ்டைலே தனி!  எட்டு கைகள், விதவிதமான ஆயுதங்களோடு!

அசுரனைக் கொல்லப்போறேன்னு கிளம்புனவுடனே மற்ற தேவர்களும், கடவுளர்களும்  ஆயுதங்களைக் கொண்டுவந்து கிஃப்டாக் கொடுத்தாங்க! இதுலே ஒருத்தர்  இதுலே ஏறிப்போங்கன்னு சிங்கத்தையே கொண்டு  வந்து  வாஹனமாத் தந்துருக்கார்!  சிம்மவாஹினி !  மார்க்கண்டேய மஹரிஷி இந்த சிலையைச் செஞ்சு இங்கே பிரதிஷ்டை செஞ்சுருக்கார்.  அந்தக் கணக்குலே இது ப்ராச்சீன் !

ஆதிகாலத்தில் வானமே கூரையாத்தான் கோயில்  இருந்துருக்கும். இப்பத்துக்கோவில் எப்ப வந்ததுன்னால்.....
ஆயிரம் வருஷத்துக்கு மேலேயே ஆகி இருக்காம், கோவிலுக்கு வயசு! பனிரெண்டாம் நூற்றாண்டில்  இந்தப் பகுதியில் ஆட்சி செய்த ஹொய்சாள  மன்னர்கள்  கோவிலுக்குத் திருப்பணி செய்ததா கோவில் குறிப்பு சொல்லுது! பதினாறாம் நூற்றாண்டில் மைஸூர் உடையார் அரச வம்சத்தினர் கோவிலைப் பெருசாக் கட்டி இருக்காங்க.  பத்தொன்பதாம் நூற்றாண்டுலே கோவிலை இன்னும் விரிவுபடுத்தி அழகாக்கி இருக்கார், மன்னர் க்ருஷ்ணராஜ உடையார்! கூடவே ஏராளமான நகையும் நட்டும், வெள்ளியில் செஞ்ச வாஹனங்களும் !

பதினெட்டாம் நூற்றாண்டுவரை கோவிலில் நரபலி, மிருகபலி எல்லாம் கொடுத்துருக்காங்க. நல்லவேளையா இந்தப்பழக்கம் நின்னுபோயிருக்கு!

 கருவறை வாசலில் த்வாரபாலகியர் இருவர். நந்தினி, கமலினின்னு பெயர்கள்.  கருவறைக்கு வெளியே  நம்ம ஆஞ்சியும் , புள்ளையாரும்  பக்கத்துக்கொருவரா தனிச் சந்நிதியில்!

உற்சவர் முழுக்க முழுக்கத் தங்கம்!  நகையும் நட்டும் பூவும் பொட்டுமா அலங்காரம் அழகோ அழகு! இவர்தான் தசரா சமயம் யானைமேல் ஊர்வலம் போறார்.  மைஸூர் அரசவம்சத்துக்குக் குலதெய்வம் என்றால்  அமர்க்களத்துக்குக் கேக்கணுமா?

மஹா சக்தி பீடங்கள் பதினெட்டில் இந்த சாமுண்டி கோவிலும் உண்டு.  சதிதேவியின்  தலைமுடி விழுந்த இடமாம்!


கர்நாடகா அரசே கோவிலுக்குன்னு ஒரு வெப்சைட் வச்சுருக்கு!

தரிசனம் முடிஞ்சதும் உள் பிரகாரம் சுத்திட்டு வெளியே வந்துட்டோம். நல்ல கூட்டம்தான் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும்!

காலையில் 6 மணிக்கே கோவில் திறந்துடறாங்க. ஏழரை வரை அபிஷேகமும் நித்ய பூஜையும்.  தரிசனம் ஏழரைக்கு ஆரம்பிச்சுப் பகல் ரெண்டு வரை. அப்புறம் மூணறையில் இருந்து ஆறு வரை. திரும்ப ஏழரை முதல்  இரவு ஒன்பது வரை.  இடைப்பட்ட நேரங்களில் கோவிலில் மற்ற பூஜைகள்னு  எதுவும் முடங்காம நடத்தறாங்க. கடவுள் இருக்கார்னு சொல்லும் அரசு!   இந்தப்பகுதியை 'நோ ப்ளாஸ்டிக் ஸோன்'னு அறிவிச்சு இருக்காங்க. ரொம்ப நல்ல சமாச்சாரம்!


நாங்க கோவிலுக்கு வெளியே கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுட்டு, நாம் வாங்கின தரிசன டிக்கெட்டுக்குக் கொடுக்கும் ரெண்டு லட்டையும் வாங்கிக்கிட்டுக் கிளம்பி அமிதாப் பச்சன் சொன்ன இடத்துக்கு வந்தோம். வண்டியும் தயாரா நிக்குது!
பெயர்க்காரணம் விசாரிச்சேன். தகப்பன், அமிதாப்பின் ரசிகராம். அதனால்  குழந்தைக்கு அமிதாப்பச்சன்னு பெயர் வச்சுட்டார்!
கார்பார்க் வரை கொண்டு வந்து விட்டதுக்கு நன்றி சொல்லிட்டுக் கிளம்பினோம்.  மகிஷனை இன்னொருக்கா க்ளிக் செஞ்சுக்கிட்டேன்!  இவனுக்கு   ஒரு தங்கை இருந்துருக்காள். மகிஷின்னு பெயர். தன் அண்ணனின் மரணத்துக்குப் பழி வாங்கணுமுன்னு தேவர்களைக் கொல்லப்போய், அய்யப்பன் கையால்  இவளுக்கும் மரணம் லபிச்சதாம்!  கடவுள் கையால் சாவறதும் ஒரு கொடுப்பினைதான், இல்லையோ!!!!

தொடரும்.......  :-)


13 comments:

said...

அருமை அற்புதம் நன்றி

said...

அருமை அற்புதம் நன்றி

said...

உங்கள் தயவில் நாங்களும் மகிஷாசுரமர்த்தினி தரிசனம் கண்டோம். படங்கள் வழமை போலவே அழகு.

தொடர்கிறேன்.

said...

நாங்கள் சென்றிருந்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. சிறிது நேரம் காத்திருந்து அம்மனை தரிசித்தோம்.

said...

சாமுண்டி ஹில்ஸிலிருந்துவரும் வழியில் ஒரு பிள்ளையார்கோவில் பார்த்த நினைவு இரண்டு மூன்று முறை ( நான்கைந்தாகக்கூட இருக்கலாம்) சென்றிருக்கிறோம்

said...

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் பல பிரபலக்கோயில்கள்ள (தமிழ்நாட்டுலயும்) ஆடு கோழின்னு பலியிடுறது இருந்தது உண்மைதான். பலியிடுதல் நின்னுருக்குன்னா... வெறொரு சமூகத்திடம் இருந்த கோயில் பிராமணர் சமூகத்திடம் வந்திருக்குன்னு தெரிஞ்சிக்கலாம். தமிழ்நாட்டுல மாடுகள் பலியிடுவது ரொம்பக் குறைவு. கர்நாடகாவில் மாடுகள் பலியிடுவது நிறைய இருந்தது. இப்ப ரொம்பவே கொறைஞ்சு மறைஞ்சிருச்சுன்னே சொல்லலாம்.

அமிதாப் ரசிகர் மகனுக்கு அமிதாப்னே பேர் வெச்சுட்டாரா... ஆகா.. நல்ல வேளை அவரு ஷாருக்கான் ரசிகரா இல்ல. ஷாருக்கான்னு பேர் வெச்சிருந்தா கோயில் வேலை கெடைச்சிருக்காது. தப்பில்லைன்னாலும்... நம்ம மக்களும் ஏன் இந்தப் பேர்னு கேட்டு தொந்தரவு பண்ணுவாங்க. நடிகர் கமலும் ஏன் தன்னோட பேர்ல ஹாசன் இருக்குன்னு நிறைய வாட்டி விளக்கம் கொடுத்துட்டாரு.

அந்த பேட்டரி காருக்கு எவ்வளவு வாடகை?

சாமுண்டி மலைல ஒரே பிரச்சனை என்னன்னா சாப்பாடு சரியிருக்காது. பெருசா ஒன்னும் நல்ல சாப்பாடு கிடைக்கவும் கிடைக்காது. மலைய விட்டு கீழ இறங்குனாத்தான் ஆச்சு. அப்படியே லலித்மகால் போனீங்களா?

said...

வாங்க வலைப்பூக்கள்.

அங்கே கோர்த்துவிட்டுருக்கேன். வாசகர் எண்ணிக்கை கூடுமான்னு தெரியலை. பார்க்கலாம்.

அழைப்புக்கு நன்றி!

said...

வாங்க விஸ்வநாத்,

வருகைக்கு நன்றீஸ்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர் வருகைக்கு நன்றி!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நவராத்ரி சமயங்களில் பயங்கரக் கூட்டம் இருக்குமாம்! நாங்க போனபோதும் (சாதாரண நாள்தான்) கூட்டம் இருந்தது. அந்த ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கினதும் நல்லதாப் போச்சு. அதுக்கப்புறம் ரெண்டு இடங்கள் போக முடிஞ்சது எங்களுக்கு!

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

உள்ளூர்க்காரர் நீங்க. ஒரு 130 கிமீ பயணிச்சால் போதுமே!

பிள்ளையார் கோவில் சின்னதா ஒன்னு பார்த்தோம்.

said...

வாங்க ஜிரா.

காரணம் எதுவா இருந்தாலும் ரத்தபலி கொடுப்பது நின்னுபோனது மகிழ்ச்சிதான்!

நடிகர் கமல் இந்துமத விரோதி இல்லையோ! நாத்திகன்னு தன்னைச் சொல்லிக்கிட்டு இருக்காரே! அவுங்களுக்கெல்லாம் கடவுள் இல்லைன்னா.... இந்துக் கடவுள் மட்டும்தான் இல்லையாக்கும்!

பாட்டரி கார் சவாரி முற்றிலும் இலவசமே! சீனியர் சிட்டிஸன்களுக்கு பேருதவியாகக் கோவில் நிர்வாகம் (இது கர்நாடகா அரசின் பொறுப்புதான்) செஞ்சுருக்கு!

said...

அருமை...படங்களும் தகவல்களும்..