வேறென்ன கோவில்கள் இங்கே இருக்குன்னு தப்பா ஒரு கேள்வியைக் கேட்டுட்டேன். 'தடுக்கி விழாமப் போ'ன்னாங்க. முக்கியமானதுன்னு இருக்கும் மஹாகணபதி க்ஷேத்ரத்தைக் கட்டாயம் கண்டுக்கணும். சிறுவனா வந்து 'ஆப்பரேஷன் ஆத்மலிங்கம்' (சொல் உபயம்- அமைதிச்சாரல். நன்றி) ட்யூட்டியில் மேஜர் பார்ட் இவருக்குத்தானே? அதுக்கு நன்றிக்கடனா வச்ச சிலை. புள்ளையார் சின்னப்புள்ளை உருவமா நிக்கறார். இப்போ இருக்கும் கோவில் 1500 வருசப் பழசு.மஹாபலேஷ்வர் கோவிலில் இருந்து அதே தெருவில் ஒரு ரெண்டு நிமிச நடையில் இந்தக் கோவில் இருக்கு. வாசலில் கொஞ்சம் பூவையோ இல்லை அருகம்புல்லையோ ஒரு இலையில் வச்சு விற்கும் பெண்களின் கூட்டம் ஏராளம். அந்த ஏரியா முழுசும் கோக்கள் நிதானமா நடைப்போட்டுக்கிட்டு இருக்குதுங்க. பக்தர்கள் வாங்கித் தரும் வாழைப்பழங்கள்தான் முழுநேர உணவு போல! நமக்கு வாகா அங்கங்கே கடை முன்னால் நிக்குதுகள்.
கணபதி கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் முன்னால் ஒரு நீண்ட ஹாலும் அதை அடுத்து ஒரு கருவறையும். ப்ரவுனும் தங்கமும் கலந்தது போல் இருக்கும் கல்லால் செய்யப்பட்டுருக்கார். இவருக்கும் அபிஷேகம் இடைவிடாமல் நடக்க தலைக்கு மேல் பாத்திரம் தொங்குது. பால் நீர் ன்னு எதாவது கொண்டுவந்து மக்கள் அதை நிரப்பிக்கிட்டே இருக்காங்க. அருகம்புல் கொத்தை அவர் தலையில் வைப்பதும், செம்பில் தனியாப் பால் கொண்டு வந்து சொட்டுப்பாத்திரத்தில் விடாமல், டைரக்ட்டா இவர் தலையில் ஊத்துவதுமா அவரவர் விருப்பபடி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கருவறைக்குள்ளே நுழையணுமுன்னா டிக்கெட் வாங்கிக்கணும். ஒத்தை ரூபாய்தான். எங்கே வாங்கணுமுன்னா ஹாலின் ஒரு ஓரத்தில் கவுண்ட்டர் இருக்காம்.
ரெண்டு டிக்கெட் கொடுங்கன்னு பத்து ரூபாய் நீட்டுனதும் கவுண்ட்டர் மனுஷர் அப்படியே கொதிச்சுப் போயிட்டார்! அவர்முன்னால் மேசையில் ஒருரூபாய் ரெண்டு ரூபாய், அஞ்சு ரூபாய் நாணயங்கள் கோபுரங்கள் போல அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. சில்லறையாக் கொண்டு வரணுமாம். நம்மகிட்டே உண்மையாவே சில்லறை ஒன்னும் இல்லை. இருந்ததெல்லாம் வழிச்சு வாழைப்பழம் வாங்கியாச்சு மாடு பாப்பாக்களுக்கு.'பரவாயில்லை. பத்து ரூபாய் வச்சுக்குங்கோ .ரெண்டு டிக்கெட் கொடுங்கோ'ன்னா அவருக்கு இன்னும் அசாத்தியமாக் கோபம் வருது. நம்ம கோபால் காசுக் குவியலைக் காட்டி அதுலே இருந்து அஞ்சு ரூபாயைத் தந்தால் போதும். மீதி வேணாமுன்னார். 'இனாம் ஒன்னும் வேணாம். இதோ ரெண்டு டிக்கெட். எடுத்துக்கோனு நம்ம பத்து ரூபாயையும் ரெண்டு டிக்கெட்டையும் கவுண்ட்டர் ஜன்னல் வழியாத் தள்ளிக்கிட்டே கத்தக் குரலெடுத்தார். ருத்ரபூமியாச்சே.... அதே கோபம் நமக்கும் ஏறாதா? நான் அந்த ரெண்டு டிக்கெட்டையும் மறுபடி உள்ளே தள்ளிட்டு எனக்கும் இலவசம் ஒன்னும் வேணாம். அப்படிப்போய் சாமியைப் பார்க்காட்டிப் பரவாயில்லை. கோவிலில் உக்கார்ந்துக்கிட்டு இவ்வளோ கோபம் கூடாதுன்னு சின்னதாக் கத்துனேன். (மந்திர்மே பைட்கி இத்னா குஸ்ஸா அச்சா நையே)
ஒரு நொடி தலையைத் தூக்கி என்னை ஏறெடுத்துப் பார்த்த மனிதர்..... கொஞ்சம் தழைவான குரலில் தரிசனம் முடிச்சுட்டு அப்புறமாச் சில்லரை மாத்திக் கொடுங்கன்னார். நான் ஒன்னும் சொல்லாம கவுண்டரை விட்டு நகர்ந்துட்டேன். கருவறைக்குப் போகும் படிக்கருகில் ஒரு அர்ச்சகர் தட்டுலே நிறையச் சில்லரைக்காசு இருந்துச்சு. அங்கே போய் பத்துக்குச் சில்லரை கேட்டதும் கொஞ்சம் முழிச்சார். பரவாயில்லை கொடுங்க. எல்லாம் இங்கேதானே திரும்பிவரப் போகுதுன்னதும் கொடுத்துட்டார். சரியான சில்லரையா ரெண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு 'gகேட்'டுக்குச்சியை(!) தாண்டி புள்ளையாரின் தொப்பை வயித்தைத் தொட்டுத் தடவிக் கும்பிட்டேன்:-)கோவில் தேர் நின்ன இடம் தாண்டி எதிர்வரிசைக்குப் போனால் ஸ்ரீ வெங்கடரமண ஸ்வாமிக்கு ஒருதனிக்கோவில். இந்தப் பக்கங்களில் தேர் அலங்கரிப்பது ரொம்ப வித்தியாசமா இருக்கு. வெள்ளையும் சிகப்புமா முக்கோணக்கொடிகள் வச்சே அலங்கரிச்சுடறாங்க. வழியில் கரகம் போல் அலங்கரிச்ச ஒன்றைத் தலையில் வச்சுக்கிட்டு ஒரு கூட்டம் கொட்டுமுழக்கோடு ஆடிக்கிட்டே வந்தாங்க. கொஞ்சநேரம் கொட்டுச்சத்தம் கேட்டதும் தன்னையறியாம ஒரு வெள்ளைக்காரர் ஆட ஆரம்பிச்சார்.
பெருமாள் கோவில் பழமையான கோவில்தான். நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆண்கள் சட்டை அணிந்து வர அனுமதி இல்லை. கோவிலின் முன் மண்டபம் நல்லா கலர்ஃபுல்லா இருக்கு. மூலவர் கொஞ்சம் இருட்டுலேதான் நிக்கிறார். பண்டிட் ரொம்ப நல்லா தீபாராதனை செஞ்சு ப்ரஸாதம் கொடுத்தார்.
கோவிலை ஒட்டிய வீதியில் சின்னச்சின்னத் திண்ணைகள், பொட்டிக்கடைகளா மாறி இருக்கு! வீட்டையும் பார்த்துக்கிட்டு அப்படியே யாவாரத்தையும் பார்த்துக்கறதுதான்! நம்ம ஊர்ப்பக்கம் கிராமங்களில் ஒரு காலத்தில் இப்படித்தான் இருக்கும். நாம் மாறிட்டோம், அவுங்க இன்னும் மாறலை. செல்ஃபோன் பயன்படுத்தும் விஷயத்தில்கூட தமிழ்நாடுதான் முன்னேறிக்கிடக்கு. அம்பானிகளையும் டாடாக்களையும் இன்னும் பணக்காரரா ஆக்கியே தீரணுமுன்னு சபதம் எடுத்துருக்கோமுல்லே?
கொஞ்சம் வயதான மலைநாட்டுப் பெண்கள் தமிழ்சினிமா நாயகிபோல ஒரு உடை போட்டுருந்தாங்க. வெய்யிலுக்கு இதமா இருக்குன்னு பார்த்தாலே தெரியுது.
ஊருக்குள் நிறைய வெள்ளைக்காரகளைப் பார்த்தேன். இங்கே ஓம் பீச்ன்னு ஒன்னு இருக்காம் ஹிந்தியில் ஓம் என்ற எழுத்துவடிவமா கடற்கரை இருக்குதுன்னாங்க. அங்கே கேம்ப் சைட்டும் கொஞ்சம் மலிவான தங்குமிடங்களும் இருக்குன்னு வெள்ளைக்காரர்கள் அங்கே தங்கிடறாங்களாம். இவுங்கெல்லாம் நம்மைப்போல ஒரு நாள் ரெண்டு நாளுன்னு இல்லாம ரெண்டு மாசம் மூணு மாசமுன்னு தங்கி நிதானமாச் சுத்திப் பார்க்கும் ஆட்கள். ஆனால் இவுங்களுக்குக் கோவிலுக்குள் போய் மூலவரை தரிசிக்க அனுமதி இல்லை:(
சமஸ்கிரதம் படிக்கவும், வேதங்களைக் கத்துக்கறதுக்கும் இங்கே கல்வி நிலையங்கள் , இருக்கு. நாடெங்கிலும் இருந்து மாணாக்கர்கள் வர்றாங்களாம்.
இன்னும் ஏராளமான கோவில்களும் கடற்கரைகளும் இருந்தாலும் நேரம் இல்லாததால் கிளம்பினோம். காலையில் வந்த அதே தேசீய நெடுஞ்சாலை 17 இல்தான் திரும்பிப்போகணும். பகல் சாப்பாட்டுக்கு அங்கே இங்கேன்னு தேடி ஒன்னும் சரிப்படலைன்னு முருதேஷ்வராவில் இருக்கும் ஆர். என் எஸ். ஹைவே ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம். சிம்பிளான டைனிங் ஹால். ரெஸ்ட்ரூம் எல்லாம் படு நேர்த்தியாச் சுத்தமா இருக்கு. பயணத்துலே இதுதான் பெரிய ப்ராப்லமாப் போயிருது. இன்னும் நம்ம மக்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு சரியா இல்லை என்றது எனக்கு ரொம்பவே வருத்தமான விஷயம். செல்ஃபோன் வளர்ச்சியையும் வசதிகளையும் பார்த்தால் இதுலே எல்லாம் முன்னேறத் தெரிஞ்ச நம்ம மக்கள் எப்படி அடிப்படை சுகாதார அறிவே இல்லாம இருக்காங்கன்னு நொந்துக்கத்தான் வேணும்.
இங்கிருந்து சுமார் ஒன்னரை மணி நேரப்பயணம். கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்தாச்சு. நீண்ட மதில் சுவர்களைச் சுற்றி கோவில் முகப்புக்கு வந்து உள்ளே நுழைஞ்சால் கொடிமரத்தைத்தாண்டி ஏழெட்டு டீன் ஏஜ் பெண்கள் நடனமாடிக்கிட்டு இருக்காங்க. பாட்டுப்பாடிக்கிட்டே ஒரு இளம்பெண் பக்தியோடு நடந்து அந்தப்பெண்கள் கூட்டத்தில் புகுந்து போறாங்க.
"தாயே மூகாம்பிகா..... இது என்ன உன் விளையாட்டு"!!!!
ஷூட்டிங் நடக்குது. பக்திப்பாடல்களுக்கான படப்பிடிப்பாம்.கோவில் வாசலில் 'செல்ஃபோனுக்குத் தடா'ன்னு அறிவிப்பு இருக்கு. உள்ளே மக்கள் தாராளமா இங்கேயும் அங்கேயுமாப் பேசிக்கிட்டு இருக்காங்க!
முதலில் பிரகாரங்களைச்சுற்றி வந்து அங்கே இருக்கும் சந்நிதிகளில் சேவிச்சுட்டு அப்புறமா மூலவரைப் பார்த்து சேவிப்பதுதான் மரபுன்னு நினைக்கிறேன். ஆனா .... அது என்னவோ முதலில் மூலவரை நோக்கி ஓடுவதே எனக்குப் பழக்கமாகிப் போயிருச்சு. சரியான இடும்பி:(
"ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த லிங்க ரூபிணியே "மூகாம்பிகையே
பத்மாசனம் போட்டு உக்கார்ந்து அருள் பாலிக்கும் அம்பாள் (காலடியில்) காலுக்கு முன்னே சிவன் லிங்க ரூபத்தில். அதில் ஒரு தங்கரேகை ஓடுதாம். அபிஷேக சமயத்தில் தெளிவாகத் தெரியுமாம். ஆனா ஆறுமணிவரை காத்துருக்கணும். சதுரமான பீடத்தின் நடுவில் பளபளன்னு செம்பு மூடி போட்டு வச்சுருக்காங்க.
மீதி அடுத்த இடுகையில்......................
Showing posts with label kollur. Show all posts
Showing posts with label kollur. Show all posts
Tuesday, April 27, 2010
ருத்ரபூமியில் கோபத்துக்குப் பஞ்சமேது?
Posted by
துளசி கோபால்
at
4/27/2010 10:48:00 PM
25
comments
Labels: kollur, அனுபவம், அனுபவம் gokarna
Subscribe to:
Posts (Atom)