Friday, February 10, 2023

அஞ்சு கோயிலு... நாநூறு ரூபாய்..... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 12

நேத்துக்காலையில் ரொம்ப தூரத்துலே இருந்த மணல்திட்டு ராத்திரி  நகர்ந்து கொஞ்சம் நமக்கு எதிரில் வந்துருக்குன்றதைப் பொழுது விடிஞ்சதும் கண்டுபிடிச்சேன் ! காலையில் எழுந்திரிக்கும்போது மணி 6 .10.  அடடா.....  உதயம் போயிருக்குமே.......  பால்கனிக்குப் பாய்ஞ்சால்,  போய்த்தான் இருக்கு.
( இல்லைன்னா  மட்டும் ? பனிமூட்டமாத்தானே எப்பவும் !   தினமும் காத்திருந்து வானத்துலே கண் நட்டுக்கிட்டே உக்கார்ந்ந்திருந்தாலும்... சூரியன் கண்ணுக்குத் தெரிவது ஒரு முழம் உயரம்  மேலே ஏறுனபிறகுதான் இல்லையோ ? இந்த விஷயத்துலே கங்கையும் கன்யாகுமரியும் ஒன்னு ! ) 

படகுலே மக்கள் பவனி வந்துக்கிட்டு இருக்காங்க. நமக்கு எப்போ ? தெரியலையே....

தீபாவளிக்காக சீதாவை அலங்கரிக்கறாங்க.... சரவிளக்கு நம்ம பால்கனி வழியாக் கீழே போகுது ! 
காலைக்கடமைகளை முடிச்சுக் கொஞ்சம் நிதானமாகவே ப்ரேக்ஃபாஸ்டுக்குப் போனோம்.  மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்தால்  மசமச...     திட்டு நகர்ந்திருப்பது நல்லாவேத் தெரியுது... வழக்கமான  டோஸ்ட் & டீ ஆச்சு. 
எனக்குக் கிலி பிடிக்க ஆரம்பிச்சது.  வெளியே கிளம்பிப்போகணும்....  அந்தப் படிகள்....   ப்ச்...  இறங்கும்போது அவ்வளவாப் பிரச்சனை இல்லை.  ஏறிப்போவதுதான்..............  ஐயோ........  

படிமாடச் சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டே  மேலே போனேன்.  சந்துலே  நேரா மெயின் ரோடை நோக்கிப்போறோம். செங்கல்லே வழி!. கட்டக்கடைசியில்  தெருவில் இறங்கும் இடத்தில் ஆட்டோ ஒன்னு நிக்குது. 


கிடைச்சால் கொள்ளாம் என்று விசாரிச்சால் கிடைச்சது.  அஞ்சு கோவில் கூட்டிப்போவாராம் நானூறு ரூ தரணுமாம். எட்டுடாலர் ஓக்கேன்னு மனம் கணக்குப் போட்டுச்சு. நல்ல பெரிய ஆட்டோதான். ஆறுபேர் அலுங்காமல்  எதிரும் புதிருமா உக்கார்ந்து போகலாம். எலக்ட்ரிக் வண்டியாம் ! அடிச்சக்கை ! ஸ்ரீலங்காவில் பார்த்தபின் இப்பதான் எலெக்ட்ரிக் ஆட்டோ வை காசியில் பார்க்கிறோம் !
கிளம்புன நாலே நிமிட்டில் முதல் கோவில் !  ஸ்ரீ மணி மந்திர் !  

மேலே 2 படங்கள்:  கூகுளார் அருளியது ! நன்றி 

பெரிய கட்டடமா இருக்கு!  1940லே ஆரம்பிச்ச கோவிலை அப்பப்ப விஸ்தரிச்சு இப்படி ஆக்கிவச்சுருக்காங்க.   இது Dharam Samrat Swami Karpatri Maharaj   என்னும் குரு கட்டுன ஆஸ்ரமக் கோவில்.   உள்ளே ராமர் & கோ சிலைகளை வச்சுப் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்துருக்காங்க.  அதுக்கப்பிறகு  கொஞ்சம் கொஞ்சமா விரிவாக்கம் நடந்துருக்கு.  சமீபத்தில் ரெண்டு வருஷத்துக்கு முன்னால்  43 ஆயிரம் சதுர அடியில் பெரிய ஹால் நிர்மாணம். அதுலே 151 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க.  எல்லாமே கருப்புப் பளிங்கு லிங்கங்களும், வெள்ளைப்பளிங்கு ஆவுடையார்களுமா இருக்கு.  கொஞ்சம் பெரிய லிங்கங்கள்தான். இப்பவும் மூலவர் ராமர்தான் என்றாலும்  காசி என்பதால் சிவனையும் சேர்த்துட்டாங்க. கூடவே  இன்னும் சில கடவுளர்களையும் !  

(பார்க்கறதுக்கு பாணலிங்கம் போல் இருந்தாலும் இவை கருப்புப் பளிங்குன்னே நினைக்கிறேன். கோவில் விரிவாக்கப் படங்களில்  லிங்கங்களைப் பாலீஷ் செய்யும் கருவிகளோடு சிலர் வேலைசெய்வதைப் பார்த்தேன்.
நன்றி கூகுள் !

ஒருவேளை பளிங்கு ஆவுடையார்களைப் பாலீஷ் செய்யறாங்களோ ?  நம்ம ஸ்ரீலங்காப் பயணத்தில் காயத்ரி ஆஸ்ரமத்தில்  நர்மதை நதியில் கிடைச்ச நூத்தியெட்டு பாணலிங்கங்களை தரிசித்த நினைவு வந்தது ! )

வளாகத்துக்குள்ளே நுழைஞ்சவுடன்,  தோட்டத்தின் இடதுபக்கம் ஸ்வாமிஜியின் பளிங்குச்சிலை ஒரு மண்டபத்தில்.  கம்பி கேட்டுக்கு நேரா  இருக்கும் கோவில் கட்டடத்தின் முன்பக்கம் நம்ம யானைகள் !  போதாதா எனக்கு ! 
சின்ன மண்டபத்தில் நந்தி இருக்கார் !
ஹாலுக்குள்ளே நுழைஞ்சதும்  அதோ ரொம்ப தூரத்துலே தகதகன்னு மின்னும் சந்நிதி. இங்கே நம் முன்னால் தரையில் கீழே சின்ன  சதுரமான இடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் !  பெரிய மேடையில் தனியாக! தாராபிஷேகம் நடந்துக்கிட்டே இருக்கு! மூணு படிகள் இறங்கிப்போகணும். ஒரு பக்கம் பெரிய ட்ரம் ஒன்னு. அதில் தண்ணீர் நிரப்பி வச்சுருக்காங்க. பக்கத்தில் ஒரு தட்டில் நிறையச் சொம்புகள் . நாமே தண்ணீரை மொண்டு அபிஷேகம் செய்யலாம். 

https://www.facebook.com/1309695969/videos/1965361956993422/

முதலில் மூலவரை நோக்கிப்போய் கும்பிட்டோம்.  அங்கிருந்த பண்டிட் தீர்த்தம் கொடுத்தார்.  இந்தாண்டை இவுங்க  யூ ட்யூப் சேனலில்  ஒளிபரப்பும் உபந்நியாஸங்கள் செஞ்சுக்கும் அமைப்பு. 
ஹாலின் மேற்கூரையில் பெருசா ஒரு அரைக்கோளம், தங்கமா  ஜ்வலிக்குது !
கண்ணைச் சுழற்றித் தலையைத் திருப்பினால் எங்கே பார்த்தாலும் சிவலிங்கங்களே!


ஒரு இடத்தில் பனிரெண்டு ஜ்யோதிர் லிங்கங்கள். எல்லாமே ஸ்படிக லிங்கங்கள்!
பரசுராமர்,  சிவன் குடும்பம்,  லக்ஷ்மிநாராயணர், ஹனுமன்,  அர்தநாரீஸ்வரர், அன்னபூரணின்னு பளிங்குச்சிலைகள்.  பிக்ஷாம் தேஹின்னு 'கபால'பாத்திரத்தை ஏந்தி நிக்கறார் சிவன் ! கையில் நீ.... ளக் கரண்டியோடு அம்மா ! (  பார்வதி.... இதைக் கபாலமா நினைச்சுக்கோம்மா ப்ளீஸ்)



பளீரிடும் சுத்தம், இது தனியார் கோவில் என்பதைத் தம்பட்டமடிச்சுச் சொல்லுது !







படம் எடுக்கத்தடை ஒன்றும் இல்லை என்பது இன்னும் விசேஷம் ! இவ்ளோ சுதந்திரம் கொடுத்தும்கூட நான் வெறும் 53 படங்கள்தான் எடுத்திருக்கேன்னு இப்ப இந்தப் பதிவு எழுதும்போதுதான் கவனிச்சேன். ஃப்ரீடம் கம்ஸ் வித் டிஸிப்ளீன்  &  ரெஸ்பான்ஸிபிலிடி இல்லே !!!!

பொதுவா எல்லா ஆஸ்ரமங்கள் போலவே இவுங்களும் கோமாதா பராமரிப்பு, பள்ளிக்கூடங்கள்,  வேதபாடசாலை, அன்னதானம்னு நடத்தறாங்க. 

ச்சும்மாச் சொல்லக்கூடாது........ நம்மைப்போல் ஓடாமல்,  நின்னு நிதானிச்சுப் பார்த்தால் ஒரு ரெண்டு மணிநேரம்  ஆக சான்ஸ் இருக்கு. 

ஆனால் நாம் ? காமணியில் பறந்து பறந்து பார்த்திருகோம் !
இதோ வெளியே வந்து அடுத்த கோவிலை நோக்கி...........

PINகுறிப்பு : கோவில்  முழுக்க மருந்துக்கு ஒரு இங்லிஷ் எழுத்து இல்லை !!!!

தொடரும்........... :-)

8 comments:

said...

அருமை நன்றி

said...

ஹாலின் மேற்கூரையில் பெருசா ஒரு அரைக்கோளம், தங்கமா ஜ்வலிக்குது !..ஆமா மா ரொம்ப அழகாக இருக்கு

பளிச்சுன்னு சுத்தமான கோவில் ..

said...

லிங்க அபிஷேகம் பக்தர்களை. செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

படங்கள் அனைத்தும் அருமை. தூய்மை தெரிகிறது.

கபாலம் ஏந்தும் சிவன், பார்வதி, ஆஞ்சி அலங்காரங்கள். கண்ணை கவர்கின்றன.

said...

திட்டு நகர்ந்து வருதா?  என்ன பயமுறுத்தல்!  

லிங்கங்களை இபப்டி பாலிஷ் செய்தால் அதன் அளவு சுருங்கிகிட்டே வராதோ...

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுப்ரேம்,

நானும் அந்த அழகை மனசில் நிறுத்திக்கிட்டேன் !

said...

வாங்க மாதேவி,

கண்களுக்குக் குறுக்கீடு இல்லாமல் ரொம்பவே விஸ்தாரமான இடத்தில் அத்தனை சிவலிங்கங்களையும் பார்த்து வியந்து நின்றேன்ப்பா !

said...

வாங்க ஸ்ரீராம்,

தினமும் திட்டு பார்ப்பதே ஒரு வேலையாகப்போச்சு. நகர்ந்து வருவதுபோல்தான் தெரிகிறது.


பாலீஷ் ? ஒருவேளை வெண்பளிங்கு ஆவுடையார்களைப் பாலீஷ் செய்யறாங்க போல ! அந்த தூசு லிங்கங்கள் மேல் பரவி இருக்கலாம். இப்போ எல்லாமே பளிச் !