Friday, February 17, 2023

கஷ்டமே இல்லாத ஜன்மம் உண்டோ ? கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 15

காசியில்  ரொம்ப முக்கியமான கோவிலில் ஒன்னு இந்த சங்கடமோச்சன ஹனுமான் மந்திர் ! சிரஞ்சீவி ஆஞ்சி எங்கே ராமநாமம் கேட்டாலும்  உடனே அங்கே போய் உக்கார்ந்துக்குவாராம் !     
அப்படிப்பட்டவர், ராமனின் சரித்திரத்தை எழுதிக்கிட்டு இருந்தவராண்டை போயிருக்கமாட்டாரா என்ன ?   மஹான் துல்ஸிதாஸ், ஒரு இடத்தில் உக்கார்ந்து ராம்சரிதமானஸ்  எழுதிக்கிட்டு இருக்கார்.  எழுத்துப் பணியில் இருக்கும்போது, அங்கங்கே சில சொற்கள் சட்னு விழாம மனசுக்குள் நிரடிக்கிட்டு இருக்கும்தானே..... இது ஒரு சங்கடம் இல்லையோ ? யோசிக்கிறார்...  அப்போ அடுத்தாப்லே யார் கண்ணுக்கும் புலப்படாம இருந்த  நம்ம ஆஞ்சி,  துல்ஸிதாஸுக்கு நேரில் காட்சி கொடுத்து, அவர் சங்கடத்தைத் தீர்த்துருக்கார்.  மஹானின் வேண்டுகோளாக இருக்கணும், அங்கேயே சிலையாக  நின்னுட்டார்.
சிலைன்னதும், நம்ம பக்கங்களில் இருக்கும்  அழகான உருவமெல்லாம்  இல்லை.  வடக்கே போகப்போக  ஆஞ்சிக்கோவில்களில் எல்லாம் இருக்கும் சிலை, ஒரு பாறை வடிவமாத்தான் இருக்கும்.  அதுக்கு செந்தூர வண்ணம் பூசி கண் எழுதியிருப்பாங்க. ரொம்ப வருமானம் வரும் கோவிலாக இருந்தாலோ, இல்லை அரசர்களோ,  பெரும் செல்வந்தர்களோ  ஆஞ்சி அபிமானிகளாக இருந்தாலோ தங்கமுகம் செஞ்சு அலங்கரிப்பதும் உண்டு ! 

நேரில் காட்சி கொடுத்த ஆஞ்சிக்கு, ஒரு கோவிலை எழுப்பிட்டார்  மஹான் துல்ஸிதாஸ். (இவருடைய காலம் பதினாறாம் நூற்றாண்டு 1532 - 1623 )
ஒரிஜினல் ராமாயணத்தை   மகரிஷி  வால்மீகி, சமஸ்கிருத மொழியில் சொல்லச் சொல்ல நம்ம புள்ளையார், அதை எழுதினார்னு  சொல்றாங்க.  நம்ம துல்ஸிதாஸ், அந்த ராமகதையை மீண்டும் எழுதியபோது  அவத் மொழியில் எழுதியிருக்கார்.  அவர் ஏகப்பட்ட  கவிதைகள் / ஸ்லோகங்கங்கள்   ராமனையும், ஹனுமனையும் பற்றி எழுதி இருந்தாலும்  ரொம்பவே பரவலா அறியப்படுவது  ஹனுமான் சாலீஸா என்று நினைக்கிறேன். 

 நம்ம பாடகர் ஹரிஹரன் பாடிய  ஹனுமன்ச்சாலீஸா, கேட்கவே இனிமை!  ஹாங்காங்கில் இருக்கும் ஒரு ஆஞ்சநேய பக்த சபையினர்,  இந்த ஸி டியை இலவசமாகவே அனுப்பிக் கொடுத்தார்கள் ஒரு காலத்தில் !  நமக்கும் கிடைச்சது !  

https://youtu.be/Rrh1T9odzkI


வட இந்தியாவில் உத்தரப்ரதேஷ் , பீஹார் சுத்துப்புறத்தில்  இந்த அவத்  மொழி பேசறாங்க போல ! ஹிந்தி மொழியில் இது ஒரு பிரிவுதானாம்.  அவத் என்ற பெயர்கூட அயோத்யா என்ற சொல்லில் இருந்து வந்ததுதானாம்.

நம்ம ஃபிஜி , ஹிந்துஸ்தானி மக்கள் பேசும் ஹிந்தி, பொதுவா நமக்குத் தெரிஞ்ச ஹிந்தி போல இல்லாமல் கொஞ்சம் வேறமாதிரி இருக்கும். நாமோ... ஹிந்தி பேசக் கத்துக்கிட்டது நம்ம பூனா வாழ்க்கையில். அதுவே கொஞ்சம் மராத்தி கலந்த ஹிந்திதான். ஹிந்தி அந்தந்த மாநில மொழியில்  கொஞ்சம் கலந்துருது. அப்புறம் கொஞ்சம் விசாரிச்சப்ப.... ஃபிஜி இந்தியர் பேசுவது போஜ்புரி ஹிந்தின்னு தெரிஞ்சது.  இப்பப் பார்த்தா... இந்த  அவத் மொழியும், போஜ்புரி மொழியும் ஒன்னுதானாம் !    


 ஃபிஜி மக்கள், துல்ஸிதாஸ் ராமாயணத்தைத்தான்  வாசிக்கிறாங்க.     ராமாயணம் வாசிப்பு என்பது ரொம்ப முக்கியமான  பழக்கம்.  ராமாயண் மண்டலி என்னும் பெயரில்  ஏகப்பட்ட தனிக்குழுக்கள் உண்டு.   ஆன்னா... ஊன்னா... 'எங்க வீட்டுலே ராமாயண் வாசிப்பு, நீங்க கட்டாயம் வரணுமு'ன்னு  சொல்லி அழைப்பாங்க.  எங்க சநாதன் தர்ம சபாவில் கூட  எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் சாயங்காலம் ராமாயண் வாசிப்பு உண்டு.  
  பொதுவா   எல்லா ஹிந்துஸ்தானி  வீடுகளிலும் துல்ஸிதாஸ் ராமாயணப் புத்தகம் உண்டு.  சிகப்புக் கலர்  ஜரிகைத்துணியில் பொதிஞ்சு வச்சுருக்காங்க.   ஃபிஜி மக்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் (நாலு மொழிகளில் எதைப்பேசினாலுமே ) எல்லோரும் மந்த்ராஜிகள் தான்.  உள்ளுர் ஃபிஜி மக்கள் கூட்டத்தில் இருக்கும் ஒரே அஸ்லி மந்த்ராஜி நாம்தான், கேட்டோ :-)

அவுங்க ராமாயண் வாசிச்சு விளக்கும்போது....  கதை, நம்ம கம்பர் விவரிச்சுச்  சொன்னதுபோல் இல்லாமல் கொஞ்சம் வேற மாதிரிதான் இருக்கு.  சிவனும் பார்வதியும்தான் ராம அவதாரத்தைப் பற்றிச் சொல்லிக் கதையை நகர்த்திக்கிட்டுப் போவாங்க.  நானும் ராமாயணத்துலே  ஷிவ்ஜி எங்கே வந்தாருன்னு ஆரம்பகாலங்களில் கொஞ்சம் குழம்பி இருக்கேன்.  அது ஆச்சு நாப்பது வருஷம் !
நம்ம துல்ஸிதாஸ் ஆரம்பிச்சு வச்ச கோவிலை, அவருக்குப்பின் பலரும் புனரமைச்சுக் கொடுத்துருக்காங்க. அங்கிருக்கும்  ஹனுமன், அங்கு வந்து வணங்கிப் பிரார்த்திக்கும்  பக்தர்களின் சங்கடங்களை உடனுக்குடன் தீர்த்து வச்சுக்கிட்டு இருப்பதால் ரொம்பப் பேரும்  புகழும் வாய்ந்தவராக இருக்கார்.  மனுஷ ஜன்மத்தில் கஷ்டமே இல்லாதவர்கள் யாராவது இருக்காங்களா என்ன ?  ஆஞ்சி சந்நிதிக்கு  நேரெதிரா ராமர் சந்நிதி இருக்கு.  இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி !  ராமருடைய  சங்கடத்தையும் ( சீதையைக் காணோம் ! ) தீர்த்துவச்சவரில்லையோ நம்ம ஆஞ்சி !

சுதந்திரப்போராட்ட வீரர் பண்டிட் மதன் மோஹன் மால்வியா 1900 ஆண்டு, இந்தக் கோவிலைப் பழுதுபார்த்து விஸ்தரிச்சுருக்கார். 

போனபயணத்தில் நாம்தான் இவரைத் தவறவிட்டுருந்தோம். துர்கையை தரிசனம் செஞ்சவுடன், ஏற்கெனவே ஏற்பாடாகி இருந்த படகுப் பயணத்துக்கு நேரமாயிருச்சுன்னு போயிட்டோம். ப்ச்....

இவ்ளோ புகழ் வாய்ந்த கோவிலில்,  கூட்டம் அம்மி இருந்த  ஒரு நாளில்( மார்ச் 7, 2006 ) ஆரத்தி நடந்துக்கிட்டு இருந்த சமயம்  குண்டு வெடிப்பு நடத்திட்டான், ஒரு சமூகவிரோதி. அதுக்குப்பிறகு, கோவிலில்  நிரந்தரப் போலீஸ்  பாதுகாப்புக்கு ஏற்பாடாகிருச்சு.  அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம், படம் எடுக்கத் தடை வந்ததுக்கு  :-( 

(கூகுளாண்டவர் அருளிய  படங்களைப் பதிவில் சேர்த்துருக்கேன்.நன்றி )
ஆஞ்சியின் பக்தர்களை, சனி துன்புறுத்தக்கூடாதுன்னு அவுங்களுக்குள் ஒரு ஒப்பந்தம்  இருப்பதால்..... சனி பீடிக்க வேண்டிய காலம் வந்தாலும்,  ரொம்பப் படுத்தாம     லைட்டா டச் பண்ணிட்டு போயிடுவாராம் சனி பகவான்.  செவ்வாய் &  சனிக்கிழமைகளில் மற்ற நாட்களைவிட டபுள் மடங்குக்கூட்டம்  வருது இங்கே !  தினமும் காலை அஞ்சு மணிக்குக் கோவில் திறந்துடறாங்க.
நாமும் போய் ஆஞ்சியையும் ராமரையும் கும்பிட்டோம்.  நல்ல கூட்டம் ! தீபாவளி அலங்காரங்கள்  நடந்துக்கிட்டு இருக்கு.  ரொம்பப்பெரிய கோவில் கிடையாது. வாசலுக்கும்  சந்நிதிக்கும் இடையில் உள்ள  மேல்கூரை போட்ட நடைபாதைப் பகுதியின்  ரெண்டு பக்கங்களிலும் சாமந்திப்பூ தோரணங்கள்!
அங்கே வாசலில் இருக்கும் ஏராளமான   பூஜைப்பொருட்கள்  விற்கும் கடைகள் ஒன்றில் ராமர் & ஆஞ்சி இருக்கும் நினைவுப்பொருள்  வாங்கி வந்து, எங்க சநாதன தரம் சபாவின்  ஆஞ்சிக்குக் கொடுத்தாச் !

எங்க ஆஞ்சிக்கு இப்போக் கண்ணாடிக் கவசம் போட்டுருக்காங்க.  கால்பகுதியில் மட்டும் கொஞ்சம் இடைவெளி ! 
தொடரும்........... :-)


9 comments:

said...

பாஸ் எம் எஸ் மற்றும் பி பி ஸ்ரீனிவாஸ் பாடிய ஹனுமான் சாலீஸாதான் கேட்பார்!  நாம் எங்காவது இரவில் தனிமையில் இருக்கும்போது ராமனை நினைக்க, டகாரென்று ஆஞ்சி நம் அருகில் காட்சி அளித்தால்.... !!  

said...

அருமை நன்றி

said...

கேரளத்தில் கர்கிடக மாதம் (ஆடி மாதம்) எல்லா நாட்களும் மாலை விளக்கேற்றியபின் வீட்டில் மூத்தவர் (பெரும்பாலும் முத்தச்சிகள்) ராமாயணம் வாசிக்க மற்றவர்கள் (சிறுவர் சிறுமியர்) அமர்ந்து கேட்பது உண்டு. 

Jayakumar

said...

ராம நாமம் இசைக்கும் இடம் எல்லாம் ஆஞ்சி பிரசன்னம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆஞ்சி அப்படி டகாரென்று வந்தால் நல்லாத்தான் இருக்கும். என்ன ஒன்னு பூரண அலங்காரத்தில் வரணும். 'ஒன்னுமே இல்லாமல்' வந்தால் குச்சியத்தான் தேடவேண்டி இருக்கும் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜயகுமார்,

ஆமாம். தினந்தோறும் துளசித்தரைக்கும் உம்முறத்திலும் விளக்கேத்தி வச்சாலும், கர்க்கிடக மாசம் ஸ்பெஷல்தான் இல்லையோ !
நம்ம உப்பத்துவீட்டில் இது பதிவு. நாமம் ஜெபிச்சு,மீனாக்ஷியம்மெயுட எழுத்தச்சன்டெ ராமாயணம் வாசிப்பு கேட்போம்.

said...

வாங்க மாதேவி,

இப்பக்கூட ராமனைப்பற்றிப்பேசும்போது நம்ம கீபோர்டு பக்கத்தில் ஆஞ்சி வந்து உக்கார்ந்துருக்காரோ என்னமோ !!!!

said...

சங்கடமோச்சன ஹனுமான் மந்திர் !...இப்போ வெங்கட் சார் தளத்திலையும் தரிசனம் ஆச்சு...