Monday, February 27, 2023

சாலாட்சியின் அன்பளிப்பு ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 19

சந்துகளில் நுழைஞ்சு போனப்ப.... சட்னு  நின்னது இன்னொரு முக்கிய கோவில் வாசலில்.  போன பயணத்தில் தரிசிச்ச கோவில்தான். இந்த முறை என் கணக்குப்படி மறுநாள் வரணும். ஆனால் முதல்நாளே இங்கே வந்து நிக்கவச்சுட்டாள் சாலாட்சி !  என்ன ஒன்னு  படம் எடுக்க அனுமதி இல்லை :-( 

வாசலில் நின்ன  சின்னக் கூட்டம் சட்னு உள்ளே போச்சு. கூடவே நாங்களும்.  அலங்கார பூஷிதையா இருக்காள் அம்மன். ரொம்பக் கிட்டக்கவேற இருக்கோம்.  பூக்குவியலுக்கிடையில் முகம் தெரிஞ்சது.   முன்னால் இருந்த  ஸ்ரீசக்கரத்தில் அபிஷேகம் செய்த  குங்குமம்,   நீட்டிய நம்  கையில் கிடைச்சது. நெற்றியில்  வச்சபடி நகர்ந்து போறோம். 
சின்னக்கோவில்தான். உள்ளே வரும் நுழைவு வாசலே.... ஏதோ சாதாரண வீட்டுவாசல் மாதிரிதான். நிலைவாசலுக்குமேல் இருக்கும்  கஜலக்ஷ்மி அலங்காரமும் ரெண்டு பக்கச் சுவர்களிலும் இருக்கும் சிங்கங்களும்தான் இது கோவில் என்கிற அடையாளம் !
நடுவில் இருக்கும் அம்மனைச் சுற்றிவர இடம் விட்டுருக்காங்க.   வலம் வந்து முடிக்குமிடத்தில் இன்னுமொரு வாசல் இருக்கேன்னு அங்கே எட்டிப் பார்த்தேன்.  குறிப்பிட்டுச் சொல்லும்படியா ஒன்னுமில்லை. கொஞ்சம் இருட்டா வேற இருக்கு.  சின்னதா சில சந்நிதிகள் சுவரோரமா....  திரும்ப மூலவரை நோக்கி வந்தால் ஒரு மூலையில்  சின்னக்குன்று போல புடவைக்குவியல் !  சில பெண்கள், புடவைகளைக் கையில் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.

 நானும் கீழே குனிஞ்சு  மேலாக இருந்த ஒரு புடவையை எடுத்துப் பார்த்தேன். புடவைக் குவியலுக்கந்தாண்டை நின்னுக்கிட்டு இருந்த ஒருவர்,  கைநீட்டி அதை வாங்கியவர், பக்கத்துலே உக்கார்ந்திருந்த ஒருவரிடம் கொடுத்தார்.   அடுத்த விநாடி, ஒரு பை என் கைக்கு வந்துருச்சு.  திகைச்சு நின்னவளிடம்    மூணுன்னு கை காட்டினார்.  அந்தாண்டை நின்னு மூலவரைப் பார்த்துக்கிட்டு இருந்த  நம்மவர், என்னைத் திரும்பிப் பார்த்தாரா... நானும் மூணுன்னு  கைகாட்டினேன்.  ஐநூறு என் கைக்கு வந்தது.  நான் இப்பக் காசோடு  கைநீட்டறேன்.  அதை வாங்கின கை இருநூறை என் கையில் வச்சது.  இதை எழுத  ஆன நேரம்கூட ஆகலை..... அப்போ! எல்லாம் ஒரு அரை நிமிட் சமாச்சாரம் ! 
இந்தக் கோவில் முழுக்கமுழுக்க  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பராமரிப்பில்தான் ஆரம்பம் முதல் !

இதைக் கட்டுன வருஷம்தான்  சரியாகத்தெரியலை.  விவரம் தேடும்போது விக்கிப்பீடியாகூட  கணக்குத்தப்பிருச்சோன்னு தோணுது. பிலவ ஆண்டுன்னு சொல்றாங்க. கோவில் சுவரில் பிலவங்க ஆண்டுன்னு இருக்கு. பிலவக்கும் பிலவங்கத்துக்குமே 6 ஆண்டு இடைவெளி இருக்கே... 

காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது.[4] இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள்(கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது[4]. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.[4]
 
நானும் போன பயணத்தில் எழுதிய பதிவில்  1847 இல் கட்டுனதா இருக்கணும் என்று குறிப்பிட்டுள்ளேன். அதுவும் கூட தவறுதான்.  இப்பத்திய  என் ஆராய்ச்சியின் படி  இந்தக் கோவில் 1835 இல் (மன்மத வருசம் ) கட்டியிருப்பாங்க.  குடமுழுக்கு 12 வருசங்களுக்கொருமுறை என்பதால் பிலவங்க வருசம் திருப்பணி செஞ்சு கும்பாபிஷேகம் நடத்தியிருக்காங்க.  
மேலே படம்: போனபயணத்தில் கோவில் சுவரில் பார்த்து க்ளிக்கியது.

நாட்கோட்டை சத்திரக் கோவிலில் கூட  ஸ்தாபிதம் 1813, அன்னதான மடம் கிரஹப்ரவேசம்  1863 ன்னு தானே  எழுதிவச்சுருக்காங்க.

இந்த காசி விசாலாக்ஷி கோவில் சக்திபீடக் கோவில்களில் ஒன்னு. இங்கேதான்  காதுக்கம்மல்  விழுந்ததுன்னு சொன்னாலும்.... இதிலும் சில குழப்பங்கள் எனக்கிருக்கு.  மணிகர்ணிகா காட் இருக்கு பாருங்க.....  அங்கேதான்  சதியின் கர்ணகுண்டலம் விழுந்ததாகச் சொல்லி அந்த இடத்துக்கான பெயர்க்காரணம் சொல்றாங்க. 

இன்னொரு வகையில்   காசி விஸ்வநாதர் கோவிலில் இருக்கும் ஞானவாபியில்  கம்மல் விழுந்ததால், விஸ்வநாதர் அதை எடுக்க அதுக்குள்ளே போனார் என்று..............  அந்நியர்களிடமிருந்து காசி விஸ்வநாதர் ஜ்யோதிர்லிங்கத்தைக்  காப்பாற்றுவதற்காக,  அப்போ பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த பண்டிட்,  விஸ்வநாதரைக் கையில் தூக்கிக்கிட்டு அந்தக் கிணற்றில் குதிச்சுட்டார்னும் ஒரு கதை போய்க்கிட்டு இருக்கு. 

இப்பவும் விஸ்வநாதர் அதுக்குள்ளேதான் இருக்காருன்னு ஒரு சாரார் சாதிக்கிறாங்க.  ஸ்கேன் செஞ்சு பார்த்ததாகக்கூட ஒரு சேதி வந்தது.  ஆனால் ...   ஸ்கேன் ரிஸல்ட் வெளியிடவே  இல்லை.  காரணம்....  இந்தக்கிணறு, மசூதிப்பகுதிக்குள் இருப்பதால்.  பழைய கோவிலின் தூண்கள் மேலேதான் மசூதி கட்டி இருக்காங்கன்றது ஏற்கெனவே தெரிஞ்ச சமாச்சாரம்தான். சுப்ரீம் கோர்ட் வசம் தகவல்கள் இருப்பதால்   நமக்குத் தெரிஞ்சுக்க வாய்ப்பும் இல்லை, வாயையும் தொறக்கப்டாது. என்னவோ போங்க....

உண்மை  என்ன என்பது அந்த 'விஸ்வநாதருக்குத்தான் ' வெளிச்சம் !  

சரித்திர டீச்சர் என்பதால் வருஷம் சரிவரப்பொருந்தலைன்னா அதுவே எனக்கு மண்டையிடி!

போன பயணத்தில் 17/4/2013 இல்  கும்பாபிஷேகம்  நடத்தினதா நவீனக் கல்வெட்டில் இருந்தது. அதன்பின்  எட்டுமாசம் கழிச்சு நாம்  (ஜனவரி 2014) முதல்முறையாக காசி வந்திருந்தோம்.

இந்தக்குழப்பம் எல்லாம் இப்போ  இந்தப் பதிவு எழுதும்போதுதான்....
சம்பவம் நடந்தப்போ... ?   

 தரிசனமும் தந்து தீபாவளிப்பரிசும் கொடுத்த விசாலாக்ஷியின் கருணையை நினைச்சுக்கிட்டே  வெளியே சந்துக்குள் கால் வச்சேன்.  26 அக்டோபர் மாசம் காலை 5 முதல் இரவு 11.30 வரை  வருடாந்திர அன்னக்கூட் மஹோத்ஸவம் , லட்டு அலங்காரம் நடக்கப்போகுதுன்னு பேனர் கட்டிவச்சுருக்காங்க. இதுதான் எல்லோரும் சொல்லும் லட்டுத்தேரோ ?  இங்கே விசாலாக்ஷி கோவிலிலா இல்லை அன்னபூரணி கோவிலிலான்னு  தெரியலையே.... விசாரிக்கணும்.

சந்துகளில் நுழைஞ்சு நடந்து நடந்து  தஸ் அஸ்வமேத காட் ரோடுக்கு வந்தாச்சு.    கண்ணெதிரில்  கோபால் மகன்கள்  கடை வச்சுருக்காங்க.   ஏற்கெனவே துல்ஸி புடவைக்கடை ஒன்னு பார்த்தேன். இப்ப இவர் மகன்கள்  வேறயா ? ஆமாம்.... இவருக்குத்தான் மகனே கிடையாதே.... அப்ப எப்படி கள்?   நாளைக்கு முடிஞ்சால் எட்டிப்பார்க்கணும். அதான் இடம் தெரிஞ்சுபோச்சே....
பேங்க் ஆஃப் பரோடாவையொட்டி இருக்கும் சந்துக்குள் நுழைஞ்சாச்சு.  நேரா  ஹொட்டேல் சீதா தான்.  போகும் வழியிலே ஒரு  சின்ன கதவாண்டை, திண்ணையில் கொஞ்சம் பட்டாஸ் கடை போட்டுருக்காங்க ஒரு பாட்டி.  நாளைக்கு தீபாவளி!  நாமும் கொஞ்சம் பட்டாஸ் வாங்கினால் ஆகாதா ? ச்சும்மா பெயருக்கு ஒன்னு.....  கம்பி மத்தாப்பு பச்சைக்கலர் ஒன்னு போதும். பக்கத்துலே பாம்பு  முட்டை இருந்துச்சா... ஆசையோடு  அதுலே ஒன்னு .
மணி எட்டுதான் ஆச்சுன்னாலும்  நடந்த நடையில்  வேறெங்கேயும் ராச்சாப்பாட்டுக்குப் போகத் தோணலை.  வழியில் இருந்த கடையில்  ப்ரெட், ஜாம்,  ஃபேன்ட்டா வாங்கிக்கிட்டோம்.  எனக்கு கோக் பிடிக்காது.   இந்த ஃபேன்ட்டாக்குப் பின்னால் ஒரு சின்னக்கதை இருக்கு. அப்புறம் ஒருநாள் பார்க்கலாம்  !  குரங்கு குடிக்கும் ஃபேன்ட்டான்னு  ஞாபகம் வச்சுக்குங்க :-)

சீதாவுக்கு  வந்ததும், வரவேற்பில் இருந்த மேனேஜர் பாண்டே.... 'நாளைக்குக் காலையில் படகுக்குச் சொல்லிறவா' ன்னார்.  'சொல்லிருங்க'ன்னோம். 'நாலரைக்குக் கீழே வந்துருங்க' ன்னார். 'ஒரு  மார்னிங் அலார்ம் கால் பண்ணுங்க' ன்னால்....  அதெல்லாம்  இல்லையாம் !  நம்ம செல்லில் வச்சுக்கலாமுன்னார் நம்மவர். 

அறைக்கதவைத் திறந்தால் வெளிச்சமா இருக்கேன்னு பார்த்தால் பால்கனி கண்ணாடிக்கதவு பளிச்ன்னு இருக்கு. தீபாவளிக்காக சீதாவை அலங்கரிச்சுருக்காங்க.

விசாலாக்ஷி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால்  ஒரு புடவை, அதுக்கான ப்ளவுஸ் பிட், நாலு வளையல்கள், ஒரு சின்னப்பொட்டலம் குங்குமம், ஒரு  விசாலாக்ஷி படம் இருந்தது. தீபாவளிக்கு அம்மனே புடவை கொடுத்துட்டாளேன்னு மனசு சந்தோஷப்பட்டது.  
நாம் கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் விதிக்குப் பொறுக்காதே........

 நாமும் கொஞ்சம் 'பட்டாஸ்' கொளுத்தலாமேன்னு  பால்கனிக்குப் போய் பத்தவச்சேன். பச்சை ஜோரா எரிஞ்சது. ஒரு பக்கம்  பாம்பு முட்டையிலிருந்து பாம்பு வெளியே வருது.  நம்மவருக்கும் ரெண்டு கம்பிமத்தாப்பைக் கொடுத்து பத்தவச்சுக்குங்கன்னால்....  என்னோட எரியும் மத்தாப்புலே பத்த வச்சுக்கறேன்னு என் கைக்கு நேரா மத்தாப்பைக் காமிச்சுருக்கார். பத்திக்கிட்டதும்  என் கை போச்சு..... .   எரிச்சல் தாங்க முடியாமல்  இடும்பிக்கு வந்ததே கோபம்....  பட்டாசும் வேணாம் ஒன்னும் வேணாமுன்னு எல்லாத்தையும்  பால்கனி வழியாகத் தூக்கிப்போட்டாள் !  பாத்ரூமுக்குள் போய் பச்சைத்தண்ணீரில் ஒரு அரைமணி நேரம் கையைக் காமிச்சுக்கிட்டு நின்னதும்தான் எரிச்சல் மட்டுப்பட்டது.  நல்ல வேளை.... உடனே சிகிச்சை செய்ததால் கொப்புளம் வரலை. ஆனால்  எரிச்சல்  முழுசும்  அடங்கலை...  பாவம் இடும்பி.....

 
ரெண்டு ஸ்லைஸ் ப்ரெட்டை முழுங்கிட்டு, கைநிறைய  மாய்ஸரைஸர் பூசிக்கிட்டுப் படுத்தாள் இடும்பி. காலையில் நாலரைக்குன்னா.... ஒரு நாலு மணிக்காச்சும் எழுந்தால் தான்  நல்லது. 

பொழுது விடிஞ்சால் தீபாவளி !  குட் நைட்!


7 comments:

said...

// பாவம் இடும்பி // பாவம் கோபால் சார்

said...

அடடா.... சாறி கிடைத்த சந்தோஷம் அடங்குமுன் மத்தாப்பையும் மகிழ்ச்சியாக கொழுத்தவிடாது வந்த கேடு ......

said...

பார்த்த உடனே பிடிக்கிறதா என்று கூட பார்க்காமல் விலை போட்டு கையில் கொடுத்து விட்டார்களே புடைவையை...!  ஆம்.  விசாலாட்சி கோவில் மிகச் சிறியதாக இருந்தது.  அன்னபூரணிக்கு தனி கோவிலா, அதன் உள்ளேயே இருந்ததா?  அது நினைவில்லை.

said...

வாங்க விஸ்வநாத்,

நம்ம மக்களின் நியாயத் தீர்ப்பே தனி வகைதான். பாதிக்கப்பட்டவருக்கு எதிராகத்தான் எப்பவும் தீர்ப்பு இருக்கும்.

said...

வாங்க மாதேவி,

அப்படித்தான் விதிச்சுருக்கு ...ப்ச்....

said...

வாங்க ஸ்ரீராம்,

கோவிலுக்கும் வருமானம் வேண்டித்தானே இருக்கு ! எப்படிக் கொடுத்தாலும், கொடுத்தது அவள் அல்லவா !

அன்னபூரணிக்கோவில் தனியாக, காசி விஸ்வநாதர் வளாகத்துக்குள்ளேயே இருக்கு. தனிக்கட்டடம். அங்கே தான் மாடியில் தங்க அன்னபூரணி !

said...

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி கோவில்கள் பார்த்துவிட்டு காசி விசாலாட்சி கோவிலை பார்க்கும் பொழுது என்னடா இது ன்னு தோணுச்சு...ஆனாலும் நாங்கள் போன நேரம் கும்பல் இல்லாம பொறுமையா பார்க்கவும் மனசில் ஒரு திருப்தி வந்தது மா ..