Monday, July 15, 2019

போகுமிடம் வெகுதூரமில்லை நீ வாராய்........... (பயணத்தொடர், பகுதி 117 )

இங்கே நியூஸியில்  நம்மைக் 'கவர்ந்து இழுக்க'ன்னு  வருசத்துக்கு நாலுமுறை ட்ராவல் எக்ஸ்போன்னு  நடத்தறாங்க. ட்ராவல் கம்பெனிகள் எல்லாம் அதுலே ஸ்டால் போட்டுக்கிட்டு, ஸ்பெஷல் டிஸ்கவுன்ட்ன்னு  பலசமயம் அடிவிலைக்கு டிக்கெட் தரும். நாமும் சில முறை இதைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம்.  என்ன ஒன்னு.... அன்றே அப்பொழுதேன்னு டிக்கெட் வாங்கிடணும்.  இவர் வேலை செய்யும் காலத்தில் எல்லாம்  டிக்கெட் வாங்கினா, இவருக்கு அந்த சமயம் லீவு கிடைக்குமா, முதல்லே ஆள் ஊர்லேதான் இருப்பாரான்னு பல யோசனைகள் வரும். இப்போ வேலையில் இருந்து (ஐ மீன் ஆஃபீஸ் போகும் வேலை) ரிட்டயர் ஆகிட்டதால் நம்ம இஷ்டத்துக்குக் கிளம்பலாம். ஒரே ஒரு சிக்கல் என்னன்னா... நம்ம ரஜ்ஜுவுக்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கணும். அங்கேயும் இடம் இருக்குன்னதும் அப்படியே கொண்டு போய் விடமுடியாது.  தடுப்பூசிகள் எல்லாம் போட்டுருக்கான்னு செக் பண்ணுவாங்க. அதுவும் அந்த ஊசி போட்டுக் குறைஞ்சது ஒருமாசம் ஆகி இருக்கணும். இப்படி  சிலபல விதிகள் உண்டு.
இந்த எக்ஸ்போ தவிர  ட்ராவல் கம்பெனிகள்  அங்கங்கே ஷாப்பிங் சென்ட்டர், மால் எல்லாம்  கடை (ஆஃபீஸ்) வச்சுருக்காங்க. எல்லா ஊர்களுக்கும் தனித்தனி ப்ரோஷர், புத்தகம் இப்படிக் குவிஞ்சு கிடக்கும். உள்ளே படங்கள் எல்லாம் அட்டகாசமாப் போட்டுருப்பாங்களா.... நமக்கு(ம்) போனால் என்னன்னே தோணும்.

இந்தமுறை இந்தியப்பயணத்துலே நடுவிலே ஒரு வாரம் பத்துநாள் வேறெதாவது நாட்டுக்குப் போய்வரலாமேன்னு எண்ணம் வந்ததும்,  எகிப்து, ஸ்ரீலங்கா இந்த ரெண்டுலே ஒன்னுன்னு பேசி.....  ஜூன் ஜூலை என்பதால் எகிப்து ரொம்ப சூடாக இருக்குமேன்னு ஸ்ரீலங்கான்னு முடிவாச்சு.  இதுக்கான புத்தகங்களை ட்ராவல் சென்டரில் இருந்து வாரிகிட்டு வந்து பார்த்து அதுலே நமக்கான பயணத்திட்டத்தைப் போட்டார் 'நம்மவர்'  . பொதுவா இந்த ப்ரோஷரில் இருப்பவை எல்லாம் வெள்ளையர்களுக்கு சுவாரஸியமானவைகள்தான்.  அவுங்க  கோவில், குளமுன்னு தேடிக்கிட்டுப் போறாங்களா என்ன?  பீச் ஹாலிடேன்னுதான் பெரும்பாலும். நமக்கு அதெல்லாம் வேண்டாத சமாச்சாரம்.

முழு இலங்கையும் சுத்த முடியாது. எட்டுநாளில் என்ன கிடைக்குதோ அது. ஆனால் அதுலே யானையும் சீதையும் இருக்கணும் என்றதுதான் என் ஒரே நிபந்தனை.

இந்தத் திட்டத்தின்படிதான் பின்னவல யானைகளைப் பார்த்துட்டு, நுவரா எலியா சீதை கோவில் ஆச்சு. அப்புறம் கண்டி. இன்றைக்குக் கண்டியில் இருந்து கிளம்பி டம்புல்லா போறோம்.  குகை ஒன்னு பார்க்கவே நல்லா இருக்காம். ட்ராவல் புத்தகத்துலே பார்த்து வச்சதுதான்.
நாலந்தா கெடிகே பார்த்துட்டு டம்புல்ல வர முக்கால் மணி நேரம் ஆச்சு.  ஊருக்குள்ளே போகுமுன்  வழியில் இருந்த பழக்கடையில் நாங்க மூணுபேரும் ஆளுக்கொரு இளநி குடிச்சுத் தேங்காயையும் தின்னு முடிச்சோம்.
பௌத்த மதத்துக்குன்னு ஒரு டிவி சேனலும், ரேடியோ நிகழ்ச்சியும் இருக்குன்னு ஒரு விளம்பரம் பார்த்தேன்.


டம்புல்ல கோவிலுக்கான கார்பார்க்கில் வண்டியை விட்டாச்சு. இங்கே  கோவில் போக டிக்கெட் வாங்கிக்கணும். டிக்கெட் ஆஃபீஸே  ஒரு  முப்பது படிகள் ஏறிப்போகும் இடம். இதைப் பார்த்தவுடன் சுதாரிச்சுக்கிட்டு இருந்துருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால்.....


ஆளுக்கு ஆயிரத்தைஞ்ஞூறு. இந்தப்பக்கம் ஏறிப்போங்கன்னு கை காமிச்சார் கவுன்ட்டரில் இருந்தவர்.  பார்த்தால் சாந்தமா ஒரு முப்பது படிகள்.  சரின்னு தலையாட்டிட்டு ஏறிப்போறோம்.
படிகள் முடிஞ்சதும் ஒரு பத்தடிக்கு சமதரை. அதுக்குப்பிறகு இன்னொரு  செட் ஆஃப் படிகள்.  அங்கே இருக்கும்  சமதரை கொஞ்சம் பெருசு. ரெடிமேட் துணிக் கடைகள். பெரும்பாலும்  பேன்ட்ஸ் வகை. யானை ப்ரிண்ட். ஆசையாத்தான் இருக்கு!
கடையை வேடிக்கை பார்க்கும் சாக்கில் ஒரு அஞ்சு நிமிட் ஓய்வு.  ஒரு வயசுக் குழந்தைக்கான டி ஷர்ட் ஒன்னு யானைகளோடு அருமை.  சொந்தக்காரக்குழந்தைக்கு (மகளோட ஓர்ப்படியின் குழந்தை) திரும்பி வரும்போது  வாங்கிக்கணும்.

கிளம்பிப் படிகளாண்டை போனால்.... அதுபாட்டுக்கு மேலே போகுது. எனக்கு திக்னுச்சு.
மெள்ள மெள்ள ஏறிப்போறேன். படிகளின் சாந்தம் சாத்வீகம் எல்லாம் படிப்படியாக் குறைஞ்சு  கோணலும் மாணலுமாப் பல்லைக் காமிக்குது.  எதிரில் இறங்கி வந்தவங்ககிட்டே இன்னும் எவ்ளோ தூரமுன்னு கேட்டால்..... இப்பத்தானே ஏறி வர்றீங்க.... இன்னும்  முக்கால்வாசி போகணுமுன்னு சொல்றாங்க. ஐயோ.....


படிகளின் ரெண்டுபக்கமும் பாதுகாப்புத் தடுப்புச் சுவர் எல்லாம் காணோம்.... ஒரு பக்கம் மட்டும் ஒப்புக்கு ஒன்னு.  நம்ம ஆஞ்சீஸ் இங்கேயும் அங்கேயுமா பறந்து பறந்து தாவிப்போய்  சர்க்கஸ்லே பார் விளையாட்டு போல  வேடிக்கை காமிச்சுக்கிட்டு இருக்காங்க.




இதுலே நம்ம ஆஸ்த்மா வேலையைக் காமிக்குது.  நம்மவரின்  பேக் பேக்கில் என் ஹேண்ட் பேக். அதுக்குள்ளே இன்ஹேலர்.  ( ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டி  குகையில் கூண்டில் இருக்கும் கிளியில்தான்  ராக்ஷஸன்  உயிர் இருக்கு ) 
ரெண்டுஇழுப்பு இழுத்துக்கிட்டு மெல்ல படிகள் ஏறலாம்....
கீழே பாதாளத்தில் சுத்திவரக் காடு.....

ஒரு ஆஞ்சிச்செல்லம், 'வா... பயப்படாம.... நான் கூட்டிப்போறேன்'னு வழி காமிச்சது. இதெல்லாம் நல்ல குணம் கொண்ட வகை. பாலிப் பயணத்தில் பார்த்தவை எல்லாம் ரௌடீஸ் !
ரணகளத்திலும் கிளுகிளுப்பு வேணுமா....  தேனை நக்கினால் போதாது?

அரைமணி நேரமாச்சு  மேலே இருக்கும் கட்டடம் கண்ணில் தென்பட!   காலணிகளை  ஒரு இடத்தில் கொடுத்துப் போகணும்.


நுழைவு வாசலுக்குள்  நுழையறோம். அறிவிப்பு போட்டுருக்காங்க. இங்கேயே நல்ல கூட்டம். அந்தாண்டை பத்துப்படிகள் இறங்கணும்.
மலைக்கு மேலே இருக்கோம். ஆனாலும் மலையையொட்டிக் கட்டடங்கள் அப்படியே நீண்டு போகுது.  நமக்கு வலப்பக்கத்தில் மட்டுமே!

ரொம்ப சிம்பிளா இருக்கும் முதல் கட்டடத்துக்குள் நுழைஞ்சால்..........  ஹைய்யோ!!!



கிடக்கிறார்! அரைக்கண் மூடிய நிலையில் அவ்ளோ ஒரு சாந்தமான முகம்! பாதங்களின் உட்புறத்தில் இப்படி ஒரு அழகா !  சுத்திமுத்தும் பார்த்தால் மேற்கூரை முழுசும் சித்திரங்கள்!  வரைஞ்சு தள்ளி இருக்காங்க.

மலையைக் குடைஞ்சு வரைஞ்சதா? இல்லே மலையே குகை அமைப்புலே இருந்ததா?

நெடுநெடுன்னு போகும் குகைகளுக்கு முகப்பில்தான் இந்தக் கட்டடங்கள் கட்டி இருக்காங்க. இதெல்லாம் சமீபத்துலே ஒரு அம்பது அறுபது வருஷங்களுக்கு முன் கட்டுனதாக இருக்கணும்.

தொட்டடுத்த இடத்தில் (கட்டி இருக்கும் கட்டடப்பகுதியில்) ஒரு ஆச்சரியம் எனக்கு!   இத்தைப் பார்றா..... யார் இருக்கான்னு!


மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் புத்தரும் ஒன்னுன்னு  சிலபேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க. தசாவதாரத்தில் கூட புத்தரைச் சேர்த்தாச்சு சில இடங்களில்.....     இதை நிரூபிக்கும் விதமோ என்னவோ..... இங்கே பெருமாளைக்  கொண்டுவந்து வச்சுருக்காங்க.....   எல்லா சாமியும் ஒருவரேன்னுதான் நான் இருப்பேன் என்றாலும்.... இங்கே பெருமாளை வச்சது ஃபோர்மச்சா எனக்குத் தெரியுது....   அந்தக் காலத்துலே கஷ்டப்பட்டு மலையேறி, இங்கே குகைகளில் வசித்தே  சிற்பங்களையும் சித்திரங்களையும் மாய்ஞ்சு மாய்ஞ்சு உண்டாக்கிய புத்தபிக்ஷூக்களின் பணி எவ்ளோ மகத்தானது.... இதை இப்படி  மலினமாக்கலாமோ?  ப்ச்...

கருடன் மேல்  உக்கார்ந்துருக்கும் பெருமாளைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலுமே......

அடுத்தடுத்த அஞ்சு பெரிய குகைகளுக்குள் புகுந்து, வாய் பிளந்து நின்னுட்டு வர்றோம்.  ஒவ்வொன்னும் உள்ளே போனாட்டு ரொம்பவே பெரூசு......     நின்றும் இருந்தும் பெரும்பாலும் கிடந்தும்  ஸேவை சாதிக்கிறார் புத்தர்! அவருக்குத்துணையா இருக்கறதைப்போல  நூத்துக்கணக்கான சின்ன சைஸ் புத்தாஸ் ! 153 ன்னு கணக்கு சொல்றாங்க ! இருக்காது..... நாம் வேணுமுன்னால் ஒரு பத்தால் பெருக்கிக்கலாம்.
ஒரு குகையின்  விதானம் முழுசும் ஒரே ஸ்டைலில் அச்சடிச்சு வச்சதுபோல புத்தரை வரைஞ்சுதள்ளியிருக்காங்க. மொத்தம் 1500 ஆம்!

நின்னால் நின்னபடி, உக்கார்ந்தால் உக்கார்ந்தபடின்னு வரிசை வரிசையா   ஹைய்யோ..... என்னான்னு பார்ப்பேன்!  என்னத்தைன்னு சொல்வேன்!   (எதைச் சொல்ல எதைவிட? இது இங்கே போட்டுக்கலாம். பொருத்தம் அதிகம்)

எல்லாம் ரெண்டாயிரத்து முன்னூறு வருஷங்களுக்கு முன்னே ஆரம்பிச்சது. அப்புறம் சிலநூற்றாண்டுகளுக்குப்பின் அனுராதபுரத்தை  பாரத தேச மன்னர்கள் (சோழர்கள்?) படையெடுத்துப் பிடிச்சுக்கிட்ட பிறகு, அப்பதான் ஒரு அஞ்சு மாசத்துக்கு முன்னே ஆட்சிக்கு வந்துருந்த  அரசர் Valagamba தப்பி ஓடி ஒளிஞ்ச இடம் இந்தக் குகைகள்தானாம்.  அங்கிருந்த புத்தபிக்ஷுக்கள்தான் காப்பாத்தி இருக்காங்க. அப்புறம் அங்கிருந்தபடி படைகள் திரட்டி, திரும்ப தன் நாட்டைக் கைப்பற்ற பதினாலு வருஷம் ஆகி இருக்கு!
அதுக்கப்புறம் நன்றிக் கடனா குகையில் இன்னும் பல புத்தர் சிற்பங்களைச் செஞ்சு வச்சார்னு......

(நான் சொல்லலை.... சரித்திரம் என்பது எதிர்பாராத திடுக் சம்பவங்கள் அடங்கிய சுவையான, சுவாரஸ்யமான சமாச்சாரம் னு!  என்ன ஒன்னு.... சார்பு எடுக்காம நடந்தது நடந்தபடி எழுதப்பட்ட உண்மையான சரித்திரம் உலகில் எங்குமே இல்லை என்பதுதான்!)

க்ளிக்கிக்ளிக்கிக் கை ஓய்ஞ்சுதான் போச்சு.  சரியான லைட்டிங் இல்லை. மேலும் பயங்கரக் கூட்டம். குகைக்குள் வரும் கொஞ்சநஞ்ச வெளிச்சத்தையும்  மறைச்சுக்கிட்டு அடர்த்தியா ஆட்கள். வர்றது வரட்டுமுன்னு எடுத்த படங்கள்தான். கொஞ்சம் லைட்ஸ் போட்டு வச்சுருக்காங்கதான். ஆனால் பளிச்ன்னு இல்லை.  ஒருவேளை  ஓவியங்களுக்கு பாதிப்பு  ஆகுமுன்னு  மெல்லிய வெளிச்சமோ என்னவோ.....  நாங்க எடுத்த படங்கள் நானூத்தி எம்பத்திநாலுதான் :-)

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்  குகைகளுக்குள் போய் பார்த்துட்டு வெளியே வந்தோம். எனக்கு கீழிறங்கிப்போவது கொஞ்சம் சுலபம்தான்.  எண்ணி இருபது நிமிட் ஆச்சு. வர்றவழியில் கலைப்பொருட்கள் வச்சு வித்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர். கடைபோட்ட இடம் சரி இல்லைன்னு தோணுச்சு.

போகும்போது  ஏற்கெனவே  இன்னொரு கடையில் பார்த்து வச்ச யானை  டி ஷர்ட்டைக் குழந்தைக்கு வாங்கிக்கிட்டோம்.

கீழே வளாகத்தில்  காவல்துறை மக்கள்,  நிழலில் ஓய்வா உக்கார்ந்து பேசிக்கிட்டே,    குகைகளைப் பார்வையிட வரும் மக்களைப் பாதுகாத்துக்கிட்டு இருந்தாங்க :-) கூடவே காவலுக்கு ரெண்டு மூணு செல்லங்களும் !

 மொத்தம் 500 படிகளாம். கீழே வந்தபிறகுதான் தெரிஞ்சது!  மொதல்லேயே தெரிஞ்சுருந்தால் போயிருப்பேனா என்ன?
ஆனா  மூச்சு வாங்க ஏறிப்போனது நஷ்டமில்லை!  வாழ்நாளில் இப்படி ஒன்னு பார்க்கக் கிடைக்குமா என்ன?

மணி ரெண்டரை. வாங்க எங்காவது போய் சாப்பிடலாம்.  இன்றையப் பயணம் இன்னும் பாக்கி இருக்கு.

PINகுறிப்பு: டம்புல்ல புத்தர்களைத் தனியா ஒரு  பதிவாகவே போடணும்.  அவ்ளோ இருக்கு ! போட்டுடலாம் !

தொடரும்...... :-)


12 comments:

said...

அழகான இடம். இங்கே ஒரு கிரிக்கெட் ஸ்டேடியும் உண்டு. அப்போது டி.வி.யில் இவ்விடம் பற்றி காண்பித்தது நினைவில்.

குகைக் கோவில் - ஆஹா.... புத்தர் சயனக் கோலத்தில் அழகு.

தொடர்கிறேன்.

said...

அழகான குகைகோயில்.

சிரமத்துடன் ஏறியதற்கு நல்ல காட்சிகள் கிடைத்திருக்கும்.
நாங்களும் சென்று பலவருடங்கள் ஆகிவிட்டது.

said...

சயன புத்தர் - ரொம்ப அழகு ..

குகைக்குள் இருக்கும் நரசிம்மர் கோவில் போல இருக்கு ..

அந்த குகையும் , இடமும் ரொம்ப நல்லா இருக்கு மா ...

நீங்க தான் அசந்து இருக்கீங்க ....

said...

அருமை நன்றி

said...

ஆஹா... நான் பார்க்க வாய்ப்பு குறைந்த இடங்களை செலவில்லாமல் நீங்கள் படங்களுடன் காண்பிக்கிறீர்கள்.

அவ்வளவு படியுமா ஏறினீர்கள்? ஐயோ பாவம்..

புத்தர் படங்கள் பிரம்மாண்டம், அழகு.

said...

அழகான புத்தர் பாதம். உங்க முகத்தில் படியேறினதில் நல்ல அசதி தெரிகிறது டீச்சர். உங்க பயணம் மூலம் சில டிப்ஸ் எடுத்தாயிற்று. இனி லங்காபோனால் இவ்விடம் போகனும் அதற்கு உங்க பதிவு உதவும். இங்கிருக்கும் ஆஞ்சிகள் பரவாயில்லை. அவ்வளவா ஒன்னுமே செய்யாது.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அட! க்ரிக்கெட் ஸ்டேடியம் இருக்கா !!!! ஓ....

said...

வாங்க மாதேவி.

கொஞ்சம் சிரமப்பட்டாலும் அழகை அனுபவிக்க முடிஞ்சதே!

said...

வாங்க அனுபிரேம்,


அசதி..... வயசாகுதே.........

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதுக்குத்தான் கொஞ்சம் சின்ன வயசில் பயணம் போகணும் என்பது !

said...

வாங்க ப்ரியசகி.

நன்றிப்பா !