Thursday, May 19, 2005

ச்சின்னப்பசங்க !!!!!!

படிப்பும் பழக்கமும்!!!! பகுதி 4


காரியமும் ஆகணும், காசும் ரொம்பச் செலவாகக்கூடாது!!!! இதைத்தான்
'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை'ன்னு சொல்றதோ? எல்லாம் இல்லாத குறைதான்!
மத்த செலவெல்லாம் கூடிப்போனதாலே எப்படிடா 'சுஷ்கம்' பண்ணலாமுன்னு யோசனை!


தேவைன்னு வந்துட்டாலே மனுஷ மனசு உபாயங்களைத் தேடுது பார்த்தீங்களா? எங்க இவர்
வேலை செய்யற இடத்துலே மூணு தமிழ்க்காரங்க இருக்காங்க. அவங்களோட 'கலந்தாலோசனை(!)'
செஞ்சுட்டு, தமிழ்ப் புத்தகங்களை வாங்கற செலவை மூணாப் பங்கு போடறதுன்னு முடிவாச்சு!

பழம் நழுவிப் பாலிலே விழுந்தாச்சுன்னு சொல்றமாதிரி, அந்த மூணுலே ஒருத்தர் வீடு, நம்ம 'ராஸ்தாப்பெட்'லே!
அதனாலே அவரே வாங்கிட்டுவர்ற பொறுப்பையும் ஏத்துக்கிட்டார்!!! ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணுன்னு
படிக்கக் கிடைச்சது!!!! இப்படியே ஏறக்குறைய அஞ்சு வருசம் ஓடுச்சு!

பொழுது போக்கா அப்பப்ப வீடு மாறிக்கிட்டு இருந்தோம்:-) ஒரு தடவை எங்க பக்கத்து போர்ஷன்காரர் ஒரு
பிரபல ஹோட்டலே வேலை செய்யறவரா இருந்தார். அங்கெ வந்து தங்கறவங்கெல்லாம் வெளிநாட்டுக்காரங்க!
அவுங்க பிள்ளைங்களுக்காக இங்கிலீஷ்லே காமிக்ஸ் அங்கெ இருக்கற புத்தகக்கடைக்கு வரும். அவர் 'டின் டின்'
காமிக்ஸ் வீட்டுக்குக் கொண்டு வருவார். அந்த ஒசியிலே எனக்கும் ஒரு நாள் முறை! 'பிச்சையெடுக்குதாம் பெருமாளு,
அத்தைப் பிடுங்குதாம் அனுமாரு!!!!!! ஆமாம், அது ஏன் நிறைய வெளிநாட்டுக்காரங்க பூனாவுக்கு வர்றாங்கன்னு சொல்லவா?
அங்கேதானெ 'ரஜ்னீஷ் ஆஷ்ரம்' இருக்கு!!!!!

அப்புறம் நாங்க ஒரு வெளிநாட்டுக்குப் போற வாய்ப்பு வந்தது, போகவும் செஞ்சோம். இந்தியா போலவே
இருக்கற இந்தியா இல்லாத நாடு!!! 'ஃபிஜித் தீவு'ன்னு பேரு!!! அங்கே இருக்கற இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும்
இருக்கற முக்கியத் தொடர்பே சினிமாதான்!!! அதனாலே சினிமாப் பத்திரிக்கைகள் 'ஸ்டார் டஸ்ட்,ஸ்டார் & ஸ்டைல்'
இப்படித்தான் அங்கே கிடைக்கும்.

தபால் மூலமா ஆ.வியையும், குமுதத்தையும் வாங்க ஆரம்பிச்சோம். இது ஒரு பக்கம் இருக்க, பக்கத்து வீட்டுப்
பொண்ணு கையிலே இருந்த புத்தகம் என்னவா இருக்குமுன்னு பார்க்கப் போய் எனக்கு ஒரு புது அனுபவம்
கிடைச்சது!

நான் ச்சின்னப் புள்ளையா இருந்தப்ப, 'குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள் இங்கிலீஷ்'லேயும் இருக்குமுன்ற
விவரம் கூட இல்லை!!!!! இருந்த ஊருங்களும், வளர்ந்த காலக்கட்டங்களும் அப்படி!!!! மெட்ராஸ்லெ வந்து
இருக்கத் தொடங்கியதும் கொஞ்சம் 'விவரம்' வந்து, அண்ணன் கொண்டு வர்ற, 'சேஸ்' புத்தகங்கள் அப்பப்பப்
படிக்கறதுதான்! மத்தபடி ரொம்பப் படிச்சதில்லை! அதிலும் 'காதல் கதைகள்' எல்லாம் கண்ணுலேகூடப்
பார்த்ததில்லை! ரொம்பக் கட்டுப்பாடாத்தான் இருந்திருக்காங்க!(ஆனா என்னோடது காதல் கல்யாணம்!!!!)

இப்பப் பக்கத்து வீட்டுப் பொண்ணு( ஏழாவது படிக்கற பொண்ணுங்க!!!)கூடவே போய் அந்த ஊர் 'டவுன் கவுன்சில் லைப்ரரி'லே
சேர்ந்துக்கிட்டேன். அந்த ஊர்லே மொத்த ஜனமே ஒரு அஞ்சாயிரம் இருந்தா அதிகம்!!!! அதுவும் லைப்ரரியிலே
ஸ்கூல் பசங்க கொஞ்சம்பேர் மாத்திரமே இதுவரைக்கும் மெம்பருங்களாம்! பெரியவுங்க யாருமே மறந்துங்கூட அங்கே போயிர
மாட்டாங்களாம்!!!! அதனாலே அங்கே பேருக்குன்னு ஒரு லைப்ரேரியன் இருந்துக்கிட்டு, அவரே மத்த கவுன்சில்
க்ளார்க் வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தார். எனக்கு அங்கே ஏகப்பட்ட வரவேற்பு!!!!

பெருசா செலக்ஷன் ஒண்ணும் இல்லை, ஆனாலும் பரவாயில்லாம இருந்துச்சு! 'மில்ஸ் & பூன்ஸ்' கதைகள் எக்கச்
சக்கம். ச்சும்மா ஒண்ணு ரெண்டு எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். சரிப்பட்டு வரலை! அதென்னமோ 'காதல் கதைகள்,
ஒருதருக்காக ஒருத்தர் உருகறது இத்யாதிகள் எல்லாம் சுவாரசியமாப் படலை. ஆனா, பசங்க புத்தகங்கள் ரொம்பவே
பிடிச்சுப் போச்சு! 'எனிட் ப்ளைடன்' கதைகளைத் தேடித்தேடிப் படிச்சேன்!!!! ஃபேமஸ் ஃபைவ், ஃபார் அவே ட்ரீ, மாலரி
டவர்ஸ் எல்லாம் மனசுலே இடம் பிடிச்சுக்கிச்சு!!!! ஆஸ்தராலியா விமன்ஸ் வீக்லி மேகஸின் எல்லாம் வேற அப்பப்ப வாங்கிக்கறதுதான்!
நல்ல கனமான பத்திரிக்கை! தரமான காகிதம், நல்ல ப்ரிண்ட்! அவ்வளவுதான் சொல்ல முடியும்! உள்ளே, பாதிக்குமேலே
'மேக்கப்' சமாச்சார விளம்பரங்கள், கால் வாசி சமையல் குறிப்புகள், கொஞ்சமே கொஞ்சம் மத்த லோகல் ஆளுங்களைப்
பத்தி, பாக்கியெல்லாம் ஹாலிவுட் சினிமா ஆளுங்களைப் பத்தினவிவரங்கள்(!)

ஒரு ஆறு வருஷம் அங்கே குப்பை கொட்டிட்டு, இங்கே நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம்!!!! ஒவ்வொரு ஷாப்பிங்
மால்களிலும் குறைஞ்சது மூணு புத்தகக் கடைகள்!!!!! சிட்டிக் கவுன்சில் லைப்ரரியிலே ஃப்ரீ மெம்பர்ஷிப்!!!!
அப்பெல்லாம் அன் லிமிட்டெட் வேற!!!! எவ்வளவு வேணுமுன்னாலும் வாரிக்கிட்டு வரலாம்!!!! என்ன ஒண்ணு, எல்லாமே
இங்கிலீஷ்தான்!!!! தமிழுக்காக அதே ஆ.வியையும், குமுதத்தையும் விடாம தபாலிலெ வாங்கிக்கிட்டு இருந்தோம்.
நாட்டு நடப்பைக் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கணும், இல்லையா?

அஞ்சாறு வருஷம் ஆச்சு. குழந்தைகள் லைப்ரரி ஒண்ணுலே வேலை செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளிலேயே
அதுக்குப் புத்தகம் வாங்கற பொறுப்பும் வந்துச்சு! கண்டதையும் வாங்காம, நல்ல தரமானதா அந்தந்த வயசுக்கு
ஏத்ததா வாங்க ஆரம்பிச்சேன். எப்பவும் படிக்கறதுக்கு ஏராளமான சப்ளை!!!!!! பன்னெண்டு வருஷம் முடிஞ்சு
இப்பப் பதிமூணு நடக்குது. ஆனா இந்த வருஷம் நவம்பர்லே இருந்து இந்த வேலை இருக்காது! எங்க லைப்ரரியை
மூடப்போறோம்(-: நினைச்சா வருத்தமா இருக்குல்லே! என்ன செய்யறது? எங்க கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே
நம்ம சிட்டிக் கவுன்சிலோட லைப்ரரி ஒண்ணு வரப்போகுது! அது ஒரு பெரிய ஆலமரம்! அதுக்குக்கீழே ச்சின்னச்செடி
உயிர் வாழமுடியுமா?

ஒரு பத்து வருசத்துக்கு முன்னாலேதான் நம்ம வீட்டுக்குன்னு தனியா கணி( இப்படித்தான் சொல்லணுமாமே! சரியா?)
வந்து சேர்ந்துச்சு! கனியைக் கண்ட குரங்கு போல ஆனேன்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தினப் பத்திரிக்கையை
தமிழிலேயே படிக்க முடிஞ்சது! 'மயிலைஃபாண்ட்' திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் மூலம் கிடைச்சது! தட்டுத்தடுமாறி
தமிழ் தட்டச்சு செய்து, ஊருக்குக் கடிதம் அனுப்ப ஆரம்பிச்சேன்.

வாங்கிகிட்டு இருந்த ஆ.வியையும் நிறுத்திட்டோம். ஆனா குமுதம் மட்டும் வந்துக்கிட்டு இருந்துச்சு! இதுக்கிடையிலே
இங்கே ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சாச்சு! குமுதமும் நம்ம சங்கத்துக்காகன்னு ஆகிப் போச்சு! திடீர்னு அந்த வருசம்
சந்தாத் தொகை கிட்டத்தட்ட ரெண்டு மடங்காயிடுச்சு! ஏன்னா எங்க $ ரொம்பவே பலஹீனமாயிடுச்சுல்லே! குமுதமும்
கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்து இப்ப முழுக்க முழுக்க சினிமாவும் அரசியலும்னு ஆகிப் போனதாலே
இவ்வளவு காசு, அதுவும் தமிழ்ச் சங்கத்தோட காசை வீண்செலவு செய்யணுமான்னு இருந்துச்சு. நிறுத்திட்டோம்!!!

வலையிலேயே குமுதம், விகடன் பார்க்க/படிக்க முடிஞ்சது! எல்லாம் கிளைவிட்டு பரவியிருந்துச்சு!! ஆனா உஷா
சொன்னதுபோல ரெண்டு பத்திரிக்கைக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை. ஒரே வித்தியாசம் வேற வேற எடிட்டர்!!!!
( அப்படித்தானே அதுலே போட்டிருக்கு?)

ஒண்ணுலே பக்தின்னா ஒண்ணுலே சக்தி!
இதுலே அவள் அதுலே சிநேகிதி!
ரிப்போர்ட்டர் இதுலே ஜூனியர் விகடன் அதுலே!
இதுக்கு ஒரு டாட் காம் அதுக்கும் ஒண்ணு!

ஜோஸியம், வாஸ்து, பரிகாரம்ன்னு ஒவ்வொண்ணும் ஜனங்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே வச்சிருக்குது!!!!

எங்க இவர் சிங்கப்பூர் வழியா வர்றப்பல்லாம் சில தமிழ், மலையாளப் பத்திரிக்கைகளை வாங்கிக்கிட்டு வருவார்.

ஒரு நாளு ஏதோ ஒரு விஷயத்தைத் தேடுனப்ப அப்படி இப்படி சுத்தி,'மரத்தடி'க்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கெ
அப்ப பிரபு ராஜதுரை என்றவர் 'முறுக்கு' ன்றதை ரொம்பவெ சிலாகிச்சு எழுதியிருந்தாரா, அதைப் படிச்சவுடனே
அந்த முறுக்கை அப்பவே 'தின்னணும்'னு தோணிப்போச்சு! தேடிப் பாத்தேன். கிடைக்கலை! சரி, 'முறுக்கு நல்லா
இருக்குன்னு சொன்னீங்கல்லே, நீங்களே வாங்கித்தாங்க'ன்னு அவருக்கே ஒரு மெயிலைத் தட்டிவிட்டேன்!


இன்னும் வரும்!!!








1 comments:

said...

பிரபுராஜதுரை,
வலைப்பூவில் முன்பு பிரபலமாய் இருந்தார். வலைப்பூஇதழில் கூட ஒரு வாரம் சிறப்பாசிரியராய் இருந்தார். என்னவோ தெரியவில்லை, அவரின் மணற்கேணி என்ற வலைப்பதிவைக் காணவில்லை இப்போது.