Showing posts with label bappanadu. Show all posts
Showing posts with label bappanadu. Show all posts

Sunday, April 11, 2010

இன்னிக்குத்தான் மெயின் ஃபீச்சர்

வந்த காரியம் நடக்கப்போகும் நாள். காலையில் கண்ணு திறந்தப்பவே 'டுடே ஈஸ் த டே'ன்னு மனசு குதிக்குது. கூடவே லேசா ஒரு தயக்கம்..... பெட்டியில் மேலாக அந்த முண்டு செட்டை எடுத்து வச்சேன். இங்கேயே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கலாமுன்னு இவர் சொல்றார். இன்க்ளூடடா இல்லாட்டா வேற எங்காவது போய் லோக்கல் சமாச்சாரங்களைத் தெரிஞ்சுக்கலாமே. 'நேத்து ஊரைச் சுத்துனதுலே அப்படி ஒன்னும் நீட்டா கண்ணுக்குப் படலை. இப்போ தேடி அலைய நேரமும் இல்லை. என்ன இருக்குன்னு கீழே போய் பார்த்துக்கிட்டு முடிவு செய்யலாமு'ன்னார்

அறை புக் பண்ணினப்ப அவுங்க சொன்ன ரேட்டுக்கும் இங்கே வந்தபிறகு சொன்ன ரேட்டுக்கும் நிறைய வித்தியாசம். சொன்னதுக்கு அம்பது சதவீதம் எக்ஸ்ட்ரா. புக் பண்ணவுடன் அவுங்க மெயிலில் அனுப்புன கன்ஃபர்மேஷனைக் காமிச்சவுடன் அது ஹெட் ஆஃபீஸ்லே இருந்து வந்துச்சுன்னுட்டு கடைசியில் ஒத்துக்கிட்டாங்க. இங்கே இருக்கும் நாத்தத்துக்கு நாம் கொடுப்பதே ஜாஸ்த்தி. இதுலே பாதிக்குப் பாதிப் போட்டுக்கொடுக்கணுமா!!!! நல்லவேளை ப்ரிண்ட் அவுட் எடுத்துவந்தது!

ரெஸ்டாரண்ட் போனால் அங்கே தமிழ்க்காரர் ஒருத்தர். கௌரிசங்கர்ன்னு பெயர். சேலம். இங்கே ரெண்டு வருசமா வேலை செய்யறார். ஒரு பத்து நிமிஷ நடை இருக்கும் தூரத்துலே ரூம் எடுத்துத் தங்கி இருக்கார். பஃபே ப்ரேக்ஃபாஸ்ட்தான். இட்லி, மெது(???!!)வடை, பூரி, தோசை, முந்திரிப்பருப்பு உப்புமா, சன்னாஸ்( இதுவும் இட்லி போலத்தான். ஆனா மாவைப் புளிக்க வைக்க கள் ஊத்துவாங்களாம்.) அப்புறம் நிறைய வழக்கமான நான் வெஜ் ஐட்டங்கள், கேக், ப்ரெட்ன்னு இருந்துச்சு.
அறையைக் காலி செஞ்சுட்டு எட்டுமணிக்குப் புறப்பட்டோம். முதல் நாளே ப்ரஷாந்த்கிட்டே நாலைஞ்சு நாள் பயணம் இருக்கு, அதுக்கேத்தமாதிரி மாத்து உடுப்பெல்லாம் கொண்டுவரணுமுன்னு சொல்லி இருந்தோம். வானில் கருடன் பறந்து வட்டமிட்டு, சகுனம் சரின்னது. முதலில் இங்கே மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரி சேப்பலுக்குப் போனோம். 1885 வது வருசம் கட்டுனது. Antonio Moscheni from Italy வரைஞ்ச ஓவியங்கள் இருக்கு. நாங்கள் போனப்ப அவ்வளவா வெளிச்சம் இல்லை. சுமாராத்தான் பார்க்க முடிஞ்சது. பரிட்சை சமயமாம். கல்லூரி கலகலப்பில்லாமல் இருந்துச்சு. கவலை படிஞ்ச முகங்களோடு சிலர் உக்கார்ந்து ஜெபிச்சுக்கிட்டு இருந்தாங்க.
அலோசியஸ்(Aloysius) சேப்பல்


மங்களூர் பெண்கள் ரொம்ப அழகா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருந்ததால் அழகிகளை என் கண்கள் தேடிக்கிட்டு இருந்துச்சு. ஊஹூம்...... எல்லாம் நம்மைப்போலத்தான் சாதாரணமா இருக்காங்க. அழகிகளையெல்லாம் ஏர்லைன்ஸ்களும், சினிமாக்களும் கொத்திட்டுப் போயிட்டாங்க போல. இங்கேயும் வானில் எக்கச்சக்கமாக கருடன்கள் பறந்துகிட்டு இருக்குதுங்க. 'படைத்தானே....... மனிதனை ஆண்டவன் படைத்தானே' பாட்டை ரீமேக் பண்ணுனா வானில் கூட்டமாப் பறக்கும் பருந்துகள் சீன் இங்கே எடுக்கலாம்:-)))))

மங்களூர் முழுக்கத் தோண்டிப் போட்டுருக்கு. புதுசாலைகள் போட்டுக்கிட்டும், இருப்பவைகளை மேம்படுத்திக்கிட்டும் இருக்காங்க. என்ன ஒன்னு எல்லாம் ஒரே நேரத்தில் நடக்குது. ஒவ்வொருபகுதியாக முடிச்சுக்கிட்டு வரலாம். ஆனால்..... ஊர் மக்கள் பூராவும் ஒரே மாதிரி இருக்கட்டுமுன்னு எல்லோருக்கும் செம்மண் புழுதி அபிஷேகம். இந்தப் பக்கத்துலே அப்படி ஒரு செம்மண் பூமி. மங்களூர் ஓடு இதுலே இருந்துதானே செய்றாங்கன்னு நினைவு வருது. ஒரு காலத்துலே நாட்டு ஓடைவிட இதுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. நாட்டு ஓடில் இருக்கும் குளிர்ச்சி இதுலே இல்லைன்னாலும் பார்க்க நாகரீகமா இருக்கே. மனுஷனுக்கு 'ஷோ' வேண்டித்தானே இருக்கு:(

வடக்கு நோக்கிய பயணம். நேஷனல் ஹைவே 17. 56 கி.மீட்டர் நேராப் போனால் உடுப்பி. ஆனா வழியிலே நல்ல சமாச்சாரங்கள் இருந்தா நிறுத்திக்கலாம். தலையைத் தலையை ஆட்டுன ப்ரஷாந்த் ஒரு பதினைஞ்சு கிலோமீட்டர் வந்த பிறகு, வழியில் ஒரு பெட்ரோல் பங்க்லே நோட்டுப்புத்தகம் ஒன்னு குடுக்கணும். மறந்துட்டேன்னு சொல்லி திரும்பிப்போய் கொடுத்துட்டு வரவேண்டியதாப் போச்சு. அதென்ன மறதியோ? சின்னவயசு. வெறும் 23 தான். கவனம் எல்லாம் வேற எங்கியோ இருக்கு! ( அச்சச்சோ.... எனக்கு ரொம்பவே வயசாகிட்டதின் அறிகுறி?)
அங்கங்கே திடுக் திடுக்குன்னு வரும் பாலங்களும், அதுக்குக்கீழே சும்மா ஜிலுஜிலுன்னு ஓடிக்கிட்டு இருக்கும் ஆறுகளுமா, நீர்வளம் நிறைஞ்சு கிடக்கு. தென்னைகள் ஒய்யாரமாத் தலை சாய்ச்சு நிற்கும் கரைகள் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது!
பாப்பநாடு- முல்கி என்ற இடத்தைக் கடந்தப்பக் கண்ணுக்கு விருந்தா ஒரு அட்டகாசமான கோவிலும் அதுக்கேத்த அலங்காரத்தில் தோரணவாசலும். சின்னதா ஒரு மூணு நிலைக்கோபுரம். கோவிலில் நேத்துருந்து ஒரு வாரம் உற்சவகாலமாம். அழகான வேலைப்பாடமைஞ்ச தேரின் அடிப்பாகம். அதுலே ஏறின்னு ஒரு கூட்டம் பெருசா கம்பம் ஒன்னை பொருத்திக்கிட்டு இருக்காங்க. இன்னும் சில தேர்வண்டிகளில் சில சிலைகள். இதெல்லாம் எனக்கு ரொம்பவே புதுசா இருக்கு. கோவிலுக்குள்ளே அலங்காரமும் பிரமாதம். பிரமாண்டமான உள் பிரகாரத்தில் இன்னொரு தேர் அலங்காரம்.
இந்தப் பக்கங்களில் எல்லாம் பல கோவில்களில், முகப்பு வாசலுக்கு நேரா மூலவர் சந்நிதி இருக்கு. கருவறைக்கு முன்னால் சின்னதா ஒரு மண்டபம். அதுலே பிரசாதங்கள் வச்சுக்கிட்டு பண்டிட் ஒருத்தர் பக்தர்களுக்கு தர்றார். சந்தனம், தீர்த்தம், பூ, அம்மன் கோவில்கள் என்றால் கூடவே குங்குமம். ஆர்த்தி, தேங்காய் பழத்தட்டுன்னு ஒன்னும் பார்க்கலை. தட்சிணைகூட எதிர்பார்த்தமாதிரி தெரியலை( ஒரு ரெண்டு,மூணு இடத்தைத் தவிர)
முல்கி கோவில் ஸ்ரீதுர்காபரமேஸ்வரிக்கானது. பதினாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை கட்ட பப்பா என்ற இஸ்லாமியர் பெரும் பொருளுதவி செஞ்சாராம். அதனால்தான் இந்த ஏரியாவை பாப்பநாடுன்னு சொல்றாங்களாம். இன்றுவரை கோவில் மரியாதைகள் ப்ரசாதங்கள் எல்லாம் பப்பாவின் வாரிசுகளுக்குப் போய்க்கிட்டுதான் இருக்காம். சாம்பவி நதிக்கரையில் இருக்கு இந்த இடம்.
பண்டிட் கிருஷ்ணகோபால். நம்மைப்பத்தி விசாரிச்சார். நம்ம குடும்பநலம், மகிழ்ச்சிக்காக 'ஈஸ்வரி'கிட்டே ஸ்பெஷலா வேண்டிக்கிட்டுப் பிரசாதங்கள் கொடுத்தார். இங்கே இந்தத் திருவிழா ரொம்பவே விசேஷமாம். ப்ரம்ம ரதோத்ஸவம். இந்தச் சமயத்தில் தேவி தரிசனம் கிடைச்சது பாக்கியம் என்றார். ஆமென்
இங்கே ஒரு பெரிய முரசு வச்சுருந்தாங்க.. பாப்பநாடு டோலு. விழாக்காலத்தில் இந்த முரசை அடிக்கறது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாம்.
கோகிக்கு ஒரு கோவிலுன்னால் நம்ம கப்புவுக்கும் ஒரு கோவில் இருக்கேன்னு அதிசயப்பட்டுப் போனேன். Kaup என்ற ஊர். மெயின் ரோடுக்குப் பக்கமாவே மாரியம்மன் (ஹொசமாரி gகுடி?)கோவில் ஒன்னு. தோரணவாயில் சிம்பிள் & ஸ்வீட். கோவிலும் நல்லாவே இருக்கு. கனகாம்பரம், வாசனை இல்லாத காட்டு மல்லிப்பூவெல்லாம் கூட சாமிக்குப் போடறாங்க இந்தப் பக்கங்களில். பூ எப்படி இருந்தாலும் பூ, பூதான். எல்லாம் ஒன்று என்ற சமத்துவம். அதானே.... மணமில்லமல் இருப்பது அதன் தவறா?
உள்ளே பெரிய திண்ணைகள் ஓடும் கேரளப்பாணியில் அமைஞ்ச கோவில்தான். கருவறைக்கு முன் மண்டபம் தரையளவில் இருக்கு. அம்மனை அலங்கரிச்சுக்கிட்டு இருந்தார் அர்ச்சகர். நாம் கருவறைக்குள்ளே போய் அம்மனைச் சுத்திவந்து நல்ல க்ளோஸ் அப்பில் அரை அடி இடைவெளியில் சந்திக்கலாம். அரசாங்கம் நடத்துற கோவில்தானாம். படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சது. கொஞ்ச தூரத்துலே அருமையான கடற்கரை இருக்குன்னாங்க.
இன்னும் ஒரு பதிமூணு கிலோமீட்டரில் உடுப்பி வந்துரும். ரொம்ப இங்கே அங்கேன்னு நின்னால் நேரம் பறந்துருமே.....

உடுபா என்ற பெயர்தான் மருவி உடுப்பின்னு ஆகிருச்சாம். துளு மொழியில் 'உடு'ன்னா நட்சத்திரங்களாம். 'பா' ன்னா கடவுள். மாமனார் தட்சண் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் அடைய சந்திரன் தன் 27 மனைவியருடன் இங்கே வந்து சிவனை வணங்குனானாம். (இதே மாதிரி முன்னே குஜராத்தில் நாம் போன சோம்நாத் கோவிலிலும் ஒரு கதை சொன்னாங்க. சாபம் கிடைச்சுட்டாக் கோவில் கோவிலாப் போய்த்தான் ஆகணும்! ) சாபவிமோசனம் கொடுத்துச் சந்திரனைத் தன் தலையில் சூடிக்கிட்டார் சிவன். சந்திரமௌலீஸ்வரர்.

சென்னையைப் பொறுத்தவரை உடுப்பின்னதும் ஹொட்டல்கள் நினைவுதான். சரவணபவன் வந்து இந்த உடுப்பி ஹோட்டல்களையெல்லாம் போட்டுத் தள்ளிருச்சுல்லே!!!!