Monday, November 04, 2019

கிச்சா முதல் வெங்கி வரை !!!!!!(பயணத்தொடர், பகுதி 164 )

நம்ம பயணம்  முடிவுக்கு வரும் நேரம்  இது. இன்னும் ஆறு நாட்கள்தான்  இருக்கு. உறவினர்களை ஒரு வட்டம் பார்த்தாச்சு. இன்னொருக்காப் போகணும். உற்றார், நண்பர்களை  வரும் நாட்களில் சந்திக்கணும். நமக்கு நேரம் இருக்கும்போது, அவுங்க பிஸி. அவுங்க வரேன்னு சொல்லும்போது, நாம்  வெளியூரில்.....   இப்படித்தான் ஒவ்வொரு பயணங்களிலும்..... ப்ச்....
இந்த ஆறு நாட்களை முறையாப் பயன்படுத்தினால்  ஓரளவு  சமாளிக்கலாம். இன்றைக்கு நம்ம க்ருஷ்ணனின் டியரஸ்ட் தோழியைச் சந்திக்கணும். அதுக்கு முன்னால் ஒரு சில வேலைகளை முடிச்சுக்கணும். அப்படியே தோழி இருக்கும் ஏரியாவில் 'நம்ம தேவைகள்' இருக்குமிடங்களுக்கும் போய் வந்துடணும்.   முக்கியமா , தோழி வீட்டில் இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும்.

கடந்த ரெண்டு வாரமா 'நம்மவருக்கு' உடல் நிலை கொஞ்சம் சரியில்லை.  எதுக்கும் நம்ம டாக்டரைப் பார்த்துடலாமுன்னு 'ஸில்வர் பார்க்' போனோம்.   அவுங்களும் ஒரு ப்ளட் டெஸ்ட் செஞ்சுருங்கன்னு எழுதிக் கொடுத்தாங்க. தி நகர்  ஏரியாவே என்பதால்  உடனே போனோம்.  சாயந்திரமா ரிப்போர்ட் தருவாங்களாம். அதை உடனே கொண்டுவந்து  காண்பிக்கச் சொன்னாங்க டாக்டர்.  ரத்தம் கொடுத்துட்டு (!) நேரா  மயிலை.

நம்ம சீனிவாசன் இல்லாததால்  வண்டி ஒன்னும் வச்சுக்கலை.  கால்டாக்ஸிதான்.  போகும்போதே தோழிக்கு ஒரு ஃபோன்.  வீட்டில்தான் இருக்காங்களாம்.  எவ்ளோ பெரிய எழுத்தாளர். எவ்ளோ ப்ரசித்தம். எத்தனை புத்தகம், எத்தனை பத்திரிகை, என்ன ஒரு கலைகள் எல்லாம் கைவரப் பெற்றவர் ! இவ்வளவுக்கும்  கொஞ்சமே கொஞ்சூண்டு  தலைக்கனம், கெத்து  இருக்கப்டாதோ?   ஊஹூம்.....  மனம் முழுக்க இருக்கும் அன்பு முகத்தில் ஜொலிக்க, ஓடிவந்து கதவைத் திறந்தாங்க.
அடுப்பிலே பால்... பொங்கி வழியப்போகும் விநாடி.... சட்னு அடுப்பை அணைச்சதும்தான் எனக்கு உயிர் வந்தது....  கண்டுபிடிச்சுருப்பீங்களே  ...... இவுங்க யாருன்னு!  க்ளூ:   பால், பொங்கும்பால் :-)
நம்ம வித்யா சுப்ரமணியம் அவர்கள்தான்!  பூஜை அறையில்  மாயக்கிருஷ்ணனின் அருள் பரிபூரணமா நிறைஞ்சு வழியுது! என்ன ஒரு அழகு இவன் !!!  கண்ணைக் கட்டி அப்படியே இழுத்துருவான்! உண்மையில் இவனுக்கப்புறம்தான் எல்லாமே  கண்ணில் படும் வகையில்தான் வீட்டின் அமைப்பே இருக்கு !
லயன் உம்மாச்சி பார்த்ததும் குழந்தை ஸாதிகா நினைவு !

காஃபி  தரட்டுமான்னு கேட்டதும்  காய்ச்சினபால் நமக்காகக் காத்துருக்கேன்னு சரின்னேன். அட்டகாசமான காஃபி ! கிச்சா முன்னால் உக்கார்ந்து கொஞ்சநேரம் கதை பேசினோம். கேரளபாணி சித்திரக்கலையில் அட்டகாசமான படங்களை வரைஞ்சு தள்ளி இருக்காங்க. எதைச் செய்தாலும் திருத்தமா, அழகாச் செய்யறதில்  இவுங்களை அடிச்சுக்க முடியாது!  இவுங்க நட்பு கிடைச்சதும் 'அவன்' அருளே!  நல்லா இருக்கட்டும் !
வித்யாவுக்கு அப்புறம் விஜயா.....   சென்னையில்  ஷாப்பிங் கிளம்பினால், நகைக்கடை, துணிக்கடைகளை விட இந்த விஜயா ஸ்டோர்ஸ்தான் எனக்கு ரொம்பவே பிடிச்ச கடை.  எப்பப் போனாலும் புதுசுபுதுசா ஏராளமாக் கொட்டிக்கிடக்கும். என்ன ஒன்னு..... ஒரு முறை வாங்கிப்போனது ரொம்ப நல்லா இருக்கேன்னு அடுத்த முறை அதே பொருளைத் தேடினால் இருக்காது. புதுசு புதுசா வேறெதாவதுதான் இருக்கும்.  எனக்கு 'நாமம்' வாங்கிக்கணும். நாஞ்சொல்லலே.... யார் நம்ம வீட்டுக்கு வந்தாலும் நாமம் போட்டுருவேன்னு.... அந்தக் கணக்கில் எவ்ளோதான் ஸ்டாக்  வாங்கிப்போனாலும் தீர்ந்துருது.  பழைய ஸ்டைலில் ரொம்பக் குட்டியா அழகா இருப்பதெல்லாம்  இப்ப வர்றதில்லை(யாம்) கிடைச்சது கொள்ளாமுன்னு வாங்கிக்கணும். விலை வேற வருஷாவருஷம்  ரொம்ப ஏறிக்கிட்டே போகுது. நாப்பது ரூபாய்க்குக் காசு மாலை வாங்குனதெல்லாம் அந்தக் காலம், கேட்டோ !


கொஞ்சமா நகைநட்டுகளையும்,  ஒரு சின்ன அம்மனையும் எடுத்துக் கூடையில் வச்சேன். 'நம்மவருக்கு'  திடுக் !   'இருக்கறதுலேயே சின்னது இது'ன்னு சொல்லிக்கிட்டே இடத்தை விட்டு நகர்ந்துடணும்.  அப்புறம்  அந்த சைஸ் அம்மனுக்கான முகம். ஆச்சு நம்ம பர்ச்சேஸ். ரொம்ப அழகா இருந்தாள் !

அடுத்தாப்லே இருக்கும் சரவணபவனில்  லஞ்ச். (வடக்கு மாட வீதி ) அறைக்குத் திரும்பினதும் 'தெய்வா'  நம்மைப் பத்தி விசாரிச்சதா  வரவேற்பில் சொன்னாங்க.  இதே லோட்டஸில்தான்  தங்கி இருக்காங்களாம். அட!  உடனே அவுங்க அறைக்குக் கனெக்ட் பண்ணச் சொல்லிப் பேசினால்.... நாம் இருக்கும் அதே தளத்தின் மறு கோடி. அடுத்த ரெண்டாவது நிமிட், நம்ம அறைக்கு வந்தாங்க.
டாக்டர் தெய்வா, விஞ்ஞானி ! ( அஞ்ஞானியை   சந்தித்த விஞ்ஞானின்னு தலைப்பு மனசுலே வருது இப்போ ! ) Ecologist & Ecosystems Management Specialist, நாட்டின் பல பாகங்களில் வேலை. நியூஸி விஸிட் வரப்போறாங்கன்னதும்  ரொம்ப சந்தோஷமா இருந்தது.  இப்ப ஆகஸ்ட் ஆச்சே. ஜனவரியில் வாங்கன்னு சொன்னேன்.  எங்க கோடை அப்போதான். நிம்மதியா ஊர் சுத்தலாம் .  முதல்முறை நேரில் சந்திக்கறோம் என்ற எண்ணம் யாருக்குமே இல்லை.....  அவுங்களும் பிஸிதான். அப்புறம் பேசலாமுன்னு திட்டம்.

சாயங்காலம் அஞ்சரைக்குக்  கிளம்பி போற வழியில் கீதாவில் ஜஸ்ட் ஒரு காஃபி மட்டும். 'லேப்' லே போய்  ப்ளட் ரிஸல்ட் வாங்கினதும், ப்ரியா க்ளினிக்.  டாக்டர்  பவானி பார்த்துட்டுப் பயப்பட ஒன்னும் இல்லைன்னு மருந்து எழுதிக் கொடுத்தாங்க. ஒரு வாரம் சமாளிச்சுக்கிட்டு, ஊருக்குப்போய் இன்னொருக்கா பரிசோதிச்சுக்கணும்.

நம்ம  வீடியோ கேஸட்ஸ்லே இருப்பதை, டிவிடியா மாத்திக்கொடுக்கச் சொல்லி இருந்தோமே.... அதைப் போய் வாங்கிக்கணும். ஒரு டிவிடிக்கு ஐநூறுன்னு சொல்லி இருந்தார். அங்கே போனால்.....  60 நிமிட் வரும் டிவிடியில் ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கார்.  ஏழு கேஸட் கொடுத்துருந்தோம். இருபத்தியாறு டிவிடி பண்ணி வச்சுருக்கார்.  நல்லவேளை.... முப்பது நிமிட் அளவுன்னு அம்பத்தியிரண்டு பண்ணலை......   என்னமோ போங்க..... யாரை நம்பறது.....

நம்ம குமாரின் ஃபேன்ஸி ஸ்டோர் மாடியில் இருக்கும்  Zenith Photo Studio வுக்குப் போய் டிவிடிக்களை வாங்கிக்கிட்டு, 'நம்மவரின்' பென்ட்ரைவைக் கொடுத்தோம். அதிலும் பதிஞ்சு தர்றேன்னார்.  புகைப்படக்காரர் ஆனந்திடம், நம்ம கேமெராவைக் கொடுத்து ஒரு படம் எடுக்கச் சொன்னேன். அட! நல்லாத்தான் வந்துருக்கு!  நானும் பதில் மரியாதை பண்ணியாச்:-)

மணி ஆறேமுக்கால்தான். பெருமாளைப் பார்த்துட்டு வரலாமுன்னு  வெங்கடநாராயணா ரோடு போனால்....  வாசலில் என்னவோ ஹோமம் பண்ண குண்டங்கள் எல்லாம் இருக்கு.  பெருமாள்  தரிசனம் ஆனதும்  பார்த்தால்...   உள்ளே ஹாலில் கதாகாலக்ஷேபம் நடக்குதாம்.  ராஜலக்ஷ்மி & பார்ட்டின்னு போட்டுருக்கு.  நம்ம ரஜ்ஜுவின் நினைவு வந்ததும்  மனம் கசிஞ்சது உண்மை. பாவம்... குழந்தை எப்படி இருக்கானோ?

கல்லூரி மாணவி நிவேதிதாவின் ஹரிகதை. சின்னப்பொண்ணுப்பா....  அருமையாச் சொன்னாங்க.!

நாங்க கடைசி வரை இருந்து கேட்டோம்.  நன்றி நவிலல்  சொன்னாங்க  டீச்சர் ராஜலக்ஷ்மி. கோலசரஸ்வதி வைஷ்ணவ் ஸீனியர் செகன்ட்ரி ஸ்கூல் ! இந்தப் பெயரை முதல்முறையா இப்பத்தான் கேள்விப்படறேன்.  சென்னைக்கும் நமக்கும் தொடர்பு  1974 இல் விட்டுப்போயிருச்சே......    போய் வந்துக்கிட்டு இருந்தாலும் நாட்டுநடப்பு ஒன்னும் சரியாத் தெரியலையேப்பா.....  பள்ளிக்கூடம் ஆரம்பிச்சது 1975 லேயாம் !

இப்போ ஸ்ரவண் மாசம் நடப்பதால்  (தமிழ் மாசம் ஆடி ) தினமும் எதாவது ஒரு நிகழ்ச்சி நடக்குது  திருப்பதி தேவஸ்தானக் கோவிலில். நாளைக்கு ஜாகீர் ஹுஸைன் உபன்யாசம்னு  தகவல் பலகையில் பார்த்தேன்.  தப்லா வாசிக்கிறதை விட்டுட்டாரா என்ன?
இன்னொருக்காப் பெருமாளை தரிசனம் பண்ணிட்டு,  ரெண்டு கட்டடம் தள்ளி இருக்கும் ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்வீட்ஸில் போய் கொஞ்சம் இனிப்பு, காரம் வகைகளை வாங்கினோம்.  நாளைக்குக் கொஞ்சம் விஸிட்ஸ் உண்டு.  இங்கேயே அடுத்தஹாலில் இருக்கும் ரெஸ்ட்டாரண்டில்  போளியும், இளநீருமா டின்னரை முடிச்சுட்டு லோட்டஸ் வந்தோம்.

ஓ..............   வாட் அ லாங் டே............

 உண்மையாவே டயர்டா இருக்கு.
நாளைக் கதையை நாளைக்குப் பார்க்கலாம்.

குட்நைட்.....

தொடரும்.......... :-)


13 comments:

said...

சென்னைக்கு வந்தால் காலில் கஞ்சி கொட்டியதுபோல தொடர்ந்து வேலைகளை வச்சிக்கிட்டு வருவீங்க போலிருக்கு.

டிவிடி - 500 ரூபாய் என்பது அநியாய விலை. அதுவும் 7 கேசட்டை, 36 டிவிடி ஆகவா? அம்மாடி...

said...

எத்தனை சந்திப்புகள். வித்யா சுப்ரமணியம் மேடம் தில்லி வந்திருந்த போது நாங்களும்
குடும்பத்தோடு சந்தித்தோம் - இந்த மே மாதத்தில்! இனிமையானவர்.

தொடரட்டும் பயணம். தொடர்கிறேன்.

said...

அருமை சிறப்பு
தேங்காய் போலி - ப்ரமாதம்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நகை ரிப்பேர், புடவை ட்ரைக்ளீனிங் எல்லாம் அங்கே கொண்டுவந்தால்தான் முடியும். இங்கே செய்யத்தெரியாது :-( அதுவும் நகையில் கொஞ்சூண்டு பத்த வைக்கணுமுன்னால் கூட ஹைகேரட் கோல்ட். செய்ய முடியாதுன்னுடுவாங்க. வேற வழியே இல்லை.....

டிவிடி 26. இதுவரை அதில் ஒன்னையாவது போட்டுப்பார்க்க நேரம் இல்லை. டெக்னாலஜி மாறிக்கிட்டே போகும்போது..... ப்ச்.... இப்படித்தான்...அநாவஸ்ய செலவு..... 20 வருஷத்துக்கு முன்னே போன உலகப்பயணம் எல்லாம் அவைகளில் இருக்கு. என்னவோ போங்க..... அஞ்ஞானம்தான்......

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மைதான் இனிய நட்பு தொடரணும்!

said...

வாங்க விஸ்வநாத்,


உண்மைத் தேங்காய்தான், அந்தத் தேங்காய்ப் போளியில் :-)

said...

நான் 4-5 வருடங்கள் வீடியோ கேமராவில் பசங்க சின்ன வயசிலிருந்து வீடியோ எடுப்பது வழக்கம். அதை 2007 வாக்கில் கேசட்டுக்கு மாற்றி பிறகு சி.டிக்கு மாற்றினேன். (நான் கேமரா வாங்கிய சில வருடங்களில்தான் டிஜிடல் வந்தது). ஒரு சிடி 350 ரூபாய் விலைக்கு. ஆனா பாருங்க... 3 வருடங்களுக்கானவை மட்டும்தான் மாற்றினேன். ஆனா பாருங்க..அது உண்மையாவே பொக்கிஷம்தான்.

இப்போவும் அப்போ அப்போ பசங்களுக்குப் போட்டுக் காட்டுவேன்.

டிஜிடல் கேமரா 2004லிலிருந்து ஒவ்வொரு மாடலாக மாற்றி வைத்திருக்கிறேன். அதுவும் நினைவுகளை மீட்ட உபயோகமா இருக்கு.

வீட்டில் சின்னச் சின்ன விஷயத்தைக் கூட போட்டோ அல்லது கிளிப் எடுப்பேன். (பையனோ பெண்ணோ செய்யும் சில்மிஷங்கள் போன்ற எல்லாமே. சண்டை போட்டாலோ, அழுதாலே உடனே நான் கேமராவைத் தேடுவேன். ஹா ஹா).

அஞ்ஞானம்னு சட்னு சொல்லிட்டீங்க. ஹா ஹா

said...

அம்மனும் நியூசி வந்துவிட்டாளா?
பயணங்கள் தொடரட்டும்.

said...

@நெல்லத்தமிழன்,

நம்ம முதல் வீடியோ கெமெரா.... அந்த Sharp Camcorder இதுவே ஒரு ஒன்னரைக்கிலோ கனம் இருக்கும். தனியா இதுக்குன்னு கேஸட் வேற வாங்கிக்கணும். 1994 இல் வாங்கினோம். அதுக்குப்பின் என்னென்னவோ வாங்கியாச்சு. பேசாம ஒரு கொலுவுக்கு ரெண்டு படிகள் நிறைய வச்சுடலாம் :-) அதுக்குமுன்னே எதுக்கெடுத்தாலும் ஆடியோவில் ரெக்கார்ட் பண்ணி வைக்கறதுதான். குழந்தையின் மழலை கொள்ளை இன்பம் வகை !

said...

வாங்க மாதேவி,

இல்லையா பின்னே... பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் இல்லாம நாட்டுக்குள் வந்துட்டாள் :-)

said...

/உறவினர்களை ஒரு வட்டம் பார்த்தாச்சு. இன்னொருக்காப் போகணும். உற்றார், நண்பர்களை வரும் நாட்களில் சந்திக்கணும்./ அது என்ன உற்றார் உறவினர் நண்பர்கள்?

விளக்கம் தாங்க ரீச்சர்!! :))

said...

அடுப்பிலே பால்... பொங்கி வழியப்போகும் விநாடி.... சட்னு அடுப்பை அணைச்சதும்தான் எனக்கு உயிர் வந்தது.... ..



ஆஹா வித்யா மா ..அவங்க fb follow பண்றேன் ..ரொம்ப பிடிக்கும் ..அருமையான ஓவியங்களும் ..வித்தியாசமான கருத்துக்களும் என

said...
This comment has been removed by the author.