Monday, May 15, 2017

சேலத்து மக்களுக்கு நன்றி (இந்திய மண்ணில் பயணம் 4 )

எண்ணி பத்தே நிமிசத்தில்  'நம்ம வகை 'கோபுரம் கண்ணில் பட்டது. போய் இறங்கினால்....  முருகா, வேலவா.... இப்படி என்னை விடவே மாட்டேன்னா என்ன சொல்ல?

தண்டாயுதபாணி கோவில். ஸ்ரீ கார்த்திகேயா ஆஷ்ரம் ட்ரஸ்ட்.
ஒரு வேளை  கோவிந்தன் நாயர் சொன்ன ஐயப்பன் கோவிலோன்னு சம்ஸயம் இருந்துச்சுதான்.....  அது ஹரித்வாரில் இல்லையோ?

சின்னதா ஒரு மூணு நிலை ராஜகோபுரம். கோபுரவாசலுக்கு அந்தாண்டை  பலிபீடமும் கொடிமரமும்!
 கொடிமரத்துக்கு  முன்னால் கருவறையில் இருக்கும் தண்டாயுதபாணியைப் பார்த்தபடி மயில் வாஹனமும், அதன் காலடியில்  இங்கே அங்கே  நகரமுடியாமல் அழுத்தப்பட்டு இருக்கும்   தலை தூக்கிய  அரவமும்!

கருவறை மண்டபத்தைக் கொஞ்சம் உயர்த்தியே கட்டி இருக்காங்க. மண்டபத்தில் இருந்து கருவறைக்கு இன்னும் சின்னதா அஞ்சு படி ஏறிப்போகணும்.  பூசாரி ஐயா இருந்தார்.  தமிழ்க்காரர்தான். ஆனால் தமிழ் பேச வராதாம். சில தலைமுறைகளா இங்கேயே தங்கிவிட்ட குடும்பம்!

தண்டாயுதபாணி  சுமாரான ராஜ கோலத்தில் இருந்தார், ஜிலிஜிலு உடையைப் போர்த்தியபடி.   கற்பூர ஆரத்தி காமிச்சு எங்களுக்கு திருநூறு  கொடுத்தார் பூஜாரி ஐயா.

சாமி கும்பிட்டுட்டுக் கீழே இறங்கி பிரகாரம் சுத்தறோம். புள்ளையார், நவகிரகங்கள், சிவலிங்கம்,  பெருமாள் தாயார், சிறிய , பெரிய திருவடிகள்னு  தனித்தனி மேடைகளில் பிரகாரத்துலேயே  இருக்காங்க.





இன்னொரு பக்கம்  ஆஷ்ரம்.  கீழேயும் மாடியுமா அறைகள்.  கீழே அலுவலகம்.  கோவில் கட்ட நிதியுதவி செஞ்சவங்க பெயர்கள் எல்லாம் தமிழிலுமிருக்கு.  இதுலே பலர் சேலத்துக்காரங்க!
கோவில் எப்போ கட்டுனாங்கன்னு விசாரிச்சதுக்குத் தெரியலைன்னார். அங்கே சுவத்துலே இருந்த பளிங்குக் கல்வெட்டுகளில் தேடிப்பார்த்தால்  2006 வது ஆண்டு பெயின்ட் அடிச்ச தகவல் இருந்துச்சு.  அநேகமா 2005 லே கட்டி இருப்பாங்களா இருக்கும்.
ஹரித்வாரில்தடுக்கி விழுந்தால் கோவில் இங்கே ரிஷிகேஷில் அப்படி விழுந்தா  ஒன்னு ஆஷ்ரம், இல்லேன்னா  யோகா சென்டர்:-)

இன்னொருக்கா முருகனைக் கும்பிட்டுக்கிட்டு வெளியே வந்தோம்.

கோவிலைப் பத்திப் பெருசா ஒன்னும் சொல்றதுக்கில்லை.  எல்லாம்  நடத்தறவங்களைப் பொறுத்துதானே?

நம்ம சண்டிகர் முருகன் கோவிலைப் பாருங்க.... எப்படி ஜேஜே....ப்ச். இன்னொன்னும் இருக்கு அங்கே தமிழ் மக்கள் வேலையில் இருந்து  வாழ்க்கை.

இங்கே பயணிகள்தானே அதிகம்! தமிழ்க்கோவிலைத் தேடிக்கிட்டு வர்றவங்க எத்தனை பேர் இருப்பாங்க.... சொல்லுங்க.


வாசலுக்குப் பக்கம் பழக்கடைகளும் கரும்பு ஜூஸ் கடைகளுமா இருக்கு. நம்மவரும், முகேஷும் கரும்பு ஜூஸ். எனக்கு இளநீர் வேணுமுன்னு சொல்லி வாங்கிக்கிட்டேன்.



 மேலே  படத்தில்        முகேஷ்.



தொடரும்........... :-)


22 comments:

said...

ஐயப்பன் கோவில் ஹரித்வாரில் இருக்கிறது. ஹர்கிபுடி அருகிலேயே தான்.

ரிஷிகேஷ் எங்கும் ஆஸ்ரமம் தான். பல யோகா செண்டர்கள் சமீபத்திய வருடங்களில் வந்தவை! பாபா ராம்தேவ் கி ஜெய் என்று கூட சொல்லலாம்!

தமிழர்கள் கோவில் - எங்கே சென்றாலும் ஒரு கோவில் கட்டி விடுவது தானே வழக்கம்! தில்லியில் இப்படி கட்டப்பட்ட கோவில்கள் எண்ணிக்கை 50க்கும் மேல்!

said...

// எங்களுக்கு திருநூறு கொடுத்தார்//

நீங்க குடுத்தீங்களா ? அவரு குடுத்தாரா ?

said...

ரிஷிகேஷ்ல போய் செட்டில் ஆயிடணும்.

said...

படங்கள் அருமை

said...

நாங்கள் ரிஷிகேஷ் சென்ற அனுபவங்கள் நினைவிற்கு வந்தன.

said...

ஒரு மலையை விடுறதில்லை போல முருகன். நல்லா ஜங்குன்னு போய் உக்காந்துக்கிறது.

திடீர்னு தமிழ்நாட்டுக்கு வந்துட்டாங்களேன்னு பதிவைப் படிக்கத் தொடங்கும் போது தோணுச்சு. அப்புறம் பாத்தா ரிசிகேஷத்து முருகன். செந்தமிழ்த் தெய்வம். அவன் உங்களைத் தேடி வந்து தேடி வந்து காட்சி கொடுக்குறதைப் பாத்தா கோபால் சார் லிங்குன்னு நெனைக்கிறேன்.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. நீங்க சொன்ன மாதிரி பயணிகள் மட்டுமே வர்ர ஊர். அப்படித்தான் இருக்கும். ஆனாலும் கோயில் கட்டி அதையும் பராமரிக்கிறவங்களுக்கு ஒரு நன்றி.

said...

ஆஹா... தண்டாயுதபாணி தரிசனம்... பூசாரி முகத்தைக் காணலியே. கோலம் பார்த்தவுடன், இன்னும் தமிழ் வழக்கம் அங்கு இருக்கிறது என்பதைக் காணமுடிந்தது (பூசாரிக்குத் தமிழ் தெரியாவிட்டாலும்).

said...

தமிழ் எழுத்துகளும், தமிழ்க்கடவுளும் கண்ணில் பட்டதுமே பரவசம் வந்திருக்குமே... முருகன் என் இஷ்ட தெய்வம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கடைசி வரை ஐயப்பனைக் கண்டுபிடிக்க முடியாமத்தான் போச்சு அன்றைக்கு!

தமிழன் போகுமிடங்களுக்கு முருகனும் போயிடறான் பாருங்க. ஃபிஜியைக் கூட விட்டு வைக்கலையே :-)

தில்லியில் அம்பது கோவில்களா? ஆஹா....

said...

வாங்க விஸ்வநாத்.

அவரிடம் திருநூறும் எங்களிடம் வெறும்நூறுமாத்தான் இருந்தது:-)

said...

வாங்க கந்தசாமி ஐயா.

ஹரித்வாரில் ஒரு ஆஸ்ரமத்தில் தமிழர்களுக்கு மட்டுமேன்னு ஒரு அறிவிப்பு தமிழில் இருந்தது!

செட்டில் ஆவது பிரச்சனை இல்லை. குளிர்காலத்தில் நமக்குப் பழக்கமில்லாததால் கொஞ்சம் கஷ்டம்தான்.

said...

வாங்க ராஜி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆஹா.... கொஞ்சமாவது சரியா எழுதி இருக்கேனோ?

said...

வாங்க ஜிரா.

இந்தக்கோவில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருப்பதும் ஒரு காரணமா இருக்கலாம். வர்றவங்க நேரா ராம் ஜூலா, லக்ஷ்மண ஜூலான்னு அந்தப்பக்கம் போயிடறாங்களே....

பரவாயில்லை. நல்லாத்தான் அவுங்களுக்குத் தெரிஞ்ச விதத்தில் பராமரிக்குறாங்க.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சாமி முகம் போதும், ஆசாமி முகம் வேணாமுன்னு அவர் திரும்பிட்டார் :-)

கோலம் இப்பெல்லாம் ஸ்டிக்கர் ஆனதால்.... ரங்கோலின்னு நிறையக் கோவில்களில் இருக்கே!

said...

வாங்க ஸ்ரீராம்.

கதவில் தமிழ் எழுத்துப் பார்த்ததும் மகிழ்ச்சியா இருந்தது உண்மைதான். முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கணுமுன்னு முருகனையே வேண்டிக்கறேன்.

said...

துளசி டீச்சர்... நான் சொன்னது 4வது படத்துல த்வஜஸ்தம்பம் அருகில இருக்கற கோலம். அப்புறம் படிலயும் இழைக்கோலம். இது தமிழ்'நாட்டு மரபல்லவா? அதனால்தான் ஆச்சரியப்பட்டேன். (தமிழ் தெரியலை.. ஆனால் தமிழ்'நாட்டு மரபு மறக்கலை).

எங்க போனாலும், நம்ம மொழியைப் பார்த்தோம்னா, மனதுக்கு நெருக்கமாக இருக்கும். ஏதோ.. நம்ம சொந்த இடம்போல.

said...

அட முருகர் கோவில் ...

போன பல பதிவுகள் இன்னும் வாசிக்கல ஆன இன்னைக்கி முதல இந்த பதிவை பார்க்கவும்....வடக்கு பார்த்து தெற்கு வந்துடீங்கன்னு நெனசுட்டேன்..

பிறகு வாசிக்கவும் தான் இவர் ரிசிகேஷத்து முருகனு தரிஞ்சது...

said...

எனக்கு இளநீரை விட வழுக்கை அதிகம் பிடிக்கும் உங்களுக்குமா

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஃபிஜியில் இருக்கும் மலையாளிகளுக்கு மலையாளம் பேசவோ , அல்லது நாம் பேசினால்
புரிஞ்சு கொள்ளவோ தெரியாது. ஆனால் சமையலில் அவில் இருக்கும்.விசேஷநாட்களில் கட்டாயம் அவில் செஞ்சுருவாங்க. பெயரிலும் ஸர் நேம் 'நாயர்' உண்டு. அதைப்போலத்தான் குடும்பத்தில் வந்த கோலம் பழக்கம் இன்னும் இருக்கலாம்.

அவில் = அவியல் :-)

said...

வாங்க அனுராதா,

முருகன் உங்களையும் இங்கே கொண்டு வந்துட்டான் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எனக்கு ரொம்பவே இளம் வழுக்கை பிடிக்காது. கொஞ்சம் இளம் தேங்காயாக இருந்தால் திருப்தி. அதனால் வாங்கும்போது ஒரு இளநீர் நிறையத் தண்ணீர், இன்னொன்னுலே கொஞ்சம் தேங்காய்னு சொல்லிருவேன்.