Wednesday, June 13, 2007

நியூஸிலாந்து பகுதி 69

இது மூணாவது டெர்ம் லேபருக்கு. 2005 வருசத் தேர்தலிலும் வெற்றிதான். ஆனால் கூட்டில்லாம முடியாது. கிடைச்ச இடம் 50. 'டக்'ன்னு நேஷனல் 48 இடம் புடிச்சுருச்சு. இந்த ரெண்டு சீட் வித்தியாசம் கூட கேக் பங்கு வச்சதுதான். தேர்தலில் ஓட்டு வாங்கி ஜெயிச்சது ரெண்டு கட்சிக்கும் தலா 31. என்ன செய்யலாம்? கூட் கூட் கூட்டுதான். வேற வழி?



நியூஸி ஃபர்ஸ்ட், கிரீன் கட்சி ரெண்டும் தேர்தலில் ஒரு இடம்கூட ஜெயிக்கலை. ஆனா 'கேக்' பங்கா 7, 6 ன்னு கிடைச்சது. மவொரிக் கட்சிக்கு 4 இடம். லேபர், யுனைட்டட் ப்ராக்ரசிவ் கட்சியுடன் கூட்டும், நியூஸி ஃபர்ஸ்ட் & யுனைட்டட் ஃப்யூச்சர் ரெண்டும் ஆதரவு தரேன்னு சொன்னதாலெ அவுங்களொடு சேர்ந்தும் 'அரசுக் கட்டிலைப் பிடிச்சாங்க'. ச்சும்மா ஆதரவு யாருங்க கொடுப்பாங்க? நியூஸி ஃபர்ஸ்ட் விண்ட்ஸ்டன் பீட்டர்ஸ் வெளியுறவு அமைச்சர். யுனைட்டட் ஃப்யூச்சர், Peter Dunne ரெவின்யூ அமைச்சர். க்ரீன் கட்சியும் குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் வெளியே இருந்து ஆதரவு தர்றோம்னுச்சு.


ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சில 'புது' வாக்குறுதிகளாவது கொடுத்தாகணும் இல்லையா? போன முறை கொடுத்ததுதான் இப்பவுமுன்னு இருந்தா மக்கள்ஸ்க்கு ஆதரவு தரும் ஆர்வம் குறைஞ்சுறாது? அரசியல்வாதிகளுக்கு மாணவர்மீதுதான் கண். இளைய தலை முறையாச்சே..................அவுங்களைக் குஷிப் படுத்தறது ரொம்பவே முக்கியம்:-)\
மாணவர்கள் வாங்குன கடனுக்கு இனிமே வட்டியே இல்லைன்னு சொல்லி இருக்காங்க.ஆனா ஒரு கண்டிஷன். இது, படிச்சு முடிச்சுட்டு இங்கே நியூஸியிலேயே இருந்து வேலை பார்க்கறவங்களுக்கு மட்டும். நல்லதுதான். அவுங்க சம்பாரிச்சுக் கடனைக் கட்டினால்தான், பிற்காலத்தில் வாழ்க்கையில் செட்டில் ஆகும்போது வீடு வாங்கக் கொள்ள வங்கிகள் கடன் தரும். வங்கிக் கடன் வாங்காம வீட்டைக் கனவில்கூட வாங்க முடியாத நிலைதான் இப்ப இருக்கு. நிறையப்பேர் கடன் வாங்கிப் படிச்சுட்டு வெளி நாட்டுக்கு வேலைக்குப் போயிடறாங்க. மாணவர்களுக்கு எந்த விதமான ஜாமீனும் இல்லாம, 'திருப்பிக் கட்டுவாங்கன்ற நம்பிக்கை'யில் மட்டுமே அரசாங்கம் கடன் கொடுக்குது.



கவர்னர் ஜெனரலின் பதவிக்காலம் முடிஞ்சது. இந்தியர்களுக்குப் பெருமை தரும் விதமா 'ஆனந்த் சத்யானந்த்' என்றஃபிஜி இந்தியர் கவர்னர் ஜெனரலா 2006 வருஷம் பதவிக்கு வந்தார். இவர் இங்கே நியூஸியில் பிறந்து வளர்ந்தவர்தான்.ஆனாலும் வெள்ளையரல்லாத ஒருத்தர் அதுவும் நம்ம இனத்தவர் இந்தப் பெரிய பதவிக்கு வந்ததை மனமாரப் பாராட்டத் தோணுது. ஐயோ கடவுளே...... நானும் ரேசியல் மாதிரி பேசறேனா(-:





டோனால்ட் தாமஸ் ப்ராஷ்(Donald Thomas Brash) ன்னு டாலர் நோட்டுலே கையெழுத்துப் போட்டுக்கிட்டு, நாட்டின் பொருளாதாரத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தவர் எதிர்க்கட்சியா செயல் பட்ட நேஷனலுக்குத் தலைவரானார். டான் ப்ராஷ்( Don Brash) இங்கத்து ரிஸர்வ் பேங்க் கவர்னரா இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தலைமை இருந்ததாலேதான் 48 இடம் 2005லே கிடைச்சதுன்னு(ம்) பேசுனாங்க.மக்களுக்குப் பேசச் சொல்லிக் கொடுக்கணுமா என்ன? கருத்துக்களை அப்படியே அள்ளித் தெளிச்சுருவொம்லெ!



இவர் வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்காம, அரசாங்க உதவி வாங்குறவங்களைப் பத்தியெல்லாம் கொஞ்சம் மனம் நோகும்படிப் பேசிட்டார். போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு மவொரிகளைப் பத்தியும் சில வார்த்தைகளை விட்டுட்டார். இவர் நிறவேறுபாடு பார்க்கறவர்னு பேச்சு ஆரம்பிச்சது. 'அப்படியெல்லாம் இல்லையாக்கும், என் மனைவி சிங்கப்பூர் பெண்மணி'ன்னு சமாளிச்சார். இங்கேதான் அப்பப்பக் கருத்துக் கணிப்புன்னு எதாவது நடந்துக்கிட்டே இருக்குமே. அதுலெ இவரோட புகழ்(??) 'டுபுக்'னு இறங்கிருச்சு. கட்சிக்குள்ளெ ஒரே சோகம். பேசாம இவரைத் தூக்கிட்டாங்க. இப்ப எதிர்கட்சித் தலைவரா 'ஜான் கீ'( John Key) ன்றவர் இருக்கார். அடுத்த வருசம் 2008லே பொதுத் தேர்தல் வருது. இன்னும் ஒரு வருசத்துக்குள்ளே மக்கள் மனசுலே இடம் பிடிக்க எல்லாக் கட்சிகளும் 'லோ லோ'ன்னு அலையறாங்க.



வேலையில்லாத் திண்டாட்டம் இப்ப 3.7 %தான். போனவருஷம் 11.5 பில்லியன் டாலர்கள் கூடுதலா கஜானாலே இருக்குன்னு அரசாங்கம் சொல்லியாச்சு. டாலர் மதிப்பு ஸ்டடியா இருக்கு. இதெல்லாம் குறிப்பிடத்தக்க நல்ல விஷயங்கள்தானே?



இங்கத்துப் பார்லிமெண்டுலே 30 சதவீதம் அங்கத்தினர் பெண்கள். இதுவே இன்னும் போகப்போக அதிகமாகலாம்.அரசியலுக்கு வர்றதுலெ இப்ப பெண்கள் அதிக ஆர்வம் காட்டறாங்க. பல ஊர்களில் பெண்கள்தான் மேயராக இருக்காங்க.எங்க ஊருக்கு அடுத்த வருஷம் மேயர் தேர்தல் உண்டு. ரெண்டு பெண்கள்தான் போட்டி போடறாங்க. பெண்கள் பூசாரிகளாஆகலாமா கூடாதான்னு விவாதம் நம்ம நாட்டுலே நடந்துக்கிட்டு இருக்கறதைப் படிச்சப்பத்தான் ஞாபகம் வந்தது,இங்கே நியூஸியில் 1989லேயே முதல்முறையா ஒரு பெண் 'Penny Jamieson' பிஷப் பதவிக்கு வந்துருக்காங்க.




ஊழல்கள் இல்லாத நாடுகளின் வரிசையில் முதலாவது இடம் பிடிச்ச மூணு நாடுகளில் நியூஸியும் ஒண்ணு.மத்த ரெண்டு நாடுகள் பின்லாந்தும், ஐஸ்லாந்தும். 9.6 ன்னு சொல்றாங்க. இது 2006 வருஷக் கணக்கு. அப்படியும் அரசியல்வாதிகள் சிலர் ச்சின்ன ஊழல்கள் செஞ்சுட்டு, அது தொலைக்காட்சி, பத்திரிக்கைன்னு எல்லா இடத்திலும் தொவைச்சுக் காயப் போட்டுடறதாலே இன்னும் மோசமா ஆகாம இருக்கு.




சீரியஸ் ஃப்ராடு ஆஃபீஸ்னு ஒண்ணு இருக்கு. அவுங்களுக்கு வேலையே கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுப் பார்க்கறதுதான். பாராளுமன்றத்தின் மவொரி இனத்து பெண் அங்கத்தினர், ஒரு குறிப்பிட்டச் செலவுக்காகக் கொடுத்த அரசு நிதியை, தன்னோட உடல் இளைக்கறதுக்கான அறுவை சிகிச்சைக்குச் செலவு செஞ்சுட்டாங்க. இவுங்களொட அறுவை சிகிச்சையையும், அழகான உடலையும் பாராட்டி, ஒரு பெண்கள் பத்திரிக்கையில் வந்துச்சு. இது போதாதா? பொதுக் காசைத் தனக்குச் செலவு செஞ்சுக்கிட்டக் குற்றம் நிரூபிக்கப்பட்டு இப்ப ரெண்டே முக்கால் வருஷம் சிறை தண்டனை கிடைச்சிருக்கு. குற்றத்துக்கு உடந்தையா இருந்த அவுங்க கணவருக்கு ரெண்டு வருஷம் ( home detention) ஹவுஸ் அரெஸ்ட்.




ஒரு மந்திரி, வீடு மாறிப்போகும்போது அவரோட பூனைகள் ரெண்டை அங்கேயே விட்டுட்டுப் போயிட்டார். 11 நாள் கழிச்சுத்தான் அதுகளைக் கொண்டு போக வந்தார்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி, RSPCA அவர்மேலே மிருகவதைக் குற்றம் சாட்டி அவருக்கு எச்சரிக்கை விட்டுச்சு. இவரே ஒரு சமயம் குடிச்சுட்டு கார் ஓட்டுனதாக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அடைஞ்சார். இதெல்லாம் மந்திரி பதவியில் இருக்கும்போது நடந்துச்சு.




பிரதமரின் கார் குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகமாப் போச்சுன்னு போலீஸ் கேஸ் புக் பண்ணினது, கோர்ட்லே வழக்கு பதிவாகி ஓட்டுனருக்குத் தண்டனையும், உள்ளெ இருந்த பிரதமருக்கு எச்சரிக்கையும் கிடைச்சது.




ஒரு பாராளுமன்ற அங்கத்தினர், ரெஸ்டாரண்ட்லே சாப்புட்டுட்டுப் பணம் கொடுக்காம போயிட்டார்னு தொலைக்காட்சிகளில் எல்லாம் போட்டு நாறடிச்சாங்க. அவர் 'தண்ணி'யிலே இருந்ததாலெ பணம் கொடுக்க விட்டுப்போச்சுன்னு சொன்னாங்க.





ஒரு பார்லிமெண்ட் அங்கத்தினர் மகளும், அவுங்க நண்பரும் சேர்ந்து இன்னொரு நண்பரின் காருக்குத் தீவச்சுட்டாங்கன்னு குற்றம் பதிவாகி தண்டிச்சதுன்னு சிலதைச் சொல்லலாம்.





காவல்துறை ரொம்பவும் சிறப்பாச் செயல்படுது. ட்ராஃபிக் போலிஸ்ன்னு தனியா ஒண்ணும் இல்லை. மக்களும் சாலைவிதிகளை மதிச்சு நடந்துக்கறதாலே இதுக்குண்டான அவசியமும் அவ்வளவா இல்லை. எப்பவாவது ட்ராஃபிக் லைட்கள்வேலை செய்யலேன்னா மக்களே 'வலது பக்கம் முன்னுரிமை' கடைப்பிடிச்சிருவோம். இங்கே அடிக்கடி ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட சைக்கிள் ரேஸ், ஓட்டமுன்னு இருந்தால் அன்னிக்கு மட்டும் விளையாட்டு வீரர்கள் ஓடிவரும் சாலைகளில் உள்ள ட்ராஃபிக் லைட்களைச் செயல்படாம முடக்கி வச்சு, சில காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு பண்ணுவாங்க.






ஆனா 'ஹைவே'யில் அதிக வேகமாப் போறவங்களைப் பிடிக்க Highway Patrol கார்கள் ஒளிஞ்சிருக்கறதைப் பார்த்திருக்கேன். நகரத்தில் முக்கியமான இடங்களில் 'ரெட் லைட்' கெமரா வச்சுருக்காங்க. விதிகளை மீறுபவர்களைஅது போட்டொ பிடிச்சுக் காமிச்சுக் கொடுத்துரும். அபராதம் கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்துரும். 'நான் யார் தெரியும்லெ'ன்னு ' வீர வசனம்' எல்லாம் பேசமுடியாது:-)





இங்கே தெற்குத்தீவில் அவ்வளவா கூட்டம் இல்லாததாலும், நான் இங்கே வசிக்கிறதாலும் இதை இப்படிக் கவனிச்சிருக்கேன்.ஒருவேளை ஆக்லாந்து நகரில் ( 11 லட்சம் மக்கள் இருக்காங்க அங்கே) போக்குவரத்துக்குன்னு காவலர்கள் இருக்கலாம்.



காவலர்கள் பொதுவா கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வச்சுக்கறதில்லை. வெறுங்கைப் போலிஸ்தான். இப்ப சமூக விரோதிகளை வளைக்கும் இடத்தில் போறவங்க மட்டும் 'பெப்பெர் ஸ்ப்ரே' வச்சுருக்காங்க. யாரையாவது அரெஸ்ட் செஞ்சாலும் யாரையும் யாரும் அடிக்கறதெல்லாம் இல்லை. சிறைச்சாலைகளில் கூட அடிஉதையெல்லாம் இல்லை. ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னே ஒரு குற்றவாளியை அடிச்சுட்டார்னு ஒரு காவலரை வேலையைவிட்டுத் தூக்கிட்டாங்க. பல வருசத்து முன்னே காவலர்கள் சிலர் தன்னைக் கற்பழிப்பு செஞ்சதா ஒரு பெண்மணி குற்றம் சாட்டினதைத் தொடர்ந்து நாடே கொந்தளிச்சுப் போச்சு. குற்றம் நிரூபணமானதும் தண்டனை கிடைச்சது. பெண்மணிக்கு நஷ்ட ஈடும் ஒருபெரும்தொகை கிடைச்சது. இப்ப மூணு மாசம் முன்பு இன்னுமொரு பெண் இதைப்போல குற்றம் சாட்டிக் கடைசியில் அவுங்களெ பணத்துக்கு ஆசைப்பட்டுப் போலியாக் குற்றம் சாட்டுனாங்கன்னு தெளிவாயிருச்சு.





காவல்துறையைப் பார்த்து யாரும் பயப்படவேணாம். நட்பாவும் மரியாதையாயும் நடந்துக்குறாங்க. அரசாங்க உத்தியோகம்பார்க்குற பிரிவில் அதிக சம்பளம் ( பிரதமரை விடவும்) வாங்குவது இங்கத்து போலிஸ் கமிஷனர்தான்னு விவரம்கிடைச்சப்ப எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இங்கே காவல்துறைக்கு சங்கம்கூட இருக்கு!




ஆரம்பப் பள்ளிகளுக்கு அப்பப்ப வந்து பிள்ளைகளுக்கு சாலைவிதிகள், இன்னும் சமூகத்துலே என்னென்ன செய்யக்கூடாதுன்னு பசங்க வயதுக்கேத்தபடி கலந்துரையாடல் நடத்திட்டுப் போவாங்க அந்தந்தப் பகுதியில் இருக்கும் காவலர்கள்.



பொதுவா பொருட்கள் திருட்டுப்போனா காவலர்கள் அதில் அதிகக் கவனம் செலுத்தறது இல்லை. முதலில் நம்மைக் கேக்கும் கேள்வி இன்ஷூரன்ஸ் இருக்கா? ஆமாம்னு சொன்னா என்னென்ன திருடு போச்சுன்னு ஒரு பட்டியல் போட்டுத்தரச் சொல்றாங்க. அதுக்கப்புறம் நாம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு க்ளெய்ம் செய்யும்போது நாம் அங்கே தரும் பட்டியலும், போலிஸ் அவுங்களுக்கு அனுப்பும் காப்பியும் ஒரே மாதிரி இருந்தா நமக்கு இன்ஷூரன்ஸ் பணம் கிடைச்சிரும்.



நம்ம வீட்டுலே திருடன் வந்தப்ப இப்படித்தான் நடந்துச்சு. நாந்தான் கதைகளிலும், சினிமாவிலும் வர்றதை வச்சுக்கிட்டு,எந்த சாமான்களையும் தொடாம( திருடனோட கைரேகை அழிஞ்சுருமுல்லெ!) இருந்தேன். மனித உடம்புக்கோ, உயிருக்கோஅடி/காயம்/ஆபத்து ஏதும் இல்லைன்னா அதை ரொம்ப சீரியஸ்ஸா எடுத்துக்கறதில்லையாம்.





சமீபகாலமா ஆசியர்கள் குடியேறின பிறகு குற்றங்கள் அதிகரிச்சு இருக்கறதா தகவல்கள் வந்துக்கிட்டு இருக்கு(-:


நியூஸி காவல்துறை இண்ட்டர்போலில் அங்கம் வகிக்குது.
பொதுவா 'காவல்துறை உங்கள் நண்பன்' என்பது ரொம்பச் சரி.







முடிவுரை


எதோ எனக்குத் தெரிஞ்ச அளவுலே ஒரு சரித்திரத்தைச் சொல்லி இருக்கேன். சரித்திரமுன்னு இருக்கும்போது வருஷங்களையும்,எண்களையும் தவிர்க்க முடியாதுல்லையா? அதான் அங்கங்கே எண்களைக் குறிப்பிட வேண்டியதாப் போச்சு. நீங்க இதுவரை படிச்ச வேற சரித்திரப் புத்தகங்களோட நடையிலிருந்து இதன் நடை முற்றிலும் வேறுபட்டு இருந்துருக்கும்.ஏன்னா..........நான் சரித்திரத்தை எழுதலை. சொல்லி இருக்கேன். நான் அடிப்படையில் ஒரு 'கதை சொல்லி'!



வெளியில் இருந்து பார்க்கும்போது உலகத்துலேயே மிகச் சிறந்தநாடாகத் தெரியும் நியூஸியில் குற்றங்கள் நடக்கறதே இல்லைன்னு நினைச்சுறாதீங்க. இங்கேயும் உலகில் பொதுவா நடக்கறது நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. மனுஷங்கதானேஇதைச் செய்யறாங்க. இங்கேயும் மனுசங்கதானே இருக்கோம்? குறைஞ்ச அளவு மக்கள் தொகை இருக்கறதாலே,எதோ அங்கொண்ணு இங்கொண்ணு நடக்கறமாதிரித் தெரியும். ஆனா விகிதாச்சாரம் வச்சுப் பார்த்தால் ஏறக்குறைய ஒரே மாதிரியாகலாம். இதெல்லாம் தனிமனிதனின் குணக்கேடுகளால் நடக்கற குற்றங்கள். அரசியல்வாதிகளும்சில நாடுகளில்(???) நாம் பார்க்கறதுபோல அவ்வளவு மோசமில்லைன்னுதான் நினைக்கிறேன். மக்களுக்குநன்மை செய்யணும் என்ற எண்ணமும், சுற்றுப்புறச் சூழலை மாசு படுத்தாம இருக்கணும் என்ற எண்ணமும், நியூஸியை 'நியூக்ளியர் ஃப்ரீ' நாடாவே வச்சுக்கணும் என்ற எண்ணமும் ஒரு வேறுபாடு(ம்) இல்லாம எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவா இருக்கு. இதை உண்மையாவே நாம் பாராட்டத்தான் வேணும். மேலும் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் போல்தான் அரசாங்கம் மக்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு திட்டங்கள் பல கொண்டு வருது. ஆனா அது பாதியில் நிக்காமஎல்லா மக்களுக்கும் பரவலாப் போய்ச்சேருது. அதுலேயும் அங்கங்கே ஆதாயம் பார்க்க நினைக்கும் அரசியல்வாதிகளோ,அவர்களது அடிப்பொடிகளோ 'இன்னும் இங்கே இல்லை'ன்றதுதான் ஒரு பெரிய ஆறுதல். எதுக்கெடுத்தாலும் தலையைச் சொறிஞ்சுக்கிட்டோ, சொறியாமலோ கை நீட்டும் ஆட்கள் எந்த மட்டத்திலும் இல்லை. இன்னும் சொல்லப்போனாஇந்த நாட்டுலே 'டிப்ஸ் ( Tips) வாங்கும் & கொடுக்கும் வழக்கமே இல்லை. அண்டை நாடான ஆஸியிலும் இப்படித்தான்.அறவே இந்தப் பழக்கம் இல்லாததால், மத்த நாடுகளுக்குப்(அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட) போகும்போது இப்படிக்கொடுக்கணும் என்ற உணர்வே இல்லாம 'ஏன் இந்த ஆள் பெட்டியைக் கொண்டுவந்து வச்சுட்டு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கார்?'னு முழிச்சிருக்கேன். டாக்ஸிகளில் கூட மீட்டருக்கு மேலே 'போட்டு'த் தர்றது இல்லை. நாங்கதான் சிலசமயங்களில் சில்லறை இல்லைன்னு பத்து, இருபது செண்ட் குறைச்சுக் கொடுத்துருக்கோம்.



இயற்கை அழகை எடுத்துக்கிட்டா, இந்த நாட்டில் அழகான அம்சங்கள் அப்படியே கொட்டிக்கிடக்கு. அதையெல்லாம் நசிச்சுச் சீர்கேடு செய்யும் அளவுக்குப் 'பூமி பாரம்' இல்லாததும் ஒரு காரணமா இருக்கலாம்.நமக்கு விருப்பம் உள்ள மதத்தில் இருக்கவோ, விரும்புன மாதிரி வழிபாடுகள் நடத்தவோ எந்தத் தடையும் இல்லாம எல்லாரும் சுதந்திரமா இருக்கலாம். இங்கே வசிக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டங்களும் உரிமைகளும் இருக்கு. சட்டத்தின் முன்னால் எல்லாரும் ஒண்ணுதான்.


நன்றி உரை



இதுவரை நான் 'சொல்லிய' நியூஸி சரித்திரத்தைப் பொறுமையாப் படிச்ச நண்பர்களுக்கும், அவ்வப்போது பின்னூட்டமிட்டும்,தனி மடல்களிலும் உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் எழுதுன தொடர்களில் என் மனசுக்கு ரொம்பத் திருப்தியைக் கொடுத்தது இந்தத் தொடர்தான். இதுக்காக சரித்திரத்தில் பின்நோக்கி ஒருபயணம் செஞ்சதும், இதுக்காகவே நிறைய சரித்திரப் புத்தகங்களைப் படிச்சதும் மனநிறைவையே தந்துச்சு. இங்கிருக்கும் நூலகமும், வலையும், நான் தன்னார்வத்தொண்டு செஞ்சுக்கிட்டு இருந்த குழந்தைகள் நூலகமும் ரொம்பவே உதவியா இருந்துச்சு. இங்கே என் கிவி நண்பர்களிடமும், இன்னும் பல முதியோரிடமும் பல நிகழ்வுகளைப் பற்றிக்கேட்டுத் தெரிந்து கொண்டதும் ஒரு நல்ல அனுபவமா அமைஞ்சது.



இந்தத் தொடர் எழுத என்ன ஊக்குவிச்ச முதல் ஆளான தோழி மதிக்குத்தான் முதல் நன்றியைச் சொல்லணும்.அப்புறம், இது சம்பந்தமான என் வேலைகளில் குறுக்கிடாம அப்பப்ப (எனக்கு நிறைய நேரம் கிடைக்குறமாதிரி)வெளிநாடுகளுக்குப் போயிட்ட கோபாலுக்கும், நான் கணினியில் 'டொக் டொக்'ன்னு தட்டச்சு செய்யும்போதெல்லாம் 'எப்படியோ போ'ன்ற பார்வை பார்த்துட்டுக் காலடியில் சத்தமே போடாமல் (சைலண்ட் மியாவ்)ஒரு தொந்திரவும் செய்யாம இருந்த கோபாலகிருஷ்ணனுக்கும்(ஜி.கே, கோகி) நன்றியைச் சொல்லியே ஆகணும்.


எதாவது குற்றம் குறையோ அல்லது தவறான தகவல்களோ இருந்தால் சொல்லுங்க. காரணம் என் கவனக்குறையாகத்தான் இருக்கணும். சொன்னால் திருத்திக் கொள்வேன். அதெல்லாம் சரித்திரத்தைத் திருத்தி எழுதிருவொம்லெ:-))))


அனைவருக்கும் நன்றி & வணக்கம்

ஆட்டுமந்தைன்றது .......

ஆட்டுமந்தைன்றது சரியாத்தான் இருக்கு. எப்படி ஒண்ணு ஓடுனதும் மற்றதும்

என்ன ஏதுன்னு பார்க்காம ஓடுது பாருங்க:-)















எதுக்கு இப்படி ஓடுதுங்கன்னு தெரியலையே(-:

Monday, June 11, 2007

ஆகாயத்தில் தொட்டில் கட்டி....................





இன்னிக்குப் பறக்க வேண்டியதாப் போச்சு:-) அதுவும் ரொம்ப ஸ்பெஷல்லா...........


காலையில் கோபால் ச்சீனாவுக்குக் கிளம்பிப் போயிட்டார்.காலையில் மைனஸ் 5 டிகிரி வேற. நமக்குத்தான் சாக்குக் கிடைச்சிருச்சேன்னு நிதானமா வேலைகளைச் செய்யலாமுன்னு தமிழ்மணத்துலே புகுந்து புறப்பட்டுக்கிட்டு, நியூஸிப் பதிவு எழுதி அதைப் பதிஞ்சுன்னு ஆமை வேகம்.




சூரியன் வர ஆரம்பிச்சதே 12 மணிக்கு. அதை யாராவது வேஸ்ட் செய்யலாமா? கடமைகளை முடிச்சுக்கிட்டு 'அக்கடா'ன்னு வெயிலு காய்ஞ்சுக்கிட்டு புத்தகம் படிக்கலாமுன்னு உக்காந்தேங்க. ட்ர்ரிங் ட்ர்ரிங்.........போன் அடிக்குது.




மகள். 'பலூன் ரைடு போகலாமா'ன்னு கேக்கறாள். ஆஹா.......... எவ்வளவு நாள் கனவு? போனாப்போச்சு.
என்னைக்குன்னு கேட்டால், இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பணும்னு சொல்றாள். கையும் ஓடலை, காலும் ஓடலை. என்னென்ன எடுத்துக்கணுமுன்னு கேட்டால்,நல்ல ஜாக்கெட், கைக்கு க்ளவுஸ், ஸ்கார்ஃப் போதுமாம். அரக்கப் பரக்க எல்லாத்தையும் 'தேடி' எடுத்தேன். 'டாண்'னு மகளும் வந்து கூட்டிட்டுப் போனாள்.




ரேஸ் கோர்ஸ் பக்கம் காரை நிறுத்திட்டுக் காத்திருந்தோம். அங்கே வந்து சந்திப்பாராம் பலூன்காரர்.
கொஞ்ச நேரத்தில் 'பஜேரோ'வில் வந்து சேர்ந்தாங்க பாலும் டீனும். ( Paul & Dean)டீன் தான் பைலட். பால் உதவியாளர். பாலும் டீனும் தகப்பனும் மகனும் வேற.
மகள் வேலை செய்யுமிடத்தில் பால் வேலை செய்யறார். அவர் மகனுக்கு' ஹாட் ஏர் பலூன் பைலட்'வேலைக்குப் பயிற்சி நடக்குது. அடுத்த மாசம் 'கமர்சியல் லைஸன்ஸ்' வாங்கறதுக்கான பயிற்சி.மொத்தம் இத்தனை மணி நேரம் பறந்துருக்கணுமுன்னு கணக்கெல்லாம் இருக்காம்.



காரை அங்கேயே விட்டுட்டு, அவுங்களோடு கிளம்பிப் போனோம். வழக்கத்துக்கு மாறா சில நாட்கள்,வருசத்துக்கு நாலு இல்லை அஞ்சு முறை சிட்டியில் இருந்து பறக்க அனுமதி தருவாங்களாம். இன்னிக்கு அது போல ஒரு rare chance. பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்துக்கு வந்து சேர்ந்தோம். வண்டியின் பின்னால் ஒரு விநோதமான ட்ரெய்லர் இருந்துச்சு.




ஒரு அச்சடிச்ச தாளில் எங்க பெயர், எடை எல்லாம் குறிப்பிடச் சொன்னாங்க. எடையை யாரிடமும் சொல்வதில்லைன்னு வாக்களித்தார் பால்:-)



முதலில் ஒரு சாதாரண பலூனைக் காத்து நிரப்பி மேலே பறக்க விட்டதும் அது பறந்துபோனதை வச்சு,காத்து வீசும் திசையைக் கணக்குப் போட்டார் டீன். அடுத்து, ட்ரியிலரைத் திறந்தால்......... ஒரு பெரிய பிரம்புக் கூடை.அது உள்ளே நாலு பக்கமும் நாலு கேஸ் ஸிலிண்டர்கள். நடுவிலே கொஞ்சம் போல இடம்.




அதை உள்ளே காமிச்சு பக்கவாட்டில் இருந்த கயிற்றுக் கைப்பிடிகளை எப்படிப் பிடிச்சுக்கணும், கீழே இறங்கும்போது எந்த நிலையில் நாங்க உக்காரணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. அங்கே எங்கே இடம் எல்லாம் ? ஒருவர் மீது ஒருவர் சாய்ஞ்சு.................தான்:-) உள்ளே ஏறக் கூடையில் ஒரு ஜன்னல் போல சதுரமான இடவெளி இருக்கு. அதுலே காலை வச்சு உள்ளே இறங்கணுமாம். பலூன் தரையில் இறங்கினபிறகு, என்ன நடந்தாலும் (???) நான் சொல்லும்வரையில்வெளியே இறங்க முயற்சிக்கக் கூடாதுன்னு எச்சரிக்கை வேற.





டீன் 'மளமள'ன்னு பிரம்புக்கூடைக்கு நாலு பக்கமும் கம்பிகளைப் பொருத்தி, அதுக்கு ஒரு உறை போட்டுக் கட்டி,அது சேரும் இடத்தில் ஒரு ப்ரேம் அதுக்குள்ளெ கேஸ் எரியும் கருவி( அடுப்பு?) ன்னு அடுக்கினார். பால் அதுக்குள்ளே ஒரு பெரிய ராட்சஸ அளவுலே இருந்த பையைப் பிரிச்சுப் பலூன் துணியை எடுத்துப் புல்வெளியில் இழுத்துப் போட்டார்.சுமார் இருபத்தி அஞ்சு , முப்பது மீட்டர் நீளம் இருக்கும். (அஞ்சாறு புடவை நீளம் இருந்துச்சுங்களே)





பலூன் துணியில் இருந்த பலவகையான கயிறுகளையும் அதன் முனையில் இருக்கும் கொக்கிகளையும் கூடையோடுசேர்த்து அதுக்குண்டான வளையத்தில் மாட்டினார் டீன். இப்ப எங்களைக் கூப்பிட்டு, 'பலூன் துணியின் பக்கவாட்டுக் கைப்பிடியை ஆளுக்கொரு பக்கம் புடிச்சுக்கணும். கீழே உள்ள கயித்தின் மீதுக் காலை அழுத்திவச்சுக்கணுமுன்னு சொல்லிட்டு, ஒருவேளை உங்களை அப்படியே தூக்குச்சுன்னா விட்டுருங்க. ஆனா கயித்து இடைவெளியில் காலை வச்சுறாதீங்க'ன்னார். எனக்கோ 'திக் திக்'!




பெரிய ஃபேன் ஒண்ணு வச்சு இப்போ பலூனுக்குள்ளெ வெறுங்காத்தை நிரப்பறது ஆரம்பமாச்சு. கெட்டியாப் புடிச்சுக்கிட்டு நிக்கறோம். அப்படியே இழுக்குது எங்களை. பல்லை ஒரே கடி, உனக்காச்சு எனக்காச்சுன்னு. பலூனின் தலைப்பக்கம் இணைச்சிருக்கும் கயிறைக் கெட்டியாகப் புடிச்சுக்கிட்டு பாலன்ஸ் பண்ணறார் பால். பலூன் அப்படியே உயரத் தூக்குது.இப்போ அடுப்பைப்பத்த வச்சதும், ட்ராகன் வாயிலே வர்றது மாதிரி தீ பாயுது பலூனுக்குள்ளே. அப்படியே எங்களைத் தூக்கப்பாக்குது. சமாளிக்க முடியலை, விட்டுட்டோம். துணிப்பக்கம் தீ பாயறதுபோல இருந்ததாலே தீயை அணைச்சுட்டு,இன்னொருதடவை குளிர் காத்து ரொப்பறதுலே ஆரம்பிச்சு, இந்த முறை அடுப்பை வேற ஆங்கிளில் திருப்பிவிட்டார் டீன்.




பலூன் மெதுவா எழும்பி உயரமா நிக்குது. இப்ப அடுத்த சாலஞ்சு, உள்ளே ஏறிப்போறது. மகள் 'டக்'ன்னு காலை வச்சு ஏறிஉள்ளே இறங்கிட்டாள். நானு? கட்டத்துக்குள்ளே ஒரு கால் காத்துவெளியில் ஒரு கால். பால் வந்து உதவுனார். உள்ளே இப்போ நாங்க மூணு பேர். பக்கத்தில் காரோடு கட்டி இருக்கும் கயிறை அறுத்துக்கிட்டு போறதுக்குத் துடிக்குது பலூன்.இன்னொரு முறை கடைசி நிமிஷ பாதுகாப்புக் காரியங்களையெல்லாம் சரி பார்த்துட்டு கட்டி இருந்த கயிறைத் தளர்த்துனதும் அப்படியே மெதுவா உயருது பலூன். பத்தே விநாடிகள்தான். அதுவரை நின்னுக்கிட்டுருந்த புல்வெளி எங்கியோ கீஈஈஈஈஈஈஈ........ழே!




காத்துத் தென்கிழக்குப் பக்கமா வீசுதாம். மேலே போகப்போக வீடுகள் அழகா பொம்மை வீடுகளா மாறிப்போச்சு. கீழே தெருக்கள்அதில் ஓடும் கார்கள் எல்லாம் வேடிக்கையா இருக்கு. நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, நம்ம வீடு இருந்த பக்கம் பலூன் நகருது. தேடும் கண்களுக்கு வீடு அகப்பட்டதும் ஒரே குஷிதான். அட........ இது அந்த ரவுண்டபெளட்டா? ச்சிக்சிக்ன்னு கார்கள் அதுக்குள்ளே நுழைஞ்சு வலம் வருதே. தெரிஞ்ச கட்டடங்களைப் பார்க்கும் பிரமிப்பு அடங்கவே நேரம் ஆச்சு.புல் தரையெல்லாம் க்ளாஸி போட்டோ ப்ரிண்ட் போல் அட்டகாசம்.




1200 அடி உயரத்தில் இருக்கோமாம். 22 'நாட்' காத்துன்னு டீன் ஒயர்லெஸ் ரிஸிவரில் சொல்லிக்கிட்டு இருக்கார்.இன்னிக்கு அருமையான நீலவானமுள்ள வெய்யில். அதுவரை பாக்கியம்தான். ஒரு ஆட்டமும் இல்லாம மிதந்துபோய்க்கிட்டு இருக்கு நம்ம தொட்டில். அப்பப்ப பலூனுக்கு சூட்டை அனுப்பும் வால்வு திறந்து தீ பாயும் சத்தம்.தலைக்கு மேலே தீ.




ஊரைவிட்டு வெளியில் வந்தாச்சு. ஏர்ஃபோர்ஸ் வச்சுருந்த விக்ரம் (Wigram) ஏர்ப்போர்ட். இன்னும் அந்தப்பக்கம் இருக்கும் புதுக் குடியிருப்புங்க. ஹைய்யோ.......இவ்வளவு அழகா இதெல்லாம்? திறந்த வாயை மூடாம லயிச்சுட்டேன்.




நம்ம கேண்டர்பரி ப்ளெயின்ஸ். சதுரம் சதுரமா நிலங்கள். அதுலே இருக்கும் ஆடுகள், பசுக்கள், மான்கள், குதிரைகள் எல்லாம் திடீர்னு ஓடுதுங்க. என்னன்னா...பலூன் சத்தம் கேட்டு மிரளுதாம். முதல்லே மானா, குதிரையான்னு கவனமாப் பார்க்க வேண்டி இருக்கு.எல்லாம் ஒண்ணுபோல ஒரே திசையில் ஓடுறது பார்க்க அழகுதான். ஆனா ...........பாவம் இல்லையா அதுகள்?




பண்ணை வீடுகள் ஒவ்வொண்ணும் அமர்க்களமா இருக்கு. ஒரு வீட்டில் நம்மளை 'தலையை அண்ணாந்துக் கண்ணை உயர்த்திப் பார்த்தாங்க.' கையசைப்பு வேற. நாங்க ச்சும்மா இருப்பமா? கையை ஆட்டுனதில் இப்பக் கைவலிக்குது:-)



சில நிலங்களில் இருந்து ஒரு ச்சின்ன நாய் அளவிலே இருக்கும் முயல்கள் தலை தெரிக்க ஓடுதுங்க. இது hare வகையாம். அடடா என்ன துள்ளல்! என்ன வேகம்!!





இதுக்கிடையில் பால் வண்டியைக் கிளப்பிக்கிட்டு பலூன் போகும் திசையைத் தொடர்ந்து வர்றார். சில சமயம் அவர் வண்டி கண்ணுக்குத் தெரியுது. டீன் நாங்கள் போகும் திசையில் உள்ள ரோடுகளை அவருக்குச் சொல்லிக்கிட்டே வழிகாட்டுறார். திடீர்னு பார்த்தா.............. கையில் இருக்கும் வரை படத்தின் எல்லையைத் தாண்டி வெளியே போய்க்கிட்டு இருக்கோம். உயரே இருந்து பார்க்கும்போது மரக்கூட்டங்கள் எல்லாம் விசித்திரமாத் தெரியுது. நாம பொதுவா ப்ளேனில் இருந்து பார்க்கறதுக்கும் இதுக்கும் இப்படி ஒரு வித்தியாசமான்னு மனசு அடிச்சுக்குது.





தூரத்தில் லேக் எல்லஸ்மியர். அப்படின்னா இன்னும் கொஞ்ச தூரத்துலே கடல் வந்துருது. பலூனின் வேகத்தைப் பார்த்தா நாம் வேற ஒரு நாட்டுக்குப் போய் இறங்கப்போறோம் பாஸ்போர்ட் இல்லாம!




நம்மை அப்பப்பக் 'கண்டு பிடிச்சுக் கோட்டை விட்டு'க்கிட்டு இருக்கும் பாலுக்கு, 'எங்களுக்குச் சிரமமா இருக்கு.இறங்குறதுக்குப் பொருத்தமான இடம் கிடைக்கலை'ன்னு டீன் சொன்னதும் 'குபுக்'னு ஒரு ச்சின்ன பயம் எட்டிப்பார்க்குது. நிஜமான்னு தலையைத் திருப்பிக் கேக்கவும் முடியாத நிலை. படம் எடுத்துத் தள்ளிக்கிட்டே இருக்கா மகள்.அப்ப நானு? ரெண்டு கையிலும் கைப்பிடிக்குள்ள கயிறைப் பிடிச்சவதான். குரங்குப் பிடியோ இல்லை உடும்புப் பிடியோ எதோ ஒண்ணு.




ஒன்னரை மணி நேரமா வானவெளியில் மிதந்துக்கிட்டு இருக்கோம். லேண்டிங் பொஸீஷனை ஒரு முறை ப்ராக்டீஸ் செய்யச் சொன்னதும் கச்சிதமாச் செஞ்சு காமிச்சு 'வெரி குட்' வாங்குனோம். அங்கே இங்கேன்னு இடம் பார்த்து ஒருவழியா பொருத்தமான நிலத்துலே ( யார் வீட்டு நிலமோ?) இறங்கப் போறோமாம். சரசரன்னு உயரம் கம்மியாகிக்கிட்டே வருது.'வந்தாச்சு, வந்தாச்சு இன்னும் சில விநாடிகள்தான்'னு டீன் எங்களுக்குச் சொல்லிக்கிட்டே வர்றார். முழங்காலை மடிச்சு எதோ நாற்காலியில் உக்காந்துருக்காப்புலே ஒருத்தருக்குப் பின்னே ஒருத்தரா நானும்,பின்னால் மகளும். இதோ இதோன்னு தரையை உரசிக்கிட்டு ஒரு பத்து மீட்டர் உராய்ஞ்சுக்கிட்டே போய் கூடை அப்படியே சரிஞ்சு படுத்துச்சு. எதோ ராக்கெட்லே போனமாதிரி நாங்க படுத்த நிலையில் ஆகாயத்தைப் பார்த்து!




வெளியே குதிக்கறது எப்படின்னு ஆரம்பத்தில் இருந்த என் கவலை இப்ப அடியோடு மாறி, எப்படித் தவழ்ந்து வெளியேறப் போறோமுன்னு ஆச்சு. குப்புற இருந்தா தவழ்ந்துறலாம். இப்ப மல்லாந்து கிடக்கறேனே, ஆமையைத் திருப்பிப் போட்டது போல!




கூடையின் வெளிப்பக்கம் பிடிச்சுத் தொங்கின டீன் சுத்திக்கிட்டு வந்து என்னை வெளியே இழுத்துப் போடவேண்டியதாப் போச்சு:-)பாவம், மகள். டக்னு புரண்டு வெளியே வந்துட்டாள். ஹேப்பி லேண்டிங் ஆயிருச்சுன்னு எல்லாருக்கும் மகிழ்ச்சி.



அதுக்குள்ளே பால், பண்ணையின் சொந்தக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டார். பண்ணையின் அடுத்த பக்கமிருந்து மூணு ச்சின்னப் பசங்களும் அவுங்க அம்மாவும் ஓடி வந்தாங்க. எல்லார் முகத்திலும் ஏகப்பட்ட சந்தோஷம், ஆச்சரியம்.




'Thanks for letting us to land'னு நான் சொன்னதும் ஒரே சிரிப்பு. எங்களுக்குத்தான் அதிர்ஷ்டம். இங்கே வந்து இறங்குனீங்க. பிள்ளைகளுக்கு ஒரே எக்ஸைட்மெண்ட். நாளைக்குப் பள்ளிக்கூடத்துலே போய் சொல்லி பெருமைப்பட்டுக்குவாங்கன்னு அந்தம்மா சொன்னாங்க.




'சினிமா வசனம்' மாதிரி, 'இப்ப இது எந்த இடம்?' னு கேட்டேன். 'லேக் சைடு' என்ற இடமாம். 'லீஸ்டன்' என்ற பெரிய(?)ஊருக்குப் பக்கம். கிறைஸ்ட்சர்ச் எவ்வளவு தூரமுன்னு கேட்டேன். ஒரு மணி நேரப் பயணமாம். லீஸ்டனே ரொம்பச் சின்னது. மொத்தமக்கள் தொகை 1203. அப்ப இங்கே எவ்வளோ இருப்பாங்க? 400 தேறுனாலே அதிகம்.




அந்த ஏரியாவில் 97.7 சதவீதம் வெள்ளைக்காரர்கள் இருக்கும் பண்ணை வீடுகள்தான். புதுசா ரெண்டு வேற்றின மக்களைப் பார்த்த ஆச்சரியம் பிள்ளைங்க முகத்தில். '2 ப்ரேவ் இண்டியன் விமன்'னு நாளைக்கு எங்களைப்பத்திச்சொல்லுங்கோன்னு சொன்னதும் பிள்ளைகளுக்குச் சிரிப்புத்தாங்கலை. இதுக்குள்ளே மூணு பலூன்களில் 'ஹீலியம்' நிரப்பிப் பசங்க கையிலே கொடூத்தார் பால். பிள்ளைங்க பேர், என்ன படிக்கிறாங்கன்னு கொஞ்சம் குசலம் விசாரிச்சேன்.




நல்ல வேளை, அவுங்க பண்ணையில் இந்த இடத்தில் இன்னும் விதைப்பு ஆரம்பிக்கலை. போனவாரம்தான் மறுபக்கத்தில் தொடங்கி விதைச்சுக்கிட்டு வராங்களாம். பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர் எல்லாம் விதைப்பாங்களாம்.விவசாயம் அவ்வளவா லாபமா இல்லை இப்பெல்லாம்னு சொன்னாங்க. ஆனா இங்கே இருக்கும் பிரபல நிறுவனமான 'வாட்டீஸ் கம்பெனி'யுடன் ஒப்பந்தம் இருக்கறதாலே அவுங்களே எல்லாத்தையும் வாங்கிக்கிறாங்களாம். வாட்டீஸ் தான் உறையவச்ச காய்கறிகள், டின்னில் வரும் காய்கறிகள்னு பலவகையில் பதப்படுத்தின வகைகளை சூப்பர் மார்கெட் செயினுக்குப் பண்ணறவங்க.




பலூன் வேலை செய்யும் விதம், தீ பாயும் விதம் எல்லாம் பிள்ளைகளுக்குக் காமிச்சு விளக்குனார் டீன். எவ்வளவு செலவாகும் இந்தப் பயணத்துக்கு அந்தம்மா கேட்டாங்க. ஒரு ஆளுக்கு $280 டாலர்கள்னு பால் சொன்னார்.
மொத்தம் 400 கிலோ எடை அந்தக் கூடைத் தொட்டிலும், மற்ற உபகரணங்களும், பலூனும். இது பயிற்சி பலூன் என்றதாலே பெரிய சிலிண்டர் வச்சுருக்கு. சுற்றுலாப் பயணிகள் வகைன்னா ச்சின்ன சிலிண்டர் இருப்பதால்,கொஞ்சம் நல்லா அசையக் கொள்ள இடம் தாராளமா(???) இருக்கு(மா)ம். சில பெரிய பலூன்களில் 22 பேர்வரைப் போகமுடியுமாம்.



பழையபடி பலூன் துணிகளைச் சுருட்டி, எல்லாத்தையும் ஒழுங்கா பேக் பண்ணி ட்ரெயிலரில் அடைச்சுக்கிட்டு,மறுபடி நன்றி சொல்லிட்டு அவுங்க இமெயில் ஐடியும் வாங்கிக்கிட்டு வந்தேன். படங்களை அனுப்பத்தான். அனுப்பியாச்சு.




ஒருமணி நேரம் பயணம் செஞ்சுக் காரை விட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம். பலூனில் பறந்ததுக்கு அதுவும் 'க்ரூ' மெம்பராப் பறந்ததுக்கு ஒரு சான்றிதழ் கிடைச்சது. வர்ற வழியெல்லாம் இந்த ஆட்டை மேலே இருந்து பார்த்த ஞாபகம் இருக்கு.இந்த மாடு ரொம்ப ஃபெமிலியரா இருக்குன்னு ஒரே கலாட்டா. அப்பாவும் மகனுமா இது ஒரு டீம் வொர்க். மேலே பறந்து போகறதைவிட, எந்த இடத்துக்குப் பலூன் போகுதுன்னு தரையில் இருந்து பார்த்துக்கிட்டே அங்கே வந்து சேர்றதுதான் ரொம்பக் கஷ்டம். இல்லையா?




இவ்வளவும் சொன்னவ ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லலை பாருங்க. இது எங்களுக்கு 'ஓசிப் பயணம்' :-) கைக்காசு செலவில்லாம, ஒரு இனிமையான, புதுமையான அனுபவம் கிடைச்சதுக்கு முதலில் மகளுக்கும், அப்புறம் பால் & டீனுக்கும் நன்றி சொல்லிக்கறேன். எனக்குன்னு வாய்க்குது பாருங்களேன்:-))))