Showing posts with label Alappuzha ஆலப்புழா மரியா ஹெரிடேஜ். Show all posts
Showing posts with label Alappuzha ஆலப்புழா மரியா ஹெரிடேஜ். Show all posts

Wednesday, April 15, 2015

கஞ்சி ஊத்துனவரை, இப்படிக் கழுவித் துரத்துனா எப்படி? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 40)

அற்புத நாராயணரின் தரிசனம் முடிச்சுச் சரியா எட்டேகாலுக்கு  மரியாவுக்குத் திரும்பி இருந்தோம்.  எட்டரை  வரை கொஞ்சம் க்ளிக்ஸ். அப்புறம் பெட்டிகளை  ரெடி பண்ணி வச்சுட்டு  இருக்குபோது   காலை உணவு தயார்ன்னு ரெமா வந்து சொன்னாங்க.  சாப்பிட்டதும் கிளம்பறோமுன்னு  சொன்னேன்.

 கொன்னை பூத்துக்குலுங்குது.  அதுலே  முருங்கைக்காய் போல ஒரு காய் வருதே!

புட்டு வந்தது.  இத்திரி நெய் உண்டோன்னதும் இன்னொரு வெலவெல! பட்டர் இருக்குன்னாங்க. சரி போகட்டும் அதையே கொண்டு வாங்கன்னேன்.  ஏத்தப்பழம் கூட வாங்கிக்கலையாம். சாப்பாட்டு மேஜையில் இருந்த பழக்கூடை வாழைப்பழம்  எடுத்துக்கிட்டேன்.  பஞ்சஸார வேணுமுன்னதும் ஓடிப்போய்க் கொண்டு வந்தாங்க.  புட்டு, பழம், பட்டர் , சீனி சேர்த்து சாப்பிட்டு முடிச்சோம். அடுப்பில் வச்சு சுட்ட நேந்திரம்பழம் புட்டுக்குச் சரியான கூட்டு!  கடைக்குப் போய்வர  ஆளில்லையோ என்னவோ?

உண்மையைச் சொன்னால்....புட்டுகூட ரொம்ப சுமாராத்தான் இருந்தது. ம்ருதுவாக இல்லை. இதைவிட நானே அட்டகாசமா மென்புட்டு செய்வேன்,கேட்டோ! எப்பவாவது  சமோவாத்தீவில்  இருந்து இங்கே வரும் நேந்திரங்காயைப் பழுக்க வச்சு  அதை மைக்ரோவேவ் அவனில் மூணு நிமிசம் வச்சு எடுத்தால் புட்டும் பழமும் காம்பினேஷன் சூப்பரா அமைஞ்சுரும் நம்ம வீட்டில்.  பழம் பழுத்த மறுநாள் புட்டுன்றது  நம்ம வீட்டு சமாச்சாரம்.

மரியாவை விட்டுக்கிளம்பும்போது இன்னும் ரெண்டுநாள் தங்கலையே என்ற ஏக்கமும்,   நல்லவேளை  ஒருநாள் மட்டும் தங்கினோம். ரெண்டுமூணு நாளுன்னால்...சாப்பாட்டுக்குக் கஷ்டமாகி இருக்குமோன்னும்  ஒரே சமயம் இரு வேறு தோணல்கள்! (மனுச மனசு! )


இந்த ஏரியாவில் இருக்கும் 108 களில் ஆறு  இதுவரை பார்த்தாச்சு. இனி  அடுத்த  அஞ்சுக்கு போகவேணாமா?  பம்பா நதிக்கு பைபை சொல்லிட்டுக் குருசடிவரை வந்து ரைட் எடுத்தோம்.  ஆலப்புழா வழிதான் போகணும். அதுக்குமுன்னே படகு வீட்டை ஒரு தடவை கண்ணாலாவது பார்த்துக்கலாமேன்னு காயல்வரை போனோம்.

சாலையில் வரும்பெரிய பாலத்தைக் கடந்து   சைடில்  கீழே  இறங்கும் பாதையில் போனால் படகுவீடுகள் ஏராளமா  இருக்கு. இங்கிருந்துதான்   போட்ஹவுஸ் புக் பண்ணிக்கணும். இது ஒரு பெரிய வியாபாரமா வளர்ந்துருக்கு!  பயங்கர டிமாண்ட் இருப்பதால் எல்லா சீசனிலும்  படகுவீடுகள்  வியாபாரம்  ஓஹோன்னு நடக்குதாம்!  அங்கிருந்த ஆஃபீஸில் ச்சும்மாக் கேட்டு வச்சோம்.  ரெண்டு நாளுக்குப்பிறகு தான் கிடைக்குமுன்னு சொன்னாங்க. பள்ளத்துருத்தின்னு பெயர் இந்த ஏரியாவுக்கு.



இதுலேயும் வெஜிடேரியன் என்றால்  கொஞ்சம் கஷ்டம்தான் போல:( போறபோக்குலே மீன் பிடிச்சு சமைச்சுத் தர்றதா  ஒரு பதிவில் வாசிச்ச நினைவு இருக்கே!  ஆனா ஒன்னு பார்க்கவே அட்டகாசமா இருக்கு!  மாடி வச்ச வீடு கூட இருக்கு!  சின்னதும் பெருசுமா வகைவகையா!   சூப்பர்!


ஆசைக்கு  ஒரு வீடு வாங்கிக்கலாமுன்னு  லேசா கோடி காமிச்சேன். பத்தாயிரம் டாலர்(வரை) என்றார் கோபால். கப்சுப்! படகு செஞ்சுருக்கும் மரமும், ஓலை முடைஞ்சு போட்டுருக்கும் கூரையும்  நாட்டுக்குள்ளே  விடமாட்டாங்க. இல்லைன்னா  100 டாலர்கள் அழுது ஃப்யூமிகேட் பண்ணிக்கணும்.  போகட்டும் போ....  சீச்சீ.... ரொம்பப் புளிக்குது!


ஒன்னரை மணி நேரப்பயணத்தில்  (78 கிமீ)  எரணாகுளம் வந்துருந்தோம். ஊருக்குள் நுழையுமுன் ஒரு  டோல் கேட்.  அப்பதான் கேரளாவில் நுழைஞ்சதில் இருந்து  இதுவரை எங்கேயும் டோல் கட்டலையேன்னு  நினைவுக்கு வந்தது.  கேரள அரசே நல்ல சாலைகளாத்தான் போட்டு வச்சுருக்கு போல!  இது கொச்சி  துறைமுகத்துக்குப் போகும் ரோடு. இங்கே இன்னும் ஒரு நாலு கிலோ மீட்டர்  போனால் இன்னொரு கோவில் இருக்கு. ஆனால் இப்போ மணி  பதினொன்னரை. கோவில் மூடி இருக்கும். மாலையில் வரணும்.  அதுக்குள்ளே இன்றையத் தங்கலுக்கு அறையைத் தேடிக்கணும்.
 சாலையோரக் காந்தி எதுக்கு இந்த முழி முழிக்கிறார்?

நேற்று இரவே  ஆலுவா என்ற ஊரில் தங்கலாமுன்னு முடிவு செஞ்சதுதான்.  எரணாகுளம்  பரபரப்பான பெரிய நகரம். இங்கே நம்ம நோக்கம்  ஒரே ஒரு கோவில்தான். அதனால் ஆலுவா என்றால் பயணம் தொடர எளிதுன்னு நினைச்சோம்.  வலையில் பார்த்து வச்ச ஒரு ஹொட்டேலுக்கு ஃபோன் செஞ்சு  அறை இருக்குன்னு உறுதிப் படுத்திக்கிட்டார் கோபால்.

நாலுகிலோ மீட்டர்தானே.... எதுக்கும் கோவில் திறந்திருக்கான்னு ஒரு பார்வை பார்த்துக்கிட்டே போகலாமுன்னு கோபால் சொன்னதால்  கோவிலைத் தேடிப்போனோம். கவனமாப்போயும்  வழியைத் தவற விட்டுருந்தோம்.  நாங்க போன சின்ன ரோடு கடைசியில் மெயின் ரோடில் போய் சேருது. சாலை முனையில் இருந்த கடையில், கோவிலுக்கு வழி கேட்டால், நீங்கள் வந்த வழியிலேயே 2 கிமீ திரும்பிப்போகணும். ஆனால் கோவில் 11 மணிக்கு நடை சாத்திருவாங்கன்னார்.

சரி. போகட்டும் . சாயங்காலம் வரலாமுன்னு   அதே மெயின் ரோடில் சேர்ந்துக்கிட்டோம். 'சேலம், கொச்சி, கன்யாகுமரி ஹைவே ' இது. நமக்கு ஒரு பத்து கிமீ இதில் பயணம் செய்தால் போதும் ஆலுவா.  ஊருக்குள் நுழைஞ்சு  வலையில்  பார்த்த ஹொட்டேலைத் தேடிக்கிட்டே போகும்போது  வலப்பக்கம் இன்னொரு பெரிய வெள்ளைக் கட்டிடம் அன்னப்பறவை போலக் கண்ணில் பட்டது.

ஹொட்டேல் ஏர்லிங்க் காஸில்.   இடப்பக்கம்  கொஞ்சதூரத்தில் நாம் வலையில் பார்த்தது  இருக்கு.  பார்வைக்கே நல்லா இல்லை. ஏர்லிங்கில்  அறை இருக்கான்னு கேட்கலாமுன்னு  யூ டர்ன் எடுத்து அங்கே போனோம்.
அறை இருக்கு. கடந்த சிலநாட்களில்  இதுக்கு  அஞ்சு நட்சத்திர அந்தஸ்த்து கிடைச்சிருக்குன்னு  உள் அலங்காரம் மாற்றுதல், இன்னும் சில வேலைகள்ன்னு பரபரப்பாக வேலை நடக்குது.  பெஸ்ட் ப்ரைஸ் என்னன்னு சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்கும்போதே... அங்கே வந்த  இளைஞரை பார்த்த வரவேற்பாளர், மேனேஜரே வந்துட்டார்ன்னு எழுந்து நின்னார்.

சிரிச்ச முகத்தோடு நம்மைப் பார்த்த மேனேஜர், நாம் சென்னையில் இருந்து வந்துருக்கோமுன்னதும்  சரளமாத் தமிழில் பேச ஆரம்பிச்சுட்டார்.  கல்பாக்கத்தில் வளர்ந்தவராம். அப்பாவுக்கு  அங்கே  வேலை. எஞ்சீனியர் ஆக தொழிலை ஆரம்பித்த அப்பா,  இப்போ ஒரு பகுதிக்கு மேலதிகாரியாக இருக்காராம். மகனுக்கு வீடு, படிப்பு எல்லாம் சென்னைதான்.  இவர் இப்போ இங்கே மேனேஜரா வந்து ஒரு மாசம்தான் ஆச்சுன்னார்.   பெயர் அபிமன்யூ!

 அடடா..... இப்பதானே மஹாபாரதம் தொடரில்  பார்த்துக்கிட்டு இருந்தோம்!
எத்தனை நாள் தங்க உத்தேசமென்றார். ஒருநாள்தான் என்றோம். வேறு எந்த உதவி வேணுமானாலும் செஞ்சு தரேன்னார். 38 வருசங்களுக்கு முன் இங்கே இந்த ஏரியாவில்தான் ஒன்னரை வருசம் குப்பை கொட்டினோம் என்றேன்.   நல்ல டிஸ்கவுண்ட்டுடன்   அட்டகாசமான அறை  கிடைச்சது!

பகல் சாப்பாட்டுக்கு  வெளியே எங்காவது போய் சாப்பிடும் சாக்கில் ஊரைப் பார்க்கலாம் என்று கிளம்பினோம். சரியா 38 வருசங்களுக்குப்பிறகு வந்துருக்கோம். முதலில் ஆலுவா ஊரே அடையாளம் தெரியாமத்தானே கிடக்கு!  எங்கே பார்த்தாலும் புதுசு புதுசா சர்ச்சுகள்! ஒவ்வொன்னும் பெரிய பாஸிலிக்கா போலல்லே  நிக்குது!


எக்கச்சக்கமான கடைகளும், ஏகப்பட்ட  வாகனங்களும் அகலமான சாலைகளுமால்லே கிடக்கு! கொஞ்ச தூரத்தில் கார்னிவல் கோர்ட்ன்னு ஒரு கட்டிடம்.  உள்ளே ஃபுட் கோர்ட்.  போய்ப் பார்க்கலாமுன்னு  போனால்.... வரிசையா ஏழெட்டுக் கடைகள். சிம்Bப்ளி சௌத் அய்க்கோட்டே!


கோபாலுக்கும் சீனிவாசனுக்கும் தாலி மீல். எனக்கு ஆப்பம், தேங்காய்ப்பால்.
அறைக்கு வந்து அடுத்த திட்டம் என்னன்னு  யோசித்தால்....


 சாலக்குடிக்குப்போயிட்டு வந்துடலாமுன்னு கோபால் சொன்னார். நாளைக்கு அந்த வழியாத்தானே போகணும் என்றால்,  கோவில் திறக்க  மாலை அஞ்சு ஆகிருமே.  அதுவரை என்ன  செய்ய?

38 வருசங்களுக்குப்பிறகு  நாங்க சுற்றித் திரிஞ்ச ஏரியாவுக்குப் போறோம்.  அங்கமாலி, கருகுட்டி, கொரட்டி, முரிங்கூர், சாலக்குடி!

அங்கமாலியில் மெயின் ரோடுக்குப் பக்கத்திலேயே ஃபிஜித் தோழி வீடு கட்டி இருக்காங்கன்னு தெரியும். அடையாளம்  சொல்லி படமும் அனுப்பி இருந்தாங்க. அதைப் பார்க்கணுமுன்னு கேமெராவும் கையுமா கண்ணை நட்டு வச்சேன் வலப்பக்கம்.கண் பூத்தது மிச்சம். சாலை ஓரங்கள் பூராவும் ஏகப்பட்ட கட்டிடங்களும் கடைகளும்.

அடுத்து  கருகுட்டி என்னும் ஊரைச் சமீபிக்கிறோம்.  கோபால் பரபரப்பா இருக்கார்! கருகுட்டி கேபிள்ஸ் என்று மக்கள்ஸ் செல்லமாச் சொல்லும் ப்ரீமியர் கேபிள் கம்பெனி வரப்போகுது. இங்கேதான்  எலக்ட்ரிக்கல் கேபிள் & ஒயர் செய்யும்  ஃபேக்டரியில் இவர் பயிற்சி எடுத்தார்.  ஆச்சு அது ஒரு 38 கொல்லங்களுக்கு முன்பு. இப்பவும் நமக்குச்  சோறு போடும் அன்னதாதா இந்தத் தொழில்தானே!



கம்பெனி இருந்த இடம் இருக்கே தவிர   தொழிற்சாலையைக் காணோம்! நாங்க  அந்த ஊரைவிட்டு வந்த ஒரு பத்து வருசத்துக்குள்ளே தொழிற்சங்கப் பிரச்சனைகளால்  இழுத்து மூடிட்டாங்கன்னு தெரியும்தான்.  ஆனா அடையாளமே இல்லாமப்போயிருமுன்னு கொஞ்சம்கூட  எதிர்பார்க்கலை:(

 ராஜஸ்தான் முதலாளியால் தாக்குப்பிடிக்க முடியலை. முன்னூறுபேருக்கு வேலை போச்:( செங்கொடி பிடிச்சே, வயித்துலே ஈரத்துணி போட்டுக்க வச்சுட்டாங்க. இப்பெல்லாம் கேரளாவில் எதாவது தொழில் தொடங்கணும் என்ற நினைப்பே யாருக்கும் வராமப் பார்த்துக் கிடறாங்க.:(

இப்ப அங்கே வேறெதோ ஷாப்பிங் செண்ட்டர் வரப்போகுதாம்!

தொடரும்..........:-)



Monday, March 30, 2015

ஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 34)

செங்கண்ணூரில் இருந்து புலிக்குன்னு போகிறோம்.   என்ன விசேஷமாம்? புலிகள் வசிக்கும் குன்றா? ஆமாமாம்..... புலிகளை வச்சுக் காப்பாத்திட்டாலும்....    அங்கேதான் இன்றைக்கு ராத்தங்கல். முதலில் நம்ம திட்டத்தின்படி  ஆலப்புழாவில் படகு வீட்டில் ஒருநாள் என்று நினைத்திருந்ததை, மாத்திக்கும்படி ஆச்சு. ஏற்கெனவே எங்கேயுமே ஹொட்டேல் ஒன்னும் நியூஸியில் இருந்து புக் பண்ணிக்காமத்தான் இந்தப்பயணம் தொடங்கியது.

ஒவ்வொரு இடத்திலும் இரவு தங்கும்போது அடுத்த நாளுக்கான இடத்தை வலையில் தேடி செல்லில் கூப்பிட்டு புக் பண்ணிக்கிட்டே போறோம். அதன்படி பார்த்தால் படகு வீட்டுக்குப்போனால் அங்கேயே ஒருநாள் முழுக்கத் தண்ணீரில் இருக்கணும்தான். ஹொட்டேல் அறைபோல  நினைச்சபோது அக்கம்பக்கம் போய் கோவில்கள் பார்த்தெல்லாம் திரும்ப முடியாது.   'ரிலாக்ஸா உக்கார இப்போ நேரமில்லை.  பின்னே ஒருக்கில் ஆகட்டே'
ன்னு  ஹொட்டேல்களைத் தேடுனப்ப  கண்ணில் பட்டது மரியா!

வலையில் படங்களைக் காமிச்சார் கோபால். காதலில் விழுந்தேன்:-)

செங்கண்ணூரில் இருந்து வெறும் 32 கிமீ தூரம்தான்.  பகவத் கார்டனில்  இருந்து வண்டியைக் கிளப்பி மெயின் ரோடு வர்றோம். எதிரில்  கட்சி ஊர்வலம் ஒன்னு வருது.  ஆர் டி ஓ. ஆஃபீஸ் பிக்கெட்டிங், சி பி ஐ நடத்துதாம்.  நேதாவு சதாசிவன் எம் எல் ஏ  ஆரம்பிச்சு வைக்கிறார். அதானே... வந்து முழுசா ஒருநாளாச்சு. இதுவரை  கம்யூனிஸ்ட் பார்ட்டி  ஊர்வலம் கண்ணில் படலையே! கேரளாவில் முந்தியெல்லாம்  கொடிபிடிச்சுக்கிட்டுக் கட்சி ஊர்வலம் போகும்போது  ஒத்தையாளா வரிசையில் கடந்து போவாங்க. அனுமன் வால் போல் நீளமாப் போய்க்கிட்டு இருக்கும். இப்ப மக்கள் தொகை கூடிப்போச்சு. மேலும் கொஞ்சம் பெரிய ஊராவும் இருக்கே.

காலையில் நாம் திருவல்லா வரை போனோம் பாருங்க  அதே ரோடுதான். ப்றாவடியைத் தாண்டும்போதுதான்  இது மனஸிலாச்சு. அங்கேயும் ஒரு  கட்சி ஊர்வலம் ஆரம்பிக்க மக்கள் கூடிக்கிட்டு இருக்காங்க. இது எதுக்குன்னு தெரியலை. சில காவிக்கொடிகளும் செங்கொடிகளுமா இருக்கு.


திருவல்லா ஜங்ஷன்  கடக்கும் இடத்தில் கட்சி மீட்டிங் நடக்குது. பி எஸ் என் எல் கட்டிடத்துக்கு முன்னாலே!  நல்ல கூட்டம். மைக் பிடிச்சவர் ஆவேசமா வெல்லு விளிக்கிறார்.  22  நிமிசப் பயணத்துலே மூணு இடங்களில்  போராட்டம்.  ஆஃபீஸ்களில் வேலை நடந்த மாதிரிதான்:(






திருவல்லா- செங்கணாஞ்சேரி ரோடு. நாம் அதுவரை போகவேண்டியதில்லை. பெருந்துருத்தி கடந்து பெருந்நா என்ற இடத்தில் வந்து சேரும் ஆலப்புழை செங்கணாஞ்சேரி ஹைவேயில் (ஸ்ட்டேட் ஹைவே 11) லெஃப்ட் எடுத்துக்கணும்.  கூகுள் மேப் பார்த்து , சீனிவாசனுக்கு வழிசொல்லிக்கிட்டே வர்றார் கோபால்.

ஹைவே இடதுபக்கம் திரும்பியதும் கொஞ்சதூரத்தில்   எனக்கிடதுபக்கம் பெரிய ஆறு போல் அகலமா  இருக்கு. அடுத்த கரையில் வீடுகள். இங்கிருந்து அங்கு போக  உயர்த்திக் கட்டிய பாலங்கள்!  ஏன் இவ்ளோ உயரத்தில் பாலங்கள்? அடியிலே படகு (வீடு) போகணுமே!  ஏஸி கனால் (Aleppey Canal) என்ற இதுதான் கீழைநாட்டு வெனிஸ்! காயல்! The backwaters of Kerala.    ஆலப்புழையில்  படகுவீட்டில் தங்கினோமானால் இங்கெல்லாம்தான் கொண்டு வருவார்கள்.


இக்கரையில்  ஹைவே பயணிகளுக்காக  எல்லா மரங்களிலும் காய்க்காமல் தொங்கும்  இளநீர்க்குலைகள்:-)  நமக்கும் தாகசாந்தி ஆச்சு.  புளிக்குன்னு போர்டு பார்த்ததும் ஆஹா... இது புலி இல்லை. புளின்னு புரிஞ்சது.  இதுவரை சரியான வழிதான். இனி போகும் வழி விபரத்துக்கு, உடனே மரியாவுக்கு  செல்லடிச்சால் எங்கே இருக்கீங்கன்னு கேட்டாங்க. இப்ப  குருசடிகிட்டே  வந்தாச்சுன்னேன்.  ரொம்ப நல்லது. அதே இடம்தான். ரைட் எடுத்துக்கிட்டு நேரே வாங்க. ஒரு டெட் எண்ட் வரும். அங்கே இடது பக்கம் திரும்பிருங்கன்னு பதில்.


இந்தக் குருசடி என்பது என்னன்னா.... நம்மூர் சாலைகளில்  கிராமதேவதை, மாரியம்மன் , புள்ளையார்ன்னு  அங்கங்கே தெருவோரக் கோவில்கள் இருக்கும் பாருங்க. அதைப்போலத்தான்.  கொஞ்சம் பெருசா நவீனமாக் கட்டி அதன்மேல் யேசு, சிலுவை , மாதா  இப்படி சிலைகளை  வச்சுருப்பாங்க. இங்கே சிலுவையும்  இருக்கு, உள்ளே சிலைகளும்  இருக்கு. குரிசு = சிலுவை. குரிசடி  என்றுதான் சரியாச் சொல்லணும். ஆனா பேச்சு வழக்கில் குருசடி ஆகிப்போச்சு.

 ஆக்ஞை அனுசரிச்சு வலதுபக்கம் திரும்பிப்போறோம்.  குட்ட நாடு பகுதி இது.  அறுவடை முடிஞ்சு நீர் தேங்கி நிற்கும் நிலங்கள்,  அதுலே புழு பூச்சி, சின்ன மீன்கள் பிடிச்சுத்தின்னு பசியாற இறங்கி இருக்கும் நாரைகள், அழகழகான பங்களாக்கள், எங்கே பார்த்தாலும் பசுமையும் அதில் தெங்குகளுமா.....  ஜோரா இருக்கு! கிட்டத்த மூணு கிமீ தூரம் இந்த தெவிட்டாத அழகு!



இந்தத் தெரு போய் முடியும் இடத்தில் தண்ணீர்!  ஆறு பெருக்கெடுத்து ஓடுது. இடது பக்கம் திரும்பணுமேன்னு பார்த்தால்  எங்கே பார்த்தாலும் தண்ணீர்தான்.  எதிர்க்கரையில் இருந்து மக்கள் இங்கே வர படகு சர்வீஸ் வேற!  ஆட்களை இறக்க, ஆட்களை  ஏத்த கம்பி ஏணியைப் படகுக்கும்  கரைக்கும் பாலமா வச்சுருக்காங்க.

படகுலே வந்திறங்கும் மக்களை ஏத்திக்கிட்டுப்போக பஸ்  நிக்குது.
அங்கிருந்த ஆட்களிடம் மரியான்னதும் இடத்துன்னு தண்ணியிலே  கை காமிக்கறாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  ஒருவேளை  பின்பக்கத்து வழி இருக்குமோன்னு  போன வழியிலே கொஞ்சூண்டு திரும்பி வந்து  பார்த்தால்  வழி ஒன்னும் இல்லை. அங்கே  பஸ்ஸுக்குப் பக்கம் நின்னவரிடம் கேட்டால்   '100 மீட்டர் இடத்துவசம்' என்றார்.

திரும்பிப்போய்  தண்ணீரைப் பார்த்து நிக்கும்போது , மரியாவில் இருந்து கூப்பிட்டு  என்ன ஆச்சுன்னாங்க.  வெறும் தண்ணீரா இருக்கு.  எப்படி வரன்னால்.... தண்ணீரிலேயே வாங்கன்னு பதில். போச்சுரா.... ஒருவேளை படகில் போகணுமோ?

அதுக்குள்ளே ஒரு  மோட்டர்சைக்கிள்காரர் இடதுபக்கம் தண்ணீரிலேயே  வண்டியை ஓட்டிக்கிட்டுப்போறார். 'ஙே'ன்னு பார்க்கிறோம்.  தெய்வம் வழி காட்டுவதைப்போல் ஒரு கார் இடத்துவசம் திரும்புச்சு.  கவனிச்சுப் பார்த்தால்.... காம்பவுண்டு சுவரை ஒட்டியே  கார் போகுது.  ஓஹோ... தண்ணியிலேயே  ஓட்டிப்போகணும் போல!  பெருமாளே காப்பாத்துன்னு நாமும் அந்தக் காரை பின் தொடர்ந்தோம்.  இடது பக்கம் இருக்கும் பெரிய பங்களாவுக்குள்ளே முன்னாலே போன கார் நுழைஞ்சது.  சின்னதா ஒருமேடு நமக்கு முன்னால். அதுலே ஏறி இறங்கினதும்  இடத்துவசம் நாம் தேடி வந்த மரியா!

உள்ளே போய் வண்டியை நிறுத்திட்டு இறங்கிபோனோம்.  ரெமா நமக்காகக் காத்திருந்தாங்க.

நமக்கான அறையைக் காமிச்சதும் அங்கே பெட்டிகளைக் கொண்டு வந்து வச்சார்  பணியாளர். இடத்தைச் சுத்திப் பார்க்க நினைக்கும்போது மகளிடமிருந்து ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ், கூப்பிடச் சொல்லி.  உடனே  கூப்பிட்டோம்.  போனில் ஒரே அழுகை. என்ன ஏதுன்னு விசாரிக்கிறோம். விக்கிவிக்கி வரும் அழுகையைத்தவிர வேறொன்னுமில்லை:(  நான் ரொம்பவே பயந்து போயிட்டேன். கோபால்  திகைச்சு நிக்கிறார்!

இன்றைக்கு கொஞ்ச நேரம் அழவிட்டுட்டு,(அப்பதான்   அவள் மனசுக்கு ஆறுதல் கிடைக்கும்)   என்ன ஆச்சுன்னு கேட்டேன். செத்துப்போயிட்டான்னு சொல்லி திரும்பவும் அழ ஆரம்பிச்சாள். ப்ச்.... எனக்கே அழுகை வந்து இந்தப் பக்கத்தில் இருந்து நான் அழறேன்:(

நாங்க நியூஸியிலிருந்து கிளம்பறதுக்கு மூணு நாளைக்கு முன்னால் அவளுடைய கடவுளரில் ஒன்னு காணாமப்போயிருச்சு.  அக்கம்பக்கம் போயிருக்கும் திரும்பி வந்துருமுன்னு சொன்னேன். அப்புறமும் காணோம் என்றதும் கொஞ்சம் கவலையாத்தான் இருந்துச்சு. எதுக்கும் RSPCA க்கு ஃபோன் செஞ்சு கேட்ருக்காள்.  யார் வீட்டுக்காவது போயிருந்தால் அவுங்க ரிப்போர்ட் செஞ்சுருப்பாங்கதானே?

இதுலே  என்னன்னா  Zeus  ரொம்பவே ஃப்ரண்டிலியானவன். நல்லா கம்பீரமாகவும் இருப்பான். அவன் வகை அப்படி. தெருவிலே போகும் யாராவது  'கேட்நாப்' பண்ணிருப்பாங்களோன்னும் ஒரு எண்ணம் எனக்குள். அவளும் அவன் படம் ,விவரம் எல்லாம் ப்ரிண்ட்  எடுத்து அக்கம்பக்கம்  அவுங்க பேட்டையில் எல்லா வீட்டு மெயில்பாக்ஸிலும்போட்டுட்டு வந்துருக்காள்.

நாங்கள் பயணத்திலும் தினமும்  அவளிடம் பேசும்போது கிடைச்சானான்னு கேட்டுக்கிட்டே இருந்தோம். இல்லை இல்லை என்பதே பதில். நானும் ஒவ்வொரு கோவிலிலும்  தரிசனம் செய்யும்போது இவனுக்காகவும் வேண்டிக்கிட்டே இருந்தேன்.


அவன் எதோ வண்டியில் அடிபட்டு, நாலாவது வீட்டுத் தோட்டத்தில் புதருக்குள் கிடந்துருக்கான்.  எத்தனை நாள் இருந்தானோ யாருக்குத் தெரியும்?  இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அந்த வீட்டுவாசி வந்து , ' ப்ளையர் பார்த்தேன்.  உங்க பூனை காணாமப் போயிருச்சா' ன்னு கேட்டுருக்கார்.  ஆமான்னதும், எங்க தோட்டத்தில் ஒரு புதருக்குள்ளே ஒரு பூனை இருக்கு. வந்து பாருங்கன்னதும் இவள் ஓடி இருக்காள்.  அது நம்ம பையன்தான். கழுத்துலே காலர் இருக்குல்லே!

உடனே வீட்டுக்கு ஓடி வந்து நமக்கு டெக்ஸ்ட் செஞ்சுருக்காள்.  பூனை எங்கேன்னால்.... அங்கேதான் இருக்காம். 'ஒரு அட்டைப்பொட்டி கொண்டு போய் எடுத்துக்கிட்டு  வா'ன்னேன்.  ஐயோன்னு மீண்டும் அழுதாள். ப்ச்.....

அவனை என்ன செய்யணுமுன்னு கேட்டதுக்கு,  'பெட் க்ரெமேஷன்  சர்வீஸுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அவுங்க  வந்து கொண்டு போய்  எரிச்சு சாம்பல் தருவாங்க. வாங்கி வை. நாம் திரும்பி வந்ததும் மேற்கொண்டு யோசிக்கலாம்' என்றேன். நம்ம பசங்க  அஸ்தியை கங்கையில் கரைச்சது நினைவுக்கு வந்து ஒரு பாட்டம் அழுது ஓய்ஞ்சேன்.

மனசே சரியில்லை. என்னடா பெருமாளே இப்படிப் பண்ணிட்டே?

 அடிபட்டவன் பேசாம நம்ம வீட்டுக்கே வந்துருந்தால் அவனை நம்ம வெட்னரி க்ளினிக் கொண்டுபோய் காப்பாத்தி இருக்கலாமுல்லெ?  பாவம்....குழந்தை. இப்படி ஒரு முடிவு வந்துச்சே:(

தொடரும்..........:-(