Friday, July 29, 2022

ஹோலிகா என் தோழி !!!!

நம்ம ஊர் ஹரே க்ருஷ்ணா கோவிலில்  மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்தில்  மூணே மூணு அவதாரத்தைத்தான் பெரிய விழாவாகக் கொண்டாடுவாங்க.  பாக்கி ஆறு எனக்குத் தெரிஞ்சவரையில் இல்லை. நாமும்தான் வீடுகளில்  கொண்டாடறோமோ ? தெரியலையே....   நான்  நம்ம வீட்டில்  நாலு  அவதாரங்களைக் கொண்டாடுவது வழக்கம். நரசிம்ஹன்,  வாமனன்/த்ரிவிக்ரமன்,  ராமன்  & க்ருஷ்ணன். 

நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு  சாயங்காலம் ஸ்ரீ நரசிம்ஹ ஜயந்தி விழாவுக்குப் போகணும்.  பெரிய நரசிம்ஹர் இருக்காருன்னு  சேதி அனுப்பினாங்க. காலையில் நம்ம வீட்டுலே பூஜை ஆச்சு.   சிலசமயம்  நம்ம தசாவதாரம் செட்டுலே இருக்கும் ஸ்ரீ நரசிம்ஹர் சிறப்புப் பூஜையில்  கலந்துக்குவார்.  இந்த முறை தூணைப்பிளந்துவரும் நரசிம்ஹர் வருகை!  போன கொலுவுக்கு  வந்தவர்தான் :-)

யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்  அடைஞ்சவன்,  ஹிரண்யக்கசிபுதான்.  
யாருக்குமே  ஏன்  லக்ஷ்மிக்கும், ப்ரஹலாதனுக்கும் கூட கிட்டாத பாக்கியம் இந்த  ஹிரண்யகசிபுக்கு எப்படிக் கிடைச்சுருக்கு பாருங்க!  அவுங்களுக்கெல்லாம்  வெறும் இடது தொடை. இவனுக்கோ ரெண்டு தொடையிலும்  கிடக்கும்  பாக்கியம்! இப்படிச் செத்தாலும் பரவாயில்லைதான்! இது ஒரு கொடுப்பினை, இல்லையோ?  இது எப்படி வாய்ச்சது? கதையை இங்கே சொல்லித்தான் ஆகணும் இப்போ:-)
மேலே படம்: சண்டிகர் ஹரே க்ருஷ்ணா கோவில்.

நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர்  வேலையில் சேர்ந்த  முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில் மக்கள்  பல்கிப்பெருக ஆவன செய்யணும்.  படைத்தல்! முதல் படைப்பா ஒரு நாலு பேரை  உண்டாக்கினார்.  இவுங்கதான் சனகாதிகள். சனகர், சனாதனர், சனந்தனர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார். அடுத்த விநாடியில் நாலு பொண் குழந்தைகளைப் படைச்சிருக்கணும் இல்லையோ?  அங்கெதான்  கோட்டை விட்டுட்டார் :-(
பெயர் சூட்டுதலில் பிஸியாகிட்டாராக இருக்கும்.  இந்த சனகாதிகள்  மக்கள் தொகையைப் பெருக்க தங்களால் ஆனதைச் செய்யாமல்  சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டு தேவலோகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொரு நாளுக்கு  ஒரு இடமுன்னு  சிவலோகம், வைகுண்டம், ப்ரம்ம லோகம் இப்படி  தொடர் பயணம்தான்:-)
ஒரு நாள்  மஹாவிஷ்ணுவைப் பார்க்க  ஸ்ரீவைகுண்டம்  போறாங்க. அங்கே வழக்கமா வாசலைக் காவல் காக்கும் ஜய விஜயர்கள்  ட்யூட்டியில்!  ( பெருமாள் கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு வெளியில் பக்கத்துக்கொன்னா நிப்பாங்களே  அவுங்கதான். ) 

எங்கியாவது போனால், கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்கிட்டே யாரைப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லிட்டுப் போறோமே  அந்த லௌகீகம் எல்லாம் தெரியாது போல இந்த சனகாதிகளுக்கு.
மேலே :நம்ம வீட்டு ஜயவிஜயர்.

கேட் கீப்பரைச் சட்டை செய்யாமல் உள்ளே நேராப்போக ஆரம்பிச்சவங்களை  ஜயவிஜயர்கள் தடுத்து நிறுத்தி, நீங்க யாரு?  என்ன விவரமா வந்தீங்க?  நாங்க உள்ளே போய் நீங்க வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி ஐயா கிட்டே  அனுமதி வாங்கி  வர்றோம். ' சரி. உள்ளே வரச்சொல்லு'ன்னு அனுமதி கொடுத்துட்டாருன்னா  நீங்க உள்ளே போகலாம்னு தன்மையாத்தான் முதலில் சொன்னாங்க.

சொன்னதைக் கேட்டு  சனகாதிகள் சரின்னு சொல்லி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?

'ஏய்... நாங்க யார்னு தெரியுமா? நீ யாரு எங்களைத் தடுத்து நிறுத்த?' ன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சு  பெரிய வாய்ச்சண்டையா முத்திப்போச்சு. 'மரியாதை தெரியாத நீங்க ரெண்டு பேரும்  ஏழு ஜென்மத்துக்கு பூலோகத்தில் அசுரர்களாகப் பிறக்கக்கடவது'ன்னு சாபம் விட்டுடறாங்க!

(பார்த்தீங்கல்லே... மரியாதை இல்லைன்னா பூலோகம்தானாம்!  இப்பல்லாம்  அசுரர்கள் வேற ரூபத்துலே மனுசனாப் பிறந்துடறாங்க. மனுசன்டா...மனுசன்!) 

இவ்ளோ நேரம்  உள்ளே இருந்த எஜமான் (எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி இருப்பார் இவர்!)  'என்ன சத்தம் இந்த நேரம்?' னு வெளி வந்து பார்த்தார்.  இந்தப் பக்கம் காவலாளிகள் ரெண்டுபேரும் பேயறைஞ்சமாதிரி நிக்க,  அந்தப் பக்கம் சனகாதிகள் ஒரே கோபமா நிக்க ன்னு இருக்கு ஸீன். 'அடடா  நீங்களா?  வாங்கவாங்க'ன்னு  ரொம்ப அன்போடும் மரியாதையோடும் கைகூப்பி வணங்கி உள்ளே அழைக்கிறார்.

ஜயவிஜயர்கள்  ரெண்டு பேரும் 'எங்க மேலே தப்பு ஒன்னும் இல்லீங்க ஐயா. எங்க ட்யூட்டியை நாங்க செஞ்சதுக்கு  இவுங்க சாபம் வுட்டுட்டாங்க. வாபஸ் வாங்கிக்கச் சொல்லுங்க'ன்னு   அழுகுரலில்  சொல்றாங்க.

"உங்க வாட்ச்மேன் எங்களை மரியாதை இல்லாம நடத்துனதாலே  சாபம் விடவேண்டியதாப் போச்சு. எங்களால் சாபத்தையெல்லாம் வாபஸ் கீபஸ் வாங்கிக்கமுடியாது. விட்டது விட்டதுதான்."

'ஐயா...   நீங்கதான் சூப்பர் சுப்ரீம்  கோர்ட். நீங்கதான்  எல்லோரையும் விட பெரும் ஆள்.  ஹை கோர்ட் தண்டனையை ரத்து பண்ணி எங்களைக்  காப்பாத்துங்க'ன்னு கெஞ்சிக் கதறி  பெருமாள் கால்லே விழறாங்க.

"இல்லைப்பா... தேவலோகத்துலே நியாயங்கள்  வேற மாதிரி.  ஆளுக்கொரு சட்டம், நியாயமுன்னு இருக்க இதென்ன  பரதகண்டமா?  நீங்க தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். என்னுடைய அதிகாரத்தை வச்சு  வேணுமுன்னா  தண்டனையைக்   கொஞ்சூண்டு குறைக்க முடியும்."

 தூக்குன்றதை ஆயுள் தண்டனை  ஆக்குவது போலவா!

"அந்த ஏழுக்கு பதிலா மூணு  வாட்டி  ஜென்மம் எடுத்தாப் போதும். ஓக்கேயா?"

'சரிங்க  எஜமான். மூணுன்னா மூணு.  ஒவ்வொரு பிறப்பையும் சட்னு முடிச்சுக்கிட்டு சீக்கிரம் இங்கே வந்து ட்யூட்டியில்  சேரணுமுன்னு ஆசீர்வதியுங்க'ன்னு  மறுபடி காலில் விழுந்தாங்க ஜயவிஜயர்கள்.

எடுத்த பிறவியை சட்னு முடிக்க என்ன செய்யலாமுன்னு  பெருமாளையே கேக்க, 'சதா என்னைத் திட்டிக்கிட்டேக் கிடங்க'ன்னாராம். கொடுமை செய்யுங்க. எப்படா இவன் ஒழிவான்னு மத்தவங்க நினைக்கும்படியா நடந்துக்குங்கன்னாராம்.

அவங்களுக்கு இயல்பா இருந்த நல்ல குணத்தால் இதை சட்னு ஒத்துக்க முடியலை. "அதெப்படி எல்லாருக்கும் கொடுமை செய்யறது?  ஒரு நியாயம் வேணாம்? மாத்தி யோசிங்க எஜமானே......"

'சரி. நானே  பூமியில் வந்து பொறக்கதான் போறேன். அந்தக் கெட்டதையெல்லாம் எனக்கே செய்யுங்க'ன்னுட்டார்  பெருமாள்.

 முதல் பிறவியில்  ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற  அண்ணந்தம்பிகளா பூமியில் வந்து பொறந்தாச்சு ஜயவிஜயர்கள். இவுங்க கெட்ட நேரம் இப்ப ஸ்ட்ராங்கா இருக்கு. முதல் பிறவி ஜோர்லே கண்ணுமண்ணு தெரியலை.

அக்ரமம் ஆரம்பிச்சது. ஹிரண்யாக்ஷனுக்கு  போனஸ் மார்க் கொடுக்கும் அளவுக்கு  தீவிரமா போயிட்டான்.  ரிஷிமுனிவர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு அப்படியே தேவலோகத்துக்குப்போய் தேவர்களை எல்லாம்  கொடுமை செஞ்சுட்டு, 'எங்கெடா உங்க ஹரி'ன்னு  தேடிக்கிட்டு இருக்கான். அப்போ  அவர் வேற வேலையா வெளியே போயிருக்கார்.  பெரும்ஆள்  வீட்டுலே இல்லைன்னதும் ஆங்காரமா காலை ஓங்கி  பூலோகத்தை  அழுத்த   அது   அப்படியே பாதாள லோகத்துக்குப் போயிருச்சு.

பூமா தேவி  மனதுக்குள்  ஹரியை  வணங்கி தன்னைக் காப்பாத்த வேண்டிக்கறாள். அவரும் வராஹ அவதாரம் எடுத்து, பாதாள லோகம் போய்  ஹிரண்யாக்ஷனோடு சண்டை போட்டு அவனை வதம் செஞ்சுட்டு, தன் வராக மூக்காண்டை இருக்கும் பெரிய   பல்லால் பூமியைத் தோண்டி எடுத்துக்கிட்டு அப்படியே  வெளியே கொண்டு வந்துட்டார்.  

 தம்பி வரலையேன்னு பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் ஹிரண்யகசிபுக்கு, தம்பி வதம் தெரிஞ்சதும்  கோபம் இன்னும் அதிகமாகிப் போச்சு. அப்பதான்  மகன் ப்ரஹாலதன் பொறந்து  ஹரியே எல்லாம்னு பக்தி பண்ணிக்கிட்டு இருக்கான்.  ஹரி ஓம் நமஹ தவிர வேற ஏதும் புள்ளை வாயில் வரலை!  அட்லீஸ்ட் ஒரே ஒருக்கா ஹிரண்யாய நமஹ சொல்லுடான்னா,  புள்ளையாண்டான் கேட்டாத்தானே?
அடிச்சு உதைச்சு, விஷப்பாம்புகளோடு அறையில் அடைச்சு, கடும்விஷத்தைக் குழந்தையின் அம்மா கையாலேயே குடிக்கக் கொடுத்து, மலை உச்சியில் இருந்து உருட்டிவிட்டு இப்படி  'தமிழ்சினிமா வில்லன் கணக்கா' என்னென்னவோ செஞ்சு பார்த்தாலும் புள்ளை சாவற வழியைக் காணோம். ஒவ்வொரு சமயமும்  பெரும் ஆள் காப்பாத்திடறார்.

என்ன செய்யலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சவன், தன்னுடைய தங்கை ஹோலிகாவைக் கூப்பிட்டு குழந்தையை  'அத்தை மடியில் உக்கார வச்சுக்கோ'ன்னான்.  என்னடா இவ்ளோ ஆசை?  காரணம் இருக்கே!  ஹோலிகாவை அக்னி தீண்டாதுன்னு ஒரு வரம்  இருக்கு.   இதையே வச்சுக் கதையை முடிச்சுக்கணுமுன்னு  திட்டம்தான் அப்பனுக்கு.

மடியில்  மருமானோடு ஹோலிகா  உக்கார்ந்ததும்,  அவளைச் சுத்தி தீ மூட்டி விட்டுடறாங்க. சொக்கப்பானை போல குபுகுபுன்னு எரிஞ்சு  எல்லாம் சாம்பலாகுது.  தொலைஞ்சான்  அந்த ஹரி பக்தன்னு  இருக்கும்போது , சாம்பல் குவியலில் இருந்து, என்னமோ இப்போதான் பூத்த தாமரை மாதிரி  எழுந்து வர்றான் ஹரிபக்தன் பிரஹலாதன். அப்ப அத்தை?  தீ தின்னுருச்சு!  அப்போ  அக்னி தீண்டாதுன்ற வரம் என்ன ஆச்சு?

அதுலே ஒரு சின்ன கேட்ச் இருந்ததை  கவனிக்கத் தவறிட்டாங்க அண்ணனும் தங்கையும். தர்ம நிலை தவறாமல் நடக்கும்போது அக்னி தீண்டாது.  பெத்த பிள்ளையை உயிரோடு தீ வச்சுக் கொளுத்தறது  தர்மமா?  அதுக்குத் துணை போனது அதர்மம் இல்லையா?  இப்படி அவள்  தீயிலே போனதைத்தான் ஹோலிப்பண்டிகையாக் கொண்டாடறாங்க நம்ம வடநாட்டில்.

மனம் வெறுத்துப்போய்  'எப்படிடா எவ்ளோ அடிச்சாலும்  தாங்கறே? எப்படிடா ... எப்படி?'  ன்னு கேட்க,  புள்ளை சொல்றான் 'அந்த ஹரிதான் எனக்கு ஒரு ஆபத்தும் வராமக் காப்பாத்தறார்'னு!

எரிச்சல் மண்டிய நிலையில் அந்த ஹரி எங்கேடா இருக்கான்னதும்  புள்ளை சொல்லுது  'எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கான்.  தூசி துரும்புலேயும் இருக்கார்'

ஹஹா... (கோபச்சிரிப்பு!) தூசி துரும்புலேயும்  இருக்கானா....  தூசியில்கூட  இருக்கான்னா  தூணில் இருக்கானான்னு  அலற,  இருக்காங்குது புள்ளை. எந்தத் தூணில் இருக்கான்?  எல்லாத் தூணிலும்தான் இருக்கான்.  கோபம் தலைக்கேற  எதிரில் இருந்த தூணைக் காமிச்சு  இந்தத் தூணில்  இருக்கானா?  இருக்கான்னு தூணைத் தொட்டுக் காமிச்சான் புள்ளை.

இந்த சமயத்தில் நம்ம பெருமாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு உதறல். எந்த தூணுக்குள்ளே போய் நிக்கறதுன்னு? சின்னப்பிள்ளை எந்தத் தூணை  காமிக்குமோன்னு தெரியலையே...  இல்லாத தூணைக் காமிச்சுட்டா கதை கந்தல் ஆயிருமே.... ஒன்னு செய்யலாம், பேசாம இங்கெ இருக்க எல்லாத் தூணிலும் போய் மறைஞ்சு நிக்கலாமுன்னு அப்படியே செஞ்சானாம்.......... :-)

இருக்கானா......   இருக்கானான்னு வெறிச்சிரிப்போட தூணை எட்டி உதைக்கிறான்  ஹிரண்யகசிபு. அவ்ளோதான்... தூண் மடார்னு  வெடிச்சு ரெண்டாப் பிளக்க,  உள்ளே இருந்து  வர்றான்  பாதி அரியும் பாதி ஹரியுமா  நம்ம  நரசிம்ஹன்.  சிங்கத்தலை! சிங்கக்கை, சிங்க நகம் .பாதிமனிதன் பாதி மிருகம்.


அப்படியே தூக்கி தன்மடியில் வச்சு வயித்தைக் கிழிச்சு குடல் மாலை போட்டுக்கிட்டு   ரத்தம் குடிச்சது எல்லாம் ஆச்சு!


நம்ம கோவில்  நாடகம் இங்கே !

https://www.facebook.com/1309695969/videos/576753297372660/


இப்படித்தான் இரு தொடையிலும் கிடக்கும்  பாக்யம்  ஹிரண்யகசிபுக்கு லபிச்சது!  ஹரியின் விரோதியா இருந்து  சதா சர்வ காலமும்  எதிரியையே நினைச்சுக்கிட்டு இருந்தால் ............  இதுவும் ஒரு தியானம்தான் இல்லே?

இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-)   'சாமி இருக்கு'ன்றவன் இருக்குன்ற நம்பிக்கையில்  அலட்டிக்காமல் இருந்துடறான்.  சாமி இல்லைன்றவன்தான், இல்லைன்னு நிரூபிக்கறதுக்காக  புராணங்களையும் சாமி கதைகளையும் படிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான்.  அதுலே இருக்கும் சம்பவத்தையெல்லாம் முக்கியமா  கொஞ்சம் அரசபுரசலா இருப்பதையெல்லாம்  கவனிச்சு,  உங்க சாமி யோக்கியதையைப் பாருன்னு சொல்லி கேலி செய்யணுமாம்!
இப்பச் சொல்லுங்க... சாமி.... எப்பவாவது நினைக்கும் பக்தனுக்கு  உதவுமா, இல்லை  எப்போதும் நினைக்கும்  அபக்தனுக்கு  உதவுமா?


ஆமாம்...  மற்ற ரெண்டு பிறவிகள் என்ன ஆச்சு கேட்டால்....  ராமாவதார காலத்தில்   ராவணனும் கும்பகர்ணனும்,  க்ருஷ்ணாவதார காலத்தில் தந்தவக்ரனும் சிசுபாலனுமா  இருந்துட்டு  மூணு பிறவி முடிஞ்சதுன்னு  வைகுண்டத்து ட்யூட்டிக்குத் திரும்பிப் போயிட்டாங்க.



ஏற்கெனவே நம்ம துளசிதளத்துலே வந்த பதிவில் இருந்த கதைதான். கதை பழசுன்னாலும் நடிகர்களும் நடிப்பும் புதுசு ! நம்ம ஹரே க்ருஷ்ணா பக்தர்களின் குழந்தைகள் நல்லாவே  நாடகமா நடத்திக் காட்டுனாங்க.  இதுலே வந்த ஹோலிகா........ நம்ம தோழிதான் ! 



8 comments:

said...

அருமை சிறப்பு

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

உங்கள் பாணியில் கதை சுவாரஸ்யம்.  எனக்கும் இப்படி பக்தியா இருக்கறதைவிட எதிரா இருந்தா அருள் தட்கல்ல கிடைக்கற மாதிரி கிடைக்குமோன்னு தோணும்!

said...

கதை சுவாரசியமா சொல்லிருக்கீங்க துளசிக்கா.

ஆனா எனக்கு இந்தக் கதைல நிறைய கேள்விகள் உண்டு!!! நிகழ்வுகள் சிறப்பு

கீதா

said...

கதையும் ஹரேகிருஸ்ணா குழந்தைகளின் நடிப்பும் பிரமாதமாக இருக்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்,

நாத்திகனை சாமிக்குப் பிடிக்கும் !

said...

வாங்க கீதா,

கதைக்குள் ரொம்ப போயிட்டால்.... அப்படி ஆகும். அதான் கொஞ்சம் ஓரமா வெளியில் நின்னு கேட்டுக்கணும் :-)

said...

வாங்க மாதேவி,

நல்ல அர்ப்பணிப்பு சிறு வயது முதல். ரொம்ப மெனெக்கெடாமல் இருப்பதைக்கொண்டு விழாவை சிறப்பாகச் செய்வதில் இவர்களுக்கு நிகர் இல்லைப்பா !