Wednesday, July 20, 2022

ஆஞ்சி மட்டுமா..... நானும்தான் :-)

நம்ம யோகா குடும்பத்தில் ஏப்ரல் மாசம் பொறந்தநாள்  வர்ற  மூவருக்காக ஒரு பார்ட்டியும் , தனித் திறமையைக் காட்டும் இசை நிகழ்ச்சியும் ,  கூடவே ஒரு பூனைநடையும் செய்யலாமுன்னு  ஒரு சனிக்கிழமையன்னிக்கு நம்ம யோகா வகுப்பு ஹாலையே வாடகைக்கு  எடுத்திருந்தோம். ஒரு காமணி நேரமுன்னா வகுப்பு நேரத்தில் இருந்தே எடுத்துக்குவோம்.  இனி அப்படிச் செய்ய வேணாமுன்னு  மாசம் ஒருநாள் சின்ன விழாக்கள். மாசாமாசம் யாருக்காவது பொறந்தநாள் வரத்தானே செய்யுது,  இல்லையோ ! 
வகுப்பு நேரமுன்னா   வகுப்பில் இருப்பவர்கள் மட்டும்தானே.... தனி விழான்னா அவரவர் சொந்தக் குடும்பத்தினரும் கலந்துக்க முடியும் இல்லையோ !  இந்த ஏற்பாடு நல்லாவே இருக்கு !

இடும்பிக்குத்தனி வழி என்பதால் எல்லோரும் பூனை  நடை நடக்க, நான் யானை நடை !

சின்ன க்ளிப்ஸ்  கீழே சுட்டியில்.  பதிவில் வலையேற்ற விடமாட்டேங்குது ப்ளொக்ஸ்பாட்.


https://www.facebook.com/1309695969/videos/990199398340339/

https://www.facebook.com/1309695969/videos/389705323105521/

கோபாலுக்குத் தப்லா வாசிக்கத் தெரியுமுன்னு அன்றைக்குத்தான் கண்டுபிடிச்சேன் !!!  அடடா.... என்ன ஒரு திறமை :-)







பார்ட்டிக்கு அவரவர் கொண்டுவந்த உணவுக்கு  முதலிலேயே மெனு தயாரிச்சு, யார் யார் என்ன கொண்டுவராங்கன்னு கேட்டு அதன்படி ஏற்பாடாச்சு. நமக்கு ஊறுகாய்.  நம்ம வீட்டு எலுமிச்சம்பழத்தில் சொந்தத் தயாரிப்பு.  சும்மா சொல்லக்கூடாது.....  பரபரன்னு தீர்ந்துபோச்சு !  வரவர நான் ஊறுகாய் எக்ஸ்பர்ட்  ஆகிட்டேன் !  பேசாம ரஜ்ஜுவுக்குப்  போட்டியா இன்னொரு வியாபாரம் தொடங்கிருவேன் போல !

 மறுநாள்  எனக்கு ரொம்பவே பிடிச்ச பண்டிகையான ஸ்ரீ ராமநவமி ! ப்ரஸாதம் செய்ய ரொம்ப மெனெக்கெட வேணாம். !  ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு வகை ப்ரஸாதமுன்னு  அந்தக் காலத்துலே செஞ்சமாதிரி இப்பெல்லாம் முடியறதைல்லைப்பா....
நம்ம நெருங்கிய தோழி, நம்ம அமெரிக்கப் பயணத்தின் போது ஒரு பெரிய ராமர் & கோ செட் பரிசளிச்சாங்க.  அப்ப இருந்து ஸ்ரீ ராமநவமிக்கு உற்சவரே மூலவராக  வந்து  அனுகிரஹம் பண்ணிடறார்.  கொஞ்சம் க்ரேப் பேப்பர் இருக்கேன்னு சின்னதா ஒரு பூச்சரம் செஞ்சு பார்த்தேன்.  பெரிய சாமந்திப்பூச்சரம் செஞ்ச அனுபவஸ்தி இல்லையோ !  ஆனால்  பேப்பர் பூவை விட, ப்ளாஸ்டிக் ஷீட்லே  செய்யறதுதான் சுலபமா இருக்கு.  அழுக்கானாலும் சோப்புத்தண்ணியில் சுத்தம் செஞ்சுடலாம். பேப்பர் பூ நீடிச்சு உழைக்காது (!!!)

பூச்சரம்  மூவருக்கு ஒருமாதிரி போட்டாச். பாவம் நம்ம ஆஞ்சி.....    ரொம்ப நாள் கழிச்சுதான்  அவருக்கும் சின்னதா ஒரு மாலை ஆச்சு.

  ஃபிஜி  மக்கள்,  எல்லா ஹிந்துப்பண்டிகைகளையும்  கொண்டாடினாலும், ஸ்ரீராம்நவ்மியும், ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தியும்  ரொம்பவே முக்கியம். ப்ரதமை தொடங்கி நவமி வரை, ப்ரதமை தொடங்கி அஷ்டமி வரைன்னு  ஒன்பது நாட்களும், எட்டு நாட்களுமா இந்த ரெண்டு விழாக்களைக் கொண்டாடுறாங்க.  ஸ்ரீ ராமாயண் வாசிக்கிறதுங்கறது வருஷம் பூராவும்   நடக்குது.  அவரவர் வீடுகளில் ராமாயண வாசிப்பு,  ராமாயண்  மண்டலின்னு ஏகப்பட்டக் குழுக்கள் இப்படித்தான் எப்பவுமே!  நம்ம சநாதன் சபா வந்தபிறகுதான்  (நம்ம சநாதன தரம் சபா... இப்போ ஒரு நாலு வருஷமாத்தான் இருக்கு) எல்லோருமாச் சேர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் ராமாயண் வாசிப்புன்னு ஒரு நிலைக்கு  வந்துருக்காங்க.  நமக்குத்தான் எல்லா செவ்வாய்களிலும் போய்வர நேரம் அமையறதில்லை.  அதே போல நவராத்ரிக்கு தேவி பாகவதம், ஒன்பதுநாளைக்கு வாசிப்பும் கதை சொல்வதுமா நடக்குது. 

வீட்டுலே பூஜை முடிஞ்சதும், கிளம்பி க்றைஸ்ட்சர்ச் ஃபிஜி அசோஸியேஷன் நடத்தும் ஸ்ரீ ராம்நவ்மி உற்சவத்துக்குப் போனோம். இதுதான்  முதல்முதலில்  இங்கே ஆரம்பிச்ச க்ளப். நாமும் இதில் அங்கமே ! பழைய முறைகளை விடவேணாமேன்னு  அங்கத்தினர் கேட்பதால்  எப்பவும்  இந்தக் கடைசி நாள்  பூஜைகள் மட்டும்  ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்து நடத்தறோம். (எலி வளையானாலும் தனி வளை !)




பத்தரைக்குப்போய்ச் சேர்ந்துக் கூடமாடக் கொஞ்சம் உதவி செஞ்சு , குழந்தைக்குத்  தொட்டிலைக்கட்டி அலங்கரிச்சு, வழக்கமான பூஜைகள், பஜன்கள் முடிஞ்சதும் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆடிப்பாடிக் கொண்டாடினதும் , வெளியே தோட்டத்தில் போய் ஹவன் (ஹோமம்) நடந்தது.  பள்ளிக்கூட ஹால் என்பதால்  உள்ளே நடத்த முடியாது. லேசாப் புகை வந்தவுடன்   ஸ்மோக் அலாம்  கூச்சல் போட்ட அடுத்த  அஞ்சாம் நிமிட் தீவண்டி வந்துரும் !


ப்ரஸாதம் மட்டும் போதும், சாப்பாடு வேணாமுன்னு  கிளம்பிட்டோம்.  அஞ்சு நிமிட் தூரத்தில்தான் நம்ம சநாதன் ஹால் இருக்கு. ஒரே சமயத்தில்  ரெண்டு இடங்களிலும் பூஜை.  அதனால்  அங்கே போய் தலையைக் காட்டிட்டு,  அங்கே இருக்கும்  ஆஞ்சி சந்நிதியில் கும்பிட்டுக்கணும்.  அதே போல் ஆச்சு.



இங்கே சபாவில் பயங்கரக்கூட்டம் !  விழாவின் கடைசிப்பகுதியாக  பரிசுச்சீட்டுக் குலுக்கல் நடக்குது.  பண்டிட்,   நம்மைப்பார்த்ததும்,  துல்ஸி கோபாலைக் கூப்பிட்டு, பரிசுச்சீட்டை எடுக்கச் சொன்னார்.  எடுத்துக்கொடுத்தேன்.  அந்த எண் ரொம்பப் பரிச்சயமான ஒரு தோழியின் எண்ணாக இருந்தது :-) பாதிப் பரிசை எனக்குக் கொடுக்கணும் என்று சொல்லி வச்சேன். கடைசியில்  எனக்கு வேண்டாத  பொருளாகப் போயிருச்சு......  ஜானி வாக்கர் !!!!

வீட்டுக்கு வந்தப்பப் பகல் ரெண்டரை.  கொஞ்சம் ஓய்வுக்குப்பிறகு  நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போனோம்.  பொதுவா நாம் சனிக்கிழமைகளில் தான் கோவிலுக்குப் போவோம் . இன்றைக்கு ஸ்ரீராம்நவமி சிறப்புப்பூஜை என்றபடியால் விடமுடியலை.  இங்கேயும் நல்ல கூட்டமே! ஞாயிறு வேற பாருங்க. 

அபிஷேகம் ஆரத்தி எல்லாம் அருமையான  தரிசனம்.  கோவிலில் முதல் முறையாக ஒரு ராமர் & கோ சிலைகள்.  அழகுன்னா அப்படியொரு அழகு !  புதுசா வந்துருக்குபோலன்னு  கோவில் தலைவரிடம் விசாரிச்சால், பக்தர் ஒருவர் வீட்டுச் சிலைகளாம்.!  பக்தர் நமக்குத் தெரிந்தவர்தான்.  சிலைகளின் அழகைப் பாராட்டி நாலு வார்த்தைச் சொன்னேன்.  இந்தியாவில் எந்த ஊரில் வாங்குனீங்கன்னு கேட்டதுக்கு ஒரு  அதிர்ச்சியான பதில் சொன்னாங்க.  இங்கே நம்மூரில்தான் வாங்கினாங்களாம்!  அட!

நானும் ஒரு வகையில் ஆஞ்சியோ என்னமோ..... இன்றைக்கு   ராம நாமம் காதில் விழட்டுமுன்னு   மூணு இடத்துலே ஸ்ரீராமநவமி கொண்டாடிட்டுத்தான் வந்தேன் ....ஹிஹி....    






8 comments:

said...

//கோபாலுக்குத் தப்லா வாசிக்கத் தெரியுமுன்னு அன்றைக்குத்தான் கண்டுபிடிச்சேன் !!! அடடா.... என்ன ஒரு திறமை ://

சும்மா கோபால் சாரை நக்கல் பண்ணப்படாது, கேட்டோ !
அவருக்குத் திறமை இல்லைன்னா உங்கள எப்படி கண்ணாலம் கட்டிருப்பாரு.

said...

உணவைப் பார்க்கும்போது என் மனதில் தோன்றியது...

கொடுக்கும்போது அளவாக் கொடுப்பாங்களா? மிஞ்சுமா இல்லை பத்தாமல் போயிடுமா என்று எப்படித் தெரியும்?

said...

உணவுப்பொருட்களின் அணிவகுப்பு சூப்பர்.  அப்படி இப்படின்னு ஏப்ரல் வந்துட்டீங்க...   விரைவில் வந்து நிகழைப் பிடிச்சுடுவீங்க!

said...

வாங்க விஸ்வநாத்,

வரவர கோபால் சாருக்கு ஆதரவு கூடுதலாகுது.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

பரிமாறுவதெல்லாம் இல்லை. அவரவர் தமக்கு வேண்டியதை எடுத்துக்குவோம். எப்பவும் நிறைய மீந்துதான் போகும். அதில் அவரவருக்கு வேண்டியதை பார்ஸல் எடுத்து வச்சுக்குவோம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

விட்டதைப் பிடிக்கும் ஓட்டம்தான் இது :-))))

said...

ராமநவமி கொண்டாட்டங்கள் நன்றாக இருக்கின்றன.

ராமர்& கோ அழகு.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா !