Wednesday, March 04, 2020

ஒன்பது வகை தீபங்களோடு பெரியபெருமாள் தரிசனம் ( பயணத்தொடர் 2020 பகுதி 22 )

மறுநாள் காலையில் சீக்கிரமா எழுந்து கடமைகளை முடிச்சுட்டு ஆறரைக்கு ரெடி ஆனோம்.  மாடியில் இருக்கும் நம்ம  முருகனிடம்,   நம்மைக்கூட்டிப்போய் அம்மா மண்டபத்துலே இறக்கி விடச் சொல்லியாச்.  இந்த ஹயக்ரீவாவில்  நம்ம அறைகளை விட ட்ரைவர்ஸ் தங்குமிடம் சூப்பர்!  மொட்டைமாடியில் ஒரு பெரிய அறை. அங்கேயே பாத்ரூம் வசதிகள் உண்டு. முக்கியமாச் சொல்ல வேண்டியது.... கோபுர தரிசனம்.  ஹைய்யோ!!!!! ஒரே ஒரு குறை என்னன்னா... லிஃப்ட் வசதி இல்லை. ரெண்டாம் மாடியில் இருந்து படிகளேறணும்.
அம்மாமண்டபம் கலகலன்னு இருக்கு.  முருகனைத் திரும்பிப்போகச் சொல்லியாச்சு. அவர் போய்க் குளிச்சு ரெடியாகட்டும். தேவைன்னா..... செல்லில் கூப்பிட்டால் ஆச்சு.


குடும்ப விஷயமா ஒரு சாந்தி செஞ்சுக்கணும், வாத்தியார் கிடைச்சாக் கொள்ளாம்னு தேடியதில் கிடைச்சார்.  போன வேலையும் ஆச்சு.  எல்லாம் ஆனதும்தான் வாத்யார் பெயரைக் கேட்டேன். ரங்கராஜன். அவருடைய அசிஸ்டன்ட் கண்ணன்.  நன்றி சொல்லிட்டு ஒரு க்ளிக்.  அப்படியே அம்மா மண்டபத்துச் சந்நிதிகளில்  தரிசனம் முடிச்சுக்கிட்டு, ப்ரியாவுக்குக் கொஞ்சம் பழம் வாங்கிக் கொடுத்தோம்.  சமர்த்துச் செல்லம். பத்து வயசாச்சாம்.






மக்களுக்கு என்னென்னவோ கோரிக்கைகள், வேண்டுதல்கள்.......  அங்கங்கே  இவைகளுக்கான சேவைகள்..... இப்படிப் போகுது வாழ்க்கை. அப்பதான் அபியைப் பார்த்தேன். கொஞ்சநேரம் பேசிட்டு ஒரு க்ளிக் ஆச்சு.  வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடிச்சு ஹயக்ரீவா வந்துட்டோம்.




பாலாஜிபவனில் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டுக் கோவிலுக்குப் போனோம். அதிகப்பட்சமா ரெண்டு மணி நேரம்தானாம். பதினொன்னுக்கு ஊரைவிட்டுக்  கிளம்பிடணுமாம். 'நம்மவர்' ஆர்டர்!!!

'நேத்துப் பெரியவர் தரிசனம் கிடைக்கலையே... இப்ப முதலில் அவரை தரிசனம் பண்ணிக்கலாமு'ன்னார். நாந்தான் 'வேணாம்..... தாயாரைத் தரிசனம் பண்ணிக்கலாம். போதும்'னு சொன்னேன்.  இவ்ளோ தூரம் வந்துட்டுப் பெருமாளைப் பார்க்காமல் போறதான்னுட்டு விடுவிடுன்னு இவர் நடக்க, நானும் கூடவே ஓடவேண்டியதாப் போச்சு.  ரெண்டு மணி நேரத்துக்குள்  தரிசனம் முடிச்சு, ஆண்டாள் புது வீட்டையும் பார்க்க முடியுமோன்னு என் கவலை.
கார்த்திகை கோபுரவாசலாண்டை, நேத்து நடந்த சொக்கப்பனை சமாச்சாரமெல்லாம் சுத்தம் செஞ்சுட்டாங்க!  முஹூத்தக்கால் தென்னை நட்டுவைக்க தரையில் ஒரு  கல்லைப் பெயர்த்துருக்காங்க.  அதை அப்புறம் திருப்பி வச்சுருவாங்கதான். தரையில் கொஞ்சம் கருமை படிஞ்சுருக்கு. அப்புறமாத் தேய்ச்சுக் கழுவி விடுவாங்க போல....
கருட மண்டபத்தில் இருக்கும் பெரிய திருவடியைக் கும்பிட்டதும் ஆலிநாடன் வீதி ஆர்யபடாள் கோபுர வாசல் வழியா உள்ளே போறோம்.

இது மூன்றாம் திருச்சுற்று ‘குலசேகரன் திருச்சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. இதன் வாசலை ‘ஆர்யபடாள் வாசல்’  என்று அழைக்கிறார்கள். (படர் – வீரர். ‘படர்கள்’ என்பது மருவி ‘படாள்’ ஆகியது.) வங்கப் பகுதியான கௌட தேச அரசர் ஒருவர், தான் மிக விரும்பி ஏராளமான திரவியங்களை திருவரங்கனுக்கு அளிக்க முன்வந்தார். ஆனால் கோவிலார் அந்தச் செல்வத்தின் மூலம் குறித்துச் சந்தேகப்பட்டு அவற்றை ஏற்க மறுத்தனர். விரக்தி அடைந்த மன்னன் அவற்றை அந்த வாசலிலேயே போட்டுவிட்டு, தன் தேசத்து ஆரிய அந்தணர்களைக் காவலுக்கும் வைத்துவிட்டுப் போய்விட்டான். ஆரிய அந்தண வீரர்கள் பலகாலம் காவல் காத்த நேர்த்தியைப் பார்த்து கோவிலில் திரவியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களையே கோவில் காவலர்களாகவும் நியமித்தார்களாம். அவர்கள் இந்த வாசலைக் காவல் காத்து வந்தார்கள் என்பதால் அவர்களின் பெயரிலேயே இந்த வாசல் அழைக்கப்படுகிறது. பின்னர் இராமானுஜர் ஊழியர்களின் பல பிரிவுகளை (கொத்து என்று சொல்வர்) ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை ஒதுக்கிக்கொடுத்தார் என்ற குறிப்பு கோயிலொழுகில் இருக்கிறது. அதில் காவலர் பிரிவின் பெயர் ஆரியபடாள்.

வலையில்  கிடைச்ச விவரம். Tamil Heritage Trust க்கு நம் நன்றி .

கோபுரவாசலுக்குள் நுழைஞ்சு பவித்ர மண்டபம், ஊஞ்சல் மண்டபம் தாண்டி கொடிமரத்தாண்டை போய் ஸேவிச்சுட்டு, தரிசன டிக்கெட் வாங்கிக்கலாமுன்னு போனால்....  'மங்களஹாரத்திக்கு  வர்றீங்களா'ன்னார் ஒரு முதிய பட்டர்.  எப்பவாம் ? இன்னும் கொஞ்ச நேரத்திலாம்.  சரின்னு அதுக்கான டிக்கெட்டுகளை வாங்கினோம்.  ஒரு அஞ்சு நிமிஷம் ஆகும்னு சொன்னார். ஆகட்டும்..... அதுவரை நம்ம யானையைப் பார்த்தால் ஆச்சு!  காதுலே சங்கு !



கொடிமரத்தின் பின்னால் இருந்த கம்பித்தடுப்பின் வழியாக  நம்மைக் கூட்டிப் போனாங்க. போனமுறை  விஸ்வரூபம் பார்த்தோமே, அதே இடத்தில்  கருவறை நோக்கிக் கீழே உக்கார்ந்தோம். முழங்கால் பிரச்சனை இருக்குதான். ஆனால் அதை இப்போதைக்குப் பெருமாளே பார்த்துக்கட்டும்னு துணிஞ்சுட்டேன். நம்ம முருகனும் நம்மோடு வந்தார். சின்னக் கூட்டம்தான். ஒரு முப்பதுபேர் இருக்கலாம். மெல்லிஸா .... கருவறைக்குத் திரை போட்டுருந்தாங்க.  அதன் பின்னால்  பட்டர்ஸ்வாமிகளின் நடமாட்டம் தெரிஞ்சது. கொஞ்ச நேரத்தில் திரை விலகி, ஒன்பதுவகை ஆரத்தி ஆச்சு!   இது புதுசா ஆரம்பிச்சுருக்கும் சேவை(யாம்!) ஆரத்தி காமிச்சு முடிச்சதும், நாங்க வரிசையில் போய் பெரிய பெருமாளை தரிசனம் பண்ணிக்கலாம். தள்ளுமுள்ளு, ஜருகு எல்லாம் இல்லாமல் தரிசனமும் ஆச்சு. போயிட்டு வர்ரோமுன்னு சொல்லிக்கிட்டேன். எல்லாம் ஒரு இருபத்தியஞ்சு நிமிட்தான்!  வெளியே வர்றோம், முருகனின் கையில் மஞ்சள் பைகள்!  பையை  வண்டியில் வைக்கச் சொன்னோம் முருகனிடம்.
இந்த சேவையில் நமக்குக் கொடுக்கும் பிரஸாதம் இது.  (உள்ளே லட்டு, முறுக்கு, அதிரசம் இன்னும் சில வகைகள் எல்லாம் இருந்தன.  அதை அப்போ பார்க்கலை. பாவம் பெருமாள், அவருக்கு எப்பவும் தச்சு மம்முதான். இதெல்லாம் அவர் கண்ணுலேயே காட்டறதில்லையாக்கும்.... )  வெளியே வந்து சேனைமுதலியாரை (விஷ்வக்ஸேனர்) கும்பிட்டுப் படிகள் ஏறி தங்க விமான தரிசனம் செஞ்சோம்.
வைகுண்ட வாசலை இந்தப்பக்கம் இருந்து தரிசனம் செஞ்சுட்டு,  கொடிமரத்துக்கு அந்தாண்டை இருக்கும் பிரகாரத்தின் மூலையில் இருக்கும் நம்ம அன்னமூர்த்தியை தரிசனம்  செஞ்சுக்கிட்டோம். நம்ம நண்பர் பதிவர் வெங்கட் நாகராஜின் தந்தைதான் ஏழு வருஷங்களுக்கு முன் இவரைப் பற்றி நமக்குச் சொன்னவர்.  "இவரை வணங்கினால் நம் பூலோக வாழ்க்கை முடியும்வரை, நமக்கு அன்னத்துக்குப் பஞ்சம் இருக்காது"  'நம்மவருக்கு ரசஞ்சாதமும், எனக்குத் தச்சு மம்மும் கேரண்டீ !


இன்னொருக்காப் பெரிய திருவடியை சேவிச்சு விடை வாங்கியாச்சு.  சக்கரத்தாழ்வாரை நோக்கிப் போகும்போது அமிர்தகலச கருடர் சந்நிதி திறந்து இருப்பதைக் கவனிச்சு அங்கேயும் போய் கும்பிட்டோம்.  இங்கே  இந்த ஏழு பிரகாரம் உள்ள  கோவிலில் ஏராளமான சந்நிதிகள் இருந்தாலும் எல்லாமும் எப்போதும் திறந்துருக்காது. கிடைச்சால்  நம்ம பாக்கியம் என்றுதான் இருக்கணும்.

அடுத்து வேணுகோபாலன் சந்நிதி !  கொள்ளை அழகுள்ள சிற்பங்கள் இங்கே ஏராளம்.  அங்கே போனால்..... நல்ல கேமெராவில்  வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார் ஒரு இளைஞர். ஒரு ஒரிஜினல் ஃபொட்டாக்ராஃபர்கிட்டே  பேச்சுக் கொடுத்தால் நமக்கும் அந்தக் கலையின் நுணுக்கம் ஏதாவது வசப்படுமோன்னு .....



கோவில் சிற்பங்களைப் பழுது பார்க்கும் பிரிவில் இருக்காராம்.  உடைந்த சிற்பங்களைப் படம் எடுத்து,  உடைஞ்சு  காணாமல் போன பகுதியைக்  கம்ப்யூட்டர் உதவியுடன் சிருஷ்டிச்சு, அதே போல் கல்லில் செதுக்கி இங்கே கொண்டுவந்து, திரும்பப் பொருத்திருவாங்களாம். இந்தச் சிலையில் இப்போ கை மிஸ்ஸிங். அதனால் கை செய்யணும் என்றார்!  வாவ்.....   பார்த்தால்   ஒட்டுவேலை தெரியுமான்னால்.... தெரியாதாம்!  இதுக்கான நிதியை வாரி வழங்கறவங்க... நம்ம டிவிஎஸ் காரர்களே!
நம்ம செல்ஃபோனைக் கொடுத்து அவருக்கும் ஒரு வேலை வச்சேன் :-)
அந்த ஏரியாவின் பின்னாலேதான் நம்ம ஆண்டாளின் புதுவீடு ! சுமாராத்தான் கட்டி இருக்காங்க. உயரம் போதாதுன்னு என் நினைப்பு. காற்றோட்டம் இருக்குன்னாலும் இன்னும் கூரை உயரமா இருந்தால்தான் வெக்கை இல்லாமல் இருக்கும், இல்லே?

உள்ளே செல்லம் நின்னுக்கிட்டு இருந்தாள். இவளும் இப்போக் கொஞ்சம் குள்ளமாத்தெரியறாளே.... என் கண்ணுதான் கோளாறோ?  உள் ஆண்டாளின்  பக்கத்து வீட்டுக்காரிதான்  இவள்!  ஆண்டாளும் ஆண்டாளுமா  சேர்த்து வச்சுருக்காங்க !
முந்தி காலியா இருந்த மாடத்துலே புதுசா ஒரு சிலை.  பொருத்தமா இல்லையே.....
'நம்மவர்' சொன்ன ரெண்டு மணிநேரம் போயே போச்.  ஹயக்ரீவாவுக்குப்போய்  செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பும்போது மணி பதினொன்னரை.

 தொடரும்......... :-)

12 comments:

said...

நல்ல நல்ல படங்கள்
வாழ்த்து
மலரட்டும் துளசி

said...

நல்ல நல்ல படங்கள்
மலரட்டும் துளசி

said...

//பதினொன்னுக்கு ஊரைவிட்டுக் கிளம்பிடணுமாம். 'நம்மவர்' ஆர்டர்!!!//
//'நம்மவர்' சொன்ன ரெண்டு மணிநேரம் போயே போச். //

hahaha, well planned /played by Thulsi teacher.

said...

காலை தரிசனங்கள் மனதுக்கு நிறைவாக இருந்தது. படங்களும் :))

said...

படங்கள் அனைத்தும் அழகு.

அன்னமூர்த்தி - அப்படியே எங்கள் நினைவும்! நன்றி.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க செங்கை பொதுவன்,

வணக்கம். முதல் வருகை போல ! நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா.... நாந்தான் பெரியபெருமாள் தரிசனம் வேண்டாமுன்னு சொன்னேனே.... இவர் கேட்டாரோ ?

said...

வாங்க மாதேவி.

எதிர்பார்க்கலை இந்த தரிசனம்! நல்லாத்தான் இருந்தது!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அன்னமூர்த்தி சந்நிதிக்குப் போகும்போதெல்லாம் அப்பா நினைவு கட்டாயம் வந்துரும். அவர்மட்டும் சொல்லலைன்னா தெரிஞ்சே இருக்காது ! அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும் நான் ! _/\_

said...

மனம் மகிழும் காட்சிகள் ...

இந்த விடுமுறையில் ஒரு நாள் முழுக்க நின்று பெரிய கோவிலின் அனைத்து இடங்களையும் காணும் ஆவல் உள்ளது ...

பெரிய பெருமாள் அழைக்க வேண்டும் ..

said...

மங்கள ஹாரத்தி சேவை நேரம்/நேரங்கள் என்ன? தினமுமா?

said...
This comment has been removed by the author.