Wednesday, March 18, 2020

கும்மோணத்தில் ஒரு 24 மணி நேரம்தான்.... (பயணத்தொடர் 2020 பகுதி 28 )

திருக்கருகாவூரில்  இருந்து கிளம்பின  முக்கால் மணி நேரத்தில் கும்மோணம் ராயாஸ் க்ராண்ட் வந்து சேர்ந்தாச்சு.
எனக்கு ஒன்னு மன உறுத்தலா இருக்கு.....  ஏன், எதுக்கு நம்ம சனம் இப்படி அறிவில்லாமக் கிடக்குன்னு.....
வழிகாட்டுறதுக்காகவும், ஊர்ப்பெயர், தெருப்பெயர் எல்லாம் தெரியறதுக்காகவும் அரசின் போக்குவரத்துத்துறை/ உள்ளூர் பஞ்சாயத்து எல்லாம் தெளிவா எழுதி வச்சுருப்பதில் போய்  விளம்பரம், நோட்டீஸ் எல்லாம் ஒட்டி வைக்குதுகளே..... இதுலே  நகரம், கிராமம்னு ஒரு வேறுபாடும் கிடையாது. சென்னையில் கூட  ஹைக்கோர்ட் எதிரில் இருக்கும் பல தெருக்களின் பெயர்ப்பலகையில் இப்படித்தான்.  யாரோட கட்சியோ,  பத்திரிகையோ, விளம்பரமோ சம்பந்தப்பட்டவர்களுக்குக் கட்டவே முடியாதபடி ஹெவி ஃபைன் போடணும். தயை தாட்சண்யம் காமிக்கப்டாது. இப்படி நாலு பேருக்குச் செஞ்சாலாவது புத்தி வருமான்னு பார்க்கணும். கொண்டுவந்து ஒட்டிட்டுப்போறவனைச் சொல்லி என்ன பயன்?

ராயாஸ் வழக்கம்போல் கலகலன்னு இருக்கு. செக்கின் ஆனதும், பகல் சாப்பாட்டுக்குக் கீழே இருக்கும் ரைஸ் & ஸ்பைஸ் போனோம். முருகனுக்குத் தாலியும், நமக்கு சாதம் பருப்புமா ஆச்சு.  கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  கோவில்களுக்குக் கிளம்பலாம். அதுவரை எதிரில் இருக்கும் மஹாமகக்குளத்தை க்ளிக்கினால் ஆச்சு.  இந்த முறையும்  குளம் வ்யூ இருக்கும் அறை கிடைக்கலை.  கல்யாண சீஸன் பிஸி.
மூணரை போலக் கிளம்பி முதலில் ஒப்பிலியப்பன் கோவிலுக்குப் போறோம். சமீபத்துலே ஊரில் தேர்த்திருவிழா நடந்துருக்கு போல.... அலங்காரத்தேர் கண்ணில் பட்டது... எந்தக் கோவில் விழாவோ?
கோவிலில் வழக்கம்போல் அருமையான தரிசனம். ஒப்பிலியப்பன் 'கதையை'  விஸ்தாரமா இப்ப எழுதலை. நிறையதடவை எழுதுனதுலே போனமுறை செஞ்ச பதிவை ஒருக்கா எட்டிப் பார்த்துருங்களேன்... இப்போ  உங்கள் பார்வைக்குச் சில படங்கள் மட்டுமே!





அடுத்துப்போன கோவில் எதுன்னு தெரியுமோ?  ஊகிச்சு இருப்பீங்கதான்.  அம்மாவின் அதிகாரத்தின் கீழ்தான் அத்தனையும் :-)   நாச்சியார் கோவில்.
கோவிலைப்பற்றி இங்கே !

கோவிலைப்பார்த்தாப்லெ  செல்லங்கள், அம்மாவோடு! பெருமாள் கருணை  காமிக்கணும்....



இங்கேயும் தரிசனம் அபாரம்!  இடுப்பில் சாவிக்கொத்து இருக்கான்னு பார்த்துக்கிட்டேன்.  இருக்கு  :-)



மழை வேற... வர்றதும் போறதுமா இருக்கு. 'இருட்டிக்கிட்டே வருது....   ராயாஸ் போயிடலாம். மற்ற கோவில்கள் நாளைக்கு'ன்னார் நம்மவர்.  திரும்பி வர்ற வழியில்  பாத்திரக்கடை கண்ணில் (!) பட்டது.  ஹா.... எனக்கொரு  சின்ன அடுக்கு வேணும். ஏற்கெனவே வச்சுருந்ததில் ஊசிமுனை அளவில் ஓட்டை ! அதுவும் பதிமூணு வருஷம் உழைச்சுட்டுத்தான் மண்டையைப் போட்டுருக்கு!  அம்பத்தியொரு ரூபாய்க்கு மதுரையில் வாங்குனது.

எனக்குப் பாத்திரக்கடை பார்க்க ரொம்பவே பிடிக்கும். ஒரு சின்ன அடுக்கு வாங்கியாச். கூடவே ஒரு தோல்சீவியும். பயணத்துலே வெள்ளரிக்காய் வாங்கினால் சீவித்தின்ன ஆகும்.  திருவாசிகள் அட்டகாசமா இருக்கு. நமக்கும் ஒன்னு இருந்தால் கொள்ளாம்.  அளவு சொன்னால் செஞ்சு  தர்றேன்னார் ஓனர்.   ஒரு பீஸா இல்லாமல் நடுவிலே  இணைப்பு வச்சுப் பிரிச்சு எடுக்கறதுபோல் செஞ்சால், கொண்டு வர்றது கொஞ்சம் சுலபம்.


ராயாஸ் வந்து சேர்ந்து, ரைஸ் & ஸ்பைஸில் ராச்சாப்பாடும் ஆச்சு. எனக்கு இடியாப்பம்,தேங்காய்ப்பால்.

ஃபேஸ்புக்கில் அன்னாட சமாச்சாரங்களில் கொஞ்சம்,   தினமும் போட்டுக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்த கும்மோணம் தோழி ஒருவர், வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டாங்க. எவ்ளோ நல்ல மனசு! இன்னும் நம்மை நேரில் பார்த்ததுகூட இல்லை. 'ரொம்ப நன்றி. இன்னொரு சமயம் வர்றோம்'னு சொன்னேன்.  மறுநாள் கிளம்பறோம்னு சொன்னதில்  அவுங்களே வந்து நம்மை சந்திக்கறதாச் சொன்னாங்க.

மறுநாள்  காலையில்  கடமைகள் முடிச்சுட்டு, முதலில் போனது நம்ம சக்கரராஜா கோவிலுக்குத்தான்.  மூலவர் தரிசனம் முடிச்சுட்டுப் படி இறங்கும்போது ஒரே தலைசுத்தால். டேஷ் வர்றாப்லே இருக்கு.  தாக்குப்பிடிக்க முடியாதுன்னு தோணுச்சு.  ஆராவமுதனையும்,  சாரங்கனையும், குறிப்பா வீணை வாசிக்கும் ஆஞ்சியையும் மிஸ் பண்ணத்தான் வேணும். 'காலையில் மாத்திரை சாப்ட்டயா? எதுக்கும் அறைக்குத் திரும்பிப்போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, அப்புறம் போகலாமு'ன்னு 'நம்மவர்'  சொன்னார்.

வந்து கிடந்தேன். இன்னொரு ப்ரெஷர் மாத்திரையும் ஆச்சு. கிடந்தவள் அப்படியே ரெண்டரை மணி நேரம் தூங்கி இருக்கேன். விழிப்பு வந்தப்ப  மணி பனிரெண்டு.  தோழி வரேன்னு சொன்னாங்களேன்னு நினைக்கும்போதே செல்ஃபோன் மணி.  'வந்துட்டேன், அறை எண் எதுன்னு....  '

முதல்முறையா சந்திக்கறோம் என்ற உணர்வே இல்லை.... ம். அப்புறம்னு நேத்துப்பேசின பேச்சை இன்று தொடரும் விதமா....  எல்லாமே ரொம்ப இயல்பா.... போலித்தனம் இல்லாத  பேச்சு !  பிடிச்சுப்போச்சு, பிடிச்சுப்போச்சு....இந்த அன்புக்கு என்ன கைமாறு  செய்ய முடியும் ? 


கீழே போய் அதே ரைஸ் & ஸ்பைஸில் சாப்பாடும் ஆச்சு. தோழி Bala Kumar Pathu அப்படியே  கிளம்பறாங்க. எனக்கு டுவீலர் ஓட்டத்தெரியாதுன்னு சொன்னேன்.  பேலன்ஸ் வராது. விழுந்துட்டா?  அவுங்களோட ஒரு ரைட் போயிட்டு வந்துருக்கலாமுன்னு இப்போத் தோணுது....

சொல்ல மறந்துட்டேனே....  வர்றப்பச் சும்மாவா வந்தாங்க?  பரிசுப்பொருட்களாக் கொடுத்துத் திணறடிச்சுட்டாங்க !
ரெண்டு மணிக்கு நாமும் செக்கவுட் பண்ணிட்டுக் கிளம்பினோம். பெருமாளுக்குத்தான் நம்மைப் பார்க்கக் கொடுத்துவைக்கலை..... மனசில் நினைச்சுக் கும்பிட்டேன். நல்லா இரும் பெருமாளே!

தொடரும்......... :-)

18 comments:

said...

பயணத்தில் சில சமயம் சில சன்னிதிகளைத் தரிசிக்க முடியாமல் ஆகிவிடுகிறது.. என்ன செய்ய...

சர்க்கரைப் பொங்கல் நைவேத்திய ஆளைப் பார்த்திருக்க மாட்டீங்க.

கும்மோணத்துல வராகப் பெருமாளையும் திருமழிசை ஆழ்வார் கோவிலையும் அடுத்த முறை தரிசிக்க மறக்காதீங்க. பொடி நடையா சக்கர்ராஜா கோவிலிலிருந்து இராமசாமி கோவிலுக்குப் போகும் கடைத்தெரு வழியா போனீங்கன்னா இராஜகோபாலன், கடைத்தெரு ஆஞ்சநேயரையும் தரிசித்திருக்கலாம்

said...

நாச்சியார் கோவில் கோபுரம் அருகே எடுத்த படம் வெகு அழகு ...


இனிய தரிசனம் ...

said...

அருமை நன்றி

said...

ஒப்பிலியப்பன் நாச்சியார் கோவில்கள் வணங்கினோம்.
அடிக்கடி சுற்றுவதில்,உடல் நலம் கவனம் எடுங்கள்.

said...

சில கோவில்கள் பார்த்திருப்போம்சிலவற்றை மிஸ் செதிருக்கலாம் பயணத்தின்போது உடல்நலம்பேணுதல் அவசியம்

said...

கைமாறு இல்லை. கைம்மாறு..

said...

எத்தனை யுகங்களுக்கு அப்புறம் இந்த இலவசக்கொத்தனாரைப் பார்க்கிறேன். நலமா?

said...

கும்பகோணத்தில் பல கோயில்களுக்குச் சென்ற பதிவு சிறப்பாக உள்ளது. நம்மூர் என்றாலே படிக்கப் படிக்க ஆர்வமாக இருக்கும்போலுள்ளது. அதிகம் ரசித்தேன்.

said...

கும்பகோணம் - நின்று நிதானித்து கோவில்களைப் பார்த்து வர வேண்டும் - இது வரை ஏனோ அமையவில்லை அங்கே பயணம். என்றைக்கு நம்மை பார்க்க அவனுக்கு விருப்பம் இருக்கிறதோ! காத்திருப்போம்!

படங்கள் வழமை போல சிறப்பு. எங்கெங்கும் சந்திப்புகள் - மகிழ்ச்சி.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

கோவிலையையே சரியாப் பார்க்கமுடியாமல்தான் ஆகிப்போச்சு இந்த முறை!

அடுத்த பயணத்திலாவது நீங்க சொன்ன கோவில்களைத் தரிசிக்க எம்பெருமாள் அருள் செய்ய வேணும்....

said...

வாங்க அனுப்ரேம்,

சரியா ரோடுமேலேயே கோவில் இருக்குப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

பொதுவா எனக்கு அவ்ளவா ஒன்னும் ஆகாது. அதான் கண்ணை விட்டுட்டு நாக்கை இறுக்கக் கட்டி வச்சுருவேனே....

இந்த முறைதான்..... வயசாகுதுல்லே....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா,


இப்படி ஏராளமான கோவில்களைக் கட்டி விட்டால் எதைன்னு பார்ப்பது? வாழ்நாள் போதாதே.....

இந்த முறை உடல்நலம்...படுத்தல்தான். எவ்ளவோ கவனமாக இருந்தாலும் கூட... ப்ச்...

said...

வாங்க கொத்ஸ்,

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-(

said...

@ நெல்லைத்தமிழன்,

கொத்தனாரைப் பார்க்கணுமுன்னா.... தட்டச்சும்போது எதாவது பிழை விட்டால் போதும்.... ஆஜராவார் !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

உங்க ஊர் ! சரியா எழுதி இருக்கேனா ?

நம்ம ஊர் மட்டுமில்லாமல், நாம் போய் வந்த இடங்களைப் பற்றியும் வேற யாராவது எழுதினால், நானும் ஓடிப்போய்ப் பார்ப்பேன். எதாவது நாம் பார்க்காத புது சமாச்சாரங்கள் இருக்கா ? கோட்டை விட்டுட்டோமான்னு....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மை.... அவன் கூப்பிட்டால்தான் எல்லாமும்! கும்மோணம், கோவில்நகரம். தடுக்கி விழுந்தால் கோவில் வாசல்தான். நின்னுநிதானமாப் பார்க்க ஒரு மாசம் வேணும்! எங்கே? மூணுநாள் கூட கிடைக்கறதில்லை.....

விரைவில் தரிசனம் அமைய வாழ்த்துகின்றேன் !