Monday, September 30, 2019

கேதார் கௌரியில் ......... பூனைக்கு மவுசு ! (பயணத்தொடர், பகுதி 149 )

முக்தேஸ்வர் கோவிலில் இருந்து ஒரு நிமிட் நடையில் கேதார் கௌரி கோவில் இருக்கு.  நாம் அங்கே போகும் வழியில் பாதி தூரத்தில் (!) புதுசா  நம்ம ஆஞ்சிக்கு ஒரு கோவில் கட்டி இருக்காங்க. கேதாரேஸ்வரா கோவில்னு ஒடிஷா டூரிஸம், ஒரு  போர்டும் போட்டு வச்சுருக்கு.  அதுக்குப் பக்கத்தில் கேதார் கௌரி டெம்பிள்னு இன்னொரு போர்டும்.   சுற்றுலாத்துறைக்கு என்ன குழப்பமுன்னு தெரியலை....  ஒருவேளை பார்க்கின் ஒரு பக்கம் இருந்த  இன்னொரு கோவிலுக்கான தகவலோ என்னவோ?   அங்கே ஒன்னும் இல்லைன்னு நாம் போகலை.....  ஆங்.... சொல்ல விட்டுப்போச்சே.... இந்தக் கோவில்கள் இருக்கும்  தோட்டத்துக்கே  கேதார்கௌரி பார்க் னுதான் பெயரே!



இந்தக் கோவிலும் பத்தாம் நூற்றாண்டுக் கோவில்தான்.  சரித்திர முக்கியத்துவம் உள்ளவைகளை  அதன் தோற்றம் மாறாமல் புதுப்பித்து வைக்கணும் என்பதை யாரும் சட்டை செய்யலை போல !  இஷ்டத்துக்குப்  பெயின்ட் அடிச்சு வச்சுருக்காங்க. கோவில் நிர்வாகக்கமிட்டியில் யாரோ பெயிண்ட் கடை வச்சுருக்காங்க ....   ஒரிஜினல் கட்டடங்களைத் தவிர காங்க்ரீட் கட்டடங்களா  கோவில் வளாகத்துக்குள் ஏகப்பட்ட சந்நிதிகள்.....
நுழைவு வாசலில் இருக்கும் சிங்கங்கள் பெரிய மீசையோடு நெத்தியில் நாமம் தரிச்சு ஒரு கையை உயர்த்தி வா வான்னு கூப்பிட்டன :-)

சிவன் சந்நிதியில்  சிவலிங்கம் இருப்பதே தெரியலை....   பாம்பு மட்டும் தலை உயர்த்தி நிக்குது!
சிம்மவாஹினி சந்நிதியில் ஒரே பாம்புக்கூட்டம்!

புள்ளையாருக்கு ரெண்டு தனிச்சந்நிதிகள். அதுலே ஒருவர் செந்தூரப்பூச்சுடன்!

அம்பாள் சந்நிதி, தனிக்கோவில் போலவே  இருக்கு. இது பழைய கட்டடமே.  உள்ளே கௌரி அம்மன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறாள்!  நல்ல அலங்காரம்!




 ஆஞ்சிக்கொரு தனிச்சந்நிதி!  செந்தூரப்பூச்சுடன் கொஞ்சம் மின்னறார்!
மடப்பள்ளியில் எதோ ப்ரசாதம் தயாராகுது.  ச்சும்மா எட்டிப் பார்த்தோம். விறகடுப்பில் வெங்கலபாத்திரத்தில்  தளிகை!  ஏற்கெனவே பயன்படுத்திய பாத்திரங்களைத்  தேய்ச்சு வெயிலில் காய வச்சுருக்காங்க. ச்சும்மா விடலாமோ? க்ளிக் :-)


முற்றத்தில் தலவிருக்ஷம் நிக்குது.  முதல்முறையா இந்தப்  பக்கங்களில் தலவிருக்ஷம் இங்கேதான் பார்த்தேன்.  பக்தர்கள்  ஜரிகைத்துணியில் அலங்கரிச்சு வேண்டுகோள் வச்சுட்டுப் போறாங்க.
வளாகத்தில் அங்கங்கே  இப்படி  மண்டபங்கள்  சின்னச் சின்ன அளவில்....

ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரம் இருக்கு இந்தக் கோவிலைப் பற்றி....   கோவிலுக்குப் பூனைக்குட்டிகளை நேர்ந்து விடுவாங்களாம்.  ஹைய்யோடா...... 

ஏன்? எதுக்குன்னு கொஞ்சம் தேடினால் ஒரு கதை கிடைச்சது :-)  ஏகப்பட்ட கோவில்கதைகள் இந்த கேதார்கௌரி கோவிலுக்கு இருக்குன்னாலும் நமக்குப் பூனைக் கதை முக்கியம் இல்லையோ !

ஒரு காலத்துலே ஒரு கணவனும் மனைவியும், கணவரின் தாயுமா மூணு பேர் ஒரு வீட்டில் வசிக்கிறாங்க. ரொம்ப ஏழ்மை....  தாய் கடவுள் பக்தி நிறைஞ்சவர்.தினமும் பூஜை செய்யாமல் அன்ன ஆகாரம் எடுக்கமாட்டாராம்.
ஏழையா இருப்பதால் கடவுளுக்குப் படைக்க விதவிதமா ஏதும் செய்ய முடியாது.  காலையில் ஒரு கிண்ணம் பால் மட்டும் வச்சுப் படைச்சுட்டு, அந்தப் பாலையே காஃபிக்குப் (!!!!) பயன்படுத்திக்குவாங்களாம்.

ஒருநாள்  சரியான சாப்பாடே கிடைக்காமல் குடும்பமே பட்டினி. காலையில் வழக்கம்போல் மாமியார் கிண்ணத்தில் பாலை நைவேத்யமா வச்சுட்டுக் கண்ணை மூடி சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.  மருமகளுக்கு அன்றைக்குக் கொலைப்பசி.

என்ன செய்யலாமுன்னு 'யோசிச்சு'  அரைக்கிண்ணம் பாலை எடுத்து முழுங்கிட்டாங்க.  மாமியார்  கண்ணைத் திறக்கும்போது  அரைக்கிண்ணம் பாலைக் காணோமுன்னா என்ன சொல்வாங்களோன்னு பயம் வந்துருச்சு. சட்னு பால்கிண்ணத்துலெ  விரலை விட்டு முக்கி, அவுங்க வீட்டுப் பூனையை நைஸாக் கூப்பிட்டு அதன் வாயைச் சுத்தித் தடவிட்டாங்க.

கண்ணத் திறந்த மாமியாருக்கு அதிர்ச்சி !~  அரைக்கிண்ணம் பால் குறைஞ்சுருக்கு.  அப்பப் பார்த்து அங்கே யதார்த்தமா அந்தப் பூனை  வருது. அதன் முகத்துலே பால் தடம்.
அவ்ளோதான்.... திருட்டுப்பூனை....சாமி பாலைக் குடிச்சுருச்சேன்னு  அதை நல்லா அடிச்சுட்டாங்க. அடிதாங்காம ஓடிப்போன பூனை ஒரு மரத்துமேலே ஏறி உக்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்கு.  அப்பதான் கௌரி அம்மன், அந்தப் பூனையைப் பார்த்து மனம் இரங்கி, ஒரு வயதான கிழவி உருவில் அந்த மரத்தாண்டை வந்து பூனையைத் தூக்கிக்கிட்டுப்போய் தன்னுடன் கூடவே வச்சுக்கிட்டாங்க.

அப்போ முதல் பூனையே கௌரிக்கு வாஹனமாவும் அமைஞ்சதுன்னு .... கதை போகுது......

அம்மன் சிலைக்கருகில் பூனையை செதுக்கி இருக்காங்களான்னு பார்த்தால்.... பூக்குவியலுக்கிடையில் ஒன்னும் சரியாத் தெரியலை....
இதுவரை  புபனேஷ்வரில்  பார்த்த கோவில்களில் இங்கே மட்டும்தான் கோவில்கதைகள் நிறைய இருக்கு.  சனமும்  அதிகம் வந்து புழங்கும் கோவில் என்பதால் கதைக்கென்ன பஞ்சம் !!! அதெல்லாம் கதை பண்ணிடமாட்டாங்களா என்ன ?

கேதார்னு ஒரு பையனும் கௌரின்னு ஒரு பொண்ணும் காதலர்கள். சமூகம் இவுங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னு ஓடி வந்து காடாக இருந்த இங்கே ஒளிஞ்சுருந்தாங்க. அப்போ ஒரு சிங்கம்  கேதாரைக் கொன்னுருச்சு. துக்கம் தாங்காமல் கௌரி குளத்தில்  (இப்ப இது இந்தக் கோவில் புஷ்கரணி) குதிச்சுத் தற்கொலை செஞ்சுக்கிட்டாள்.  அப்போ இருந்த மன்னர் இவுங்க நினைவுக்கு இந்த ரெண்டு கோவில்களைக் கட்டினார்னு  கதையை நல்லாவே கட்டிவிட்டுருக்காங்க.

 இதனால் என்ன ஆச்சு?  காதலர்களும், புதுசாக் கல்யாணம் ஆனவர்களும் இங்கே வந்து கும்பிட்டால் நல்லபடியா வாழ்வாங்க. (சிங்கம் அடிச்சுப் போடாது....   )

இது போதாதா.....  கூட்டங்கூட்டமா இளவயசுக்காரர்களை வசீகரிக்க.....


கேதார்னு சிவனுக்கு ஒரு கோவிலும், கௌரின்னு அம்மனுக்கு ஒரு கோவிலுமா பழைய ஸ்டைலிலும், மற்ற சந்நிதிகள் எல்லாம் காலப்போக்கில் வந்து சேர்ந்துக்கிட்ட மாதிரியும்தான் இருக்கு. அம்மன் கோவில்தான் வயசில் மூத்தது, பத்தாம் நூற்றாண்டு.  ஐயன் கோவில் பனிரெண்டாம் நூற்றாண்டு கட்டியதாம்

இதுலே அம்மன் கோவிலின் விமானம்தான் கொள்ளை அழகு! கேதார், ரொம்பவே சுமார். கலிங்கத்துக் கட்டடக்கலையில்  விமானங்களில் சிங்கமுகம் போல ஒரு ராக்ஷஸ உருவம்  செதுக்கி வைப்பது வழக்கமாம். கீர்த்திமுகம் என்று அதுக்கு ஒரு பெயரும் இருக்கு! அநேகமா பத்தாம் நூற்றாண்டுக் கோவில்களில் எல்லாம் தவறாமல் செதுக்கி இருக்காங்கன்னு நினைக்கிறேன். அது இங்கேயும் இருக்கு. 

இந்தக் கேதார் கௌரி கோவிலிலும் நீர்த்தொட்டி போல ஒரு திருக்குளம் உண்டு. Khira Kunda என்ற பெயர். இந்த திருக்குளத்துத் தீர்த்தத்தை குடிச்சால்.... மனுஷ ஜன்மத்தின் பிறப்பு  இறப்பு  சுழற்சியில் இருந்து விடுபடலாமாம்.
இன்னொரு முக்கியமான விஷயம்... இந்தக் கோவிலில்தான் பார்வதி திருக்கல்யாணம் விழா, நம்ம வைகாசி மாச வளர்பிறை சஷ்டி நாளில் நடக்குது. ஷிதல்சஷ்டி(Shital Shashti) ன்னு சொல்றாங்க. அன்றைக்கு லிங்க்ராஜா கோவிலில் இருந்து சிவன், ஊர்வலமா இங்கே வந்து பார்வதியைக் கல்யாணம் செஞ்சுப்பார். நல்ல பெரிய திருவிழாவா நடக்குமாம்.   லிங்கராஜா கோவிலுக்கும், இந்தக் கோவிலுக்கும் ஒரு கிமீ தூரம்தான் !
'காசியில் ரொம்ப சத்தம். ஆழ்ந்து தியானம் பண்ணவே முடியலை. எனக்கொரு அமைதியான இடம் வேணும். எங்கே போகலாமுன்னு பார்த்துட்டு வந்து சொல்லு'ன்னு  கேதார் நாரதரைக்கேட்க... அவர் சொன்ன இடம்தான் நம்ம புபனேஷ்வர் கேதார்கௌரி கோவிலாம்.  பாவம் ... வந்துபார்த்தால் ஏற்கெனவே ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னேயே (பிடுங்கல் தாங்காமல்?) கௌரி வந்து தங்கிட்டாங்க....  இனி அமைதி கிடைக்கும்?   ஹாஹா....  )

தொடரும்........... :-)



10 comments:

said...

பாரம்பர்ய கோவிலுக்கு கோரமா சிவப்பு பெயண்ட்... ரசனை கெட்டவர்கள். தொல்லியலை மதிக்கத் தெரியாதவர்கள்

said...

கோயில்கள் என்றால் கதைகளுக்கு பஞ்சமேயில்லை. அதுவும் நம்மவர்கள் கூறும் விதம் மிகவும் அருமையாக இருக்கும்.

said...

அருமை சிறப்பு நன்றி

said...

"சிங்கம் அடிச்சுப் போடாது" ஹா...ஹா சரியாகத்தான் இருக்கிறது.

பாவம் பூனை. அம்மனுக்கு வாகனமானதில் மகிழ்சியே.

said...


வாங்க நெல்லைத்தமிழன்,

சரியான Eyesore...... இங்கே வெறும் 160 வருஷ சமாச்சாரங்கள்தான் என்றாலும் ஒரு கல்லை இப்படி அப்படி நகர்த்திடவோ, நிறம் மாத்தவோ முடியாது..... நம்மூரில்தான் ஆளாளுக்கு அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கிட்டு அநியாயம் பண்ணிக்கிட்டு இருக்காங்க..... ப்ச்...

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

கூட்டம் சேரச் சேர கதைகளும் பெருகிப்போயிரும். கேதாரையும் கௌரியையும் ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்குக் கொண்டுபோயிட்டாங்க பாருங்க :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

நம்ம ரஜ்ஜு கிட்டே பூனைக் கதை சொன்னதுக்கு, உங்களைவிட சாமி ஒல்லிதான். சுமக்க எளிதாகத்தான் இருக்குமுன்னுட்டு சிரிக்குது :-)

said...

கௌரி அம்மன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறாள்! ....நல்ல தரிசனம் ...

கதைகள் எல்லாம் சுவாரஸ்யம் மா .....

said...

அழகான கோவில். பூனைக்கதை - :)

கேதார் - கௌரி - ஹா...ஹா... நல்ல கதை.

சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. தொடர்கிறேன்.