Wednesday, November 08, 2017

குறையொன்றுமில்லை..... !! (இந்திய மண்ணில் பயணம் 73)

நேத்து கோவிலுக்குப் போனப்ப உற்சவம் நடக்குதுன்ற விவரமே தெரியாமல் போனதுதான். இன்றைக்கு அப்படியா? அதான் கோலாகலமா நடக்கும் விழாவுக்கு நாமும் கொஞ்சம் பளிச்ன்னு போனா ரங்கனுக்குப் பிடிக்காதா என்ன?
கீதாம்மா வீட்டில் இருந்து ஹயக்ரீவாவுக்கு வந்து ஒரு ஷவர் எடுத்துட்டு, உடைகள் மாத்திக்கிட்டுக் கோவிலுக்குக் கிளம்பிட்டோம்.  சீனிவாசன், வழக்கம்போல் நம்மை ரங்கா கோபுரத்தாண்டை கொண்டுவிட்டார்.
ஓட்டமும் நடையுமா ஊஞ்சல் மண்டபத்துக்குப்போனா, நம்பெருமாள் ஏற்கெனவே வந்துருந்தார். பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு.
அவருக்கு வலப்புறமா இருக்கும் படிக்கட்டுப் பக்கம் ஒரு கூட்டம். நாமும் போய் என்னன்னு பார்த்தால்.... அங்கே இருக்கும் வரிசையில் போனால் நம்பெருமாளைக் கிட்டக்க இருந்து ஸேவிக்க முடியுமாம்!

அடிச்சக்கை!  நாமும் வரிசையில் சேர்ந்து நின்னோம்.  சுமார் இருபது இருபத்தியஞ்சு நிமிஷமாச்சு  நம்பெருமாளாண்டை போக ! என்ன கிட்டக்கவாம்? அப்படியும் நமக்கும் அவருக்குமிடையில் ஒரு ஏழெட்டடி தூரம் இருக்கே!  பெருமாளுக்கு வலது கைப்பக்கம் போய்  அவர் முதுகு பார்த்து (எங்கே... அங்கேயும் ஒருத்தர் நின்னு சாமரம் வீசறாரே!) அப்படியே அவர் இடது கைப்பக்கம்  போயிடணும். ஸைடு  ஸேவைதான்!



போதாக்குறைக்கு அவரைச் சுத்திப் பட்டர்கள் கூட்டம்.  நாமும் எட்டி எட்டித்தான் பார்க்கணும்.  படங்கள் எடுத்தால் ஒரே முதுகுகள்தான். இது நமக்குச் சரிப்படாது....

கிடைச்ச இடைவெளியில் எடுத்த  படங்களில் நாலைஞ்சு தேறியது!  அதிலும் ஒரு முகம் :-)
கம்பத்தடி ஆஞ்சிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு, நம்ம இடம் தேடிப்போகலாமான்னு நினைக்கும்போதே ஆஸ்தான வித்துவான்களின் நாதஸ்வரமும் தவிலுமா இசை ஆரம்பம்.  இன்றைக்கு ரெண்டு பேர் நாதஸ்வரம்.
கொஞ்சநேரம் நின்னு கேட்டோம். 'நகுமோ.... ....'


நம்ம ஷேக் சின்ன மௌலானா அவர்கள்கூட இதே இடத்தில் நின்னு வாசிச்சு இருப்பாரோ?  அரங்கனின் ஆஸ்தான வித்வானாக இருந்தார்னு  கேள்விப்பட்டதுதான்.   அப்போ அந்தக் காலங்களில்   அங்கே போய் அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கலையே....  :-(

 முதல் முதலா ஸ்ரீரங்கம் போனது  நாப்பத்தியஞ்சு வருசங்களுக்கு முந்தி!  அதிலும் முதல்நாள் இரவு போய்ச் சேர்ந்து மறுநாள் விஸ்வரூபம் பார்த்துட்டுக் கிளம்பியாச்சு.  டூர் க்ரூப்பில் நானும் தோழியுமாப் போயிருந்தோம். அவ்வளவு விவரமும் கிடையாது, பக்தியும் கிடையாது.  கோவிலுக்குப் போனோம் சாமி கும்பிட்டோம் அவ்ளோதான். ஒரு சிலையை நின்னு அனுபவிச்சுப் பார்த்திருப்பேனோ?  இப்ப நினைச்சுப் பார்த்தால்.....  ஊஹூம்....தான்  :-(


அடுத்து 'குறையொன்றுமில்லை.....'   சின்னதா வீடியோ எடுத்தேன். முதலில் வாசிச்ச நகுமோ தான் ஒரு ஒன்பது நிமிட்!  இது நாலுதான்.
படிகள் ஏறி மேலே போய் நம்மிடத்தில் உக்கார்ந்தாச்சு.  அதென்னவோ  நமக்கு ரெங்கனே ரிஸர்வ் பண்ண ஸீட் தான்  நல்லா அமைஞ்சுருச்சு:-)


ஊஞ்சல் ஸேவை முடிச்சு தீபாரத்தி எடுத்து,  தீர்த்தம் சடாரி.....  கீழே இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்களா இருக்கணும்!


கண் நிறைய நம்பெருமாளைப் பார்க்கும்போதே....  மறுநாள் இவனைப் பார்க்க முடியாதே என்ற எண்ணமும், ஏக்கமும் வந்தது உண்மை.  காலையில் கோவிலுக்கு போகப்போறேன்னு நம்மவராண்டை சொல்லி வச்சேன். முன் அறிவிப்புதான் :-)

இங்கே திரை போட்டுக் கூட்டம் கொஞ்சம் கலைய ஆரம்பிச்சதும் நாங்களும் கீழே போனோம். இனி அவன் கருவறைக்குப் போகட்டும். நாம்  கண்ணாடி ஆண்டாளை மட்டும் கண்டுக்கிட்டுப்போயிடலாமுன்னு காலை வீசிப்போட்டு பரமபதநாதர் சந்நிதிக்குப் போனால்.... ஆட்டம் க்ளோஸ்!
அடுத்தடுத்துள்ள சந்நிதிகளும்  மூடித்தான் இருக்கு.  கோதண்டராமர் மட்டும்  அரைக்கதவில்  ஒரு கண்ணைக் காமிச்சார்.
சரி கிளம்பலாமுன்னு  திரும்பி  நாழிகேட்டான் வாசல்வரை வந்தால்  கொடிமரம் மட்டும் தனியா நிக்கிறது.  பாவை விளக்கு பலே ஜோர்!  கொஞ்சம் பெண்கள் மட்டும் அங்கே நிக்கறாங்க. உள்ளூர் பெண்கள் போல.... சின்னதா பேச்சுக் கச்சேரி.

நம்ம பெரிய திருவடி சந்நிதிகூட மூடியிருக்காங்க. நாளைக்கு வர்றேன்னு சொல்லி வச்சேன். பார்க்காமல் ஊரைவிட்டுக் கிளம்பக்கூடாது :-)
ஹயக்ரீவா வந்ததும், கீழே பாலாஜி பவனில் ராச்சாப்பாடு ஆச்சு.  எனக்கு  ரெண்டு இட்லியும் சுடச்சுட ஒரு கப் பாலும்.  நம்மவரும் சீனிவாசனும் அவரவர் விருப்பப்படி:-)
வாசலில் மெனு எழுதிப் போட்டுருக்காங்க. சௌத் இண்டியன் என்ற ஒரு  சொல்லில் எல்லாம் அடங்கிருது.  அதானே....  இட்லி தோசைக்கு ஏன் விளம்பரம்?    நார்த் இண்டியன் மெனுவை எழுதி வச்சால்தான் புரியும், இல்லே :-)

தொடரும்......  :-)


13 comments:

said...

மூணு வீடியோ க்ளிப் போட வேண்டியதாப் போயிருச்சு! கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க :-)

said...

வளைத்து வளைத்து எடுக்கப்பட்ட படங்கள் யாவும் அழகு.

said...

உற்சவம் போது படம் எடுப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான் - அதுவும் முகங்கள் தவிர்ப்பது ஒரு சவால்! :)

கொஞ்சம் zoom போட்டு எடுத்தா முகம் வராதுன்னு பார்த்தா, கரெக்டா அந்த நேரத்தில் ஒரு முகம் உள்ளே வரும்!

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

Videos saw via FB.

said...

காலையிலேயே படித்துவிட்டேன். எப்போதும் நான் வியப்பது, கைங்கர்யபரர்கள் எவ்வளவு ஆத்மார்த்தமான பக்தி இருந்தால், நம்பெருமாளுக்கு வியர்க்கக்கூடாது என்று எல்லாப் பக்கமும் விசிறிவிடுவார்கள்? அதேபோல் கருவறையைச் சுற்றி, பெருமாளுக்கு குளிராக இருக்கவேண்டும் என்று தண்ணீரைப் பாய்ச்சும் வீடியோவையும் நான் பார்த்திருக்கிறேன். கைங்கர்யபரர்களின், மற்ற கோவில் ஊழியர்களின் ஆத்மார்த்த பக்தியுடன் கூடிய உழைப்பு இல்லையெனில் கோவில்கள் ஏது, பக்தி மார்க்கம்தான் ஏது. மிகவும் நெகிழவைத்தது.

நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில், வடவர்களைத்தான் வரவேற்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கேற்ற உணவுதானா?

said...

புகைப்படம்வீடியோக்கள் என எடுத்து அசத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துகள்

said...

அழகான புகைப்படங்கள்,அருமையான புகைப்படங்கள். இறையுணர்வுடன் கூடிய அருமையான பதிவு.

said...

வாங்க ஸ்ரீராம்.

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க சொல்றது ரொம்பச் சரி. மற்ற விழாக்களிலும் கூட நாம் படம் எடுக்கவோ, இல்லை மேடை நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும்போதோ கொஞ்சம் கூட அலட்டிக்காம குறுக்கும் நெடுக்குமா கேமெரா முன்னால் போகும் சனத்தை என்னன்னு சொல்றது?

நீங்களாவது நல்ல உயரம். நானோ? :-) பத்துக்கு ரெண்டு தேறாதான்ற கணக்குதான்...

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

யூ ட்யூபை விட எளிதா இருக்கு எஃப் பி யில் வலை ஏத்துவது!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மை! அதிலும் இளைஞர்கள் ரொம்ப ஈடுபாடோடு சேவை செய்கிறார்கள்! நம்ம சாரி மாமாவின் (பூனா) பேரன், ஆஃபீஸ்லே இருந்து வந்தவுடன், குளிச்சுட்டுக் கோவிலுக்குப் போயிடறார். அங்கே இவரைப்போலவே அநேகமா இதே வயசு இளைஞர்கள் வந்து சேர்ந்துடறாங்க. எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்யறதைப் பார்த்தால் ஆச்சரியமாத்தான் இருக்கு!

ஹயக்ரீவாவுக்கும் பாலாஜி பவனுக்கும் வெவ்வேற ஓனர்கள். இப்பதான் தென்னிந்தியாவில் வட இந்திய வகை உணவுகளுக்கும், சீன வகை உணவுகளுக்கும்தானே மதிப்பு! போனாப்போறதுன்னு மத்யானம் மட்டும் சௌத் இண்டியன் தாலி :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

வாழ்த்துகளுக்கு நன்றி !

கொஞ்சம் புகைப்படப்பித்து அதிகமாத்தான் ஆகி இருக்கு :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.