Friday, December 09, 2016

அம்மா சொன்னதுதான் சட்டம் இங்கே..... இந்தியப் பயணத்தொடர். பகுதி 104)

"அந்த வீட்டுலே நடக்கறது  ஒன்னுவிடாம இந்த வீட்டுலேயும் நடந்தாகணும். இங்கே நான் வச்சதுதான் சட்டம்....... "

வீட்டு மாப்பிள்ளையா வந்தவர் வாயைத் திறந்து   மென்னு முழுங்கி .........

 "அப்படியேவா?"

"ஆமாம்....."

ஐயோ....  ஊரு உலகம் என்னா சொல்லும்... (மைண்ட் வாய்ஸ்)

"ஏம்மா  என்னதான் இது உன் வீடுன்னாலும்  பெரிய வீட்டுலே நடப்பதைப்போல இங்கேயும் நடத்த முடியுமா?  கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்......."

"ம்ம்ம்   சரி. போனாப்போட்டும் அதுலே பாதிக்குப் பாதியாவது இங்கே நடந்தாகணும். ஆமா..."  நியாயஸ்த்தி இல்லையோ!!!

"ஆகட்டும்... அப்படியே பண்ணினால் ஆச்சு.  கோச்சுக்காதே என் கமலவல்லி...."

 பெரிய வீட்டில் பகல்பத்து, ராப்பத்துன்னு  ஜேஜேன்னு இருக்கும்போது....  இங்கே பகல் அஞ்சு ரா அஞ்சுன்னு ஆச்சு. ஆனால் ஒன்னு... அங்கே நடக்கும் சமயம் இங்கேயுமுன்னு கூட்டத்தில் 'கோவிந்தா' போட மாட்டேன். என் வழி தனி வழின்னாங்க தாயார் :-)

வைகுண்ட ஏகாதசிக்குப் பெரிய கோவிலில் விழா!  சொர்கவாசல் திறந்து பெருமாள் வருவார்!  வரட்டுமே.....  இங்கே?

மார்கழிக்கு அங்கேன்னா மாசிக்கு இங்கே!  அதே ஏகாதசிக்கு...

சொர்கவாசல் திறந்து  கமலவல்லித்தாயார்  அதன் வழியா வெளியே வர்றாங்க!  அடடா....  கூடவே பெருமாளும் வரப்டாதோ?  ஊஹூம்....  பெருமாளின் உற்சவர்கூட  இங்கே கிடையாதாக்கும்!   திருமஞ்சனம் மொதக்கொண்டு அங்கே பெரிய பெருமாளுக்கு நடக்கும் எல்லா விசேஷமும் இங்கே தாயாருக்குத்தான் என்பது இன்னுமொரு விசேஷம்!

அங்கெல்லாம்  வருசம் ஒருநாள் சொர்கவாசல் திறப்புன்னா... இங்கே ஏகாதசிக்குத் திறந்ததோடு  அடுத்த நாலுநாளைக்கும் சொர்கமே சொர்கம்தான்!

மாசி மாசம் விழான்னு  ஏற்பாடுகள் இருந்தாலும் சில சமயம் தை மாசமே கொண்டாடுவதும் உண்டு. நமக்குக்கிடைச்ச அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன்....   இந்த வருசத்து விழா  தை யில்!  இன்றைக்கு தை மாசம் 25 ஆம்தேதி.  விழா இன்றோடு கடைசி(யாம்!)
இந்த விவரம் ஒன்னுமே தெரியாமல் இதோ தாயார் வீட்டுக்குன்னு கிளம்பி வந்துருக்கோம்! வாசலில் வாழை மரம் கட்டி, மாவிலை தோரணம்! அடன்னு கண்ணைத் திருப்பினால்..........  விழா விவரம்!
'அடிச்சேன் ப்ரைஸ்'ன்னு  உள்ளே காலடி எடுத்து வைக்கிறேன்....  கோபுர வாசலிலேயே   கூட்டம்!   அரையர்கள் முன்செல்ல இதோ  ஆழ்வார்கள்  கண்ணெதிரில் வந்துக்கிட்டு இருக்காங்க. ஹைய்யோ!!!!





பிரகாரம் வலம் வந்து  அவுங்களுக்குன்னு போட்டு வச்சுருக்கும் இடத்தில் உக்கார்ந்தாங்க. நேரெதிரா  மண்டபத்துத் திண்ணை!  ஓடிப்போய் அங்கே உக்கார்ந்தேன்:-)
 உள்ளூர் மக்கள்ஸிடம் விழாவைப் பத்திக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டது மகிழ்ச்சிதான்!
மங்கள இசையா தவிலும் நாதஸ்வரமும் இழைய  நமக்கு இடப்பக்கம் இருக்கும்  திருவாய்மொழி மண்டபம் கடந்து தாயார் கமலவல்லி நாச்சியார் தங்கக்குடையின் கீழ் உக்கார்ந்து  ஜாம்ஜாமுன்னு  கிளம்பி வர்றாங்க.  பரமபதவாசல் வழியா வர்றாங்களாம்! ஹைய்யோ....  என்ன கம்பீரம்!

அடடா!  நமக்குத் தெரியாமப் போச்சேன்ற ஆதங்கம்தான்....

ஆழ்வார்களை சந்திச்சு, அவுங்களுக்கு அனுக்ரகம் செஞ்சுட்டு, பிரகாரத்துக்குள்ளேயே கோபுரவாசல் வரை போய் திரும்பி வந்தாங்க. ஒருமாதிரி மேளம் ஒன்னு இடைக்கா இசைபோல டுகு டுகுன்னு  லேசா இசைக்க  சிலவிதமான நடைகள் போட்டாங்க ஸ்ரீபாதம் தாங்கும் இளைஞர்கள்!

முதல்முறையா இதெல்லாம் நமக்கு(ம்) லபிச்சுருக்கே !  திருவாய்மொழி மண்டபத்துக்குத் தாயார் திரும்பி  தமக்கான ஆசனத்தில் போய் உக்கார்ந்தாங்க. திரைபோட்டுட்டு மற்ற ஏற்பாடுகள் நடக்குது. அதுவரை ச்சும்மா அங்கே ஏன் நிக்கணுமுன்னு நாங்க மூலவரை தரிசனம் செய்யப்போனோம்.
அழகியமணவாளப்பெருமாள், முத்தங்கியில் ரொம்ப கம்பீரமாகவும் அதே  சமயம் கொஞ்சூண்டு பவ்யமாகவும் நிக்கறாரோ!!!! அவருக்கு வலப்பக்கம் அதே கம்பீரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் தன் சொந்தவீட்டுலே உக்கார்ந்திருக்கும் மதிப்போடு தாயார்!
மேலே : சுட்ட படம்.

சந்நிதியில் கூட்டமே இல்லை. நாலைஞ்சு பேர்தான். மொத்தக் கூட்டமும் விழா நடக்கும் பிரகாரத்தில்!

மொத்தக் கோவிலுமே தாயாருக்கானது என்பதால்  வழக்கமாப் பெருமாள் கோவில்களில் இருக்கும் தாயார் சந்நிதி இங்கே கிடையாது!  அதானே....  கோவிலேகூட தாயார் பெயரில்தானே இருக்கு, இல்லையோ!  கமலவல்லி நாச்சியார் திருக்கோவில்!
நிம்மதியா தரிசனம் முடிச்சுக்கிட்டு,  கோவிலை வலம் வர்றோம்.  பிரகாரத்தில் நடக்கும்போது இடதுபக்க வெளியில் கோவில் திருக்குளம்.  நிறையப் படிகள் இறங்கிப்போக வேணும். இருக்கட்டுமுன்னு மேலே இருந்தே க்ளிக்ஸ்.
விழாக்கால சந்தடி எதுவும் காதுக்கெட்டாத இடம்! நிம்மதியா ஒருவர்  வாசிப்பில் இருந்தார்!  கேமெரா க்ளிக் சப்தம் அவர் கவனத்தைக் கலைச்சுருச்சே.....   :-(
 இங்கேருந்து, விமான தரிசனம் கிடைக்கும். ஆச்சு நமக்கும்.  திரும்பப் பிரகாரத்துக்குள் வந்து வலம் தொடர்கிறோம்.  சேர்த்தி மண்டபம்  பிரகாரங்கள் சேரும் ஒரு  மூலையில். ஸ்ரீரங்கத்துலே நம்ம ரங்கநாயகித் தாயாரின் சேர்த்தி சேவைக்கு முந்தினநாள் (முந்தினநாளே!) நம்பெருமாள்  இங்கே  எழுந்தருளி இங்கத்து சேர்த்தி சேவையை முடிச்சுக்கிட்டு,  நடுநிசிக்கு முன்னே அரக்கப்பரக்க சீரங்கம் போய்ச் சேர்ந்துருவாராம்:-)

இந்தக் கோவிலைப்பற்றி முந்தி  எழுதியது  இங்கே. நேரம் இருந்தால் பாருங்கள்.


 திடீர்னு கண்முன்னே திறந்து கிடக்கும் சொர்கவாசல்!  ஹைய்யோன்னு பாய்ஞ்சு போனேன்.  இதைத் தொட்டடுத்து இருக்கும் யாகசாலையில்  யாகம் நடந்துக்கிட்டு இருந்தது.  எனக்கு அதுவா முக்கியம்?

'அதென்னடீயம்மா கமலவல்லி,  நீ மாத்திரம்  சொர்கவாசல் கடந்து போறது?  நான் அப்படி இல்லேம்மா....   கோபாலோடு சேர்ந்தேதான் கடப்பேன்'னு பூலோகத்துக்கும் வைகுண்டத்துக்குமா  அஞ்சாறுமுறை போய் வந்தேன்.  போய்வந்ததுக்கு சாட்சி? இதோ இந்த க்ளிக்ஸ்தான்:-)



முதலில் கூட்டம்போட்டு நின்ன சனம்  அந்தாண்டை திருவாய்மொழி மண்டபத்தாண்டை போனதும் இங்கே  மூவரும் ஏகாந்தமா விஸ்ராந்தியா இருந்தாங்க.

நம்மாழ்வார் திருப்பாணாழ்வார் திருமங்கை ஆழ்வார்

அங்கே போட்டுருந்த திரை விலகி, நம்ம தாயாருக்குத் திருமஞ்சனம் ஆரம்பிச்சது!  அதென்னவோ   வாட்டர்ப்ரூஃப் போல ஒரு சமாச்சாரம் போர்த்திட்டு ஆரம்பிச்சாங்க. அண்டா அண்டாவா   குண்டா குண்டாவா.....
 சாம்பிராணிப் புகை, தேவலோக ஸீன் காட்ட........ வரிசையா   சீர்வரிசைகள் தாயாருக்குச் சமர்ப்பிச்சு..... தாம்பாளம் தாம்பாளமா இந்தப் பக்கம்  வர.......  எல்லாமே எனக்குப் புதுமை!

பார்க்கக் கிடைச்சதே பாக்கியம்! சின்னச் சின்னதா ஒரு நாலு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன். அவைகளை ஃபேஸ்புக்கில் போட்டு வச்சுருக்கேன்.
 இங்கேயும்  சேர்த்தாச்சு.  பார்க்கமுடியுதான்னு  பார்த்துச் சொல்லுங்க.

மணி எட்டானதும் நம்மவர் ஆரம்பிச்சுட்டார்.

  "எல்லாம் முடிய பத்துமணி ஆகிருமாம். அதுவரைக்குமா இருக்கப்போறே?"

"காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருக்கோம்.  இப்படி அலைஞ்சால் உடம்புக்கு ஆகாது."

"  ரொம்ப டயர்டா இருக்கு. போய் சாப்பிடணும். நேரமானா  அங்கே ஒன்னும் கிடைக்காது  "

அஸ்திரத்துக்கு மேலே அஸ்திரம் போட்டுக்கிட்டே இருந்தால்  எப்படி?

சரின்னு முகத்தைத் தூக்கி வச்சுக்கிட்டுக் கிளம்பினதைப் பார்த்ததும்....  'வா. மூலவரை இன்னொருமுறை போய் கும்பிட்டுக்கலாம்' என்றார்.  அங்கே போனால் அழகு சொட்டச் சொட்ட ரெண்டுபேரும்!  என் கோபமெல்லாம் போயே போச்சு. :-)

'மாசிமாசத் திருவிழாவைத் தை மாசம் நடத்தி என் கண்ணுலே காமிச்சதுக்கு  எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியாமத் தவிக்கிறேண்டா.....   போயிட்டு வரேன்' னு கும்பிட்டு முடிச்சு வெளியே வந்தால்  புதுசா ஒரு  முழுப் பலாப்பழத்தை நறுக்கிக்கிட்டு இருக்கார் ஒருத்தர்.  முதல் துண்டு எனக்குன்னு  கொஞ்சம் வாங்கிக்கிட்டேன்.  இப்படி ஃப்ரெஷா தின்னுதான் எவ்ளோ வருஷம் ஆச்சு!
வாசலில் வச்சுருந்த  கோவில் விழா நிகழ்ச்சியை இன்னொருக்கா க்ளிக்கலாமுன்னு போய்ப் பார்த்தால்  அறிவிப்பின்படி  நேத்து  ஏழாம்தேதியோட சொர்கவாசல் திறப்பு முடியுது. அப்புறம் இன்றைக்கு (எட்டாம் தேதி) எப்படி?  நமக்கான ஸ்பெஷலோ!
பெருமாளே.... பெருமாளே....

ஹயக்ரீவா வந்து சேர்ந்தப்ப மணி எட்டே முக்கால். ரூம் சர்வீஸா  அதே ரெண்டு இட்லி.

தொடரும்............  :-)


18 comments:

said...

உங்கள் தயவில் எங்களுக்கும் சுகதரிசனம்! முகநூலிலிருந்து எம்பெட் செய்தீர்களா? வீடியோ அங்குபோலவே இங்கும் தானாய் ஓடிக் கொண்டிருந்தது!

said...

ரூம் சர்வீஸா அதே ரெண்டு இட்லி.
///

கோவில்ல பிரசாதத்தை ஃபுல் கட்டு கட்டுனா இப்பிடித்தான்

said...

படங்கள் அத்தனையும் அருமைம்மா. நாங்களும் நேரில் பார்த்ததொரு உணர்வு

said...

உங்களுக்குக் கிடைச்ச அத்ருஷ்டம் எங்கள்ட்டயும் ஷேர் பண்ணிக்கிட்டீங்களே. நன்றி. நீங்கள் வீடியோ எடுத்த இடத்தில் புருஷசுக்தம் ஸ்பஷ்டமாக் கேக்கறது. குளத்துப் படிகளில் அவர் என்ன படித்துக்கொண்டிருக்கிறார்னு தெர்ஞ்சிக்க ஆவல்.

said...

அரையர் சேவையையும் இதுவரை பார்த்ததில்லை.

said...

உங்களுக்குக் கிடைச்ச அத்ருஷ்டம் எங்கள்ட்டயும் ஷேர் பண்ணிக்கிட்டீங்களே. நன்றி. நீங்கள் வீடியோ எடுத்த இடத்தில் புருஷசுக்தம் ஸ்பஷ்டமாக் கேக்கறது. குளத்துப் படிகளில் அவர் என்ன படித்துக்கொண்டிருக்கிறார்னு தெர்ஞ்சிக்க ஆவல்.

said...

நாங்களும் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி போனோமா வந்தோமா என்றுதான் இருந்தோம் அப்போதெல்லாம் பதிவெழுதியது கிடையாதே விவரங்கள் சேகரிப்புமிருந்ததில்லை.

said...

இக்கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை. அவசியம் செல்வேன். நன்றி.

said...

நல்லதொரு திருக்கோவில். நானும் சென்று வந்ததுண்டு...

said...

உறையூர்ல முந்தி சொந்தக்காரங்க இருந்தாங்க. அப்போ ஒருவாட்டி போயிருக்கேன். ஆனா கமலவல்லித்தாயார் கோயிலுக்குப் போனதில்ல. உங்க மூலமாகப் போயாச்சு இப்போ.

வைகுந்தம் புகுவதும் விண்ணவர் விதியே என்று நம்மாழ்வார் சொல்லியிருக்கிறாரே. விண்ணோராக இருந்தாலும் வைகுந்தம் போக வேண்டும் என்றால் மண்ணுலகத்தின் வழியாகத்தான் போக வேண்டும். அதனால்தான் பரமபத வாயிலை கோயில்களில் வைக்கிறார்களோ?

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆமாம். யூ ட்யூபை விட ஃபேஸ்புக்கில் ஏத்தறது கொஞ்சம் சுலபமா இருக்கே:-)

said...

வாங்க ராஜி.

இல்லைப்பா. பல இடங்களில் கண்ணால் அதுவும் கேமெராக் கண்ணால் வெட்டி விழுங்குவதுதான். தின்றதுக்குன்னு வாயைத் திறக்கறது கஷ்டம்தான். அதுவும் பயணங்களில் ரொம்ப சுத்தம்...... :-)

ரெண்டு இட்லி போதும் எனக்கு. ரெடியா வச்சுருங்க:-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

என்ன வாசிக்கிறார்னு பெருமாளுக்கே வெளிச்சம். நாம் நமக்கிஷ்டமானதை நினைச்சுக்கலாம். எனக்கு அவர் வாசிப்பது ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்:-)

அரையர் ஸேவை ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் புறப்பாடு சமயம் பார்த்தேன். இது ரெண்டாவது முறை.

ஒரு மாசம் ஸ்ரீரங்கத்தில் தங்கணும் என்ற ஆசை எப்போ நிறைவேறுமோ...........

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உண்மைதான். பதிவரான பின்பு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தறோம் என்பது ரொம்பச் சரி.

1999 இல் ஒரு உலகப்பயணம் போய் வந்தோம். 42 நாட்கள்! அப்போ பதிவராக ஆகாததால்.... நீங்கெல்லாம் பிழைச்சீங்க :-))))))

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

108 திவ்யதேசங்கள் பட்டியலில் இது ரெண்டாவது கோவில். நிம்மதியா தரிசிக்கலாம். பெருமாளும் தாயாரும் அழகோ அழகு!

வாய்ப்பு கிடைச்சால் விட்டுடாதீங்க. பக்கத்துலேயே ஒரு அம்மன் கோவிலும் இருக்காம். நாங்களும் அங்கே இன்னும் போகலை.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆரவாரமில்லாம அமைதியான தரிசனம் இங்கே! அடிக்கடி போனாலும் மனநிறைவு கேரண்டீ :-)

said...

வாங்க ஜிரா.

பரமபத வாசல் எப்படி இருக்குமுன்னு நமக்கு சாம்பிள் காமிக்கத்தான் இப்படி :-) ஆனால் சில கோவில்களில் அசட்டையாக வச்சுருப்பாங்க. வருசத்துக்கு ஒரு நாள் சுத்தம் செஞ்சாப் போதும் என்ற நினைப்புதான் :-(

அடுத்த பயணத்தில் 'அம்மா'வைக் கண்டுக்கிட்டால் ஆச்சு :-)

said...

"அம்மா வைத்ததுதான் சட்டம் " :))நல்ல தலைப்பு.