Tuesday, December 16, 2008

அக்கா ( பகுதி 12 )

அக்காவுக்கு வீட்டில் சமையல் வேலையே இல்லாமப் போச்சு. ஸ்டாப் ,ஸ்டாப்...... நாந்தான் சமையல் செஞ்சேன்னு கற்பனை செஞ்சுக்காதீங்க. அத்தையம்மா ( அக்காவோட மாமியார்) கடையில் இருந்து காலையிலே பெரிய தூக்கில் காஃபி வந்துரும். மாமாவோட கஸின் இருந்தாருல்லே. அவர் சைக்கிளில் கொண்டுவந்து தருவார். ஒரு மணி நேரம் கழிச்சுச் சுடச்சுட இட்லி, தோசை, இடியாப்பம் இப்படி ஏதாவது எடுத்துக்கிட்டு வருவார். காலை உணவு கொடுத்துப் பிள்ளைங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டால் போதும். ரேணு மட்டும் இன்னும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிக்கலை. அடுத்தவருசம் போடலாமுன்னு அக்கா சொல்லுச்சு.

பலகாரம் கொண்டுவந்து கொடுத்துட்டு, ரேணுவைச் சைக்கிளில் வச்சுக்கிட்டுக் கடைக்குப் போயிடுவார் அப்புறம் அக்கா குளிச்சுமுடிச்சுக் கைக்குழந்தையைத் தூக்கிக்கிட்டுக் கடைக்குப் போயிரும். பகல் சாப்பாட்டுக்கு எல்லாரும் கடைக்கே வந்துருவாங்க. பசங்க பள்ளிக்கூடம் பக்கத்துலேதான். மாமாவுக்குத்தான் கொஞ்சம் தூரம். சாயங்காலம் எல்லாருமா அங்கே கூடி இருந்து சாப்பாடெல்லாம் ஆனதும் எட்டு எட்டரைக்குக் கிளம்பி வீடு வந்து சேருவோம். தினம் பிக்னிக் மாதிரி இதென்னடான்னு இருந்துச்சு எனக்கு. ஹோட்டலில் சாப்புட்டா ஜாலின்னு நினைச்சு, மூணுவேளையும் ஹோட்டலிலேயே சாப்புட்டா..........


ராத்திரியில் புள்ளைங்களைதான் இம்மாந்தூரம் இழுத்துக்கிட்டு வரக் கஷ்டமாயிரும். சிலநாள் அதுங்க அங்கேயே தூங்கிரும். சில சமயம் குதிரைவண்டி கிடைச்சா அதுலே வருவோம். வண்டிக்கார பாய் நம்ம பேட்டை ஆள். குதிரைதான் ரொம்ப சொண்டியா இருக்கும். அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஏறி உக்காருங்க ரெண்டுபேருமுன்னு பாய் சொன்னாலும் எனக்கு என்னவோ பாவமா இருக்கும். அதுலே போறதுக்கு நடந்தே போகலாமுன்னு அக்காவும் கேலி பண்ணும். அவ்வளோ வேகமான குதிரை:-)

தினம்தினம் இப்படிப்போய் வர்றது தொல்லையா இருக்குமேன்னதுக்கு, 'அதுக்கென்னா பண்ணறது? கஷ்டத்தைத் தாங்கிக்கத்தான் வேணும். தினம் பேரனைப் பார்க்கணுமுன்னுதான் அத்தை இந்த ஊருக்கே வந்துட்டாங்க. இங்கே கடையும் நல்லாப் போகுது. சாப்பாடு அது இதுன்னு எல்லாச் செலவும் அங்கேயே முடிஞ்சுருது பாரு. இல்லேன்னா உங்க மாமா சம்பாத்தியத்துலே அஞ்சு புள்ளைங்களைக் காப்பாத்துறது எப்படி? அதான் நான் ஒன்னும் சொல்லலை'ன்னுச்சு. 'கொஞ்சம் காசு சேர்த்துக்கிட்டு, வீட்டை இடிச்சுக் கல்லுவீடாக் கட்டிக்கலாமுன்னு சொல்றார். பொண்ணுங்களும் வளருதுங்க. இந்தப் பக்கம் எல்லாம் கரண்டு வரப்போகுதுன்னு பேச்சு. அப்படியே நம்ம வீட்டுக்கும் லைட் போட்டுக்கிட்டா நல்லா இருக்கும்.' தனக்கு எது விருப்பமுன்னு சொல்லாம இவுங்க இழுப்புக்கெல்லாம் ஆடற அக்காவைப் பார்த்து லேசா எரிச்சலா இருந்துச்சு எனக்கு.

வீட்டுக்கு வர்ற வழியிலேதான் சினிமாக் கொட்டகை. படத்துலே வர்ற பாட்டு, வசனமுன்னு நல்லாக் கேக்கும். கேட்டுக்கிட்டே நடக்கறதுதான்.
இந்த வழக்கம் ஆரம்பிச்சப்ப ரெண்டு மூணு சினிமாவைப் பார்க்கமுடியாமப் போயிருச்சாம். அக்காவோட கூட்டு இல்லாம மதீனாக்காவும் சினிமா இல்லாம நொந்து போயிருக்கு. ரெண்டுபேருமாச் சேர்ந்து இப்ப ஒரு வழி கண்டுபுடிச்சுட்டாங்க. என்னைக்குப் போகணுமுன்னு காலையிலேயே கிளம்பும்போது சொல்லி வச்சுக்கிட்டு, கடையில் இருந்து கொஞ்சம் லேட்டாக் கிளம்பி வருவாங்களாம். புள்ளைங்க எல்லாம் குதிரை வண்டியிலே. மாமாவும் அக்காவும் பேசிக்கிட்டே நடந்து வர்றது. சினிமாக் கொட்டாய்கிட்டே, கொழுந்தனார், இல்லேன்னா வீட்டுக்காரர் துணையோடு வந்து காத்துக்கிட்டு இருக்கும் மதீனா அக்கா. அவுங்களைப் படம் பார்க்க அனுப்பிட்டு, ஆம்பளைங்க பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்துருவாங்க. படம் விடுற நேரத்துக்கு யாராவது போய்க் கூட்டி வர்றது. இதுலே மட்டும் யாருக்கும் சோம்பலே இல்லை.

இந்த சினிமா மட்டுமில்லை, அக்கா மிஸ் செய்யறது அந்த லேடீஸ் க்ளப் மீட்டிங்ஸையும்தான். முந்தியெல்லாம் காலை வேலை முடிஞ்சு பிள்ளைங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பிட்டு, இட்லி அவிச்ச அதே அடுப்பில் சோத்தையும் பொங்கி வடிச்சுரும். அப்புறம் பருப்பை வேகப் போட்டுட்டுத் தண்ணி எடுக்கப் போகும் பாருங்க, அம்புட்டுத்தான். அதுவும் கைக்குழந்தைத் தூங்கிக்கிட்டு இருந்தால் பரம சுகம். அங்கே பேச்சு சுவாரசியத்துலே நேரம்போறதே தெரியாது. சிலப்பப் பிள்ளைகள் மத்தியானம் பள்ளிக்கூடம்விட்டு வரும்வரையில்கூட பேச்சான பேச்சும் சிரிப்பும் தூள் பறக்கும். புள்ளைங்களைப் பார்த்ததும்தான் 'ஐயோ மணி ஆகிருச்சே'ன்னு பாயும். இங்கே வந்தால் வடிச்ச சோத்துப் பானை அப்படியே குனிஞ்சது குனிஞ்சபடி கிடக்குமா....... அக்காவுக்கு உள்ளூர ஒரு பயம் வந்துரும். வடிச்ச சோத்துப்பானையை நிமித்தாம ரொம்ப நேரம் அப்படியே விட்டுட்டால்..... பிரசவ சமயத்தில் இடுப்புநோவு கூடிப் பிள்ளைப் பேறு ஆக லேட்டாகுமாம். பொழுதண்ணிக்கும் பெத்துப்போடறவங்களுக்குப் பயம் இருக்கத்தானே செய்யும்? ஆனா இது உண்மையா இல்லையான்னு தெரியாது. பருப்பும்கூட சிலசமயம் தண்ணீர் வத்தி அடிப்புடிச்சுரும். அதுக்காகத் தீயைச் சின்னதா வச்சுட்டு, நாலு தம்ப்ளர் தண்ணியைக் கூடுதலா ஊத்திவைக்கறதுதான். ரசத்துக்கும் ஆச்சுல்லே!

அக்காவோட மாமியார், இவுங்களை எல்லாம் மிஞ்சுனச் சினிமாப் பைத்தியம். சிவாஜி படமுன்னா மூணுநாலுதரம் பார்த்துருவாங்க. ராத்திரி கடை மூடுற சமயம் சட்னு கிளம்பிப் போயிருவாங்க. ரொம்ப ஒல்லியா இருப்பாங்களா, விசுக் விசுக்குன்னு அஞ்சே நிமிச நடைதான். மச்சினர் மகந்தான் இருக்காரே. அவர் எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டுப் படம் விடும் சமயம்போய் பெரியம்மாவை இட்டாருவார். எல்லாம் எப்பவும் ரெண்டாவது ஆட்டம்தான் என்றதாலே பிரச்சனை இல்லை. மாமியாரும் சரி,மருமகளும் சரி அவுங்கவுங்க சினிமாப் ப்ரோக்ராமைச் சொல்லிக்க மாட்டாங்க.



நல்லவேளையா, சமையல் கட்டுக்குப் பக்கத்துலே, கடைக் கொல்லைப்புறக் கதவு வரை, திறந்த வெளியா இருந்த இடத்துக்குப் பந்தல் போட்டு வச்சுருந்தாங்க. வெங்காயம் வெட்டறது, காய் நறுக்குறதுன்னு எல்லா வேலையும் அங்கேதான். தேங்காய்த் துருவும்போது மட்டும் எங்ககிட்டேக் கவனமா இருப்பாங்க. தின்னே தீர்த்துருவோம்லெ. அத்தையம்மா, பேரனை இடுப்பைவிட்டு இறக்காமத் தூக்கிவச்சுக்கிட்டே ஆளுங்ககிட்டே வேலை வாங்குவாங்க. நாங்க எல்லாம் கூடமாட வேலை செய்யலாமுன்னா..... பெரிய பெரிய அடுப்பும் பாத்திரங்களுமா இருக்கு. பசங்க ஓடியாடி விழுந்துறப் போறீங்கன்னு துரத்திருவாங்க. நாங்களும் ச்சும்மா.... எதாவது செய்யட்டுமான்னு வாய்வார்த்தையாக் கேக்கறதுதான்.

அங்கேயே ஒரு பக்கமா ஏரோப்ளேன் பாண்டி விளையாடுவோம். தாயக்கட்டம் போட்டுக்கறதும் உண்டு. மாமா ஒரு கேரம்போர்டு கொண்டுவந்து வச்சதுலே இருந்து அந்த ஆட்டமும்தான். எல்லா ஆட்டத்துலேயும் நாந்தான் ஜெயிப்பேன். என்கூட உப்புக்குச் சப்பாணியா ஆடறது நம்ம ரேணுதானே:-)))) பசங்க எப்போடாப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வருவாங்கன்னு இருக்கும். அக்கா மட்டும் அப்பப்ப வந்து ஒரு ஸ்டூல் போட்டு உக்கார்ந்துக் கணக்கு எழுதிக்கிட்டு இருக்கும். பலசரக்கு என்னென்ன வேணுமுன்னு பார்த்து லிஸ்ட் போட்டு வைக்கறதும், அரிசி பருப்பெல்லாம் ஸ்டோர் ரூமிலே இருந்து எடுத்துக் கொடுக்கறதும் அக்காவோட வேலை.

கடைக்கு வரும் தினத்தந்தி பேப்பரையும் விட்டுவைக்க மாட்டேன். ஆனாலும் சிலநாள் ரொம்பவே போரடிக்கும். போரடிக்கணுமுன்னே, ஜூலியஸ் சீஸர், இன்னும் சில ஷேக்கஸ்ப்பியர்.....எல்லாம் கொண்டுவந்து தருவார் மாமா. மச்சினிச்சிப் பீட்டர் விடட்டுமுன்னு:-) போதுண்டா சாமின்னு இருக்கும். அப்பெல்லாம் அத்தையம்மா பக்கத்துலே போய், அவுங்க வாயைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். ராத்திரி போய்வந்த சினிமாவை (அதுவும் சிவாஜி படமானால் உத்தமம்) ரொம்ப சிலாகிச்சுப் பேசிக்கிட்டு இருப்பாங்க. சிலசமயம் பேச்சுவாக்குலேக் குடும்பக் கதைகள் வந்து விழும். பச்சமிளகாய் நறுக்கிக்கிட்டே இருந்த சமையல் உதவி ஆள், தெரியாமக் கண்ணுலே கையை வச்சுக்கிட்டார். ஐயோ ஐயோன்னு கத்திக்கிட்டுப் பச்சத்தண்ணீரை முகத்துலே அடிச்சு ஊத்திக் கழுவிக்கிட்டு கிடந்தாரா......... ' ஐயோ....ராணி கண்ணுலே மொளகாய்விதை இருந்தது ஞாபகம் இருக்கா?' ன்னு அக்காட்டே சட்னு கேட்டாங்க. அக்கா, தலையைத் திருப்பி மாமியாரைப் பார்த்தாங்க. 'சரியான பூனைப்புசுக்கி'ன்னு சிரிச்சாங்க அத்தையம்மா.

' பெரியம்மா' ஒரு காலக்கட்டதில் 'தனிஆளா' ஆனதும் அத்தையம்மாதான் 'நாத்தனார் ஆச்சே.... எப்படி விட முடியுமு'ன்னு கூட வச்சுருந்தாங்களாம். அப்போ ராணி ரெண்டு வயசோ என்னவோ.....

ஒரு நாள் பெரியம்மா வெங்காயம், பச்சமிளகாய் நறுக்கிக்கிட்டு இருந்ததை வேடிக்கைப் பார்த்துக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்த குழந்தை,
திடீர்னு வீறிட்டுக் கத்தி அழுது முகமெல்லாம் சிவந்து போச்சாம். குழந்தை பெரியம்மாவைக் கைகாட்டி அழுவுது. நான் ஒன்னும் செய்யலைன்னு அந்தம்மா சொல்லி இருக்காங்க. குழந்தை, கண்ணைத்தேய்ச்சுக்கிட்டு கத்துதேன்னு கண்ணைக் கவனிச்சா, ஓரமா ஒரு மொளகாய் விதை ஒட்டிக்கிட்டு இருந்துருக்கு. பாரு செய்யறதையும் செஞ்சுட்டுப் பூனைப்புசுக்கியாட்டம் இருந்தான்னு அன்னிக்கு அக்கா மாமியார் சொன்னாங்களாம். ராணிதான் அதுக்குப்பிறகு, 'பூனைப்புசுக்கி அவ்வா'ன்னு ரொம்பநாளாச் சொல்லிக்கிட்டு இருந்தாளாம். பெரியம்மா பேச்சு எதாவது வந்துச்சுன்னா..... அதைச் சொல்லிட்டு அக்கா முகத்துலே ஏதாவது ரியாக்ஷன் தெரியுதான்னு பார்ப்பாங்களாம். அக்காவுக்கு ரொம்பப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் இது.

அந்தப் பெரியம்மா, கடைசி காலத்துலே கண்ணுத் தெரியாமப்போய்க் கஷ்டப்பட்டு செத்தாங்க. மாமாதான் கொள்ளி போட்டுருக்கார். இவுங்களைப் பத்தி நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு'லே பார்க்கலாம். இவுங்க ஒரு முக்கியமான பாத்திரம் நம்ம கதைகளில்!!!!


கடைவீதியிலேயே பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்துலே ஒரு இன்ஸ்டூட்டுலே என்னை டைப்ரைட்டிங் கத்துக்க மாமா சேர்த்துவிட்டார். தினம் ஒரு மணி நேரம். பரிட்சை முடிவு வர்ற வரை எதாவது படிக்கட்டுமுன்னுதான். முடிவு வந்தப்ப நல்ல மதிப்பெண் கிடைச்சுருந்துச்சு. மறுபடி எல்லாருக்கும் நான் பிரச்சனையா ஆகி இருந்தேன். என்னை என்ன செய்யலாமுன்னு ஆளாளுக்கு யோசனை சொல்லி அண்ணனைக் குழப்பிக்கிட்டு இருந்துருக்காங்க. டீச்சர் வேலைக்குப் படிக்க வைக்கணுமுன்னு பாட்டிக்கு ஒரே பிடிவாதம். வீடு முழுக்க டீச்சருங்க இருக்காங்களே..அந்தக் கூட்டத்தில் இன்னொன்னு இருந்தா என்ன குறைஞ்சுறப்போகுதுன்னு.

மாமா மட்டும், மேலே படிக்க வைக்கணுமுன்னு விடாப்பிடியா நின்னார். உங்களாலே முடியலைன்னா நான் படிக்க வச்சுக்கறேன்னு வீறாப்பு. அடுத்த ஊர்லே இருக்கும் கல்லூரிக்கு அனுப்பிடலாமுன்னு அவர் நினைப்பு. ஒரு பிரகஸ்பதி மட்டும், பேசாமக் கலியாணத்தைப் பண்ணி வச்சுறலாமுன்னு ஐடியாக் கொடுத்தாராம். நல்லாப் படிக்கிறாள். முடிஞ்சவரை படிக்கட்டுமுன்னு அண்ணன் நினைச்சாலும் சொந்தக்காரக் கூட்டம் எல்லாம் சேர்ந்து அவரைக் குழப்பிக் குட்டையிலே மீன் புடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆக மொத்ததுலே ஒரு ஆளுன்னா ஒரு ஆள்,'என்ன செய்யப்போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தைக் கேக்கலை.

தொடரும்.....................

45 comments:

said...

உள்ளேன் டீச்சர்

said...

தேங்காய்த் துருவும்போது மட்டும் எங்ககிட்டேக் கவனமா இருப்பாங்க. தின்னே தீர்த்துருவோம்லெ.//

அதுக்குதான் முன்னாடியே உடைச்சு தின்னுரனும்

said...

பல நெடுந்தொடருக்கான கதை இருக்கு உங்களிடம்

said...

//ஆக மொத்ததுலே ஒரு ஆளுன்னா ஒரு ஆள்,'என்ன செய்யப்போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தைக் கேக்கலை.//

கேட்டா மட்டும் நேரடியா பதில் சொல்லுவீங்க?

said...

டீச்சர்!உங்க பதிவுக்கு குறைந்தது பத்து இருபது பின்னூட்டமாவது போடணும்.அம்புட்டு சரக்கு ஒவ்வொரு பதிவிலும் இருக்குது.பக்கத்து வீட்டுக்கெல்லாம் போகணுமே!அதனால் நான் அப்புறமா வாரேன்!

said...

(((((((((( BIG HUG ))))))))

ரொம்ப கஷ்டமாயிருந்தது படிக்க;-(

"அப்புறம் கதைகள்" கூட படிப்பேனோ என்னவோ:-(

said...

அப்படியே அவங்க கேட்டுட்டாலும்....

இல்ல ரெண்டு வருஷ ஹாஸ்டல் வாசம் மெட்ராஸ் க்கு இழுத்துச்சோ...

என்னதான் பண்ணுனீங்க அப்புறம்...

அப்புறம் கதைகள் கூடிகிட்டே போகுது...கவனம்

said...

வழக்கம்போல மிக அருமை:):):) ஆனா தொடர்ச்சிக்கு ஒரு நாள் ரெண்டு நாள் காக்கிறதுதான் கஷ்டமா இருக்கு.

said...

//கேட்டா மட்டும் நேரடியா பதில் சொல்லுவீங்க?//

:):):)

said...

//நசரேயன் said...
உள்ளேன் டீச்சர்
//

அப்ப போடுங்க தோப்புக் கரணம்!

Anonymous said...

ஆனாலும் பெரியம்மாவுக்கு ரொம்பத்தான். குழந்தைகிட்ட இப்படியா நடந்துக்கறது?

said...

வாங்க நசரேயன்.

பேசாமச் சொந்தச் சேனல் ஒன்னு ஆரம்பிச்சுறலாமா? :-))))

said...

வாங்க குடுகுடுப்பை.

இது 'கடை'த் தேங்காய்.

வழிப்பிள்ளையாரா மட்டும் நாம் இருந்துறணும்.:-)

said...

வாங்க கொத்ஸ்.

அப்பக் கேட்டுருந்தா நான் நேரடியாப் பதில் சொல்லி இருந்துருக்கமாட்டேன்னு நிச்சயமே செஞ்சுட்டீரா?

said...

வாங்க ராஜ நடராஜன்.

அக்கம்பக்கமெல்லாம் போயிட்டுவந்து, சொந்த வீட்டையும் கவனிச்சுக்கிட்டு, ஆற அமர நம்ம திண்ணையில் வந்து கொஞ்சம் உக்கார்ந்துட்டுப் போங்க.

said...

வாங்க கெக்கேபிக்குணி.

தேங்க்ஸ் ஃபார் த பிக் ஹக்:-)

ஆன்னா ஊன்னா மனசுக் கஷ்டப்பட்டா வாழ்க்கை வண்டி எப்படி ஓடும்?

said...

வாங்க நரேன்..

கூடிக்கிட்டுப்போகப்போகுதுன்னு தெரிஞ்சுதான் 'ஆயிரத்து நூறு' ன்னு லிமிட் வச்சுருக்கு:-)

வாசக நண்பர்கள் யாராவது உதவி செஞ்சாத்தான் உண்டு, எங்கெங்கே அப்புறம் கதைகள் வருதுன்னு லிஸ்ட் போட்டுக் கொடுக்க.

சீக்குவன்ஸ் தெரிஞ்சதும் எழுதிறலாம்:-)

said...

வாங்க ராப்.

நம்மது ஒன்னுவிட்டு ஒருநாள் வரும் பத்திரிக்கை:-)

said...

வாங்க பழமைபேசி.

நசரேயன் படிச்சுருப்பார்:-)

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஆமாங்க. ஆனாலும் நாம் கண்ணாலே பார்க்காமக் குற்றம் சொல்ல முடியாது.

பெனிஃபிட் ஆஃப் டவுட் இருக்கே.

ஒருவேளை ,'போ'ன்னு கை ஆட்டுனப்ப மிளகாய்விதை தவறுதலாக் கண்ணுலே விழுந்துருக்குமோ!!!!

said...

அப்பறம் கதைகள் ஆயிரத்து நூறு /... ஆகா டைட்டில் சூப்பர்... பப்ளிஷர் ரெடியா?

said...

ஜெட் வேகத்தில போகுது டீச்சர், உறவுமுறைகளை நினைவில் வச்சுக்கவே கஷ்டமாக்கீது... :)

said...

இட்லி கடைக்கு போறதுக்கு மட்டும் தான் ஒரு மாதிரி இருந்ததா இல்லை சாப்பிடறதுக்கு கூடவா டீச்சர்?(சாப்பாட்டு ராமினு சொல்லிருக்கீங்க) இப்ப அக்கா பசங்க எங்க இருக்கிறாங்க?இந்த தொடரும்ங்கறதை மட்டும் படிக்க பிடிக்கலை.....

said...

வாங்க கயலு.


புத்தகம் வாங்க ஆளு இருந்தா பப்ளிஷர் ரெடி:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

இந்தப் பகுதியில் உறவுமுறை ஒரு நாலஞ்சுதான் இருக்கு. அதுக்கே.......

said...

வாங்க சிந்து.

//இட்லிக்கடை...//

எதைச் சொல்றீங்க?

said...

வந்துட்டோம் கடைசிப் பகுதிக்கு. இப்போ ஃபைனலுக்கு அப்புறம்??
அப்புறம் கதைகள் எப்புறம்?



உங்களை நம்பமுடியாது அப்புறம் கதைகள்,அப்புறம் சினிமாக்கள், அப்புறம் துணிமணிகள்னு ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிய புராணம் ஒளிஞ்சுகிட்டு இருக்கு. இன்னும் ஒரு வருஷத்துக்காவது எனக்கு பின்னூட்டம் போட விஷயம் இருக்குங்கொவ்.துளசி அருமை.

said...

வாங்க வல்லி.

நலமா? நல்லபடியா ஊர்வந்து சேர்ந்தாச்சா?

'பெரிய புராணமா'த்தான் இருக்குப்பா. அரங்கேற்றம் எங்கே வச்சுக்கலாமுன்னு தெரியலை:-)))

said...

அக்காவோட மாமியார் வைச்சிருந்த இட்லிகடையை தான் சொன்னேன் டீச்சர்!!!!!! ஆனாலும் டீச்சருக்கு குசும்பு ஜாஸ்தி தான்.அப்புறம் டீச்சர் நானும் (எல்லாரையும் கஷ்டப்படுத்த) பிளாக் ஆரம்பிசுட்டேன்.sindhusubash.blogspot.com
குரு நீங்க, ஒரு குட்டு (good அல்ல)கொடுங்க.

said...

சிந்து,

இட்லிக் கடையெல்லாம் இல்லை!! எங்கே இருந்து இந்த விவரம் புடிச்சீங்க?


பதிவரானதுக்கு வாழ்த்து(க்)கள்.

வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க.

said...

மன்னிக்கணும்....சாப்பாட்டுகடை.

said...

துளசி மேடம்,

உங்கள் செல்லப்ப்ராணிகள் கதையில் இருந்து இன்னும் பல கதைகள் என் நினைவில் அழகாய் அமர்ந்துள்ளது. மறுபடியும் அதையேத் தான் சொல்வேன்.

இரவின் அமைதியில் ஒருவர் கதை சொல்ல, மிச்ச அனைவரும், சுற்றச்சூழலை மறந்து லயிக்கவைக்கும் பாணி உங்கள் எழுத்து நடை.

பாராட்டுக்கள்.

இனி வரும் உங்கள் பதிவுகளை படிக்கக் காதிருக்கிற்றென்.

அன்புடன்,
ஷக்தி.

said...

//அவுங்களைப் படம் பார்க்க அனுப்பிட்டு, ஆம்பளைங்க பேசிக்கிட்டே வீட்டுக்கு வந்துருவாங்க. படம் விடுற நேரத்துக்கு யாராவது போய்க் கூட்டி வர்றது. இதுலே மட்டும் யாருக்கும் சோம்பலே இல்லை.//

இந்த மாதிரி ஆம்பளைங்க கிடைக்க குடுத்துவச்சிருக்கனும்..

said...

//பொழுதண்ணிக்கும் பெத்துப்போடறவங்களுக்குப் பயம் இருக்கத்தானே செய்யும்? //

:-))))

//அக்காவோட மாமியார், இவுங்களை எல்லாம் மிஞ்சுனச் சினிமாப் பைத்தியம்..//

இந்த மாதிரி இருந்தா மாமியார் மருமகள் சண்டையே வராது போங்க :-)

//ஒரு பிரகஸ்பதி மட்டும், பேசாமக் கலியாணத்தைப் பண்ணி வச்சுறலாமுன்னு ஐடியாக் கொடுத்தாராம்//

யார் அந்த வில்லன்..

said...

//ஆக மொத்ததுலே ஒரு ஆளுன்னா ஒரு ஆள்,'என்ன செய்யப்போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தைக் கேக்கலை.//

[இதுக்கு பலரும் ஏற்கனவே கருத்து சொல்லிட்டாங்க. ஆனாலும் நான் நினைத்ததையும் சொல்லியே தீருவேன்:))]

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நீங்கள் ஆச்சே..:))! கேட்காட்டிதான் என்ன?

//'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு'//

சூப்பர் தலைப்பு:)!

//எல்லா ஆட்டத்துலேயும் நாந்தான் ஜெயிப்பேன்.//

’ஆகா பரவாயில்லையே’ன்னு நினைச்சு முடிக்கும் முன்...

//என்கூட உப்புக்குச் சப்பாணியா ஆடறது நம்ம ரேணுதானே:-))))//

அப்படியா விஷயம்னு ஆயிடுச்சு:))!

said...

\\'என்ன செய்யப்போறேன்னு என்கிட்டே ஒரு வார்த்தைக் கேக்கலை.
\\

சரி விடுங்க டீச்சர்...நான் இப்போ கேட்குறேன்...என்ன செய்திருப்பிங்க???

;))

said...

//தேங்காய்த் துருவும்போது மட்டும் எங்ககிட்டேக் கவனமா இருப்பாங்க. தின்னே தீர்த்துருவோம்லெ. //

ஹி ஹி ஹி...சின்னவயசுல எனக்கும் இந்தப் பழக்கம் இருந்திச்சு :)

//'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு'லே பார்க்கலாம். //

ஆஹா..அப்புறம் கதைகளோட பாகங்களும் கூடிட்டே போகுதே டீச்சர்..எப்ப போடப் போறீங்க? :)

said...

//தேங்காய்த் துருவும்போது மட்டும் எங்ககிட்டேக் கவனமா இருப்பாங்க. தின்னே தீர்த்துருவோம்லெ.//

நாமளும் அடி பல்லால தேங்காய் மூடிய திருப்பி த்ருப்பி தின்னு முடிச்சிருவோம்ல??!!

எவ்வளவையோ தாண்டி வந்திருக்கீங்கன்னு தெரியுது..:)

said...

வாங்க ஷக்திப்ரபா.

ஹைய்யோ....எவ்வளோ வருசங்களாச்சு உங்களைப் பார்த்து!!!!

நலமா? மகள் நலமா?

பாராட்டுகளுக்கு நன்றி.

உங்கள் தொடர்ந்த ஆதரவுதான் எனக்கு ஷக்தி:-)))

said...

வாங்க நான் ஆதவன்.

அப்பெல்லாம் இந்த டிவிச்சனியன் இல்லையே. பொழுதுபோக்குன்னா அது திரைப்படங்கள் மட்டும்தான். படங்களும் இப்போ போல் இல்லாமல் கொஞ்சம் நல்ல குடும்பக்கதை(??)களாவே வந்துக்கிட்டு இருந்துச்சே.

படம் போட்ட ரெண்டு நாளுலேயே ஆண்கள் தனியாப் பார்த்துட்டு வந்துருவாங்க. நம்ம அக்காவும் மதீனாக்கவும்தான் வியாழனுக்காவது பார்க்கமுடியுமான்னு தவம் கிடப்பாங்க.

அக்கா வீட்டில் மாமியார் மருமகள் சண்டை வந்து நான் பார்த்ததில்லை. பொதுவா இது கலியாணம் ஆன முதல் சில வருடங்களில் வந்துரும். 'அப்ப' வரலைன்னா 'அப்புறம்' வரச் சான்ஸே இல்லை.

அக்கா கதையில் அஞ்சாவது குழந்தை பிறக்கும்வரை மாமியார் வேற ஊரில்:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நினைச்சதை நடத்தி முடிக்கலாமுன்னா...அப்ப நினைக்கவேத் தோணலையேப்பா:-))))

said...

வாங்க கோபி.

பதிவராகும் படிப்புப் படிக்க ஆசைன்னு சொல்லி இருப்பேனோ என்னவோ:-)))))

said...

வாங்க ரிஷான்.

தேங்காய் தின்னாத தெற்கத்தி ஆளுங்க இருந்துருப்பாங்களா?

இன்னொரு 'ஆவேசம்' வரும்போது 'அப்புறத்தை'க் கையில் எடுத்துடணும்:-)

said...

வாங்க ராதா.

சட்னு பார்த்தா ஏதோ எலி சுரண்டி வச்சுருக்கறமாதிரி தேங்காயைக் கண்டா விடமாட்டோமில்லே:-)))))

ஆடிக்காத்துலே பறக்கும் சருகா வாழ்க்கை என்னைத் தூக்கிப்போய் எங்கெல்லாமோ விட்டுருச்சு!!!!

said...

//நலமா? மகள் நலமா?//

மகள் நலம் துளசி. நினைவு வைத்து கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்பொழுது தேர்வுகள், அவளுடன் சேர்ந்து நானும் படித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?