Wednesday, September 19, 2018

கோவில் வேணுமா? நான் கட்டித் தரேன்.... (பயணத்தொடர், பகுதி 11)

நிலமும் தந்து அதுலே கோவிலும் கட்டிக் கொடுத்தது ஹிந்து ராஜா! இதுலே என்னவாம்? ராஜா கோவில் கட்டமாட்டாரா என்ன? கொடுப்பார், கொடுக்காமல் என்ன?  ஆனால் இது கிறிஸ்துவக்கோவில் ஆச்சே!!  சர்ச்சு....
இப்பக்கண்டி இதுபோல ஒரு நியூஸ், 'சர்ச் கட்டிக்கொடுத்த ஹிந்து'ன்னு வந்துச்சுன்னு வையுங்க.... சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்! எல்லா டிவி சேனலிலும் இதுதான் தலைப்பு !

திப்புவின் காலத்துக்கப்புறம்  தலைநகர், ஸ்ரீரங்கப்பட்னாவில் இருந்து மைஸுருக்கு மாறுச்சு.  திரும்ப உடையார் அரசர்களின் ஆட்சி!  வெள்ளையர்களும் குளிர்விட்டுப்போய் இந்தப் பகுதிக்கு வரத்தொடங்கினாங்க. அவுங்க சாமி கும்பிட ஒரு இடம் வேணும், அப்படியே அவுங்களுக்கு ஒரு கோவிலும் வேணுமேன்னு  யோசிச்ச மன்னர், இடங்கொடுத்து, மரத்துலேயே  சர்ச் கட்டிக் கொடுத்துட்டார்.  வருஷம் 1843 ! அந்தக்காலக்கட்டத்துலே மைஸூர் அரண்மனையே முழுக்க முழுக்க மரக்கட்டடம்தான், கேட்டோ!
காலப்போக்கில் மக்கள் தொகை பெருகினதும்,  கொஞ்சம் பெரிய சர்ச்சா இருந்தால் தேவலாமுன்னு  தோணியதும்,  தாத்தா கட்டிக்கொடுத்த இடத்துலே புதுசா, பெருசா தேவாலயம் கட்டிக் கொடுத்துருக்கார் அப்போதைய மன்னர்! அவரே அடிக்கல் நாட்டியும் இருக்கார்! 1933 இல் கட்ட ஆரம்பிச்சு 1936 இல் முடிச்சுருக்காங்க.  ஃப்ரெஞ்சுக் கட்டடக்கலை நிபுணர் டிஸைன் செஞ்சுருக்கார்.
ரெண்டு கூம்பு கோபுரத்துடன் கம்பீரமா நிக்கும் சர்ச்சுக்கு வந்துருக்கோம் இப்போ. பழுது பார்த்துப் பராமரிக்கும் வேலை இப்ப நடந்துக்கிட்டு இருக்கு. பட்ஜெட் 2.7 கோடி ரூபாயாம்!  சர்ச்சுக்குப் பெயர் செயிண்ட் ஜோஸஃப் சர்ச்சுன்னு  சொன்னாலும்.   செயின்ட் ஃபிலோமினா சர்ச் என்ற பெயர்தான் எல்லோருக்கும் தெரிஞ்சதா இருக்கு!

யார் இந்த ஃபிலோமினாள் ?

மூணாவது நூற்றாண்டைச் சேர்ந்தவர்.  கிரேக்கச் சிற்றரசில் ஒர் இளவரசி. தெய்வத்தை வேண்டிக்கிட்டுப் பிறந்த குழந்தை, தெய்வபக்தியோடு வளர்ந்துருக்கு.  பொண்ணுக்குப் பதிமூணு வயசானதும்,  தாய் தகப்பனோடு  ரோமாபுரிக்குப் பயணம் போயிருக்காங்க.  அங்கத்து அரசர் பொண்ணின் அழகில் மயங்கித் தனக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்கச் சொல்லிக் கேக்கறார்.

 பாவம்.... குழந்தைப்பொண்ணு....     தனக்குக் கல்யாணத்தில் விருப்பமே இல்லைன்னு சொல்லப்போக,  அரசருக்குக் கோபம் வந்து, சிறையில் அடைச்சு வச்சுச் சித்திரவதை செய்து, கசையடி கொடுத்துன்னு  கொடுமைப்படுத்தியதும்  பொண்ணு செத்துப்போயிருது!

இந்தக் கொடுமைகள்  பலதில் தெய்வாதீனமாக தப்பி வந்ததாகவும்,  அதிசயங்கள் நடந்ததாகவும்  அவுங்க புராணங்களில் எழுதியிருக்காங்க. ஏசு கிறிஸ்துமேல் அளவில்லாத பக்தியுடன் இருந்தும், வாழ்நாளில் குறைஞ்சபட்சம் ரெண்டு அற்புதங்கள் நடத்தியும் ,  மக்களின் வேண்டுகோளும் இருந்தால், அவர்களை புனிதர் என்று போப் ஆண்டவர்,  அறிவிப்பாராம்.
எல்லாஞ்சரி.மூணாம் நூற்றாண்டு ஃபிலோமினா  இங்கே எப்படி வந்தாங்க?

நம்ம ஹிந்துப் புராணக்கதைகள் போலவே மற்ற மதத்துச் சமாச்சாரங்களும்  வழிவழியாச் சொல்லப்பட்டுருக்கும்தானே?

1926 ஆம் வருஷம், ஈஸ்ட் இண்டீஸ்லே இருந்து வருகை தந்த ஒரு கிறிஸ்துவ மதத் தூதர் (போப் ஆண்டவர்  அனுப்பினாராம்)   செயின்ட் ஃபிலோமினாளின் அதிசய சக்திகளைச் சொல்லி,  புனிதரின்  'ரெலிக்ஸ்' தன்னிடம் இருக்குன்னும்  சொல்லப்போக,  இந்த அற்புதங்களைக் கேட்ட அரசரின் அதிகாரி, இங்கே சர்ச்சில் அவற்றை வைக்கலாமுன்னு யோசனை சொல்லி இருக்கார்.
அதுவும் சரின்னு தூதர்  ஃப்ரான்ஸுக்குத் திரும்பிப்போய், அடுத்த வருசமே ஃபிலோமினாள் சிலையை அனுப்பி இருக்கார்.
இதே சர்ச்சில், கருவறைக்குக் கீழே  அடித்தளத்தில் ஒரு  நிலவறை எழுப்பி அங்கே சிலையை பிரதிஷ்டை பண்ணிட்டாங்க.
பேஸ்மென்ட்டில் இருக்கும் அறைக்குப் போகும் படிகளில் இறங்கிப் போனோம். அங்கே  சயன கோலத்தில் செயின்ட் ஃபிலோமினாள்!

ப்ரிட்டிஷ்காரர்களின் வழிபாட்டுக்கு, ஃப்ரெஞ்சு கட்டடக்கலை நிபுணர் , ஜெர்மன் ஸ்டைலில் டிஸைன் பண்ணி, க்ரேக்க நாட்டுப் புனிதர் சிலையை பிரதிஷ்டை செஞ்சு, மொத்த செலவையும்  ஹிந்து அரசர் ஏத்துக்கிட்டுன்னு...... என்னெவெல்லாம் நடந்துருக்கு பாருங்க!  இதுவும் ஒரு அற்புதம் இல்லையோ!!!

 வெளியே வளாகம் ரொம்பப்பெருசு!  தேவாலயத்தின் வாசலில் ரெண்டு பக்கமும் மேடையில் செயின்ட் ஜோஸஃபும்,  செயின்ட் ஃபிலொமினாவும் ஆளுக்கொருபக்கமா நிக்கறாங்க.




வளாகத்தின் இன்னொரு பக்கம் குன்றும் மேடையுமா ஒரு அமைப்பு. நிகழ்ச்சிகள் நடத்திக்கும்  திறந்தவெளி அரங்கம்!

இன்னொரு பக்கம்   இவுங்க நடத்தும் பள்ளிக்கூடம்  (செயின்ட் மேரீஸ்!) கூடவே ஒரு அனாதாலயமும்  இருக்கு!
மைஸூரு சுற்றுலாக் கழகம்,  அங்கே  பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களின் பட்டியலில் இந்த சர்ச்சையும் சேர்த்துருக்கு!   அதனால் பயணிகள் கூட்டமும் நிறைய !



நாமும் வேற இடத்துக்குப் போகிற போக்கில், புனிதர் ஃபிலோமினாளையும் தரிசனம் செஞ்சுக்கிட்டு இதோ கிளம்பிட்டோம்!


தொடரும்....   :-)

Monday, September 17, 2018

அரண்மனை விஸிட்டும் ஐவரின் அழகும் (பயணத்தொடர், பகுதி 10)

கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டு சரித்திரம் இந்த இடத்துக்கு இருக்கு! மைஸூர் அரசவம்சம் ஆட்சிக்கு வந்தது கி பி .1399 .  அப்பெல்லாம் விஜயநகரப் பேரரசின் கீழ் இருந்துருக்கு.  மஹிஷாசுரனை வதம் செஞ்ச சாமுண்டீஸ்வரி, இங்கே கோவில் கொண்டதால் இந்த  ஊருக்கு மஹிஷாசூருன்னு  பெயர் வந்து, காலக்கட்டத்தில்  அது மருவி மைசூருன்னு ஆகிப் போயிருக்கு! 


தலைநகரம் இதுதான்.  ஹைதர் அலி ஆட்சியில்தான்  ஸ்ரீரங்கப்பட்னாவைத் தலைநகரமா மாத்திக்கிட்டாங்க.  திப்பு சுல்தான் ஆட்சிக்குப்பின் திரும்ப மைஸூரே தலைநகரமா ஆச்சு.

வெள்ளையர் பாரதத்தைப் பிடிச்சுவச்சு ஆண்டுக்கிட்டு இருந்த காலத்தில் அவுங்களுக்குத் தோணியபடி உள்ளூர் பெயர்களையெல்லாம் சொல்லியும் எழுதியும் வச்சு அதுவே நமக்கும் பழக்கப்பட்டுப் போயிருச்சு பாருங்க. அதையெல்லாம்  இப்ப சமீபகாலமா அந்தந்த மாநிலம் அந்தப் பழைய பெயர்களையெல்லாம்  திரும்பக் கொண்டாந்துக்கிட்டு இருக்காங்க. மும்பை, கொல்கத்தா, ஒடிஷா, மைஸூரு, சென்னை னு  பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம்.

ஆதிகாலத்து அரண்மனை முழுக்க முழுக்க மரக் கட்டடம்தான்.  இவ்ளோ பெருசா இப்ப இருக்கறாப்லெ இருந்துருக்காதுன்னு நினைக்கிறேன். ஒரு தசரா விழா நடக்கும் சமயம் 1896 ஆம் வருஷம் அரண்மனை தீக்கிரையாகி மொத்தமா அடியோடு அழிஞ்சே போயிருக்கு.
அப்புறம் 1912 ஆம்  வருஷம், ப்ரிட்டிஷ்காரர் ஹென்றி இர்வின் என்ற கட்டடக்கலை நிபுணர் டிஸைன் செஞ்சு   கட்டுனதுதான் இப்போ நாம் பார்க்கும் மைஸூர் அரண்மனை. க்ரானைட்டும், பளிங்கும், கண்ணாடியுமா வச்சு இழைச்சுருக்காங்க.
(எத்தனை  சினிமாக்களில் பார்த்துருக்கோம், இல்லே!!  இப்பெல்லாம் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கறதில்லை. பயணிகளுக்காவது  படம் எடுத்துக்க அனுமதி கொடுக்கப்டாதோ? அதுவும் இல்லை. இருபத்திநாலு வருசத்துக்கு முன்னே ஒருமுறை  இந்த அரண்மனையைப் பார்த்துருக்கோம். ப்ருந்தாவன் தோட்டத்தைப் பார்க்க வந்தபோது! அப்பவே உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னுட்டாங்க. )

72 ஏக்கர் பரப்பளவில்  சுத்திவர மதில் சுவரும், நாலு பக்கமும் அலங்கார வாசல்களுமா, பெரிய தோட்டத்துக்கு நடுவில்  அட்டகாசமான அழகோடு இருக்கு.  தெற்குவாசல் வழிதான்  இப்போ நாம் உள்ளே போறோம்.  அம்பது ரூபாய் கட்டணம்.
அம்பா விலாஸ் ன்னு இந்த அரண்மனைக்குப் பெயர் !  விலாஸுன்னதும் எதோ ரெஸ்ட்டாரண்டுன்னு நினைச்சுக்காதீங்க. இது  மைசூரு அரசவம்சத்தின் குலதெய்வமான அந்த அம்பாள் சாமுண்டீஸ்வரியின் சொத்து !
அரண்மனைக்கு நேரெதிரா அரசர் சாமராஜேந்த்ர உடையார் சிலை ஒரு சின்ன அலங்கார மண்டபத்தில்! அரண்மனை வாசலிலேயே இடமும் வலதுமாக் கோவில்கள்!  நம்ம ஆஞ்சிக்கு  ஒரு கோவில் வலப்புறத்தில்!  கோட்டை ஆஞ்சநேயர் !வெளிப்புற  முற்றத்தில்  கொடிமரம் போல் இருக்கும் தூணில் பஞ்சமுக ஆஞ்சநேயர் இருக்கார்!


இடப்புறம் வரிசையா மூணு கோவில்கள்(சந்நிதிகள்!)அதுலே ஒன்னு நவகிரஹங்களுக்கு! சந்த்ரமௌலீஸ்வரர் &  ராமர்,  மற்ற ரெண்டு சந்நிதிகளில்!

வாசலுக்குள் நுழைஞ்சதுமே நம்மாளின் 'அடையாளம் ' பார்த்துட்டேன் :-)  எங்கே (ஒளிச்சு)வச்சுருக்காங்கன்னு  பார்க்கணும்.
வாசலாண்டையே ஸ்ரீ புவனேஷ்வரா கோவில்.  கோட்டைக்குள்ளே சுமார் இருபத்தியிரண்டு கோவில்கள்  சின்னதும் பெருசுமா இருப்பதாக் கேள்வி. 

எல்லா வாசல்களுக்குப் பக்கத்துலேயும்  கோவில்கள் ! காவல் தெய்வங்கள் :-)
வெங்கலப் பெண்சிங்கங்கள்  வாசலாண்டை ! (முதலில் புலின்னு நினைச்சுட்டேன்.... ஹிஹி...)
தோட்டத்துக்கு நடுவில்  கம்பித்தடுப்புக்குள்ளே கம்பீரமா நிக்கும் அரண்மனை!  மனிதர்கள் போக அங்கங்கே  இடைவெளி விட்டுத்தான்  வச்சுருக்காங்க.

சுத்திப் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  மழை வந்துருச்சு! எல்லோரும் ஓடிப்போய் அரண்மனையில் தஞ்சம் அடைஞ்சோம். 'நல்ல சமயமடா.... இதை நழுவ விடலாமோ'ன்னு ....  டீ வித்துக்கிட்டு வந்தார் ஒருவர்.  நமக்கும் ஒரு சாய் ஆய்க்கோட்டே....

அரசகுடும்பத்தோடு அமர்ந்து டீக்குடிக்கச் சான்ஸ்  இல்லையாக்கும். அரசர் குடும்பம் இப்ப இங்கே வசிக்கலையாம். ஒரு பகுதியில் மட்டும் உறவினர்கள் இருக்காங்களாம்.


முழு அரண்மனையும் இப்போ கர்நாடகா அரசின் பொறுப்பில் இருக்கு!  நல்ல சுத்தமாத்தான் பராமரிக்கிறாங்க. தினமும்  மாலையில் விளக்குப்போடறாங்க. 97000 லைட்ஸ் ! ஜொலிப்புக்குக் கேட்கணுமா? (அதான் நம்ம அறையில் இருந்தே தெரியுது !)   
உள்ளூர், வெளியூர், வெளிநாடுன்னு  சுற்றுலாப் பயணிகள் கூட்டம் !


குழந்தைகளுக்கு மழை ஒரு கொண்டாட்டம் !
மழை  விட்டதும்  மறுபடியும் சுத்தப்போனோம்.  ஸ்வேத வராஹ ஸ்வாமி ,  மஹாலக்ஷ்மி, த்ரிநயனேஷ்வரா,காயத்ரி, ப்ரஸன்ன க்ருஷ்ணஸ்வாமி, லக்ஷ்மி ரமணஸ்வாமி,  வெங்கட ரமண ஸ்வாமின்னு பனிரெண்டு பெரிய கோவில்கள்.  இந்தக் கோவில்களில் ரொம்பப் பழசு  வெங்கர ரமண ஸ்வாமியோடது. ரொம்பவும் இளைய கோவில்கள்  புவனேஷ்வராவும், காயத்ரியும்!எல்லாமே மாலை அஞ்சு மணிக்குத்தான் திறக்கறாங்க. நமக்குக் கொடுப்பினை இல்லை, போங்க.....


ஃபோட்டோ எடுத்து அங்கேயே ப்ரிண்ட் எடுத்துக்கொடுக்கும் வியாபாரம் வேற!  அரசு இதுக்கெல்லாம் ஒரு கட்டணம் வசூலிக்குமுன்னு நினைக்கிறேன்.
'அந்தப் பக்கம் பாரு'ன்னு  'நம்மவர்'குரல் கொடுத்ததும் திரும்பிப் பார்த்தால்.....  ஆஹா.....   நம்மாட்கள்   ஐவர் :-) உடனே அந்தப் பக்கம் போயிட்டேன்.  காயத்ரி, விஜயா, காவேரி, லக்ஷ்மி, பார்வதின்னு எல்லோரும் பெண்களே!

தசரா கொண்டாட்டம் மைஸூரு ஸ்பெஷல் விழா!  அதில் பங்கெடுக்கும் யானைகள்  பெரும்பாலும் களிறுகளே!  750 கிலோ கனம் வரும் அம்பாரியைச் சுமக்கணுமா இல்லையா?  இந்த கனத்தைக் குறைக்கணுமுன்னு  இப்போ  யோசிக்க ஆரம்பிச்சுருக்காங்க. பாரம்பரிய அரச உடையலங்காரத்தில்  இருக்கும் அரசரின்  தரிசனமும் அப்போதான் லபிக்கும்! அவருக்கும் தன் மக்களைப் பார்க்கும் மகிழ்ச்சியும் அப்போதான் :-) லக்ஷக் கணக்குலே பயங்கரக்கூட்டம் இருக்குமாம். சுமார் நானூறு வருஷத்துக்கு முன்னே ஆரம்பிச்ச  விழா இப்போ பெரிய அளவில்!

இவ்ளோ கோலாகலமா  வாழ்ந்துக்கிட்டு இருக்கும் ராஜ குடும்பத்துக்கு ஒரு சாபம் ஏற்பட்டுப்போச்சுன்னு  சரித்திரம் சொல்லுது.  தலக்காடு சாபம் !

ஒரு சமயம் விஜயநகரப்பேரரசு காலத்தில்,   மன்னர் திருமலைராஜா தன் மனைவி அலமேலம்மாவுடன்  எதோ வழிபாட்டுக்காகத் தலக்காடு போயிருக்கார்.  அப்போ பார்த்து,  ராணி அலமேலம்மாவின் பொறுப்பில் இருந்த தாயார் ரங்கநாயகியின் நகைகள் எல்லாம் மைஸூர் சிற்றரசர், தன் படைகளை அனுப்பி எடுத்துக்கிட்டு வந்துட்டாராம்.

விஷயம் தெரிஞ்சதும்,  ரொம்ப கோபம் அடைஞ்ச  அலமேலம்மா, 'இந்தத் தலக்காடு ஒன்னுமில்லாத நிலமா மணல் மூடிப்போகட்டும்,  மாலங்கி நதியில் நீர் வற்றிப் போகட்டும், மைசூர் அரச வம்சம் வாரிசற்றுப் போகட்டும் ' னு சாபம் கொடுத்துட்டுத் தன்னுயிரை மாய்ச்சுக்கிட்டாங்க!

சாபம் பலிச்சுப் போச்சு! இப்பவும் மைஸூர் அரச வம்சத்துக்கு நேரடி வாரிசு இல்லை. தத்து எடுத்த மகனே அரசராக பட்டங்கட்டப்படுகிறார்!   (இந்தக் கதைக்கும் வெவ்வேற வெர்ஷன்ஸ் உண்டு.  ஆனால் மண்மூடிக்கிடக்கும் தலக்காடும்,  வெறும் மடுவாகிப்போன மாலங்கி நதியும், அரசகுடும்பமும் சாட்சியாத்தானே இருக்கு, இல்லே? )  ப்ச்.... 

யானையைப் பார்த்ததும்  தசரா, அதனோடு அரசர், அப்படி இப்படின்னு  மனசு எங்கெங்கயோ போயிருச்சு.... போகட்டும். நிகழ்காலத்துக்கு வரலாம்.
அழகா அசைஞ்சு இங்கேயும் அங்கேயுமாப் போய்க்கிட்டு இருக்கும் யானைகளைப் பார்க்கறதே ஒரு தனி சுகம்!
அஞ்சு பேரும் மக்களை ஆசிர்வதிக்கும் வேலையில் பயங்கர பிஸி! எல்லாம் ஒரு கால்மணி நேரம்தான்!  சம்பாரிச்சுக் கொடுத்தது போதுமுன்னு கிளம்பிட்டாங்க. நாங்களும்தான்! 





உள்ளே ம்யூஸியம் எல்லாம் இருக்கு. ஆனால் நமக்கு நேரம் இல்லை.  வெளியே சுத்துனதே ஒன்னரை மணி நேரம் எடுத்துருச்சு.  உள்ளே  சுமார் ரெண்டு மணி நேரமாவது வேணும். ரொம்ப வருஷத்துக்கு முன்னே பார்த்துருக்கோமேன்னு இப்ப விட்டுட்டோம்.... சவுண்ட் & லைட்ஸ் ஷோ (ஒலியும் ஒளியும்) கூட இருக்கு. ஏழு மணிக்குத் திரும்ப வரமுடியுமான்னு தெரியலை....

வாங்க வேற இடம் பார்க்கலாம்.

தொடரும்....... :-)